கள் உண்ணாமை--93
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
கள் உண்ணாமை--93
----------------------------------------------------------------
போதைதரும் இன்பமெல்லாம் இன்பமல்ல மன்பதையே!
தூதனுப்பு மனதிற்குத் தூக்காதே மதுக்கோப்பை!
----------------------------------------------------------------
போதைக் கடிமையாய் மாறிவிட்டல்
மதிப்பை இழந்தே தவித்திடுவார்!
பகைவர் கூட அஞ்சமாட்டார்!
சான்றோர் மதிப்பதைப் புறக்கணித்தால்
குடித்தே இங்கே அழிந்திடலாம்!
போதைப் பழக்கம் உள்ளவரா?
பெற்ற தாயே வெறுத்திடுவார்!
சான்றோர் எப்படிப் பொறுத்திடுவார்?
குடிக்கும் அற்பனைக் கண்டுவிட்டால்
நாணம் என்னும் பண்பரசி
உடனே வெறுத்தே ஓடிடுவாள்!
பொருளைக் கொடுத்துக் குடிப்பவர்கள்
தனது நிலையை மறந்தேதான்
செய்யும் மடமைச் செயலாகும்!
உறங்கும் நிலையில் உள்ளவர்கள்
செத்தவ ருக்கே இணையாவார்!
போதைப் பொருளைக் குடிப்பவர்கள்
நஞ்சுண் போர்க்கே இணையாவார்!
மறைவாய் இருந்து குடித்தாலும்
ஊரார் பார்த்தே இகழ்ந்திடுவார்!
போதை என்பதை நானறியேன்
என்றே சொன்னால் அதன்மயக்கம்
உடனே அவனைக் காட்டிவிடும்!
குடியை நிறுத்தெனும் அறிவுரையோ
நீரில் மூழ்கி உள்ளவனைத்
தீவட்டி கொண்டு தேடுவதாம்!
மயங்கிக் கிடக்கும் அவலத்தைப்
பார்ப்பவன் குடித்தால் தனக்குமிந்த
நிலைதான் என்றெண்ணிப் பாரானோ?

0 Comments:
Post a Comment
<< Home