படைச் செருக்கு -- 78
திருக்குறள் குழந்தைப் பாடல்!
----------------------------------------------------------------
படைச் செருக்கு -- 78
----------------------------------------------------------------
படையின் வலிமையும் பெருமையும்!
----------------------------------------------------------------
வீரம் செறிந்தவன் என்தலைவன்!
போரிட் டவர்கள் நடுகல்லாய்
மாறிப் போனார்! எதிர்க்காதீர்!
முயலை வீழ்த்திய அம்பைவிட
யானை தப்பிய வேல்மேலாம்!
பகைவரை எதிர்த்தல் பேராண்மை!
பகைவர் துன்புறும் நேரத்தில்
உதவுதல் வீரர் பெருந்தன்மை!
கையில் இருந்த ஒருவேலை
யானை மீது எறிந்துவிட்டு
தாக்கத் தாவும் யனைமேல்
நெஞ்சில் பதிந்த வேல்பறித்து
சிரித்தே எய்பவன் வீரன்தான்!
பகைவரைச் சினந்தே பார்க்கும்கண்
இமைத்தால் அதுவே தோல்வியாம்!
போரில் காயம் படாநாளோ
வீர னுக்கு வீண்நாளாம்!
நிலைத்த புகழை நாடித்தான்
போரில் சாகத் துணிந்தவர்கள்
காலின் கழலொலி அழகாகும்!
தலைவன் சினந்தும் தன்கடமை
செய்யும் வீரன் சிறந்தவனாம்!
வீர சபதம் கனியும்முன்
போரில் இறந்த வீரனையோ
பழித்துப் பேச மாட்டார்கள்!
அரசன் கண்களில் நீர்மல்க
போரில் சென்றே உயிர்துறக்க
கேட்டுப் பெறுதல் பெருமைதான்!

0 Comments:
Post a Comment
<< Home