Thursday, March 26, 2026

பெரியாரைப் பிழையாமை--90


திருக்குறள் குழந்தைப் பாடல்

------------------------;----------------------------------

பெரியாரைப் பிழையாமை--90

-----------------------------------------------------------

பெரியாரைத் துணைகொள் ; பெருவாழ்வு கிட்டும்!

-------------------------------------------------------

செயலை முடிக்கும் ஆற்றலுள்ள

ஏந்தலை இகழ்ந்து பேசாமல்

இருப்பதே தனக்குப் பாதுகாப்பாம்!


ஆற்றல் மிகுந்த பெரியாரை

மதிக்கா விட்டால் அதனால்தான்

வாழ்வில் துன்பம் வந்தடையும்!


பெரியார் சொல்லைக் கேட்காமல்

செயலைச் செய்தால்  தோல்விதான்!


அவரைத் தாக்கிப் பேசுவதோ

தானே வாழ்வில் அழிவதற்கே!


பெரியா ருக்குத் தீங்கிழைத்தல்

எமனை வலிந்தே அழைப்பதாகும்!


கொடியோர் சினத்தில் சிக்கியவர்

வாழ்வில் நிம்மதி இழந்திடுவார்!


நெருப்பில் விழுந்தவன் பிழைத்திடலாம்!

சான்றோர் நோகச் சீண்டியவன்

பிழைப்ப திங்கே அரிதாகும்!


சன்றோர் சினத்துக் காளானால்

செல்வம் எல்லாம் அழிந்துவிடும்!


மலைபோல் உயர்ந்தே வாழ்கின்ற

அற்புத ஆற்றல் படைத்தவரை

அற்ப மாக மதிப்பவர்கள்

தன்குடி அழியத் தாழ்ந்திடுவார்!


கொள்கை மிளிரும் பெரியோரோ

சினந்தால் அரசும் அழிந்துவிடும்!


பெரியார் சினத்தில் சிக்கிவிட்டால்

எத்தனை வலிமை இருந்தாலும்

தப்பிப் பிழைக்க முடியாது!

உட்பகை -- 89

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     உட்பகை -- 89

---------------------------------------------------------------

உறவுகளைத் துண்டாடும் உட்பகையத் தூக்கி எறி!

----------------------------------------------------------------

நிழலும் நீரும் நோய்தந்தால்

இனிமை யல்ல இன்னல்தான்!


இனிக்கப் பேசும் உறவுகளும்

உட்பகை கொண்டால் துன்பந்தான்!


வாளைப் போன்ற நேர்ப்பகைக்கோ

அஞ்ச வேண்டாம்! வேர்போல

ஊன்றிப் பழகி உட்பகையை

அவிழ்க்கும் பகைவருக் கஞ்சவேண்டும்!


உட்பகை அறிந்து காத்துக்கொள்!

இல்லையேல் இங்கே மட்கலத்தை

அறுக்கும் கூர்மைக் கருவியைப்போல்

அதுவே அழித்து ஒழித்துவிடும்!


மனமே மாறா உட்பகைவர்

உறவைப் பிரிக்கும் குற்றத்தை

உவகை யுடனே செய்திடுவார்!


உறவுக் குள்ளே உட்பகையா ?

இறக்கும் வரைக்கும் துன்பந்தான்!


உடனி ருக்கும் மாந்தரிடம்

உட்பகை இருந்தால் பேரழிவின்

பிடியில் இருந்தே காப்பதுவோ

கானல் நீர்தான் என்றுணர்வாய்!


செப்பும் மூடியும் ஒன்றாக

இருப்பது போலத் தோன்றுகின்ற

தோற்றம் கொண்ட உட்பகைவர்

ஒட்டா மல்தான் பிரிந்திருப்பார்!


அரத்தால் தேய்க்க இரும்பழியும்!

உட்பகை வளர குலமழியும்!


எள்முனை அளவே உட்பகையோ

சிறிய தாக இருந்தாலும்

பெரிய தீங்கை விளைவிக்கும்!

மனத்தால் ஒன்றாமல் வாழ்வதுவும்

குடிசையில் பாம்புடன் ஒன்றாக

சேர்ந்தே இருப்பதும் ஒன்றாகும்!


