குடிசை
குடிசை!
குடிசைவீட்டில் வாழ்ந்தும் ஒருவேளைக் கஞ்சி
குடித்தாலும் உள்ள குடும்பம் மகிழ்ந்து
பகிர்ந்துண்டு வாழும் மனநிலை பெற்றே
அகங்குளிர வாழ்தலே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
குடிசை!
குடிசைவீட்டில் வாழ்ந்தும் ஒருவேளைக் கஞ்சி
குடித்தாலும் உள்ள குடும்பம் மகிழ்ந்து
பகிர்ந்துண்டு வாழும் மனநிலை பெற்றே
அகங்குளிர வாழ்தலே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
மதுரை பாபாராஜ் நூல்கள் பெயர் வரிசைக் கவிதை!
*கவிச்சாரல்*
தந்த
*கவியமுதம்* இந்தப்
புவியில்
*மகரவிளக்கை* ஏற்று
*மரபுகளின் அருவி*
*மகிழம்பூ* ஏந்தும் மணத்தில் கடலில்
*கிளிஞ்சல்கள்* பார்த்தேன்!
*மகரயாழ்* மீட்டும்
தெளிவிலே
*அற்புதத்தரு* தந்தேன். *திருக்குறள்பேழை*
யைச் செய்தேன்!
*அறம்பொருள் இன்பமென்னும்*
முப்பாலை *வெண்பா*
முறையில் கவிதைவடித்தேன்! *வசந்தம்*
கடைவிரிக்க
*பூச்சரம் தேனருவி*
கண்டேன்!
நடைமுறை
*வாழ்வியல்அந்தாதி*
கம்பன்
படையின்
*ராமாயணத்தைப்*
பாவால் படைத்தேன்,!
*அறத்துப்பால், இன்பத்தை ஆங்கிலத்தில்* தந்தேன்!
*அறம்பொருள் தந்தேன் குழந்தைப் பாடல்*!
*இன்பத்துப் பாலைப் புதுக்கவிதை* தந்தேன்!
*குறள்வெண்பா ராமா யணத்தைப்* படைத்தேன்!
*அகர வரிசை மனக்குறள்* தந்தேன்!
மகத்தான *ஔவையார்*
*பாரதி ஆத்திசூடி* படைத்தேன்!
குறளின் *பொருட்பால் ஆங்கிலம்* தந்தேன்!
*குழந்தைகளுக்கு குறளமுதம்* *நாலடியார்* *Reverberation* ஆங்கிலத்தில் தந்தேன்!
எனஆகா! *இனியவை நாற்பதை* நூல்வடிவில் தந்தேன்!
*குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்* 1330 குறள்களுக்கும் நூல்வடிவில் தந்தேன்!
*புதுவசந்தம்* தலைப்பில் மனைவியின் கவிதைத் தொகுப்பு
தந்தேன்!
அகத்தின் நிறைவே பா.
அகங்குளிர நூல்களைத் தந்தேன்நான்! ஆகா
பிறவியில் நான்பெற்ற பேறு.
வெளிச்சம் தொலைக்காட்சியில் அறத்துப்பால் விளக்கம்!
வெளிச்சம் தொலைக்காட்சி வாய்ப்பாக என்னை
வெளிச்சத்தில் வள்ளுவன் வாக்கில் அறத்தை
விளக்கி குறள்கள், பொருள்கள், நிகழ்வு,
விளக்கத்தை ஆங்கிலத்தில் என்றே கொடுத்தேன்!
பனையூரார் பாபு அவர்களின் ஊக்கம்
முரளிக் குழுவினர் ஒத்துழைப்பும் என்னை
முரளிக்கு அறிமுகம் செய்த குடும்ப
உறவாம் சிவகாமி சீனிவாச னும்தான்
நிகழ்ச்சியின் வெற்றிக்கு வேர்.
மதுரை பாபாராஜ்
மதுரை பாபாராஜ்
எனது படைப்புகள் இதுவரை:
29.03.26 மொத்தம்: 16548
maduraibabaraj.blogspot.com
இணையம்
(BLOG) 30.03.26 10000
(அக்டோபர் 2006
முதல்)
1
திருக்குறள் வெண்பா 1330
2
திருக்குறள் ஆங்கிலம்
2018. (அறம்,இன்பம்)
2022 (பொருள்) 1330
3
திருக்குறள் சிறுவர்.
பாடல்
அறம்,பொருள் 108
4
இன்பத்துப்பால்
குழந்தைகளுக்காக 250
5
வாழ்வியல் அந்தாதி 100
6
அற்புதத்தரு 420
7
பூச்சரம்
அகரவரிசை 247
8
வெளிச்சம்
தொலைக்காட்சி
வள்ளுவன் வாக்கு
அறத்துப்பால் 380
9
நூல்கள்1981-2004. (7) 484*
கவிச்சாரல் *கவியமுதம்.
*மகரவிளக்கு
*மரபுகளின் அருவி.
மகிழம்பூ* கிளிஞ்சல்கள் மகரயாழ்.
10
திருக்குறள்
பேழை 2006. 145
11
தேனருவி 2014. 34
12
கம்பராமாயணம்
2015. 240
13
குறள்களுக்கு குறள்
வடிவில் விளக்கம். 1330
2025
------------------------
கவிதைகள் மொத்தம் 16398
.
11 திரைப்படப் பாடல் 1
முதல் முயற்சி
கவிதை விளக்கம்:
நூல்வடிவில்:
12. ஔவையார் 109
ஆத்திசூடி
13.நாலடியார்
ஆங்கில ஆக்கம் 40.
---------------------------------------------------------
மொத்தம். 16548
----------------------------------------------------------
படம்:
ஜெகமே தந்திரம்(2021)
பாடல்:
தேய்பிறைய பெத்தெடுத்தே
இயக்குநர் :
G.கார்த்திக் சுப்பாராஜ்
இசை:
சந்தோஷ் நாராயணன்
பாடியவர்:
திருமதி.மீனாட்சி இளையராஜா
-----------------------------------------------------------
Amazing feat Sir. Hats off💐💐💐👍👏🙏
Vovbalunayarajan
எழுத்துலகில்
சாதனை படைத்து
இயல்பாய் வாழும்
மதுரகவி பாபாராஜ்
அவர்களின் மாண்பு அளவிடற்கரியது!
காலத்தால் அழியாது
காலத்தும் நிலைத்து
நின்று புகழ்தரும்!
வாழ்த்துகள் அய்யா!
இமயவரம்பன்
💐🙏🌹🙏🌷🙏🌺🙏🌸🙏💥
கவிதைத் தொண்டு தொடரட்டும்.
தமிழ்த்தாய்க்குப் புதிய அணி கலன்கள் அணி வகுக்கட்டும்.
பாரி முடியரசன்
Really you are Great Baba.
I feel very proud of you.
God bless you to continue your journey.
Jeyaprakash
இணக்கம் தழைக்கட்டும்
நாடுகள் போரை நிறுத்தட்டும்
மக்கள் அமைதியாய் வாழட்டும்
நல்ல இணக்கம் தழைக்கட்டும்
ஒற்றுமை நாளும் வளரட்டும்
அறவழி உணர்வு ஓங்கட்டும்
வன்முறை எண்ணம் மறையட்டும்
வாழ்க்கை இங்கே வாழ்வதற்கே
வக்கிரம் இன்றி வாழ்ந்திடுவோம்!
மதுரை பாபாராஜ்
தமிழ்நாடு
இணக்கம் எங்கள் இயல்பு!
தமிழ்நா டென்றே சொல்லு!
தலைநிமிர்ந் தேதான் நில்லு!
அனைவரும் இங்கே ஒன்று
பிணக்குகள் ஏதும் இல்லை!
ஆத்திகம் நாத்திகம் உண்டு!
வீடுகள் தோறும் தழைக்கும்!
அனைத்து மதங்களும் உண்டு!
வேற்றுமை என்பதே இல்லை!
இணக்கம் ஒன்றே மூச்சு!
இயல்பாய் வாழ்வோம் நாங்கள்!
பிரித்து வாழும் சூழ்ச்சிக்
கிடந்தர மாட்டோம் நாங்கள்!
தமிழே எங்கள் மொழியாம்!
தமிழே எங்கள் விழியாம்!
மண்ணின் பெருமை இணக்கம்!
மக்களின் பெருமை இணக்கம்!
மதுரை பாபாராஜ்
பாரதியின் புதிய ஆத்திசூடி..
30 சூரரைப் போற்று
விளக்கம்
சூரியனைப் போற்று.
----------------------------------+----------------------
பகலவனின் வன்கதிரை ஓசோன் படலம்
கடமையாய் நாளும் வடிகட்டி பாரை
இதமாகக் காப்பதற்குத் தோள்கொடு! மாசால்
கறைப்படுத்தி வாழ்ந்தால் மண்ணுலக வாழ்க்கை
முறைசிதைந்து போகும்! பகலவனைப்போற்ற
சிறைவைக்கும் மாசைத் தவிர்.
பாரதியின் புதிய ஆத்திசூடி.
28 சீறுவோர்ச் சீறு
கனலாய்ச் சினங்கொண்டு சீறினால் நீயோ
புனலாக மாறித்தான் அன்பாலே சீறு!
அனலணைந்தே ஆறும் சினந்தான்! நாணும்
மனத்தால் திருந்துவார் பார்.
பாரதியின் புதிய ஆத்திசூடி.
27 சிதையா நெஞ்சுகொள்
நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு
நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்
அலைபாயும் போக்குகளை விட்டே மனதை
நிலைப்படுத்தி வாழப் பழகு.
பாரதியின் புதிய ஆத்திசூடி.
26 சாவதற்கு அஞ்சேல்
நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்
இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!
எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!
எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை!
இவ்வுலக வாழ்வின் உயிர்.
பாரதியின் புதிய ஆத்திசூடி.
25 சரித்திர தேர்ச்சி கொள்
இல்லத்தின் பின்னணியும் நாட்டின் வரலாறும்
தெள்ளத் தெளிவாகக் கற்றுத் தெளியவேண்டும்!
கல்வியைத் தாண்டி அறிந்துகொண்டால் நல்லது!
இவ்விரண்டும் வாழ்வின் துணை.
பாரதியின் புதிய ஆத்திசூடி
24 கவ்வியதை விடேல்
நல்லவராய் வல்லவராய் வாழ்வில் உயர்த்துகின்ற
நல்ல குணங்களை எந்த நிலையிலும்
தள்ளிவைக்க எண்ணாமல் எப்பொழுதும் பின்பற்று!ச
தெள்ளமுத்ச் சுவைதான் வாழ்வு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
23 கோல்கைக் கொண்டு வாழ்
இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்
எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ
அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்
அச்சமின்றி சொல் நிமிர்ந்து.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
22 கொடுமையை எதிர்த்து நில்.
முன்னேறிச் செல்லும் எறும்பைத் தடுத்துப்பார்
தன்வழி மாற்றி முயற்சித்தே முன்னேறும்!
உன்வழியில் இங்கே தடைக்கல்லா? சிக்கலை
என்றும் அறவழியில் தாண்டு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
21 கைத்தொழில் போற்று
தனிமனித ஆற்றல் தழைக்கும் தொழில்கள்
கனிமரம் போல நற்பலன் சேர்க்கும்!
வணிகம் நிரந்தரம்! ஏற்றமும் தாழ்வும்
மனிதனின் ஆற்றலைச் சார்ந்து
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
20 கேட்டிலும் துணிந்து நில்
கேடுகள் வாழ்வைத் தடுமாறச் செய்யலாம்!
கேடுகளின் தாக்கத்தால் கோழையாக மாறாமல்
கேடுகளை வெற்றிகொள்ள கண்ணே! துணிந்துநில்!
மாறும் ! நிலைமாறும் பார்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
19 கெடுப்பது சோர்வு
மலையென செல்வம் குவிந்திருந்த போதும்
களையெனச் சோம்பல் வளர்வதை நாளும்
நிலைகொள்ளச் செய்தால் செல்வம் அழியும்!
உலகில் கெடுப்பது சோர்வு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
18 கூடித் தொழில் செய்
---------------------------------------------
தனிமரம் தோப்பாக மாறாது! ஆனால்
தனிமனிதன் கூட்டாகச் சேர்ந்து குழுவாய்
இணைந்து குழுவுணர்வால் ஒன்றாய் உழைக்கும்
முனைப்பால் உயரலாம் நம்பு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
17 குன்றென நிமிர்ந்து நில்
எத்தனைச் சோதனைகள் சுற்றி வளைத்தாலும்
அத்தனையும் இங்கே தவிடுபொடி யாவதற்குச்
சற்றும் கலங்காமல் குன்றாய் நிமிர்ந்தேதான்
முற்றும் இலக்குநோக்கி நில்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
16.கீழோர்க்கு அஞ்சேல்
துன்பங்கள் தந்து துவளவைக்கும் கூட்டத்தைக்
கண்டுகொள்ள வேண்டாம்! புறக்கணித்து முன்னேறு!
வன்மனம் கொண்டவர்க்கும் நன்மைகள் செய்யவேண்டும்!
என்றும் பெருந்தன்மை ஏந்து.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
15. கிளைபல தாங்கேல்
பிரித்துப் பிரித்துப் பிரித்தாளும் சூழ்ச்சி
பிரிவினை உண்டாக்கித் துண்டாடிப் பார்க்கும்!
பிரிவினைச் சக்திகள் நாட்டின் களைகள்!
பிரிவைச் சகிப்பது கேடு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
14 காலம் அழியேல்
காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் மீண்டுமந்தக்
காலம் திரும்பக் கிடைக்காது கண்மணியே!
