Thursday, March 26, 2026

சூது -- 94

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

         சூது -- 94

----------------------------------------------------------------

சூதும் சூழ்சியும் நிம்மதிக்கு வேட்டுவைக்கும்!

----------------------------------------------------------------

வெற்ரி இங்கே கிடைத்தாலும்

வேண்டாம் என்றும் சூதாட்டம்!


தூண்டில்  உணவை மீனிங்கே

விழுங்கிச் சிக்கிய நிலையாகும்!


ஒன்றைப் பெற்றால் கவர்ந்திழுக்க

நூறை இழக்கும் சூதாடி

வாழ்வில் ஏற்றம் பெறுவதில்லை!


சூதாட் டத்தில் உருள்கின்ற

காயைப் போல செல்வமெல்லாம்

பகைவர் கைக்குள் உருண்டேதான்

சென்று தங்கும் நிலைகாண்பார்!


இழிவைத் தருவது சூதாட்டம்

அதுவே வறுமையின் வேராகும்!


சூதுக் கருவி, இடந்தன்னைத்

தீய செயலைத் தொடர்பவரோ

செல்வம் இழந்தே பரிதவிப்பார்!


சூதின் வலையில் விழுந்தவர்கள்

பசியால் வருந்தித் துடித்திருப்பார்1


சூதுக் களத்தில் மெய்மறந்தால்

பண்பும் சொத்தும் பறந்துவிடும்!


பொருளை அழிக்கும்! பொய்வளரும்!

ஊரார் நகைப்புக் குள்ளாக்கும்!


புகழை, கல்வி, செல்வத்தை

உணவை, உடையை இழந்திடுவார்!


இழக்க இழக்க சூதாட்டம்

கவர்ந்தே இழுத்துப் பாழாக்கும்!


துன்பந் தன்னில் துடித்திட்டால்

உடலின் மீது ஆசைவரும்!


0 Comments:

Post a Comment

<< Home