பகைத்திறம் தெரிதல் -- 88

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------------

பகைத்திறம் தெரிதல் -- 88

--------------------------------------------------------------

பகைவரின் இயல்புகள் அறிவது அறிவுடைமை!

--------------------------------------------------------------

பகையோ தீங்கை விளைவிக்கும்!

அதையே சிரித்து விளையாட்டாய்

பொழுது போக்காய் விரும்பாதே!


வில்லை உடைய வீரரிடம்

பகையைக் கொண்ட போதிலுமே

சொல்லை ஏராய்க் கொண்டிருக்கும்

அறிஞ ரோடு பகைக்காதே!


தனியாய் இருந்தும் பலபேரைப்

பகைத்துக் கொள்வோன் அறிவிலிதான்!


பகையை நட்பாய் மாற்றுகின்ற

பக்குவப் பண்பே பெருமையாம்!


துணையே இன்றி வாழ்பவர்க்கு

இருவர் பகைவ ராகிவிட்டால்

ஒருவரைத் துணையாய் மாற்றவேண்டும்!


ஆய்ந்து தெளிந்து பழகாத

ஒருவரை நம்பக் கூடாது!


துன்பம் ஆட்டும் நேரத்தில்

நடுநிலை கவனம் கொள்ளவேண்டும்!


நமது துன்பம் அறியாத

நண்ப ரிடத்தில் சொல்லாதே!


நமது குறையைப் பகைவரிடம்

எடுத்துச் சொல்லக் கூடாது!


வழியை அறிந்து பொருள்சேர்த்துப்

பாது காப்பாய் வாழ்பவனைக்

கண்டால் பகைவன் பயப்படுவான்!


முள்மரந் தன்னை இளம்நிலையில்

கிள்ளி எறிதல் நன்றாகும்!

முற்றி விட்டால் வெட்டுவோரை

காயப் படுத்தித் துடிக்கவைக்கும்!


பகைவர் செருக்கை அறிந்திருந்தும்

ஏளன மாக விட்டுவிட்டால்

மூச்சு விடுகின்ற பொழுதுக்குள்

பகைவர் அழிப்பார் உணர்ந்துகொள்!


பகைமாட்சி--87

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

    பகைமாட்சி--87

---------------------------------------------------------------

பக்குவமும் அணுகுமுறையும் பகைவரைக் கையாளும் ஆயுதங்கள்

---------------------------------------------------------------

வலிமை மிகுந்தோர் பாய்ந்துவந்தால்

பகையைத் தவிர்த்துப் பணிந்துவிடு!


வலிமை யற்றோர் சீறிவந்தால்

எதிர்த்து நிற்கத் துணிந்துவிடு!

சேர்ந்தோர் மீதோ அன்பில்லை,

வலிமை மிக்கத் துணையில்லை,


தனக்கும் ஆற்றல் வலிமையில்லை!

இவரோ பகையை வெல்லமாட்டார்!


அச்சம் உறுதி இல்லாதோர்

மற்றவ ரோடு இணங்காதோர்

ஈகைப் பண்பே இல்லாதோர்

இவரைப் பகைவர் வென்றிடுவார்!


ஒழுக்கம் இன்றி வாழ்பவனை

பகைவர் எளிதில் தோற்கடிப்பார்!


எதெற்கெடுத் தாலும் சினம்கொள்வோர்

சிற்றின் பத்தில் வெறிகொண்டோர்

பகையை வெல்தல் எளிதாகும்!


பகையை எதிரிகள் விரும்பிடுவார்!

சேர்ந்தே இருந்து கவிழ்ப்பவனை

எதைக்கொடுத் தேனும் பகையாக்கு!


குற்றம் புரியும் குணக்கேடர்

பகைமைப் பகைவருக் கெளிதாகும்!


அறிவிலி, அச்சம் கொண்டவர்கள்

பகையோ வெற்றியை எளிதாக்கும்!


கற்காத மாந்தரை வென்றிடலாம்!

செயலை முடிக்க முடியாதோர் 

உலகில் புகழ்பெற முடியாது!