காலத்தைப் பொன்போல் கடமையைக் கண்போல
வாழ்க்கையில் போற்றிமுன் னேறு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
13.கற்றதொழுகு
கற்பதை நல்லதாய்க் கற்றுத் தெளியவேண்டும்!
கற்றுத் தெளிந்ததும் உள்வாங்கி வாழ்க்கையில்
அப்படியே பின்பற்றி வாழ்ந்தால் மதிப்புண்டு!
எப்படியோ வாழ்தல் இழிவு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
12.ஒளடதங் குறை
குப்பை உணவும் துரித உணவுகளும்
அப்பப்பா எண்ணற்ற நோய்களை மேனிக்குள்
எப்படியோ தாக்கவைக்கும்! உண்ணும் உணவுகளில்
சற்றே கவனமுடன் உண்டால் மருந்துகளை
முற்றும் குறைக்கலாம் சொல்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
11.ஓய்தல் ஒழி
புற ஓய்வை இங்கே தவிர்த்தல் அரிதே!
அக ஓய்வுக் கிடங்கொடுத்தல் சோம்பலாக்கும்!உள்ளம்
சிறகை விரித்தென்றும் உற்சாகம் பொங்க
முடங்காமல் பார்ப்ப தறிவு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
10 ஒற்றுமை வலிமையாம்
ஒற்றுமை இல்லாத நாடுகளும் வீடுகளும்
முற்றும் சிதைந்தே அழிந்துவிடும்--- ஒற்றுமை
மட்டுமே காக்கும் வலிமையாம்! மக்கள்நாம்
நற்றமிழ்போல் வாழ்வோம் நிமிர்ந்து.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
9 ஐம்பொறி ஆட்சிகொள்
புலனடக்கம் இன்றி மிருகம்போல் நாளும்
களங்கம் சுமந்தேதான் வாழ்வதை விட்டுப்
புலன்களைக் கட்டுப் படுத்தியே வாழ்ந்தால்
உலகம் வணங்கும் பணிந்து.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
8 ஏறுபோல் நட
கூறுபோட்டுப் பார்க்கின்ற வஞ்சகத்தைத் தோற்கடித்தே
ஏறுபோல் இங்கே நடைபோட்டு நம்நாட்டைப்
பாடுபட்டு வல்லரசாய் மாற்றிடவே தோள்கொடுப்போம்!
ஏடுபோற்ற இந்தியாவைப் பாடு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
7.எண்ணுவது உயர்வு
குறுக்குவழி எண்ணங்கள் தாழ்வைக் கொடுக்கும்!
உறுத்தல்கள் இல்லா உயர்வான எண்ணம்
மிடுக்காக வாழ்வதற்கு நல்வழி காட்டும்!
தொடுக்கின்ற எண்ணம்போல் வாழ்வு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
6.. ஊண்மிக விரும்பு
------------------------------------
ருசித்துப் புசிப்பதைக் காட்டிலும் நாளும்
பசித்துப் புசித்தால் உடல்நலம் உண்டு!
அதிகமாய் இன்றி அளவுடன் உண்டால்
விதிக்குள் அடங்கும் உடம்பு.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
5.உடலினை உறுதிசெய்
பிழைப்பதற் கேற்ற வருமானம் ஈட்ட,
அலைச்சல் உளைச்சலைத் தாங்கி
உழைப்பதற் கேற்ப உடலுறுதி வேண்டும்!
தழைக்க உடற்பயிற்சி செய்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
4.ஈகை திறன்
இருப்பதில் தன்னால் இயன்றதை இங்கே
தருவதே ஈகை! தரமறுத்துச் சேர்த்தால்
துரும்பும் உடன்வராது நீசெல்லும் நேரம்!
தருவதில் இன்பம் உணர்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
3.இளைத்தல் இகழ்ச்சி.
சோர்வுக் கிடங்கொடுத்தால் சோம்பல் உருவாகும்!
ஆர்வம் முயற்சிகள் பின்தங்கும்! முன்னேற்றம்
வேரிழக்கும்! அச்சாணி தூர்ந்து நகராத
தேராகும் வாழ்க்கை உணர்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
----------------------------------------------------------------
2.ஆண்மைதவறேல்!
வாய்மையை நேர்மையை வாழ்வாக மாற்றிவிடு!
பாய்ந்துவரும் சோதனையைச் சாதனை யாக்கிவிடு!
ஊர்தூற்றிப் பார்த்தாலும் ஆண்மை தவறாமல்
பார்போற்ற வாழ்வதற்குப் பார்.
பாரதியின் புதிய ஆத்திசூடி
------------------------------------------------------------------
1.அச்சம் தவிர்!
பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினேன்!
பாயும் புலிகண்டேன்! வேகமாக ஓடினேன்!
பாய்ந்துவந்த வெள்ளப் பெருக்கோ எதிர்வர
சோர்ந்திடாமல் நின்றே எதிர்கொண்டேன்! எல்லாம்
மாயமாய்ப் போனதே பார்.
குறுந்தொகை
இமயமலை குறித்து குறுந்தொகையில் வரும் பாடல்!
பாடியவர் ஔவை:
குறுந்தொகை 158
பாடல்:
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ.
கவிதை:
தலைவன் தினந்தோறும் தேடி வருவான்!
மழைவேறு பெய்கிறது! என்தலைவன்
பார்க்க
வருவாரோ? வந்துவிட்டார்! கேட்கட்டும் இங்கே!
மலையருகே பாம்புகள் ஓட இடியும்
சுழன்றடிக்கும் காற்றும் கலந்த மழையே!
பெரிய இமய மலையைத் தாக்கும் வலிமை உனக்குண்டு! இப்படிப் பெய்து
துணையெண்ணி வாழ்வோரை வாட்டுகின்றாய்! ஏனோ?
வருவாரோ என்றஞ்சி நின்றிருந்தேன் இங்கு!
இரக்கமே இல்லையா சொல்
குறுந்தொகை
பாடல் 110
பாடலாசிரியர்: கிள்ளிமங்கலங்கிழார்
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
--------------------------------------------------------------------------------------------------
மயில்தோகைக் கண்போல் கருவிளைப் பூவோ
எழிலாய்ப் பூத்திருக்க காற்றுவீசி நீரில்
மலர்ந்துள்ள மலரை உலுக்கியே ஆட்ட
வளர்ந்துள்ள ஈங்கைச் செடியில் உதிர
குளிர்ச்சியான காற்றோ கொடுமை புரிய
மலரன்ன நான்படும் பாட்டைத் தலைவன்
உளத்திலே எண்ணாமல் வாழ்கின்ற அந்தத்
தலைவனோ வந்தால்தான் என்ன? வராமல்
அலைந்தால்தான் என்ன எனக்கு?
------------------------------------------------------------------
குறுந்தொகை
பாடல் 109
தோழியின் கூற்று,!
பாடலாசிரியர்:
நம்பி குட்டுவனார்
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
--------------------------------------------------------------------------------------------------------
வளைவான காலும் வளைந்த முதுகும்
அழகைப் பறைசாற்ற நீந்தும் இறால்மீன்
வளங்கொண்ட நாட்டிலே மீனவன், அன்பன்!
கலந்து பழகினாலும் என்தலைவி வாடும்
நிலைதந்தே இங்கே பிரிவான்! அழகு
மிளிர்கின்ற நெற்றி பிரிவுத் துயரால்
ஒளியிழந்த கோலத்தைப் பார்.
முல்லைத்திணை- தலைவி கூற்று
குறுந்தொகை
பாடல் 107
பாடலாசிரியர்:
மதுரைக் கண்ணனார்
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.
------------------------------------------------------------------------------------------------------
நள்ளிரவில் நானோ கணவனுடன் தூங்கினேன்!
மெய்மறந்த தூக்கத்தைச் சேவலே! நீயிங்கே
துல்லியமாய்க் கூவி எழுப்பிவிட்டாய்! இங்குமங்கும்
துள்ளி எலியை இரையாக்கத் தேடுகின்ற
இல்லத்துப் பூனைக்கே நீயோ இரையாவாய்!
உள்ளத்தால் சாபமிட்டேன் போ.
தலைமகள் தோழிக்குக் கூறியது
குறுந்தொகை
பாடல் 106
பாடலாசிரியர்: கபிலர்
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே.
----------------------------------------------------------------------------------------------------
தலைவனோ இத்தி மரவிழுது போல
நிலைகொண்ட பேரருவி போல்தோன்றும் நாடன்!
மலர்போன்ற தீதில்லா உள்ளம் உடையோன்!
உளமார தூதை அனுப்பியுள்ளான் தோழி!
விரைந்தே மறுமொழி சொல்வோம்! அதனால்
எரியும் நெருப்பிலே நெய்யூற்று தல்போல்
மளமள வென்றே வளரட்டும் காதல்!
நலமுடன் வாழலாம் நாம்.
குறுந்தொகை
பாடல் 105
பாடலாசிரியர்: நக்கீரர்
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே
-----------------------------------------------------------------------------------------------------
தோட்டத்தில் பொன்போல் விளைந்த திணையினிலே
தோன்றும் கதிரைக் குறவன் கடவுளுக்குப்
பாங்காய்ப் படைப்பான்! மயிலோ அதையுண்ண
சாமியாடும் மாந்தரைப் போல மயிலாடித்
தானங்கே நின்று நடுங்குகின்ற கோலத்தை
ஏந்துகின்ற நாட்டின் தலைவனவன்! கண்ணீரை
ஏந்தவைத்தே ஏங்கவைக்கும் துன்பநிலை தந்துவிட்டான்!
ஏனென்று தோழியே! சொல்.
குறுந்தொகை
பாடல் 104
பாடலாசிரியர்:
காவன் முல்லைப்பூதனார்
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே.
--------------------------------------------------------------------------------------
தோழி! உருண்டோடும் முத்து மணிகள்போல்
தூவும் பனித்துளிகள் வீழ்வதுபோல் காட்சிதரும்
பூவின காலைப் பொழுதிலே பூங்கொடியை
ஆவினங்கள் மேயுதடி! அக்காலம் என்தலைவன்
ஈவிரக்கம் இன்றிப் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!
சேயிழை தாங்குவேனோ? செப்பு
குறுந்தொகை
பாடல் 103
பாடலாசிரியர்
வாயிலான் தேவனார்
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.
--------------------------------------------------------------------------------------------------------
தோழி! முருக்கம்பூ செவ்வண்ண வாய்நாரை
ஆவி துடிக்க நடுங்கியே சேற்றுக்குள்
தூவித் துளாவி இரைதேடும்! வாடையோ
தூவுகின்ற நீர்த்திவலை பட்டுத் தெறித்திருக்கும்!
ஈவிரக்கம் இல்லா தலைவர் வரமாட்டார்!
சேயிழையின் இன்னுயிர் தங்குமோஎன் மேனியில்?
நேரிழையை ஏங்கவைத்தார் பார்.
குறுந்தொகை
பாடல் 102
நெய்தல் தலைவி கூற்று
தனிமைத் துயரம்!
பாடலாசிரியர்:
ஔவையார்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
----------------------------------------------------------------------------------------------
தோழி! பிரிந்திருக்கும் எந்தன் தலைவரை
ஆவி துடிக்க நினைக்கத் தூண்டியதும்
வேவத் தொடங்கிவிடும் உள்ளம்! நினைக்காமல்
வாழலாம் என்றாலோ காமநோய் வானத்தைத்
தோய்ப்பது போல வளர்கிறதே! இத்தகைய
தீங்கை விதைப்பவர் நற்குணம் கொண்டவரா?
ஏங்கித் தவிக்கின்றேன் நான்.
வேவம்-- துன்பம்,தனிமை
குறுந்தொகை
பாடல் 101
பாடலாசிரியர் :
பரூஉ மோவாய்ப் பதுமனார்
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
--------------------------------------------------------------------------------------
ஒருபுறம் மண்ணக விண்ணக வாழ்வும்
ஒருபுறம் எங்களது இல்லற வாழ்வும்
இருநிலை வைத்தேதான் ஆராய்ந்து பார்த்தால்
இவளுடன் வாழ்கின்ற வாழ்வே சிறப்பாய்
இருப்பதைக் காட்டும்! இவளோ அழகி,
செழுமை மிளிர்கின்ற மேனியும் பூப்போல்
பருகத் துடிக்கும் விழிகளும் கொண்டு
பருவச் சிலைபோல் தவழ்பவள் தோளைத்
தழுவித் தழுவியே மெய்மறக்கும் நாளே
உலகிலே நன்னாள் எனக்கு.
குறுந்தொகை
பாடல் 100
பாடலாசிரியர்: கபிலர்
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
------------------------------------------------------------------------------------------------------
ஓரியின் கொல்லிமலைப் பாவையின் சாயலில்
பேரழகு கொண்டே குடவரைச் சிற்பம்போல்
தேரழகு ஏந்திவரும் ஏந்திழைச் சித்திரம்!
ஊரக கொல்லிமலைக் காந்தள் வனத்திலே
நீரருவி சார்ந்த நிலத்திலே நெல்விதைத்தே
சீராய் அறுவடை செய்வார்கள் மக்களங்கே!
பாரில் பசியாலே வாடும் நிலைவந்தால்
யானைகளின் தந்தத்தை விற்றுதான் உண்பாராம்.
தேனக வாழ்விது செப்பு.
குறுந்தொகை
என்ன செய்வேன்?
பாடல் 99
பாடலாசிரியர்: ஔவையார்
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.
------------------------------------------------------------------------------------------------------
பழைய நினைவுகளை எண்ணித்தான் பார்த்தேன்!
