Thursday, March 26, 2026

மருந்து --- 95

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

        மருந்து --- 95

---------------------------------------------------------------

முறையாக உண்போம்! உடல்நலம் காப்போம்!

---------------------------------------------------------------

வாதம் பித்தம் கபமெல்லாம்

சரிசம மாக இல்லையெனில்

தேகந் தன்னை நோய்கள்தான்

சுற்றிச் சுற்றி மொய்த்திருக்கும்!


உண்ட உணவு செரித்தபின்பு

உண்டால் மருந்தே தேவையில்லை!


செரித்த பின்பு உணவுகளை

அளவுடன் உண்டால் தீர்க்காயுள்!


செரித்த பிறகே உடல்விரும்பும்

உணவை அறிந்தே பசித்தபின்பு

உண்டால் நலமே உண்டாகும்!


ஒவ்வா உணவைப் புறக்கணித்து

அளவுடன் என்றும் சாப்பிட்டால்

உடலை நோய்கள் தீண்டாது!


அளவாய் உண்டால் நோயில்லை!

அதிகம் என்றால் துன்பந்தான்!


எடுக்கும் பசிக்கு ஏற்பத்தான்

அளவாய் உண்டால் தொல்லையில்லை!

அளவை விஞ்சினால் தொல்லைதான்!


நோயை அறிந்து, காரணத்தைக்

கண்டு, தீர்க்கும் முறையறிந்து

சிகிச்சை தருவதே மருத்துவமாம்!


வயது, தேகத்தின் தன்மைகள்,

நோயின் காலம், தன்மைகள்

ஆய்ந்தே மருந்தைத் தரவேண்டும்!


நோயாளி, மருத்துவர், அன்புடனே

உற்றதுணை, மருந்து இவைநான்கும்

சிகிச்சை முறையின் பகுதிகளாம்!

0 Comments:

Post a Comment

<< Home