இகல் -- 86

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------------

        இகல் -- 86

---------------------------------------------------------------

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

---------------------------------------------------------------

கூடி வாழ மறுக்கின்ற

அற்பக் குணந்தான் இகலாகும்!


சேர்ந்து வாழும் எண்ணமின்றி

வெறுப்பை உமிழ்ந்து நின்றாலும்

அவரை வெறுத்தல் பண்பல்ல!

அரவ ணைத்தல் பெருந்தன்மை!


வேற்றுமை என்னும் மனநோயை

மனதை விட்டே நீக்கிவிட்டல்

அழியாப் புகழுடன் வாழ்ந்திடலாம்!


துனபந் தன்னில் பெருந்துன்பம்

உட்பகை கொண்டு பிரிவதுதான்!


பகையை நீக்கும் பண்பிருந்தால்

அதுவே சிறந்த பேரின்பம்!


வேற்றுமை ஆடும் நேரத்தில்

ஒற்றுமை நாடும் உள்ளத்தை

வென்றவர் உலகில் யாருமில்லை!


பிரிவை விரும்பும் அறிவிலிகள்

வெற்றியின் நீதிப் பொருளறியார்!


வேறு பாட்டை ஒதுக்கிவிட்டால்

அதுபோல் செல்வம் ஏதுமில்லை!


அதையே மாந்தர் வரவேற்றால்

அதுபோல் கேடும் வேறில்லை!


நன்மை கொழிக்கும் நேரத்தில்

வேறு பாடு கொள்வதில்லை!


துன்பம் உலுக்கும் நேரத்தில்

காரணம் இன்றிப் பகைகொள்வார்!


வேறு பாட்டால் துன்பந்தான்!

இணக்கம் கொண்டால் இன்பந்தான்!


புல்லறிவாண்மை--85

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------------

புல்லறிவாண்மை--85

---------------------------------------------------------------

அறிவாற்றல் இருந்தால் உலகம் மதிக்கும்

இல்லை என்றால் உலகம் நகைக்கும்!


அறிவில் லாமை இல்லாமை!

மற்றவை எல்லாம் இல்லாமை

என்றே உலகம் கருதாது!


அறிவிலி ஒருவன் மனமுவந்து

பொருளைத் தந்தால் பெறுபவனின்

நல்வினைப் பயனே என்றுரைப்பார்!


அறிவிலி இங்கே ஏற்படுத்திக்

கொள்ளும் தீமையைப் பகைப்புலமும்

செய்ய முடியாத் தீமையாம்!


தன்னைத் தானே அறிவுடையோன்

என்றே புகழ்தல் அறிவின்மை!


நூலைப் படிக்கா விட்டாலும்

படித்தது போல நடிப்பவர்கள்

படித்ததைக் கூட நம்பமாட்டார்!


மனதில் காக்கும் ரகசியத்தை

வெளியே சொல்லும் அறிவிலியோ

தனக்குத் தானே துன்பத்தை

தேடிக் கொண்டு தத்தளிப்பான்!


கேட்க மாட்டார் சொன்னாலும்!

தனக்கும் செய்யத் தெரியாது!

இந்தத் தன்மை உள்ளவரோ

இறுதி வரைக்கும் நோய்போலாம்!


அறிந்தவன் போல அறிவிலியோ

எண்ணி நடிப்பான்! அவனைத்தான்

அறிவுடை யோனாய் மாற்றிடவே

முயல்வோன் அறிவிலி யாகிடுவான்!


அனைவரும் உண்டு என்பதையோ

இல்லை யென்று சொல்பவனை

உலகம் பேயாய்க் கருதிடுமே!


பேதைமை -- 84

 திருக்குறள் குழந்தைப்பாடல்

----------------------------------------------------------------

பேதைமை -- 84

---------------------------------------------------------------

வாழ்வை இருளில் தள்ளுவதே அறியாமை!

----------------------------------------------------------------

ஆக்கந் தன்னைக் கைவிட்டுக்

கேட்டைக் கொள்தல் அறியாமை!