அலையலையாய்த் தூண்ட
வியந்தேன் நினைந்து!
உலகின் இயல்பிதுதான்
என்றே அமைதியுற்றேன்!
மராமரத்தின் தாழ்ந்த கிளைகளைத் தொட்டே
அளாவிய வெள்ளமோ
பாய்ந்துசெல்தல் போல
அளவின்றி ஏக்க உணர்ச்சிப்
பரவி
நலங்கெட என்செய்வேன்? நானோ கடமைக்
களத்திலே ஈடுபட்டேன் இங்கு.
குறுந்தொகை
பாடல் 98
பாடலாசிரியர்:
கோக்குள முற்றனார்
இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.
-------------------------------------------------------------------------------------------
கார்காலம் வந்து படர்கொம்பைப் பற்றித்தான்
பீர்க்கம்பூ வந்தாச்சு! என்தலைவன் காணோமே!
ஆர்வமுடன் தோழியே! பூவைப் பறித்தெடுத்தே
சேயிழை நானோ படர்கொம்பு நாயகனை
ஆவலுடன் தேடுகிறேன் என்றுசொல்லி இங்கொருவர்
பாவைக்( கு) உதவுவாரோ? சொல்.
குறுந்தொகை
பாடல் 97
பாடலாசிரியர்:வெண்பூதியார்
யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே.
-----------------------------------------------------------
தோழியே! என்னைத் தனிமைநோய்த் துன்புறுத்த
ஆழியில் துள்ளும் துரும்பாக ஆகிவிட்டேன்!
ஆவி அவனையே தேடுதடி கானலிடம்!
பாவியோ பெற்றோ ருடனே மகிழ்ந்துள்ளான்!
கூவித் துடிக்கவைக்கும் அந்தக் களவுறவு
ஊரலராய் மாறியதே! இன்னும் வரவில்லை!
சோர்ந்தே தவிக்கின்றேன் நான்.
குறுந்தொகை
பாடல் 96
பாடலாசிரியர்:
அள்ளூர் நன்முல்லையார்
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.
-------------------------------------------------------------------------------------
அருவியும். வேங்கை மரமும் உடைய
ஒருநாடன் நம்தலைவன்! வேங்கை மரமோ
அருவியிடம் செல்லாது! அந்த அருவி
விரும்பி மரத்திடம் வந்துநிற் காது!
வரும்போது இன்புற்றும் வாராத போது
வருந்தியும் உள்ளேன்நான்! என்னசெய்வாய் என்றே
ஒருகேள்வி கேட்டாய்! நகைச்சுவை என்றே
கருதுகின்றேன்! இல்லையேல் என்னநீ ஆவாய்?
சுருக்கென்று சொன்னாள் கடிந்து
குறுந்தொகை
பாங்கன் தூது
பாடல் 95
முடியுமா?
பாடலாசிரியர் :கபிலர்
மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.
------------------------------------------------------------------------------------------
குறவன் மகளே எனது தலைவி!
சுடரொளி வீசும் அழகுடையாள்! மேனி,
உறவாடும் நீர்போல் குளுமையை ஏந்தும்!
புறத்தில் நெருப்பாகி என்வலிமை தன்னை
தடந்தெரியாமல் ஆக்கியதே! அந்தோ! அங்கே
மடமட வென்றேதான் வீழும் அருவி
நடக்கும் பலமலர் ஊராம்! சற்றே
எடுத்துரைக்க ஏலுமா! நீ?
குறுந்தொகை
பாடல்: 94
பாடலாசிரியர்:
கதக்கண்ணனார்
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே
---------------------------------------------------------------------------------------------------------
தோழியே! பிச்சி அரும்பு மலரோ சிவந்திருக்கும்
காட்சிகண்டே கார்காலம் வந்தும் தலைவனோ
காட்சி தரவில்லை என்றே மயங்குகிறேன்!
ஊற்றெடுக்கும் பேரருவி மேலே முழங்குகின்ற
வான்மேக ஓசையினை நள்ளிரவில் என்தலைவன்
கேட்டால் பிரிவுத் துயரில் படும்பாடோ
யாதென்றே ஏங்குகிறேன் நான்.
குறுந்தொகை
பாடல் 93
பாடலாசிரியர்:
அள்ளூர் நன்முல்லையார்
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே
----------------------------------------------------------------
இருமனப் பெண்டிரை நாடினான்! அன்பன்!
உருக்குலையும் பெண்மை,அழகைக் குறித்தோ
ஒருகவலை இன்றி நடக்கின்றான்! தோழி!
சுருக்கென்றே என்னுயிர் போனாலும் நீயோ
கருணையைக் காட்டு! தலைவனுக் கென்ற
ஒருசொல் தன்னை உரைக்காதே! என்னை
நெருங்காமல் வாழ்கின்ற காரணத்தால் அந்தோ!
பெருந்தன்மைத் தாய்தந்தை போலானான்! ஊடல்
பெருகாது தோழி! உணர்.
குறுந்தொகை
தலைவியின் வேதனை
பாடல் 92
பாடலாசிரியர்:தாமோதரனார்
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
-------------------------------------------------------------
மயக்கம் தருகின்ற மாலைப் பொழுது!
இரையை அலகிலே தாய்ப்பறவை கவ்வி
விரைந்துவந்தே சேய்ப்பறவை வாயிலே ஊட்டி
விரைந்தது! மீண்டும் இரைதேடி வானில்!
பிரிந்துசென்ற அன்பர் பறவைபோல் வந்து
தரிசனம் தந்துவிட்டுப் போனால் மகிழ்வேன்!
வரவில்லை! ஏக்கத்துடன் நான்.
குறுந்தொகை
பாடல் 91 கற்பறம்
பாடலாசிரியர்:ஔவையார்
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே.
---------------------------------------------------------------------------------------------------
பிரப்பங் கொடியின் கனியைக் குளமீன்
விருப்புடன் பற்றியுண்ணும் நீர்த்துறை ஊரில்
செழுப்பமுடன் வாழும் தலைவன் மனைவி
அருமைத் தலைவியே கற்பறத் தோடே
இருக்கின்றாய்! வேறுபட்டால் மீண்டும் தலைவன்
இருமனப் பெண்டிரை நாடுவான்! உன்னை
இருள்போல் துயரமே பலவாறாய்ச் சூழும்!
கருநிற யானைப் படையுடன் தேரும்
இருக்கும் அதியமான் அஞ்சியை எண்ணி
இரவூரில் தூக்கமின்றி உள்ளாரைப் போல
இரவுறக்கம் இன்றித் தவிக்கின்ற நாள்கள்
தலைவி உனக்குந்தான் உண்டு.
குறுந்தொகை
பாடல் 90
பாடலாசிரியர்
மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்
மாற்றமில்லை!
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே
--------------------------------------------------------------------------------------------
அன்பன் குன்றநாடன்! குன்றில் அடுக்கடுக்காய்
நன்கு மிளகுக் கொடிபடர்ந்த சூழ்நிலை!
அங்கே இரவில் மழைபெய்த காரணத்தால்
அங்கிருந்த ஆண்குரங்கு தொங்கும் பலாப்பழத்தை
தன்கையால் தொட்டதும் வீழ்ந்தே அருவியில்
சென்றே துறையருகில் வந்தது! அந்நீரோ
அம்மா! இனித்தது! அத்தகைய நாடனோ
இங்கே வரவில்லை! காதலியின் தோள்மெலிந்தே
மென்மை பழுத்தவள்! தோள்மெலிந்தும் வாழ்கின்ற
தன்னியல்பில் மாற்றமில்லை பார்.
குறுந்தொகை
ஊர்வாயை மூடவோ?
பாடல் 89
பாடலாசிரியர்:பரணர்
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.
---------------------------------------------------------------------------------------------------
தோழியின் கூற்று
ஊர்மக்கள் வள்ளை இசைத்தேதான் பாறையில்
பாதத்தை அங்கே உரலாக்கிக்
குற்றுகின்றார்!
காரியோ ஓரியைக் கொன்றே
பொறையனுக்கு
வாரி வழங்கினான்
கொல்லிமலைக் குன்றைத்தான்!
கூவித் தலைவியைக் கொல்லிமலைப் பாவையின்
பேரழகை ஏந்துவதாய்ச் சொல்லித்தான் குற்றுகின்றார்!
ஆரணங்கை அங்கே தலைவனுடன் சேர்த்தேதான்
தாளமுடன் பாடியே குற்றுகின்றார்! அப்படித்தான்
ஊராரோ பாடுவார்! நீயேன் வதங்குகிறாய்?
நேரிழையைத் தோழிதான் கேட்டாள் பொருளுடன்!
ஊர்வாயை மூடுவது யார்?
குறுந்தொகை
நாணமாட்டேன்!
பாடல் 88
தலைவி்தோழியிடம்
பாடலாசிரியர் :
மதுரைக் கதக்கண்ணனார்
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.
-----------------------------------------------------------------------------------------
வெள்ளருவி வீழ்கின்ற நாடன் தலைவன்தான்!
துள்ளும் புலியோ களிறொன்றைத் தாக்குவதால்
வல்லமை தேய்ந்தேதான் சோர்வுற்றே நின்றிருக்கும்!
அவ்வழியே நம்தலைவன் நாடி வருகின்றான்!
நள்ளிரவு நேரம்! பயப்படாமல் தேடிவந்து
நல்லின்பம் ஈவான்! பழிநமக்கு வந்தாலும்
எள்ளளவும் நாணமாட்டேன் நான்.
குறுந்தொகை
பாடல் 87
வேண்டுதல்
பாடலாசிரியர்:கபிலர்
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.
--------------------------------------------------------------------------------------------
அன்றோ மராமரத்தின் கீழ்நின்றே உன்னைநான்
என்றும் பிரியமாட்டேன் என்றான்! பிரிந்துவிட்டான்!
அந்த மராமரத் தெய்வம் கொடியவரைத்
தண்டிக்கும் என்கின்றார்! அன்பன் கொடியவனா?
என்னுள்ளம் இல்லை எனச்சொல்லும்! பிரிவாலே
என்நெற்றி இங்கே பசலையை ஏந்தவில்லை!
என்தோள் இளைக்கவில்லை!
தானே பசந்தது!
தன்னால் இளைத்தது! தண்டிக்க
வேண்டாம்நீ!
பெண்மையின் பக்குவம் பார்.
குறுந்தொகை 86
விழிப்பாரோ?
பாடல் 86
பாடலாசிரியர்:
வெண்கொற்றனார்
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-------------------------------------------------------------
தோழி! தலைவன் வருவானா? ஏக்கமுடன்
வாடைக் குளிரிலே தூக்கமின்றி வாடுகின்றேன்!
மாடு தலையாட்டும் வண்ணம் நுளம்பென்னும்
மாட்டுஈ மாட்டின் தலையைக் கடித்தது!
மாடும் தலையாட்ட மாட்டின் கழுத்துமணி
ஆடி ஒலியெழுப்ப தோழி! அதைக்கேட்டே
பாதி உறக்கத்தில் தூக்கம் கலைவாரோ?
நாடிவரும் என்தலைவன் பார்த்துத் தயங்குவானோ?
வாடுகின்ற என்கலக்கம் பார்.
குறுந்தொகை 76-85
பாடல் 76
முன்பனித் துன்பம்
பாடலாசிரியர்:
கிள்ளி மங்கலங்கிழார்.
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே.
------------------------------------------------------------------------------------------
உள்ளமோ கல்மலை ஆகிவிட்ட என்னவர்
கற்பாறை சுற்றியே காந்தள் மலர்ச்சரம்
பல்மலர் வேலியாய் உள்ள மலைவழியில்
செல்வேன் என்றேதான் சொல்லத் துணிந்தாரோ?
அல்லாடும் சேம்பிலை யானைக்கா தாடுதல்போல்
கொல்லும் வடக்கிருந்து வீசும் குளிர்க்காற்றாம்
சில்லென்ற அற்சிரக் காலத்தில் துன்பத்தில்
சொல்ல முடியாமல் நாம்நடுங்கு வோமென்றே
சொல்லி அனுப்பென்றாள் மாது.
பாடல் 77
தோள்கள் ஏங்கித் தவிக்கும்!
பாடலாசிரியர்
மதுரை மருதன் இளநாகனார்
அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே.
-----------------------------------------------------------------
எளிதில் கடக்க முடியாத காட்டில்
வழிப்போக்கர் செத்தால் உடல்களை மூடும்
தழைகள் குவியலாகத் தோன்றும்! உயர்ந்தே
உலவுகின்ற யானைகள் தங்குகின்ற வண்ணம்
நிழலாய்ப் பயன்படும் அப்பொருள் என்பார்!
சுரவழி அத்தகைய அச்சமேந்தும்! அந்த
வழியே அவர்செல்லும் பாதையாம் தோழி!
தவிக்குமென் தோள்கள் மெலிந்தன! தப்பா?
தவறல்ல! தோழியே! சாற்று.
சங்கம உணர்ச்சி!
பாடல் 78
பாடலாசிரியர்:நக்கீரனார்
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே
----------------------------------------------------------------------------------------------
பண்பாடும் வெள்ளருவி மாமலையில் தோன்றினாலும்
அங்கேயே நில்லாது பக்கத்துக் கல்மலையில்
கண்கவர வீழ்கின்ற காட்சிகொண்ட நாட்டுக்குப்
பண்பான அன்புத் தலைவனே!
வாழ்விலே
இன்ப நுகர்ச்சி உணர்வு நன்றென்றே
இங்கே உணராத நெஞ்சிலும்
தங்கிவாழும்!
