கயமை -- 108
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
கயமை -- 108
---------------------------------------------------------------
கயமை என்பது கீழ்த்தரமான பண்பாகும்!
----------------------------------------------------------------
கயவர், நல்லவர் தோற்றத்தால்
ஒன்றாய் இருப்பது போலிங்கே
பிறஇனந் தன்னில் கண்டதில்லை!
நன்மை தீமை அறிந்தவரைக்
காட்டிலும் அவற்றைப் பற்றியெல்லாம்
கவலைப் படாத கயவர்மேல்!
கண்டதே காட்சி கோலமென்று
விருப்பப் படிதான் வாழ்வதாலே
கயவரும் தேவர் போலத்தான்!
இழிந்தோர் தங்களைக் காட்டிலும்
இழிந்தவரைக் கண்டால் தாங்கள்தான்
உயர்ந்தோர் என்றே மகிழ்ந்திடுவார்!
அச்சம் இருப்பதால் கீழ்மக்கள்
ஒழுக்கந் தன்னைப் பேணுகின்றார்!
விரும்பும் பொருள்கள் கிடைப்பதுதான்
ஒழுக்கத் திற்குக் காரணமாம்!
ரகசியந் தன்னைக் காக்காமல்
தேடிச் சொல்லும் கயவர்கள்
தமுக்குக் கருவிக் கொப்பாவார்!
தன்னைத் தாக்கும் கைகளுக்கும்
கயவர் உதவுவார் முன்வந்து!
மற்றவர்க் காக எச்சில்கை
உதறிக் கூட உதவமாட்டார்!
தேவையைக் கேட்டால் மனமுவந்து
உதவிகள் செய்வார் மேன்மக்கள்!
கரும்பைப் பிழிதல் போலத்தான்
பிழிந்தால் உதவுவார் கீழ்மக்கள்!
உடுத்தும் உண்டும் பிறர்வாழும்
நிலையைக் கண்டே பொறாமையில்
குற்றம் சொல்வார் கீழ்மக்கள்!
தமக்குத் துன்பம் வந்துவிட்டால்
தன்னையே விற்பார் கீழ்மக்கள்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home