தகாத செயலுக்கு நாணமின்மை

தகுந்ததை ஆய்வு செய்யாமை

உள்ளம் நெகிழும் அன்பின்மை

காப்பதை நாளும் காவாமை

இவைகள் அறிவிலிச் செயலாகும்!


நூல்களைக் கற்றும் பொருளறிந்தும்

விளக்கம் சொல்லும் திறனிருந்தும்

கற்றதை வாழ்க்கையில் போற்றாமல்

வாழ்பவன் உலகில் அறிவிலிதான்!


ஏழு பிறவி வேதனையை

இழிசெயல் மூலம் ஒருபிறவி

வாழ்வில் துடித்தே அனுபவிப்பான்!


ஒழுக்கம் தன்னை அறியாத

பேதை, செயலை மேற்கொண்டால்

சிறைக்கும் செல்ல நேரிடுமே!


பேதை யிடத்தில் பெருஞ்செல்வம்

இருந்தால் அயலார் அனுபவிப்பார்!


உற்றார் பெற்றோர் பசித்திருப்பார்!


அறிவிலி யிடத்தில் பொருள்கிடைத்தால்

பித்துப் பிடித்தோன் கள்குடித்து

போதையில் மயங்கும் நிலைபெறுவான்!


பேதையின் நட்பு இனிமைதான்!

பிரியும் நேரம் துளிகூட

ஏக்க உணர்வைப் பெறமாட்டோம்!


அறிஞர் அவையில் பேதையோ

நுழைவது இங்கே அசுத்தத்தை

மிதித்த காலைப் படுக்கைமேல்

வைத்த நிலையே உணர்ந்திடுவாய்!


கூடா நட்பு 83

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

        கூடா நட்பு    83

----------------------------------------------------------

கூடா நட்பு கேடாய் முடியும்

------------------------+-------------------------------

போலியாய்ப் பழகுவோர் நட்பிங்கே

தக்கநேரம் துண்டாடும் உலைக்கல்லாம்!


நல்லவர் போலப் பழகித்தான்

நட்பில் பொய்மை கொண்டவர்கள்

விலைமகள் மனம்போல் உள்ளொன்றும்

புறத்தில் ஒன்றுமாய்த் தோன்றிடுவார்!


நூல்கள் இங்கே கற்றாலும்

பக்குவம் இல்லா மாந்தர்கள்

நல்ல நண்பர் ஆகமாட்டார்!


முகத்தில் சிரிப்பும் அகத்தினிலே

காழ்ப்பும் கொண்டோர் நட்புதனைக்

கண்டே அஞ்சுதல் அறிவுடைமை!


மனமும் செயலும் வேறுபடும்

மாந்தர் சொல்வதை நம்பித்தான்

செயலில் இறங்கக் கூடாது!


நண்பர் போல நல்லவற்றைச்

சொல்வார்! உண்மை முகமூடி

கழன்று விழுந்தால் தலைகுனிவார்!


வில்லின் வணக்கம் தீங்காகும்!

பகைவன் பணிவும் அதுபோல்தான்!


பகைவர் வணங்கும் கரங்களுக்குள்

மறைந்தே இருக்கும் ஆயுதந்தான்!

அவர்கள் கண்ணீர் சதிச்செயலே!


நடித்துப் பழகும் நண்பரைப்போல்

நாமும் பழகி விலகவேண்டும்!


வாய்ப்பால் பகைவர் நண்பரானால்

அகத்தின் அளவில் இல்லாமல்

முகத்தால் சிரித்து விலக்கவேண்டும்!

தீ நட்பு --- 82

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

               தீ நட்பு --- 82

-------------------------------------------------------

வேடமற்ற நட்பே நட்பாகும்

--------------------------------------------------------

அன்பைப் பொழிவது போல்நடிக்கும்

பண்பிலார் நட்பு வளராமல்

குறைந்து தேய்வது நலமாகும்!


பயன்தருமா? நட்பிழை பின்னுவார்!

இல்லையா? இழைகளை அறுத்தெறிவார்!

இத்தகைய நட்பு நட்பல்ல!