அன்பாய் வரவேற்கா தோரிடத்தில் தங்குவதோ
என்றும் அறியாமை!
இங்கே அறியாதோர்
பண்ணும் பிழைபொறுத்தல்
பண்புதான்! துன்புறுத்தும்
இந்நிலையை எண்ணி
வருந்தவேண்டாம் நீயிங்கே!
அன்பரிடம் பாங்கன் எடுத்துரைத்தான் தன்கருத்தை!
சங்கமத்தைத் தேடும் உணர்வு.
வேதனை தீருமா?
பாடல் 79
பாடலாசிரியர்:
குடவாயிற் கீரத்தனார்
கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே
-------------------------------------------------------------------------------------------------------------
தோழியே! அவருக் கிணையாக நானில்லை?
ஈவிரக்க மின்றித்தான் சென்றதால் ஏங்குகிறேன்!
ஓவியமாம் என்னவர் சிற்றூர்க்குள் சென்றாரோ!
யானையோ ஓமை மரத்தை உரித்தபின்
கானகத்தில் நிற்கும் உலர்ந்த மரக்கிளையில்
கால்பதித்துப் பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
பாதையில் உள்ளதே சிற்றூர்! அதைக்கேட்டு
பேதையென்னை நெஞ்சில் நினைப்பாரோ?மாட்டாரோ?
வேதனை தீர்ப்பாரோ? சொல்.
இருமனப் பெண்ணின் சீற்றம்!
பாடல் 80
பாடலாசிரியர்:
ஔவையார்
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.
-------------------------------------------------------------------------------------
குவளைச் செடிகளைத் தள்ளிவரும் வெள்ளம்
அலையெனத் துள்ளிவரும் நீரில் அளைந்து
விளையாட போகின்றேன்! உங்கள் தலைவன்
விளையாட அங்கே வருவான்! தலைவி
எழினியைப் போல தனியாக வந்து
தலைவனோ என்னைத் தழுவாத வண்ணம்
இயன்றால் தலைவனின் மார்பையும் உற்றார்
பலரையும் காப்பாற்றிக் கொள்ளட்டும்! சொல்க!
தலைவியைக் காப்பாற்றச் சொல்.
வருக திருமணம் புரிக!
பாடல் 81
பாடலாசிரியர்:
வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்
இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே.
-------------------------------------------------------------------------------------
தலைவனே! உன்சொல்லை நம்பிநான் சொன்னேன்!
தலைவியும் என்சொல்லை நம்பியே வந்தாள்!
கிளைகொண்ட ஞாழல் மரத்தடியில் தன்னை
இழந்தாள் உனக்கே! அதையெண்ணி நாளும்
புலம்புகிறாள்! அந்தோ எங்களூர்! பாராய்!
நிலவும் இருளும்போல் ஊரிருக்கும் கானல்
அலைகடல் நன்கு தெரிகிறது! தென்னை
மரங்களின் ஊடே இருக்கிறது ஊர்தான்!
வருக மறவாமல்! அங்கே தலைவி
கரம்பற்றி வாழ்வைத் தருக! கலங்கும்
தலைவியை ஏற்கவேண்டும் வந்து.
அவரன்றி யார்?
பாடல் 82
பாடலாசிரியர்:
கடுவன் மள்ளனார்
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே.
----------------------------------------------------
மலைச்சாரல் தன்னில் குறவன் தினையை
அலைந்தேதான் கொய்தபின்னர் அங்கே
அழகாய்ப் படரும் அவரைப்பூ பூத்த
நிலையில் தலைவன் உரைத்தகாலந் தன்னில்
வரவில்லை என்றேங்கி வாரி முடிக்க
இயலாத கூந்தல் விரிந்திருக்க கண்ணீர்
கலங்கவைத்துப் பார்க்கின்ற கோலத்தைக் கண்டே
அழாதே எனக்கூறிக் கண்துடைக்க வல்லார்
அவரன்றி யாருளார்? கூறு.
அமிழ்தமே தரலாம்!
பாடல் 83
பாடலாசிரியர்:வெண்பூதனார்
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.
---------------------------------------------------------------
அன்புத் தலைவனோ வந்து தலைவியை
இங்கே மணமுடிக்க வந்திடுவான் என்றேதான்
பண்பாய்ச் செவிலித்தாய் சொன்னதும் தோழியோ
தன்வீட்டில் தன்முயற்சி கொண்டே உணவருந்தும்
இன்பத்தைக் கொண்டே திகழ்கின்ற நாட்டினன்!
கண்முன் பலாப்பழம் தொங்குகின்ற நாட்டினன்!
அந்தத் தலைவன் வருவான் எனச்சொன்னாள்!
இன்சுவை நல்லமிழ்தை இந்த உலகுக்கே
தந்து மகிழலாம் சாற்று.
பாடல் 84
பருவமாற்றம்!
பாடலாசிரியர்:மோசிகீரனார்
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே.
---------------------------------------------------------------------------------------------------
மாவேளாய் வள்ளலோ தோள்வளை பூண்டிருப்பான்!
மாமலையில் வேங்கையுடன் காந்தள் மலர்மணக்க
மேகங்கள் ஆடும் பொதியமலை நாடனூர்!
ஆம்பலை விஞ்சும் குளிர்ச்சியான என்மகளைக்
காண்கிறேன் என்னருகில் மங்கை படுத்திருந்தாள்!
தாய்ப்பாசம் பொங்க இரவிலே தொட்டிழுத்தேன்!
மானோ, வியர்ப்பதாய்க் கூறித்தான் தாயென்னை
ஏனோ தவிர்த்தாள்! அந்தமனக் காரணத்தை
நானும் புரிந்துகொண்டேன்! தன்தலைவன் மட்டுமே
தேன்மகளைத் தொட்டுத் தழுவவேண்டும் என்றேதான்
தாயின் அணைப்பை வெறுக்கின்றாள்! நன்றுதான்!
சேயின் பருவமாற்றம் பார்
கரும்பிருக்க சக்கை எதற்கு?
பாடல் 85
பாடலாசிரியர்:
வடம வண்ணக்கன் தாமோதரனார்
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே.
--------------------------------------------------------------------
தலைவனைப் போற்றிவந்த பாணனிடம் தோழி
தலைவி மறுப்பதைக் கூறுகின்ற
கூற்று:
--------------------------------------------------------------------
தோழியே! நானோ கருசுமந்து வாழ்கிறேன்!
ஈவிரக்க மன்றியே மேய்ந்துவரும் என்தலைவன்
பாவி வரவேண்டாம்! தோழியே! பாணனிடம்
கூறிவிடு! என்கின்றாள்! வாடிநிற்கும் மங்கை!
தோழியோ நான்சொன்னேன்! ஆனாலும் பாணனோ
சேல்விழியாள் உன்மீதோ தேன்மகன் தன்னுயிரை
வைத்தே துடிக்கின்றான்! கூறென்றான் சேயிழையே!
என்றுரைத்தாள் தோழியங்கு! கோபக் கனலுடன்
தோழியே! சூல்கொண்ட பெட்டைக் குருவிக்கு
ஆண்குருவி இங்கே கரும்பின்
சுவையற்ற
பூவால் இடம்செய்தே முட்டை இடச்செய்யும்!
ஈனில்லம் அதுவாம்! தலைவனின்
பண்புமதே!
தேன்சுவைச் செங்கரும்பாம் என்னை மறந்துவிட்டான்!
வீண்சுவைப் பூவாம் பரத்தையை நாடிவிட்டான்!
பாணனை சொல்லச்சொல் நீ.
மதுரை பாபாராஜ்
குறுந்தொகை 70-75
பாடல் 70
கூடலின் வியப்பு
பாடலாசிரியர்:ஓரம் போகியார்
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
-------------------------------------------+-----------++
தலைவியுடன் ஒன்றிய இன்பத்தை எண்ணி
நிலைமறந்தான் அந்தத் தலைவன்! மலைத்தான்!
தலைவியோ இப்படிப் பட்டவள் என்றும்
உரைக்க இயலவில்லை!அந்த நிலையில்
விளைந்திடும் சொற்கள் சிலவாகும்! மேனி
குலவும் பொழுதிலே பஞ்சணை போல
தளர்ந்தேதான் மெல்லியல் ஆகின்றாள்! கூந்தல்
நிலையில் படிந்திருக்க ஆரணங்கின் நெற்றி
நிலவொளிபோல் மின்ன வருத்துகின்றாள் என்னை!
மயக்கப் பிடியிலே நான்.
பயணத்தைத் தள்ளிவைத்தேன்!
பாடல் 71
பாடலாசிரியர்
கருவூர் ஓதஞானியார்
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
--------------------------------------------------------
அழகிய மங்கையாம்! மென்மையான மார்பு
இளமை ததும்பும் நிலையில் அரும்ப
மயக்கும் பரந்த கவர்ச்சிமிகு தோள்கள்
தவழும் இடையோ மெலிந்த எழிலில்!
இவளது கவின்மிகு தோற்றம்
என்னுள்
வளர்கின்ற ஏக்கத்தைத் தீர்க்கும் மருந்தே!
சுழல்கின்ற வைப்பு நிதியும் இவளே!
தவமிருந்து கானவர் பெற்ற
மகளாம்!
அழகுக் கடலில் கலப்பதை எண்ணி
பயணத்தை ரத்துசெய்தேன் நான்.
சோர்வின் பிடியில்
பாடல் 72
பாடலாசிரியர்:மள்ளனார்
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
-------------------------------------------------------------
தலைவனே! முகம் வாடித் தெரிகிறதே! ஏனோ?
தலைவனைக் கேட்டான் உரிமையுடன் பாங்கன்!
தலைவனோ பாங்கனிடம் கூறுவதைக் கேள்:
கலையரசி கண்களோ பூக்கள்தான்! ஆனால்
சிலைமாது என்மீது பாய்ச்சினாள் அம்பாய்!
நிலைகுலைந்தேன் மேனி வலித்ததால்! தோள்கள்
அலைபோல் திரண்டு உருண்டிருக்கும் கோலம்!
மலைமண்ணைத் தோண்டி விதைத்த தினையைக்
கவரவந்த சின்னக் குருவிகளை ஓட்டித்
துரத்தி இருந்தாள்! எனக்கவள்தான் நோயாம்!
மயக்கத்தில் சோர்ந்தேன் தவித்து.
தோழியின் செயல்!
பாடல் 73
பாடலாசிரியர்:பரணர்
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.
-----------------------------------------------------+-------
தலைவியைக் காண இரவிலே வந்த
தலைவனைப் பார்த்துப் பகலிலே வாராய்!
நிலைசொன்ன சூழலை நம்பி பகலில்
தலைவியைக் காணவந்தால் தோழி இரவில்
தலைவனை வந்துகாணச் சொன்னாள்! இஃது
தலைவியை ஏற்பதற்குத் தோழியின் சூழ்ச்சி!
இலக்கிய நன்னனைக் கோசர் துணையால்
கொலைசெய்த சூழ்ச்சிபோ லாம்.
விருப்பச் சிறகுகள்
பாடல் 74
பாடலாசிரியர்:விட்டகுதிரையார்
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.
--------------------------------------------------------------
நானோ அவனை விரும்புகிறேன்! ஊராரோ
வேனில் பருவத்தில் காளை, பசுமாட்டை
ஊனுடன் இங்கே உரசுதல்போல் என்னழகை
நாடி வருகின்றான்என்கின்றார்! என்சொல்ல?
ஓடும்! குதிரை கழற்றிவிட்டால்! அஃதேபோல்
நீடுநிற்கும் மூங்கிலை இங்கே வளைத்துவிட்டால்
வான்நோக்கிப் பாய்கின்ற கோலத்தைக் கொண்டநாடு
பாமகனின் நாடன்றோ கூறு.
பாடல் 75
பாடலாசிரியர்:
படுமரத்து மோசிகீரனார்
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தௌிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
--------------------------------------------------------------
பாணனே! என்னவரைக் கண்டாயோ? கண்டதாக
கானகத்தில் யாரேனும் சொன்னாரோ? யார்சொன்னார்?
மான்விழியாள் நானே தெளிவுபெற கேட்கின்றேன்!
நானேங்கும் அன்பர் வருவதோ உண்மையென்றால்
நானுனக்கு வெண்தந்த யானையோ சோணையாற்றில்
தான்குளிக்கும் பொன்னகராம் பாடலியைத் தந்திடுவேன்!
தேன்மாரி் செய்தி இது.
பாடல் 62
இன்னும் வேண்டும்!
பாடலாசிரியர்:
சிறைக்குடி ஆந்தையார்
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.
---------------------------------------------------------------
தலைமகன் கூற்று!
காந்தள் மலராக மங்கை கைகளாக
ஏந்திழையாள் புன்னகை முல்லை முகையாக
மாந்திய கண்கள் குவளை மலர்களாக
ஏந்திய மேனி மலர்தொடுத்த மாலையாக
சேர்ந்தாள்! தழுவினாள்! இன்பமுடன் தீண்டினாள்!
சேரவேண்டும் மீண்டும்நான் செப்பு.
பாடல் 63
உன்முடிவுதான் என்ன?
தலைவன் கூற்று
பாடலாசிரியர்:உகாய்க்குடிகிழார்
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
--------------------------------------------------------------
நெஞ்சே! பொருளின்றி வாழ்க்கையே இல்லைதான்!
அன்புடன் மற்றவர்க்கும் ஈய முடியாது!
பஞ்சாய்ப் பறந்து பொருள்தேட எண்ணுகின்றாய்!
