Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!


9.2.76 இதயத்தில் அமைதி என்றோ?


இன்ப வானின் எழில்சிறகை விரித்து

இதயத்தில் அன்பு மழை பொழிய

இதமாக வாழ்ந்தேன் எந்தன் தலைவனுடன்!

இன்றவரோ வாடி நிற்கிறார் மனமிழந்து

அதைக்காண தவிக்கிறேன் உள்ளத்தின் எண்ணத்தை

விரித்துரைக்க தெரியவில்லை விளங்காமல் ஏங்குகிறேன்!

அவர் என்னை முழுவதும் ஆட்கொள்ளவே

விரும்பு கின்றேன்! இருப்பினும் என் மனநிலையை

அறிய மறுக்கிறார் இன்றுவரை எதிர்த்ததில்லை!

இனியும் இருக்கும் நாள்வரை அவ்வாறே

என்ஏட்டை முடித்திட முடிவு கொண்டேன்!

நான் செய்த தவறெல்லாம் அவருடன்

ஒத்துக் கொள்ளாமல் மறுத்திட்டேன்! ஏன்

செய்தேன் தெரியவில்லை! தன்மானம் தவிர்த்ததுவே!

என்னுடைய கடந்தகால வாழ்விலும் இதுவரை

கேட்டதில்லை என்அண்ணன் வளர்த்திட்ட வாழ்வு

இன்றும் என்றும் அப்படியே என்மனம் நாடுகிறது

என்அன்னை தன்னிடமே கேட்டதற்கு விரும்பாத

உள்ளமிது என்செய்வேன்? இனிமேலும் தலைவனிடமும்

அப்படியே இருந்து அவரது பிஞ்சுமனதை

முள்ளாக உறுத்தி அதை கிழித்து

அதனின்று வடியும் செந்நிறத் துளிகாண

என்றுமே துணியேன்! பூப்போல காத்திட்டு

இன்பமாக புன்னகை சிந்த என்னால் முடிந்தவரை

இயலுவேன்! இதுவரை நான்செய்த குற்றத்திற்கு

இதயமே நீ இன்னும் நிம்மதியாக உறங்குதியோ?

அவர்படும் இன்னல்களை காண முடியவில்லையே!

இதயமேநீ இயக்கத்தை நிறுத்திவிட்டு என்னை

மகிழ்விக்க கூடாதா? ஏன் மறுக்கிறாய்?

உனக்கு என்மீது இரக்கம் இல்லாவிடினும்

என்னுயிர் என்றால் தங்கி இருப்பதை

நீ அறியாயோ? இன்னும் ஏனிந்த மௌனம்?

உன் அமைதி என்னை வதைக்கின்றது!

என் இதயம் அதாவது அவரது மனம்

அமைதியுடன் இன்பமடைய நான் விரும்புகிறேன்!

என் இதய தாகத்தை ஏட்டில் எழுதிவிட்டேன்!

எழுதியது ஈடேறும் நாள் வருமா?

என் இதயமே உன்னைக் கேட்கிறேன்!

இதற்கு காலமே விடை கூறட்டும்!



0 Comments:

Post a Comment

<< Home