தன்னலம் போற்றும் நண்பர்கள்

இருமனப் பெண்கள், கள்வர்கள்

தன்மையில் ஒன்றே என்றுணர்வாய்!


போர்க்களந் தன்னில் தள்ளிவிட்டு

துரோகம் செய்யும் குதிரையைப்போல்

நண்பர் இருப்பதைக் காட்டிலும்

இல்லா திருத்தல் நன்மையாம்!


இழிமன நண்பர் அற்பர்கள்

களையென எண்ணித் தவிர்த்திடுவோம்!


அறிவிலி நட்பைக் காட்டிலும்

அறிஞர் பகையோ மேலாகும்!


போலிச் சிரிப்பைக் காட்டித்தான்

பழகும் நட்பைக் காட்டிலும்

பகைவர் பகைமை பலகோடி

நன்மை பயக்கும் உணர்வோமே!


சொல்வது ஒன்றும் செய்வதொன்றும்

இருநிலை நட்பு துன்பந்தான்!


வீட்டில் தனிமையில் போற்றுவதும்

அவையோர் மத்தியில் தூற்றுவதும்

கொண்டோர் நட்பை விலக்கவேண்டும்!


பழைமை---81

 பழைமை---81

-----------------------------------------------------------

உண்மை நட்பின் உரிமைக்கு

எல்லைக் கோடுகள் இல்லையே!

--------------+-----------------------------------------------

உண்மை நண்பர் பிழைதன்னைப்

பொறுத்துப் போதல் பழைமையாம்!


நண்பர் உரிமை எடுத்தேதான்

செய்யும் செயலை ஏற்பதுதான்

சான்றோர் போற்றும் கடமையாம்!

ஏற்க வில்லை என்றாலோ

நட்பைப் போற்றிப் பயனில்லை!


நம்மை இங்கே கேட்காமல்

உரிமை கொண்டு செய்துவிட்டால்

தாமே செய்த தைப்போல

ஏற்பார் என்றும் அறிஞர்கள்!


நம்மை வருத்தும் செயல்தன்னை

நண்பர் செய்தால், அறியாமை

உரிமை என்றே கருதித்தான்

ஏற்க வேண்டும் பொன்மனத்தால்!


நட்பின் உரிமை அறிந்தவர்கள்

அழிவே நேரும் என்றாலும்

தொடர்பைத் துறக்க எண்ணமாட்டார்!


நெடுநாள் நண்பர் கேடுகளைத்

தனக்குச் செய்யும் நேரத்தில்

பொறுத்தே நட்பைத் தொடர்ந்திருப்பார்!


நண்பர் செய்யும் தவறுகளை

மற்றவர் இங்கே சொன்னாலும்

கேளா உரிமை கொண்டவர்க்குத்

தவறைச் செய்தநாள் பயனுடைத்தாம்!


நெடுநாள் நண்பர் தவறிழைத்தால்

நட்பைத் தொடரும் பெருந்தகையைப்

பகைவரும் இங்கே விரும்பிடுவார்!

நட்பு ஆராய்தல் -- 80


திருக்குறள் குழந்தைப் பாடல்!

----------------------------------------------------------------

நட்பு ஆராய்தல் -- 80

----------------------------------------------------------------

பரபரப்பான நட்பில் பக்குவத் தெளிவே இல்லை!

----------------------------------------------------------------

தெளிந்த நட்பில் பிரிவில்லை!

புரியா நட்பில் கேடுண்டு!


நன்மை தீமை ஆராய்ந்து

நட்பைப் படர விடவேண்டும்!


இல்லா விட்டால் சாகின்ற

நிலையை இங்கே உருவாக்கும்!


பன்முகப் பண்பை ஆய்ந்தேதான்

நட்பில் திளைப்பது நன்றாகும்!


பழிகளுக் கஞ்சும் நல்லவரை

விலைகொடுத் தேனும் நட்பாக்கு!


தடங்கள் மாறி நடப்போரை

கண்ணீர் சிந்தக் கண்டிக்கும்


நட்பு வளர்த்தால் பயனுண்டு!

துன்பமும் இங்கே நன்மைதான்!


உண்மை நட்பை அளப்பதற்கு

அதுவே கருவி யாகிவிடும்!