என்னவளை விட்டுப் பிரியவும் துணிகின்றாய்!
இந்தப் பயணத்தில் என்மன ஏந்திழையாள்
என்னைத் தொடர்ந்து வருவாளா? இல்லையேல்
என்னைமட்டும் செல்லவைப்பா யோ?
பாடல் 64
பாடலாசிரியர்:
கருவூர்க் கதப்பிள்ளை
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.
-------------------------------------------------------------
மேய்வதற்கு நாளும் நெடுந்தூரம் செல்கின்ற
ஆவினங்கள் மாலையில் தங்கள் இருப்பிடம்
தாவிவரும்! கன்றுகள் தாய்ப்பசு நோக்கித்தான்
காத்திருக்கும்! கன்றுபோல நானும் இருக்கின்றேன்!
ஏக்கத்தைத் தீர்க்க தலைவன் வரக்காணோம்!
கேட்டிருந்த தோழி, தலைவியே! அப்பசுபோல்
வாட்டத்தைத் தீர்க்க வருவார் உறுதியாக!
சூட்சுமமாய்ச் சொன்னாள் உணர்ந்து.
பாடல் 65
பாடலாசிரியர்: கோவூர்கிழார்
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே.
-----------------------------------------------------------------
கூழாங்கல் உள்ள குழியில் இரலைமான்
தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் பருகியே
மோகமுடன் பெண்மானைப் பார்த்தே விளையாடும்
கார்காலம் வந்ததே! உன்தலைவன் வந்தாரா?
ஆர்வமுடன் காத்திருந்தே நொந்தாயா? என்றென்னைப்
பார்த்தே கேட்கிறது தோழியே! என்செய்வேன்?
கார்வந்தும் காணவில்லை யே!
--------------------------------------------------------
பொறுத்திரு
பாடல் 66 :
பாடலாசிரியர்:கோவர்த்தனார்
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
-----------------------------------------------------------
கார்காலம் வந்தும் தலைவன் வரவில்லை!
பார்த்தாயா தோழி! பாதகரின் தீச்செயலை!
நேரிழையே! அன்புத் தலைவியே! கார்கால
ஊர்வலம் இன்னும் தொடங்கவில்லை! கொன்றைப்பூ
காரென் றறியாமல் பூத்ததால் என்சொல்ல?
தாரணிந்தோன் சென்றான் மலைப்பாதை தன்னிலே!
கார்வரும் முன்னே மழைவந்தே உன்னுடன்
ஊடல் புரிகிறது! அந்த மழைப்பொழிவைப்
பாடிவந்த கார்காலம் என்றெண்ணிக் கொன்றைப்பூ
சூடி மகிழ மலர்ந்திருக்கும் கோலமிது!
தேடிவரும் அப்பருவம் இஃ தில்லை! தேன்மகளே!
நாடி வருவார்! பொறு.
விரைந்தே வருவார்!
பாடல் 67
பாடலாசிரியர்:
அள்ளூர் நன்முல்லையார்
தோழியின் ஆறுதல்
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.
---------------------------------------------------------------
கிளியலகில் கவ்வியுள்ள வேப்பம் பழம்போல்
தளிர்க்கை கூர்நகமோ பொற்காசில் பொற்கொல்லன்
தெளிவாக நூல்கோர்க்கப் பிடித்திருக்கும் காட்சி,
அளிக்கின்ற கள்ளிக்காட் டிற்குள்ளே செல்லும்
வழியெல்லாம் உன்னையே சிந்தித் திருப்பார்,!
தலைவியே! வந்திடுவார்! இங்கு.
-----------------------------------------------------------------
பாடல் 68
வருவாரா? மருந்து தருவாரா?
பாடலாசிரியர்
அள்ளூர் நன்முல்லையார்
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.
----------------------------------------------------------------
தோழி! குறும்பூழ்க்கால் என்னும் பறவையின்
தாள்போல் இருக்கும் உழுந்தின் முதிர்ந்தகாயை
ஆர்வமுடன் மான்கூட்டம் நின்றே கவர்ந்திருக்கும்!
பார்த்தாயா! முன்பனிக் காலம் இதுவன்றோ!
சேயிழையென் துன்பத்தைத் தீர்க்கும் மருந்திங்கே
பூவிதழாள் நாயகன் ஒன்றியஎன் மார்பாகும்!
பூரிக்க வைத்தஎன் நாயகன் மீண்டுவந்தே
வாரி அணைப்பதே நோய்தீர்க்கும் மாமருந்தாம்!
ஈவிரக்கம் கொள்வாரோ வந்து?
அன்பின் துடிப்பு!
பாடல் 69
பாடலாசிரியர் :
கடுந்தோட் கரவீரனார்
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
----------------------------------------------------------------
நாயகனே! நீங்கள் இரவில் வரவேண்டாம்!
ஆண்குரங்கு கண்ணில் கரும்புள்ளி வந்ததால்
தான்நாடும் மந்தியிடம் தாவி இரவிலே
ஆண்குரங்கு வீழ்ந்தே இறந்ததாம்! மந்தியோ
ஆணைப் பிரிய மனமின்றி் மந்தியோ
தானேந்தும் தாவ பயிற்சியற்ற குட்டியை
தான்சார்ந்த நல்ல உறவிடத்தில் ஒப்படைத்துப்
பாறையில் தானேறி வீழ்ந்தே இறந்ததாம்!
கானகக் காட்சிகொண்ட நாட்டுத் தலைவனே!
கானகத்தில் நீவந்தே ஆபத்தில் சிக்கிவிட்டால்
தேனகத்தாள் வாடி நொறுங்கிடுவாள்! நீஇரவில்
நாடி வரவேண்டாம் கேள்.
மதுரை பாபாராஜ்
குறுந்தொகை 60
பாடல் 60
பாடலாசிரியர்:பரணர்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
தோழியே! நானும் தலைவனும் சேர்ந்திருந்த
வேளையில் நாளும் மகிழ்ந்திருந்தோம்! இன்றிங்கே
காலம் பிரித்தது! என்நினைவோ எண்ணுவதை
தோழியே சொல்கிறேன் கேள்!
------------------------------------------------------------
பாறையில் தேன்கூடு கட்டிப் படர்ந்திருக்க
கூதளி என்னும் மரமசைந்த காரணத்தால்
தேன்கூட்டில் ஓட்டை விழுந்தேதான் தேன்வடிய
காலிரண்டும் இல்லாத ஆண்மகன் உட்கார்ந்தே
வாயிலே எப்போதோ சொட்டுகின்ற தேனைத்தான்
தோய்த்துச் சுவைப்பான்! அந்த நிலைபோல
சேயிழைநான் துய்த்திருந்த இன்பத்தை எண்ணுகின்றேன்!
காரிகையே !என்றாள் சிரித்து.
குறுந்தொகை 59
தோழியின் ஆறுதல்!
பாடல் 59
பாடலாசிரியர்: மோசி கீரனார்
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறும்நின்
நறுநுதல் மறப்பரோ--மற்றே முயலவும்,
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே!
---------------------------------------+----------------------
அரலையூர்க் குன்றத்தில் உள்ள மலர்கள்
பரப்பும் நறுமணம் வீசுமுந்தன் நெற்றி!
உளமாற அந்த மணத்தை நுகர்ந்தே
உவகையில் நீந்திய உந்தன் தலைவர்
உலவுகின்ற காட்டிலே பூக்களைக் காண்பார்!
உளமார உன்னை மறப்பாரோ? மாட்டார்!
சுரவழி கொண்ட கொடுமையைத் தாண்டி
வரவேண்டும் இங்கே தலைவி! வருவார்!
விளம்பிய வண்ணம் குறித்தநாளில் வந்தே
கரம்பிடிப்பார் உன்னைத்தான் காண்.
குறுந்தொகை 58
பாடல் 58
பாடலாசிரியர்: வெள்ளி வீதியார்
ஆவனசெய்!
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.
------------------------------------------------------------
என்நிலையைக் கண்டித்துப் பேசுகின்ற பாங்கனே!
என்னுடல் பேரழிவைக் காணாமல் காப்பாற்ற
முன்வந்தால் நல்லது! மற்றவை நல்லதல்ல!
செங்கதிரோன் பாறையைச் சுட்டெரிக்க கையின்றி
அங்கொரு ஊமையன் வெண்ணெயைக் காத்திருக்க
வெண்ணெய் உருகி உருண்டோடும் காட்சிபோல்
என்னைப் பிரிவுத் துயரம் வதைக்கிறது!
கண்களால் வேடிக்கை பார்ப்பதே கூடுமென்னால்!
இன்னுயிரைப் போக்குவ தொன்றே வழியாகும்!
நன்மையைச் செய்ய முனை.
குறுந்தொகை
பாடல் 57
பாடலாசிரியர்:
சிறைக்குடி ஆந்தையார்
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
-------------------------------------------------------------------------------
தோழியே! காவல் மிகுதியால் அன்பரும்
சேயிழை நானும் பிரிந்துள்ளோம்! ஓருயிராய்
ஆவி துடிக்க இருக்கின்றேன்! வாடுகின்றேன்!
நீரிலே வாழும் மகன்றிற் புள்ளினமோ
சேர்ந்திருக்கும் எப்பொழுதும்! பூவொன்று தோன்றித்தான்
சார்ந்திருக்கும் கோலத்தை அங்கே பிரித்துவிட்டால்
பூஅளவு சற்றுநேரம் கூட பிரிவதையும்
தாங்காதாம்! நானும் தலைவனும் சேரவேண்டும்!
சேர்ந்திருக்கும் நேரத்தில் என்னுயிர் நீங்கட்டும்!
சேல்விழியாள் ஏக்கத்தைப் பார்.
குறுந்தொகை 56
தலைவனின் அக்கறை
பாடலாசிரியர்:
சிறைக்குடி ஆந்தையார்
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
------------------------------------------------------------------
அன்பரே! உங்கள் துணையாக நான்வருவேன்!
என்னை அனுமதிக்க வேண்டுகிறேன் என்றவளை
அன்பரசி வந்தால் அனுபவிக்கும் வெங்கொடுமை
எண்ணுகின்றான்! காட்டிலே செந்நாய்கள் உண்டபின்
மிஞ்சியதை கூட்டுக் குளவிகள் மொய்த்து
விண்டு கிடக்கும் இறைச்சி மிதந்துவரும்
தண்ணீர் பருகவேண்டும் கைவளைக் காரிகை!
என்நெஞ்சம் தாங்குமா? நன்றே! வரவில்லை!
அன்பனின் அக்கறை பார்
பூஅளவு பிரிவையும் வெறுக்கின்றேன்!
குறுந்தொகை 51-55
பாடல் 51
பாடியவர்:குன்றியனார்
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
-----------------------------------------------------------------------------------
தலைவியே! முள்ளிமரப் பூக்கள் உதிர்ந்தே
தரையில் சிதறித்தான நீர்த்துறைகள் தோறும்
பரந்தே கிடக்கும் கடற்கரை நாட்டின்
தலைவனை நின்தாயும் தந்தையும் ஏற்பார்!
தலைவி உனக்கே மணம்புரிய உள்ளார்!
அலைகின்ற ஊராரும் உன்னை இனணைத்தே
மலைத்தேதான் பேசுகின்றார்! காலத்தைப் போக்கும்
தலைவர் வருவார்! உன்னை மணமுடிப்பார் !
சிலையழகி இன்புறுவாய் பார்.
பாடல் 52
கலக்கத்தில் தலைவி
பாடியவர்: பனம்பாரனார்
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.
------------------------------------------------------------------------------
தலைவியே! நீயோ களவொழுக்கத் தாலே
நிலைகுலைந்தே யானை மிதித்த சேறாய்க்
கலங்கித் தவிக்கின்றாய்! கூந்தல் மணத்தில்
நரந்தம்பூ வாசம் இருக்க கவரும்
அழகிலே பற்கள் சிரிப்பிலே தோன்றும்!
கலங்காதே! நானே சிறிது சிறிதாய்
உளந்தன்னைத் தாயிடம் சொல்லிவிட்டேன்! மாதே!
நலமாய் நடக்கும் அனைத்துமே இங்கே!
கவலையே வேண்டாம் காண்.
வாட்டிய வாக்குறுதி!
தோழியின்கூற்று
பாடல் 53
பாடியவர்:கோப்பெருஞ் சோழன்
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே
------------------------------------------------------------------------------
ஊரில் கடல்மணல் மேட்டில் நடந்தது
வேலன் வெறியாட்டு! புன்கம்பூ வெண்மணலில்
கோலம்போல் அங்கே உதிர்ந்திருக்க வெண்பொரி
தூவிச் சிதறிய தோற்றத்தை ஏந்துகின்ற
பூவின மண்மேடு கொண்ட துறையிடத்தே
நேரிழையின் முன்கையைப் பற்றி தலைவியிடம்
ஆர்வமுடன் வாக்குறுதி தந்ததே துன்புறுத்த
வாழ்கிறாள் வந்துமணங் கொள்.
இரைக்கோல்
பாடல் 54
பாடியவர்:மீனெறி தூண்டிலார்
யானே ஈண்டை யேனே; என்நலனே,
ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன்எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு,ஆண்டு
ஒழிந்தன்றே.
---------------------------------------------------------------------
தோழியே! என்னுடல் இங்கிருக்க உள்ளமோ
தாவி, தலைவனிருக்கும் நாட்டில் இருக்கிறது!
யானையோ மூங்கிலை நின்று வளைத்திருக்க
யானை கவண்கல் அடிபட்டே மூங்கிலை
யானையோ விட்டகன்ற கோலம்போல் அன்பனோ
தேன்மகள் வாட விலகிவிட்டான்! பார்த்தாயா!
