Sunday, October 25, 2009

விலைகளைக் கட்டுப்படுத்து

===============================
திண்டாட வைக்கும் விலைவாசி ஏற்றத்தை
எந்த அரசியல் கட்சியோ,ஆட்சியோ
கண்டனம் செய்வதற்கோ,கட்டுப் படுத்தவோ
முன்வர வில்லையே ஏன்?

ஏழை எளியவர்கள் வாழ்வதற்கே தத்தளிக்கும்
கோலத்தில் நாள்களை நாளும் நகர்த்துகின்றார்!
சாரமற்ற சக்கைபோல் வாடி வதங்குகின்றார்!
ஈரமனம் ஏனில்லை?இங்கு.

காய்கறியும் பாலும் பருப்பு வகைகளும்
தேய்பிறையே இன்றி விலையின் உயர்விலே
பாய்ந்துசெல்லும் ராக்கெட்போல் விண்ணைத் தொடுகிறதே!
யார்தடுப்பார்?யார்காப்பார்?சொல்.

நடுங்கியே வாழும் கடைநிலை வர்க்கம்!
நடுத்தெருவில் வாழும் நடுத்தர வர்க்கம்!
மிடுக்குடன் வாழும் உயர்தர வர்க்கம்!
அடுக்குமா பேதம்?உரை.

விலைவாசி எப்படி ஏறினாலும் வாழ்வில்
மலைப்பின்றி வாங்குவோர் செல்வம் உடையோர்!
மலைப்பெல்லாம் ஏழைக்கே!அய்யோ!அரசே!
விலைகளைக் கட்டுப் படுத்து.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home