ஊக்கம் கெடுக்கும் செயல்களையும்

இன்னல் நிலையில் விலகுகின்ற

நட்பையும் இங்கே தவிர்க்கவேண்டும்!

சோதனை நேரம் கைவிடுவோர்

நட்பை நாமே இறக்கின்ற

நேரம் நினைத்தால் மனம்சுடுமே!


மாசே இல்லா நட்புதனை

நேசம் கொண்டே ஏற்கவேண்டும்!


மாசு படிந்த நட்புதனை

விலைகொடுத் தேனும் நீக்கவேண்டும்!






நட்பு--79

 திருக்குறள் குழந்தைப் பாடல்!

----------------------------------------------------------------

       நட்பு --79

----------------------------------------------------------------

நட்பின் மகிமை -- வாழ்வின் பெருமை!

---------------------------------------------------------------

நட்பைப் போல உறவில்லை!

காக்கும் கரமும் வேறில்லை!


அறிஞர் நட்பு வளர்பிறையாம்!

அறிவிலி நட்பு தேய்பிறையாம்!


படிக்கப் படிக்க நூலின்பம்!

பழகப் பழகப் பண்பாளர்

நட்பில் வளரும் இன்பந்தான்!


கூடிக் களிப்பது நட்பல்ல!

தவறைத் திருத்துதல் நட்பாகும்!


நேரில் பழகா விட்டாலும்

மனதின் உணர்வே நட்பாகும்!


முகத்தின் பொய்மை நட்பன்று!

அகத்தின் உண்மை நட்பாகும்!


அழிவில் இருந்து தடுத்தேதான்

அழிவே வரினும் உடனிருந்து

உதவி செய்தல் நட்பாகும்!


ஆடை நழுவும் நேரத்தில்

தடுக்கும் கரம்போல் முன்வந்து

துன்பம் தடுப்பது நட்பாகும்!


நட்பின் சிகரம் எதுவென்றால்

மாறு பாடே கொள்ளாமல்

நண்பனைத் தாங்கும் நிலையாகும்!


நண்பரை நண்பர் புகழ்ந்துரைத்தால்

நட்பின் பெருமை மங்கிவிடும்!


மதுரை பாபாராஜ்


படைச் செருக்கு -- 78

 திருக்குறள் குழந்தைப் பாடல்!

----------------------------------------------------------------

படைச் செருக்கு -- 78

----------------------------------------------------------------

படையின் வலிமையும் பெருமையும்!

----------------------------------------------------------------

வீரம் செறிந்தவன் என்தலைவன்!

போரிட் டவர்கள் நடுகல்லாய்

மாறிப் போனார்! எதிர்க்காதீர்!


முயலை வீழ்த்திய அம்பைவிட

யானை தப்பிய வேல்மேலாம்!


பகைவரை எதிர்த்தல் பேராண்மை!

பகைவர் துன்புறும் நேரத்தில்

உதவுதல் வீரர் பெருந்தன்மை!


கையில் இருந்த ஒருவேலை

யானை மீது எறிந்துவிட்டு

தாக்கத் தாவும் யனைமேல்

நெஞ்சில் பதிந்த வேல்பறித்து

சிரித்தே எய்பவன் வீரன்தான்!


பகைவரைச் சினந்தே பார்க்கும்கண்

இமைத்தால் அதுவே தோல்வியாம்!


போரில் காயம் படாநாளோ

வீர னுக்கு வீண்நாளாம்!

நிலைத்த புகழை நாடித்தான்

போரில் சாகத் துணிந்தவர்கள்

காலின் கழலொலி அழகாகும்!


தலைவன் சினந்தும் தன்கடமை

செய்யும் வீரன் சிறந்தவனாம்!


வீர சபதம் கனியும்முன்

போரில் இறந்த வீரனையோ

பழித்துப் பேச மாட்டார்கள்!


அரசன் கண்களில் நீர்மல்க

போரில் சென்றே உயிர்துறக்க

கேட்டுப் பெறுதல் பெருமைதான்!

படைமாட்சி--77

 திருக்குறள் குழந்தைப் பாடல்!