மீனைப் பிடிக்க மிதக்கும் இரைக்கோல்போல்
நானும் எனதன்பால் பற்ற முனைந்தேனே!
மீனைப் பிடித்து விலகிய மீனைப்போல்
மான்விழி நெஞ்சத்தைத் தான்கவர்ந்து சென்றானே!
மீனிரையை விட்ட இரைக்கோல் போலத்தான்
நானோ தனிமையில் நிற்கிறேன் பாராயோ!
ஏன்வரவில்லை! காரணம் சொல்.
விரைந்து வா தலைவனே!
பாடல் 55
பாடியவர்:நெய்தற் கார்க்கியர்
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.
------------------------------------------------------------------------------------
குளிர்க்காற்று வீசியதால் நீர்த்திவலை பட்டே
தெளிவான உப்பங் கழியின் மணிப்பூ
குவிந்தேதான் கூம்பியதே! இத்தகைய துன்பம்
தெளிக்கின்ற ஊராக உள்ளதே இவ்வூர்!
களிப்புடன் வந்தே மணங்கொள் தலைவா!
தவிக்கும் தலைவி உயிர்நீப்பாள் கேளாய்!
புவியின் சிறைபுறத்தில் நிற்கும் தலைவா!
செவிமடுத்துக் கேட்டாயா நீ?
குறுந்தொகை 48-50
பாடல் 48
பாடியவர்:பூங்கணுத்திரையார்
தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே
------------------------------------------------------------------------------------------------
தோழிகள் காலையில் ஓரை விளையாட்டைக்
கூடி விளையாடும் நேரம் தலைவியோ
வாடி அழுதிருந்தாள்! தோழி தலைவியே
பாரடி பூம்பாவை கூட அழுகின்றாள்!
தேற்றினர் ஆனால் தலைவி அழுதிருந்தாள்!
ஏற்றமிகு நெற்றியிலே ஏக்கப் பசலையோ
ஊற்றெடுத்து நிற்பதைச் சொல்லி அன்பனிடம்
ஏக்கத்தைத் தீர்ப்பதற்கே ஆறுதல் சொல்வதற்கு
காற்றாய் வருவாரோ சொல்.
எப்பிறவியும் நீயே!
பாடல் 49
பாடியவர் அம்மூவனார்
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.
-------------------------------------------------------------------------------------
அணிலுடைய பற்களைப் போலுள்ள முட்கள்
அணிவகுக்கும் முள்ளிச் செடியருகில் நீல
மணிநிறக் காரன்னம் நிற்கும் காட்சி
அணிசெய்யும் நல்ல கடற்கரை நாட்டில்
பணிசெய்யும் அன்பனே! இப்பிறவி சென்று
இனிவரும் எல்லாப் பிறவியிலும் நீயே
கணவனாக, நானே மனைவியாக வாழும்
மணநிலை வேண்டுகின்றேன் நான்.
வாட்டும் ஏக்கம்
பாடல் 50
பாடியவர்:குன்றியனார்
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.
-------------------------------------------------------------------------------------
ஞாழல் மரத்தின் கடுகுபோன்ற பூக்களோ
சூழ்ந்த மருதமரச் செம்மல ரோடுதான்
நாளும் கலந்தே அழகான காட்சிதரும்
ஆற்றுத் துறைகொண்ட ஊர்தான் தலைவனூர்!
போற்றும் தலைவனை எண்ணி இளைத்துவிட்டேன்!
ஊற்றெடுக்கும் ஏக்கத்தால் தோள்கள் அழகிழந்தே
வாடி வளையல்கள் தோளில் இருந்தேதான்
ஓடி விழுகிறதே! பார்.
வருவார்!மணமுடிப்பார்!
குறுந்தொகை
பாடல் 47
நிலவே சொல்?
பாடியவர்
நெடுவெண்ணிலவினார்
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங்
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே
---------------------------------------------------------------------------------------------
வெண்ணிலவே! கருவண்ணக் கால்போன்ற தாள்கொண்ட
கண்கவரும் வேங்கை மரத்தின் மலர்களோ
அங்கே கரும்பாறை மீது விழுவதால்
அஞ்சவைக்கும் காட்டுப் புலிக்குட்டி போல்தோன்றும்!
அன்பரோ இத்தகைய காட்சிகள் கொண்டிருக்கும்
துன்பமிகு காட்டுவழி தானே களவொழுக்கம்
எண்ணி வருகின்றார்! வெண்ணிலவே! அன்னார்க்கு
நன்மையா செய்கிறாய்? சொல்.
குறுந்தொகை
பாடல் 46
குருவியும் தலைவியும்
பாடியவர் :மாமலாடனார்
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே
---------------------------------------------------------------------------------------------------------
என்வீட்டுக் கூரையில் தன்சிறகை மூடித்தான்
அங்குமிங்கும் பார்க்கும் குருவியோ சாம்பலொத்த
வண்ணத்தில் ஆம்பல்பூபோல்
உட்கார்ந்து பார்த்திருக்கும்!
முன்றிலில் காயும் உணவுப் பொருள்களை
உண்டு முடித்தேதான் ஊர்மன்றந் தன்னிலே
அங்கே மரத்தடியில் பூக்களைக் கவ்வித்தான்
தன்கூட்டில் குஞ்சுகளின் வாயிலே ஊட்டிவிட்டே
தங்கியுள்ள மாலைப் பொழுதிலே
கண்பார்வை
மங்குகின்ற கோலந்தான்! இந்த நிகழ்வுகள்
கொண்டுள்ள மாலைப் பொழுதெல்லாம்
அன்பருள்ள
அங்கெல்லாம் இல்லையோ? சொல்.
குறுந்தொகை 39-45
தலைப்பு : வழிஎண்ணி அச்சம்
பாடியவர்: ஔவையார்
பாடல் 39
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
----------------------------------------------------------------------------------------------
தோழி! அன்பரெந்தன் நெஞ்சைத் தழுவித்தான்
தூவிய தேன்நிகர்த்த சொற்களைப் பேசுவார்!
சேயிழை நானங்கே ஊடுவேன்! பொய்க்கோப
ஓவியத்தை அன்பர் முகமேந்தும்! நம்தலைவர்
போயிருக்கும் பாதையோ காற்றடிக்கும் நேரத்தில்
வாகைக்காய் ஆடி ஒலியெழுப்பும்! மாமலைகள்
ஊடறுக்கும் பாலை நிலமாகும் தோழியே!
வேதனைத் தீயிலே நான்.
குறுந்தொகை 40
தலைப்பு : இணைந்த இதயங்கள்
பாடியவர்: செம்புலப் பெயனீரார்
பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
----------------------------------------------------------------------------------------------
அன்பரசி! உன்தாயும் என்தாயும் எவ்வகையில்
இங்கே உறவினர்? அவ்வாறே நம்தந்தை
என்ன முறையில் உறவினர்கள்? நம்மிதயம்
அன்பில் கலந்ததும் எப்படியோ? முன்பின்னே
இம்மண்ணில் நாமிருவர் சந்தித்த நாளென்றோ?
செம்மண்ணில் நீர்கலந்தே ஒன்றிய கோலம்போல்
அன்பால் இதயங்கள் நம்மைத்தான் சேர்த்ததுவே!
அன்பே இணைப்பின் உயிர்.
குறுந்தொகை 41
தலைப்பு தனிமையின் வெறுமை!
பாடியவர்: அணிலாடு முன்றிலார்
பாடல் 41
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.
-----------------------------------------------------------------------------------------
தோழி! அவரெந்தன் பக்கத்தில் உள்ளவரை
சேயிழைநான் கானகத்தின் அண்மையில் உள்ளஇந்த
ஊரினை கோயில் திருவிழா காணுகின்ற
ஊராக எண்ணி மகிழ்ந்திருந்தேன்! நானிங்கே!
பாரேன்! தலைவர் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!
ஊர்விழா இங்கே முடிந்ததும்
மக்களெல்லாம்
ஊர்நீங்கிச் சென்றபின்பு முற்றத்தில் அங்குமிங்கும்
கால்பதித் தோடும் அணில்கள்தான்! அப்படி
ஊரே வெறுமை அடைந்த
தனிவீடாய்
ஆனதென்றே வேதனையில் வாடித் தவிக்கின்றேன்!
தேனும் கசக்கும் எனக்கு.
பாடல் 42
பாடியவர் கபிலர்
மறக்காமல் சொல்வாயா?
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழைவீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும்தேயுமோ, நின்வயினானே?
தலைவனே! கூடுகின்ற வாய்ப்பின்றிப் போனால்
நிலையான நம்நட்பு தள்ளாட்டம் கண்டு
நிலைகுலைந்து போகுமா? நள்ளிரவில் பெய்யும்
மழையால் மலைக்குகை மீது விழுந்தே
கலகலக்கும் நீர்வீழ்ச்சி யாகி
ஒலிக்கும்
ஒலியோ எனக்கிங்கே கேட்கின்ற நாட்டில்
உழைப்பவனே சொல்வாயா? நீ!
பாடல் 43
பிரிவின் கலக்கம்
பாடியவர்: ஔவையார்
செல்வார் அல்லர்' என்று யான்இகழ்ந் தனனே;
ஒல்வாள் அல்லள்என்று அவர்இகழ்ந் தனரே
ஆயிடை, இருபேர் ஆண்மை செய்தபூசல்
நல்அராக் கதுவி யாங்கு,என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
----------------------------------------------------------------------------------------------------------------
தோழியே! என்னவர் என்னைப் பிரியமாட்டார்!
சேயிழைநான் எண்ணித்தான் சேர்ந்திருந்தேன்! சொல்லிவிட்டால்
ஆவி துடித்தே உடன்படேன் என்றவரும்
தூவிடும் சோர்வில் இருந்திருப்பார் ! பேராண்மை
காரிகை, தலைவன் இருவருக்குள்
தூண்டிய
ஊடல் ஒருவரை மட்டுமே கவ்வியே
சீறுகின்ற நல்லபாம்பாய் துன்பமோ நெஞ்சிலே
ஊறவைத்தே கலக்கத்தை ஊற்றெடுக்க வைத்ததடி!
பாறைமன நாயகரைப் பார்.
பாடல் 44
தேடக் கூடுமோ?
பாடியவர்: வெள்ளிவீதியார்
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
----------------------------------------------------------------------------------------
அன்பர் வரவில்லை! எண்ணிக் கலங்குகிறேன்!
தன்னிலை விட்டேதான் வீட்டுக்கும் வாசலுக்கும்
அம்மா! நடந்து நடந்தேதான் காலிரண்டில்
பின்னும் வலிதன்னைத் தாங்க முடியவில்லை!
கண்கள் சளைக்காமல் பார்த்தே ஒளியிழந்து
மங்கித்தான் சோர்ந்தன! வானத்து விண்மீன்கள்
எண்ணிக்கை விஞ்சுகின்ற ஆடவர் கூட்டத்தில்
என்னவரை எங்குசென்று தேடுவேன்? சொல்லுங்கள்!
அன்பின் மயக்கம் இது.
பாடல் 45
தலைவியின் உள்ளம்!
பாடியவர் :ஆலங்குடி வங்கனார்
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
-----------------------------------------------------------------------------------------
காலைப் பொழுதிலே தன்னை அழகுசெய்து
தேரில் இருமணப் பெண்டிரிடம் செல்கின்றான்!
ஊரோ வளங்கொழிக்கும் ஊராம்!
தலைவனுக்கு!
கூடிக் களித்தவன் காலைத் துயிலெழுந்தே
ஆடிக் களைத்து வருகின்றான்! அன்பனின்
ஈடில்லா மைந்தனின் தாயாம் தலைவியோ
வாடி மனம்சுழல இந்த உயர்குடியில்
வாழும் பிறப்போ துயரின் சிகரந்தான்!
வாழ்வின் கடமை உணர்வால் பொறுத்தேதான்
வாழ்கிறேன் நொந்தேதான் நான்.
குறுந்தொகை 36-38
பாடல் 36
எழுத்தாளர்: பரணர்
துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சுகளன் ஆ,க 'நீயலென் யான்,என
நற்றோள் மணந்த ஞான்றை மற்று- அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது,
நோயோ தோழி!நின்வயி னானே?
------------------------------------------------------------------------------------------------
தோழி! மாணைப் பசுங்கொடி தான்படர்ந்து
தாவும் உருண்டைக்கல் மீது படராமல்
தூங்கும் களிற்றையே கல்லென்றே எண்ணித்தான்
பாங்காய்ப் படர்கின்ற குன்றநாடன் நம்தலைவன்!
ஆங்கே நெஞ்சறிய "உன்னைப் பிரியமாட்டேன்!"
சூளுரைத்துக் கூறி இதுவரை காணவில்லை!
தோள்களுக்கு நோய்தந்தான் அந்தோ! இருவருக்கும்!
நோயில் துடிக்கின்றோம் பார்.
தூண்டுகின்ற அன்பு
பாடியவர் :பாலை பாடிய பெருங்கடுக்கோ
பாடல் 37
நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே.
-----------------------------------------------------------
தோழி! தலைவரின் அன்போ மிகப்பெரிது!
கானகத்தில் செல்கின்ற நேரத்தில் பெண்யானை
ஊன்பசியைப் போக்க துதிக்கைகொண்டே வேகமாக்
ஆண்யானை மாமரத்தின் பூங்கிளைப் பட்டையை
ஆங்கே உரித்தேதான்
அன்பை வெளிப்படுத்தும்!
