Thursday, December 25, 2008

துளிகள்

வாழ்க்கை

வாழ்க்கையை வில்போல் வளைக்க நினைத்தேதான்
பாழ்பட்டுப் போகாதே பாரினிலே -- வாழ்க்கை
அமைவதுபோல் வாழ வளைந்துகொடு ! நெஞ்சில்
சுமையின்றி வாழ்தல் சுகம்.

பசி

சாதம் அழைக்கிறது! சாம்பார் மணக்கிறது!
நாதம் இசைக்கிறது நாவிங்கே -- தூதுவிட்டுத்
துள்ளும் பசியடக்கத் தோகை மயிலாளே !
அள்ளி அமுதத்தைப் போடு.

மலை நகர்ந்தது

கோலத் திருநிலவு கொள்ளைச் சுடர்சிந்தி
நீலத் திரைவிரிப்பில் நித்திலமாய் ஊர்ந்ததடி
சோலை சிலிர்த்ததடி! சொக்கும் அழகினிலே
மாலை நகர்ந்ததடி மாது.


நகரப் பேருந்து நெரிசல்

முண்டி நெருக்கியே மூச்சுத் திணறியே
நொண்டி அடித்து நுழைந்து -- வண்டியில்
நாளும் பயணம் நகர்கின்ற கோலத்தில்
காலம் கரைகிறது காண்.

மதுவை விலக்கு

நாட்டின் அவமானம் நாட்டில் மதுக்கடைகள் !
கேட்டை விளைவிக்கும்! கேலிப் பொருளாக்கும்!
வீட்டை இருளாக்கும்! வேதனை ஊற்றெடுக்கும்!
வேட்கை மனமே விலக்கு.

துப்பாதே மானிடனே

கண்ட இடங்களில் காறியே துப்புகின்றார்!
என்னப் பழக்கமோ இப்பழக்கம் -- எண்ணற்ற
தொற்றுநோயைக் கூட்டிவரும்! துப்பாதே மானிடனே!
குற்றத்தைச் செய்யலாமா? கூறு.


மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home