----------------------------------------------------------------

  படைமாட்சி--77

----------------------------------------------------------------

படையின் வலிமை நாட்டின் வலிமை!

----------------------------------------------------------------

பகையின் வலிமையைப் பந்தாடும்

வலிய படையே நற்செல்வம்!


போரில் அழிந்தே நிலைகுலைந்தும்

நாட்டின் சொந்த மக்களுக்கு

துணிவே வெற்றித் துணையாகும்!


எலிகள் கூடி ஒலித்தாலும்

பாம்பின் இரைச்சல் கேட்டவுடன்

ஓடி ஒளிந்து மறைந்துவிடும்!


பிறரால் வெல்ல முடியாத

அடிமை கொள்ள முடியாத

படையே அரசின் வீரமாகும்!


சாவைத் துணிந்தே எதிர்க்கின்ற

திறமை தானே படைவலிமை!


வீரம் மானம் நம்பிக்கை

நல்ல வழியில் நடைபோடல்

நான்கும் படைக்குச் சிறப்புகளாம்!


பகைவர் படையில் முன்னணியில்

வருவோர் தம்மைத் தடுத்தேதான்

மோதி அழித்தல் படைவலிமை!


வீரமும் ஆற்றலும் இல்லாமல்

அணிகள் வகுத்து நடைபோடும்

தோற்றப் பொலிவால் பெருமைபெறும்!


சேதம் வறுமை மனக்கசப்பு

இல்லாப் படையே வெற்றிபெறும்!


ஆற்றல் உள்ள படைவீரர்

இருந்த போதும் வழிநடத்தும்

தலைவன் இல்லாப் படையிங்கே

பகையை எதிர்க்க முடியாது.


பொருள் செயல்வகை---76

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

பொருள் செயல்வகை---76

---------------------------------------------------------

அறவழியில் வந்த பொருளுக்கு

          நிகரில்லை!

-----------------------------------------------------------

மதிக்கத் தகாத மனிதரையும்

மதிக்கச் செய்வது பொருளாகும்!


பொருளி ருந்தால் போற்றிடுவார்!

பொருளே  இல்லையா? தூற்றிடுவார்!


பொருளே அணையா விளக்காகும்!

பகைமை இருளைப் போக்கிவிடும்!


நேர்வழி ஈட்டிய செல்வங்கள்

இன்பம், அறத்தை வழங்கிடுமே!


அருளின் அன்பின் வழியின்றி

திரண்டே செல்வம் வந்தாலும்

துரும்பென எண்ணி விலக்குங்கள்!


சுங்கப் பொருளும் வரிப்பொருளும்

பகைவரை வென்று வந்தவையும்

அரசுக் குரிய பொருளாகும்!


அன்புத் தாயின் அருள்குழந்தை

செல்வம் என்னும் செவிலித்தாய்

அணைத்து மகிழ வளர்ந்திடுமே!


தனது செல்வத்தை வைத்தேதான்

செயலைச் செய்ய முற்படுதல்

யானைப் போரை மலைமீது

நின்றே பார்ப்பது போலாகும்!


பகைவர் செருக்கை அழிப்பதற்கு

உரிய கருவி பொருள்வளந்தான்!


அந்தப் பொருளைச் சேர்த்துவைத்தால்

எந்தப் பகையும் நடுங்கிடுமே!


நல்ல வழியில் பொருள்சேர்த்தால்

அறமும் இன்பமும் துணையாகும்!


அரண்--75

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

    அரண்--75

----------------------------------------------------------------

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்  இமையாகும்!

---------------------------------------------------------------

போருக்கு அஞ்சா வீரனுக்கும்

அஞ்சி நடுங்கும் கோழைக்கும்

காக்கும் துணையே அரணாகும்!


மலையும் நிலமும் அகழிகளும்

காடும் இயற்கை அரண்கள்தான்!


உயரம் அகலம் உறுதியுடன்

அழிக்க முடியா தன்மையுடன்

நிற்கும் அரணே அரணாகும்!