காண்பார்! உடனே பெருவிருப்பு கொண்டேதான்
காண வருவார் விரைந்தேதான்! பாரம்மா!
தேனின்ப ஊஞ்சலாடும் பார்.
------------------------------------------------------------
எல்லாம் நன்மைக்கே!
பாடியவர்: கபிலர்
பாடல் 38
கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
----------------------------------------------------------------------------------------
தலைவியே! உன்னைப் பிரிந்தவரை எண்ணிக்
கலங்காதே! கானகப் பாறையிலே மஞ்ஞை
உலர்முட்டை தன்னைக் கருங்குரங்குக் குட்டியோ
பரபர வென்றே உருட்டி ஆடும்
மலைநாடன் நம்தலைவன் நன்மைதான் மாதே!
அலைபாயும் கண்களோ நீரைப் பெருக்க
கலைந்தே பிரிந்த பிரிவை நினைத்து
குலையாமல் உள்ளவர்க்கே நன்மையாம் தோழி!
உளைச்சலில் ஏங்குகிறேன் நான்.
குறுந்தொகை 34-35
பாடல் 34
பாடியவர்:கொல்லிக் கண்ணனார்
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.
------------------------------------------------------------------------------------------------------
தோழி! எனது தலைவன் அவனேதான்!
ஊழிபோல் கோபிப்பேன், ஓடிவந்து நிற்பான்!
ஊடி மறுப்பேன்! எனைத்தேடி
வந்திடுவான்!
ஊரோ அவனை வெறுக்காமல் என்னைத்தான்
ஊதிப் பழிக்க அவனோ மகிழ்கிறான்!
மாதே! வயலில் குருகினங்கள் மேய்வதைக்
கூவி விரட்டும் ஒலிகேட்டே அஞ்சிஓடும்!
காட்சி நிறைந்த கரந்தைநகர் பேரழகும்
காதிலாடும் பொன்குழையும் நெற்றிப் பொலிவுமுள்ள
தோகை எனக்குரிய அன்பன் அவன்தானே!
ஏற்பேன் தலைவனைத்தான் இங்கு.
குறுந்தொகை 35
நாணமற்ற கண்கள்
பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றி
பாடல்
நாண்இல மன்ற,எம் கண்ணே- நாள்நேர்பு,
சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ
நுண்ணுறை அழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும்,பிரிந்திசினோர்க்கு அழலே.
------------------------------------------------------------------------------------------
தோழி! இத்தனைநாள் நானோ பிரிந்திருப்பேன்!
சேயிழையே! என்றார் தலைவர்! கண்களும்
போய்வர இங்கே உடன்பட்டே நின்றன!
தோழி! சினைப்பட்ட பச்சைவகைப் பாம்பினது
சூலின் முதிர்ச்சிபோல் கன்னல் பொதியவிழ்ந்தே
வீழும் மலர்போல வானம் பொழிகின்ற
வாடைப் பருவத்தில் வாராமல் வாழ்கின்றார்!
ஏகமாய் இந்தப் பிரிவின் துயரத்தில்
வேகமாகக் கண்கள் அழுகிறதே நாணமின்றி!
நாடறிய துன்பத்தில் நான்.
குறுந்தொகை
பாடல் 33
பாடியவர்:
படுமரத்து மோசிகீரனார்
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
-------------------------------------------------------------------------------------
தோழி! தலைவன் பரத்தையின் வீடிருந்து
தேடிவந்தான் என்னிடம்! தூதாகப் பாணனையும்
கூடவரச் செய்தான்! உள்ளே வரச்சொல்லேன்!
கூடு மெலிந்த இளைஞனாக உள்ளானே!
பாடுபட்ட அவ்வூரில் பிச்சை எடுத்தது
போதவில்லை என்றே விருந்துண்ண வந்தானோ?
யாரெனினும் நல்லவன்தான் வாழ்ந்தே புகழ்பெறுவான்!
போனது போகட்டும்! அன்புத் தலைவனை
நானேற்பேன் இன்றே பொறுத்து.
குறுந்தொகை
பாடல் 32
தலைவனின் ஏக்கம்
பாடியவர் அள்ளூர்நன்முல்லையார்
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
-------------------------------------------------------------------------------------------
தோழி! தலைவியைக் கூடுதல் என்பதோ
ஆழிவற்றும் காத்திருப்பே! காலையும் நண்பகலும்
மாலையும் ஊர்மக்கள் தூங்குகின்ற யாமமும்
காட்சி விடியலென ஐம்பொழுதில் ஏங்கவைக்கும்
காமம் தணிப்பதற்கு வாய்ப்பில்லை! சாலையில்
பாங்காய் மடலூர்ந்தால் மாப்பழிதான்! அன்பகங்கள்
ஏங்கிப் பிரிந்தேதான் வாழ்தலும் மாப்பழிதான்!
நாட்டமுடன் தீர்வைத்தான் சொல்
குறுந்தொகை
பாடல் 31
பாடியவர்: ஆதிமந்தியார்
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.
-------------------------------------------------------------------------------------------------------
தோழி! எனக்கு மணம்புரியப் பார்க்கின்றார்!
ஆவிக்குள் என்தலைவன் உள்ளானே! எங்குசென்றான்?
தேடியலைந்தேன்! வீ்ரர்கள் மத்தியில் காணவில்லை!
ஆடிக் களிக்கும் இருமனப் பெண்டிரிடம்
தேடியும் காணவில்லை! ஆடுகளம் தேடியதால்
ஆடுகள மங்கையாக ஆகிவிட்டேன்! என்வளையல்
ஓடுதடி கீழிறங்கி! இந்த நிலைமைக்கு
வாடுகின்ற கோலத்தைத் தந்ததாலே என்தலைவன்
ஆடுகள மைந்தனானான் பார்
குறுந்தொகை
பாடல் 30
பாடியவர்: கச்சிப்பேட்டுநன்னாகையார்
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.
-------------------------------------------------------------------------------------------------
தோழி!
இந்த நாளில்
இரவுப் பொழுதில்
வருவேன் என்று
சொன்னவர் வரவில்லை!
பொய்சொல் வதில் வல்லவர் அல்லவா?
உடம்போடு உடம்பணைக்கும்
நிலைபோன்ற கனவிலே
வந்தார் ! களி மயக்கத்தைத் தந்தார்!
மயக்கம் விடுபட விழித்தேன்!
மஞ்சத்தைத் தடவிப்பார்த்தேன்!
என்னவரைக் காணாமல்
தவித்தேன்! தத்தளித்தேன்!
தனிமை வாட்டியது!
நலிந்தேன்! மெலிந்தேன்!
சொற்களில்தான் தேன்!
எனது இதயத்தில்
ஊறுகிறதே ஆயிரம் தேள்!
குறுந்தொகை
பாடல் 29
பாடியவர் ஔவையார்
நல்லுரை இகந்து,புல்லுரை தாஅய்ப்,
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிதுஅவா வுற்றனை -நெஞ்சே!- நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல், உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகன்உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
--------------------------------------------------------------------------------------------
நெஞ்சே!
நாமெல்லாம் நல்லது சொன்னா
கேட்பதில்லை!
நமக்கேற்றாற் போல் சொன்னால் மகிழ்ச்சி!
ஆனால்
சுடாத மண்கலம் மழைநீரைத் தாங்காது!
நீயும் அப்படித்தான்
பேராசை வெள்ளத்தில் நீந்தினாய்! தத்தளிக்கின்றாய்! தன்குட்டியை
வயிற்றோடு பற்றிக்கொள்ளும்
பெண்குரங்கைப் போல
அவர் நினைவைத் தழுவிக்கொள்ளும்
தலைவியை நீ
பெற்றிருந்தால் பெருமை உனக்கு!
குறுந்தொகை
பாடல் 28
பாடியவர் ஔவையார்
மூட்டு வேன்கொல்?தாக்கு வேன்கொல்?
ஓரேன்,யானும் ஓர்பெற்றி மேலிட்டு
'ஆஅ!ஒல்'எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப,
உயவுநோய் அறியாது,துஞ்சும் ஊர்க்கே.
--------------------------------------------------------------------------------------
பொருளீட்டச் சென்றார்! வரவில்லை இன்னும்!
பிரிவுத் துயரமோ
ஏக்கத்தைத் தூண்ட
வருடுகின்ற தென்றல் வதைக்கிறதே என்னை!
புரியாமல் ஊரார் உறங்குகின்றார் நன்றாய்!
புரியாத மக்களுக்கு எப்படித்தான் நானும்
புரியவைக்க? முட்டுவேனோ?
தாக்குவேனோ? தோழி!
புரியாமல் கூவுவேனோ? என்செய்வேன் நான்தான்!
புரியாமல் நோகின்றேன் நான்.
குறுந்தொகை
பாடல் 27
பாடியவர் வெள்ளி வீதியார்
கன்றும் உண்ணாது; கலத்தினும் படாது,
நல்ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு,
எனக்கும் ஆகாது,என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
--------------------------------------------------------------------------------------
நன்பசுவின் பாலையோ கன்று பருகாமல்
அங்கே கறந்து கலத்தில் நிரப்பாமல்
வெண்பால் தரையிலே வீணாக வீழ்ந்தாற்போல்
என்னவரின் இந்தப் பிரிவால் துடிக்கின்ற
என்னுடைய மாந்தளிர் பேரழகால் இங்கெனக்கோ
என்னபயன்? ஒன்றுமில்லை!
அன்பருக்கும் இன்பமில்லை!
துன்பப் பசலை படர்ந்தேதான் பற்றுகின்ற
தன்மைக்கே ஆளான தே.
குறுந்தொகை
பாடல் 26
பாடியவர் கொல்லன் அழிசி
--------------------------------------------------------------------------------
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்குஎழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவது அன்றே
தேக்கொக்கு அருந்தும் முள்எயிற்றுத் துவர்வாய்
வரைஆடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.
--------------------------------------------------------------------------------------------------------------
வேங்கைமரக் கொம்பிலே தங்கும் மயிலினங்கள்
மேலேறிப் பூப்பறிக்கும் மங்கையர்போல் தோன்றுகின்ற
கோலமேந்தும் நல்ல குறிஞ்சிநாடன் நம்தலைவன்!
பாமகளாம் என்னை மறந்தே துறந்தானோ?
பூமகள் நானோ இருந்தென்ன? போயென்ன?
வான்முட்டும் மாமலையில் துள்ளிக் குதித்தாடும்
வானரக் குட்டியின் தந்தையாம் ஆண்குரங்கு
மான்விழியாள் இந்தக் கொடியோன் உறவினைப்
பார்த்திருந்த ஆண்குரங்கு பொய்சொல்ல முன்வராது!
கேட்டிருக்கும் சூளுரையைத் தான்
குறுந்தொகை
பாடல் 25
பாடியவர் கபிலர்
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
--------------------------------------------------------------------
அன்பான தோழி! தலைவன் களவொழுக்கம்
கொண்டான்! இன்புற்றோம்!ஆனாலும் சாட்சியாக
அங்கே அவன்மட்டும் இருந்தான்!
விரைந்துவந்து
என்னை மணம்புரிவேன் என்றான்!
புரியவில்லை
என்றாலோ நானென்ன செய்வேன்?
ஏதுசெய்வேன்?
அந்தத் தினைப்பயிரின் தாள்போலக் காட்சியுடன்
நின்றிருக்கும் கால்கொண்ட நாரையோ
நீர்நிலையில்
அங்குவரும் ஆரல்மீன் தன்னையே
உண்பதற்கு
கண்களால் பார்த்துப் பொறுமையாய்க் காத்திருந்த
அந்நிலைபோல் நின்றே அவர்வரவை எண்ணியெண்ணி
நெஞ்சம் கலங்குவ தேன்?
------------------------------------------------------------------
குறுந்தொகை
பாடல் 24
பாடியவர் பரணர்
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு ஒருபழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகலக் கல்லென் றவ்வே.
வேம்பு மலர்ந்தது!கார்காலம் வந்தது!
வேப்பம்பூ தன்னைத் தலைவன் அணியாமல்
வேப்பமரம் அஃதை உதிர்ப்பதோ! மங்கையரின்
கூற்றொத்த நாவிங்கே
கூர்முனையாய் மாறிவிட
ஆற்றோரம் அத்தியினை நண்டேழு பற்றித்தான்
போட்டுச் சிதைத்த பழம்போல நான்நலிந்தேன்!
வாட்டி வறுக்கின்றார் சொற்கணையால் அம்மம்மா!
ஈட்டிமுனை மேல்தான் போ.
குறுந்தொகை
பாடல் 23
பாடியவர் அவ்வையார்
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக;பாட்டே-அவர்
நல்நெடுங் குன்றம் பாடிய பாட்டே.- .
தலைவியிடம் மாற்றம்! உறவினர் கண்டார்!
அழைத்தார் அகவன் மகளை! குறிகேட்டார்!
அவளும் இசைப்பாடல் பாடத் தொடங்கினாள்!
தலைவியின் தோழி அவளைத்
தொடர்ந்து
பலவாறாய் குன்றத்தை வைத்துப் பாடு!
நலமுடன் பாடென்றாள்! நாயகன்
குன்றம்
வளம்பாட நாயகனே இத்தலைவி நெஞ்சில்
நிலைகொண்டான் என்றே உணரட்டும் மக்கள்!
சளைக்காமல் பாடென்றாள் பார்த்து.
குறுந்தொகை
பாடல் 22
பாடியவர்: சேரமான் எந்தை
நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே?-சாரற்
சிலம்பு அணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
ஊர் ஒண்ணுதல்!நின்னொடும், செலவே.
--------------------------------------------------------------------
தலைவன் பிரிந்துசெல்ல எண்ணும் கருத்தை
தலைவி குறிப்பால் அறிந்து தவிக்க
தலைவியைத் தோழி தேற்றுகிறாள தலைவி!
அவருன்னை நீங்கியதும் உன்கண்கள்
அருவிப்
பெருக்காக கொட்டும்!தலைவர் அறிவார்!
மலைப்புறம் வளங்கொழித் தாடுகின்ற வண்ணம்
வலப்புறம் காட்டில் வதங்கிய கடம்ப மரத்தின் அழகிய கொம்புகளைப் போல
மணங்கமழும் வண்டுகள் சுற்றிவரும்
உந்தன்
அழகான நெற்றியைப் பார்த்த தலைவர்!
உளம்விரும்பி உன்னைப் பிரிவாரோ
இங்கு?
கலங்கித் தவிக்கா திரு.
குறுந்தொகை
பாடல் 20
பாடியவர் கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக,மடந்தை,நாமோ!
------------------------------------------------------------------------------------------------------
தோழி!
இரக்கம் சுரந்துவரும் எனது
அருளையும்
எலும்பையும் உருக்கும் உயிர்நிகர்
அன்பையும் நினையாது
ஏங்கவிட்டுப்
பொருள்நிமித்தம்
பிரிந்து செல்வதே அறிவுடைமை
என்றால் அறிவுடையவர் ஆகட்டும்.
பிரிவுத்துயரில் துடிக்கும் நானோ
அறிவற்றவள் என்றால்
அப்படியே ஆகட்டும்!
.
குறுந்தொகை
பாடல் 19
பாடியவர் பரணர்
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
-------------------------------------------------------------------------------
அருமை மனமே!
மனையில் மலர்ந்து மணம்பரப்பும்
ஒளிவீசும் முல்லைப்பூ
அணிசெய்யும் கூந்தல்மணக்கும்
தலைவி மாறுபட்டு நடக்கின்றாள்!
மூன்றாம் மனிதிபோல
கண்டும் காணாதவளாக
இருக்கின்றாள்!
எவ்வி என்ற வள்ளல்
வறுமையில் சிக்கியதால்
யாழ்ப்பாணரும் வறுமையுற்றார்!
சூடவேண்டிய பொற்பூ இல்லாமல்
அவர்களது கூந்தலும்
பொலிவிழந்ததைப் போல
நீயும் வருந்தித் துடிப்பாயாக.
குறுந்தொகை
பாடல் 18
பாடியவர்: கபிலர்
வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார்அஃது அறிந்திசி னோரே? -- சாரல்
சிறுகோட்னுப் பெரும்பழம் தூங்கு யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே.
------------------------------------------------------------------------------------------
களவொழுக்கம் போற்றும்
தலைவனே!
மூங்கிலை வேலியாகக்
கொண்டு
வேரில் குலைகள் கொண்ட
பலாமரங்கள் செழித்த
மலைச்சாரல் நாடனே!
கொம்பில் பற்றுக்கோடின்றி
பலாக்கனி தொங்குதல் போல
தலைவியின் உயிர்
மெலிந்த தன்மையுடையது!
அவளது காம உணர்வோ பெரியது!
சுமை தாங்காமல் உயிர்க்கொம்பு
முறியும் நேரத்தை யாரறிவார்?
நீ விரைவில் வந்து
மணந்துகொள்!
குறுந்தொகை
பாடல் 17
பாடலாசிரியர்
பேரெயின் முறுவலார்
மாஎன மடலும் ஊர்ப்ப;பூஎனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப -காமம் காழ்க் கொளினே.
--------------------------------------------------------------------------------------------
தோழியே!
அகத்தில் ஊற்றெடுக்கும்
அன்புக் காதலைத்
தலைவியிடம் எடுத்துச்சொல்வாயா?
மறுக்காதே! மறுத்தால்
காதல்வலையில்
சிக்கியவர்கள்
பனைமடலில் குதிரைசெய்து
மடலூர்வார்களாம்!
குவிந்த மொட்டுக்களுடைய
எருக்கமலர் மாலையைத்
தலையில் அணிந்துகொள்வார்களாம்!
அதைப்பார்த்து
தெருவில் போவோர் வருவோர்
கேலிசெய்வார்களாம்!
மனம்நொந்து
வரைபாய்தல் எனும்
முயற்சியில் சாவதற்கும் துணிந்திடுவார்களாம்!
இவற்றிற்கெல்லாம்
நானும் சளைத்தவனல்ல!
நானும் முற்படுவேன் என்றே
சொல்வாயா தோழி?
குறுந்தொகை
பாடல் 16
பாடியவர் சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ –
உள்ளார் கொல்லோ தோழி, கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங் காடு இறந்தோரே?
---------------------------------------------------------------------------------------------
தலைவியே!
தலைவர் உன்னை நினைப்பாரோ!
இரும்பினால் செய்த அம்புகளின்
கூர் முனையை
கள்வர்கள் தங்கள்
நகமுனையால் உரசும்பொழுது
உண்டாகும் ஓசையைப்போல
பல்லி
தன் துணையை அழைக்கும்
ஒலியெழுப்பும்
கள்ளிச்செடி நிறைந்த
காட்டுவழி சென்ற தலைவர்
உன்னை நினைப்பாரோ?
நாணாமல் சொல்!
குறுந்தொகை
பாடல் 15
பாடியவர் ஔவையார்
பறை படப், பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
--------------------------------------------------------------------
அருமைத் தலைவியே! தலைவனோ வீரன்!
கழலணிந்து வெண்ணிற வேலேந்தி செல்ல
அவளோ வளையல் அணிந்த மடந்தை!
இவர்களின் கண்கள் கலந்தன! நட்பு
மலர்ந்ததே உள்ளத்தில்! ஊரார்கள் எல்லாம்
அலர்தனை, கோசர் குலத்தார் நாலூர்
விரைந்தே பறையடித்து மன்னனுக்குத் தண்டம்
வசூலிக்க சங்கொலி கூவுதல்போல், ஆல
மரத்தடியில் நாலுபேர் பேசுகின்றார் பாராய்!
உவர்ப்புக்காய் கனிந்துவிட்டால் நன்று.
குறுந்தொகை
பாடல்: 14
பாடியவர் தொல்கபிலர்
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்க
றிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.
----------------------------------------------------------------------------------------
தோழியே!
தலைவியின் இதழ்களோ அமுதப் பூ!
அவளது நா செம்மை படைத்தது!
மெய் கலந்த சின்ன சொற்களைப்
பேசும்!
பேசும்பொழுது வரிசையான
பற்கள் தெரியும்!
அவளுடன் ஒருநாள் இருந்தேன்!
மீண்டும் சந்திக்க வைப்பாயா தோழி?
தலைவனே முடியாது!
என்றே மறுக்கின்றாள்!
சரி! வேறு வழியே இல்லை!
பனைமட்டை மடல்மேல் ஏறி
உன் ஊருக்கே வருவேன்!
அனைவரும் சாடையாகப்
பேசுவார்!
எனக்கே நாணம்வரும்!
உங்கள் நிலையை சிந்தித்துக் கொள்ளுங்கள்!
குறுந்தொகை 13
பாடல்: 13 (மாசறக்)தொகு
பாடியவர்:கபிலர்
மாசு அறக்கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி!
பசலை ஆர்ந்தன குவளைஅம் கண்ணே.
----------------------------------------------------------------------------------------------
தோழி!
குளித்தக் களிப்பில் இருக்கும்
யானைகள் அடுத்தடுத்துப்
படுத்திருப்பதைப்போல
மழையில் நனைந்த மலைப்பாறையில்
பைதல் நடைபோடும் மான்கள்
நடமாடும் ஊரே என் தலைவன் ஊர்!
என்னருகில் அவனிருந்தான்!
கொஞ்சுமொழி பேசி
சிலிர்க்கவைத்தான்!
இன்றோ ஏங்கவைத்துப் பிரிந்து
சென்றுவிட்டான்!
கொஞ்சுமொழி பேசியவனைப் பார்க்க
குவளை மலர்போன்ற என் கண்கள்
இங்குமங்கும் அவனைத் தேடிக்
கெஞ்சுகின்றன!
கண்ணீரை அருவியெனக் கொட்டுகின்றன! பாவம்!
குறுந்தொகை
பாடல்: 12
பாடியவர்ஓதலாந்தையார்
பாலை - தலைவி கூற்று
எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர்,பகழி மாய்க்கும்
கவலைத்து அவலம் கவள்ளாது,
நொதுமல் கழறும்இவ் அழுங்கல் ஊரே!
--------------------------------------------------------------------------------
தோழியே! என்தலைவன் விட்டுப் பிரிந்ததில்
ஆவி துடிக்கின்றேன் என்றே நினைக்கின்றார்!
ஈவிரக்க மற்ற வழிக்கொடுமை யெல்லாம்
ஊரிலே பேசுவதை எண்ணிக் கலங்குகிறேன்!
தோழி! கறையானின் புற்றைப்போல் ஆழமுள்ள
பாறைச் சுனைகள் இருக்குமாம்! கொல்லர்கள்
வேலை புரியும் உலையில் இரும்படிக்கத்
தாங்கும் பணைக்கல்லைப் போன்றிருக்கும் பாறைமேல்
ஏறி எயினர் கொடியவில் அம்பெய்யும்
கோடி மலைப்பிளவு உண்டாம்! சுனையிலே
ஈடில்லா என்தலைவன் வீழ்வாரோ! அம்புகள்
தேடிவந்து தைத்திடுமோ! என்றே கவலைகள்
கூடிவந்து சூழுதடி கேள்!
குறுந்தொகை
பாடல்: 11
பாடியவர் :மாமூலனார்
தலைவி கூற்று
கோடுஈர் இலங்கு வளைநெகிழ நாடொறும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்குஇவண் உறைதலும் உய்குவம் ;ஆங்கே
எழுஇனி வாழி,என் னெஞ்சே! முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே!
-----------------------------------------------------------------
நெஞ்சமே! என்னவர் கட்டியெனும் வேல்வீரன்
அங்கே வடுகருடன் போரிடும் நாட்டிற்குச்
சென்றுளான்! நாட்டின் மொழியும் தெரியாது!
அந்தநாட்டுப் போரோ முடிவடைய வேண்டுமென்றே
என்நெஞ்சே! நீயோ வழிபடு! சங்கறுத்துக்
கண்கவர செய்த வளையல் கழன்றுவிழ
முன்வந்தே நிற்கிறது! கண்களும் தூங்கவில்லை!
எண்ணிப் புலம்பவேண்டாம்! இன்றே புறப்படு!
அந்தநாட்டை நன்றாய் வழிபடு! துன்பங்கள்
உன்னை நெருங்கா துணர்
-----------------------------------------------------------------
குறுந்தொகை
பாடல்: 10
பாடியவர்ஓரம்போகியார்
தோழி கூற்று.
யாய் ஆகியளே விழவுமுத லாட்டி;
பயறுபோல் இதர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழம்பூ மென்சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின்,நாணிய வருமே!
---------------------------------------------------------------------------------------
மனமாசு கொண்டவளை நீங்கித் தலைவன்
மனையாளை நோக்கி மனைக்குள்ளே வந்தான்!
இணக்கத் தோழியோ காஞ்சிமரம் கொண்டு
வணங்குகின்ற ஊருந்தன் ஊராகும் !அன்றோ
மணவிழா தன்னைத் தலைவியுடன் கண்டாய்!
மனைவியோ பண்புடன் உன்கொடுமை தன்னை
மனதில் புதைத்தாள்! பெருந்தன்மை கொண்டாள்!
இணையற்ற காஞ்சிமரப் பூக்களின் தாதோ
தினமும் உழவர் தலைமீது கொட்டும்!
மனஅன்பை நீயோ தலைவியிடம் கொட்டு!
மனமுவந்தே ஏற்பதால் தாயானாள் பண்பில்!
மனமாசை நீக்கிடுவாய் நீ.
குறுந்தொகை
பாடல்: 09 –கயமனார்
தோழி கூற்று
யாய் ஆகியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே;
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பா டும்மே.
---------------------------------------------------------------------
தோழியே! நம்தலைவி என்மேல் சினந்தாளோ?
பூவிதழாள் என்னை இசைவுடன் ஏற்பதற்குத்
தூதுசெல்லேன்! என்றான்! தலைவி பெருமையைப்
பாடுகின்றாள் தோழிதான்! வண்ணமேனி மாமைநிறம்
வாடும் நிலையில் வெளுத்ததே! பூமொட்டு
சூடாமல் செப்புவண்ணப் பாத்திரத்தில் உள்ளது!
சூடாத பூமலர்ந்த வண்ண உடல்கொண்டாள்!
நாணத்தாள் பேதை மறைக்கின்றாள்! நீர்த்துறையில்
நீரலைகள் மீன்களுடன் துள்ளும் குவளைமலர்
மூழ்கித் தலைதூக்கும் கோலம்போல் கண்களை
மூடித் திறக்கின்றாள் நாணத்தால் மாதரசி!
பூவிதழின் செந்நிறம்போல் மற்ற மகளிரின்
பூவிழிகள் அங்கே சிவந்தது போலவே
பாமகளின் கண்களும் நீசெய்த பாதகத்தால்
தாமாகக் கண்கள் சிவந்தன பாராய்நீ!
பூமகள் இந்த இளமையிலே தாய்போல
பேசுகின்ற பக்குவத்தைப் பார்.
---------------------------------------------------------------------