காவல் வாயில் சிறிதாயும்

சுற்றுப் புறமோ பெரிதாயும்

பகைவர் கண்டால் மலைப்பதாயும்

உடைய அமைப்பே அரணாகும்!


பகைவர் முற்றுகை இட்டாலும்

வெற்றி கொள்ள முடியாமல்

பலவகை உணவைக் கொண்டதாக

உள்ளதே நாட்டின் அரணாகும்!


உள்ளே இருப்போர்க்கு பொருள்வசதி

பகைவரை வெல்லும் வீரர்கள்

பெற்றுத் திகழ்வதே அரணாகும்!


சூழ்ந்து நின்றே தாக்கினாலும்

சிலரை துரோகியாய் மாற்றினாலும்

பகையால் வெல்ல முடியாமல்

உறுதி கொண்டதே அரணாகும்!


உள்ளே இருந்து பகைப்புலத்தை

வெல்லும் அமைப்பே அரணாகும்!

வலிமை உள்ள அரணெனினும்

நடுங்கும் வீரரால் பயனில்லை!


நாடு--74

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

 நாடு 74 

----------------------------------------------------------------

நாட்டிற்குரிய நல்ல இலக்கணங்கள்

----------------------------------------------------------------

உழைப்போர், அறவழிச் சான்றோர்கள்

தன்னலம் இல்லாச் செல்வந்தர்

சேர்ந்து வாழ்வதே நாடாகும்!


மற்றவர் வந்து குடியேறும்

சுமையைத் தாங்கி வரிகளையும்

ஏற்கும் மக்களைக் கொண்டேதான்

மகிழும் நாடே நாடாகும்!


பசியும், நோயும், பகையுமின்றி

நிம்மதி கொண்டதே நாடாகும்!


குழுவின் பகையும், உட்பகையும்

கெடுமதி கொண்டோர் வன்முறையும்

இல்லா நாடே நாடாகும்!


பகையால் கேடுகள் சூழ்ந்தாலும்

குறையா வளங்கள் கொண்டேதான்

நிறைவாய் உள்ளதே நாடாகும்!


மலையும், ஊற்றுநீர், மழைநீரும்

ஓடிவரும் ஆற்றுநீர், கோட்டையும்

நாட்டு வளத்தின் உறுப்புகளாம்!


செல்வம், விளைச்சல், நோயின்மை,

மகிழ்ச்சி, காவல் இவையைந்தும்

நாட்டிற் கென்றும் அழகாகும்!


தேடி வருந்தும் நிலையின்றி

இயற்கை வளங்கள் செழித்திருக்க

நிமிர்ந்து வாழ்வதே நாடாகும்!


அன்பும் அறமும் இல்லாத 

அரசால் எந்தப் பயனுமில்லை!


அவை அஞ்சாமை--73

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

அவை அஞ்சாமை--73

----------------------------------------------------------------

அறிவின் தெளிவே அஞ்சாமை!

----------------------------------------------------------------

சொல்லின் பொருளை உணர்ந்தவரோ

மறந்தும் பிழைபடப்  பேசமாட்டார்!


கற்றவர் மனதில் நிலைக்குமாறு

பேசும் ஆற்றல் உடையவரோ

அனைவரை விஞ்சும் கற்றவராம்!


பகைவ ரோடு போரிட்டே

துணிவுடன் சாவோர் பலருண்டு!


கற்றோர் அவையில் அஞ்சாமல்

பேசுதல் என்பது கடினந்தான்!


கற்றவர் அவையில் தான்கற்ற

அனைத்துப் பொருளையும் சொல்லவேண்டும்!


அதற்கும் மேலாய் அவர்களிடம்

கற்றுத் தெளிதல் அறிவுடைமை!


சொல்லின் இலக்கண நூல்கற்றே

அறிஞர் அவையில் பேசவேண்டும்!


அறிந்தோர் கேட்கும் விளக்கத்தை

விளக்க வேண்டும் அஞ்சாமல்!


அச்சம் கொண்டால் வாளெதற்கு?

அறிஞர் அவையில் அஞ்சுவோர்க்கு

கற்ற நூலால் என்னபயன்?

அறிஞர் அவையில் பேசிடவே

தயங்கும் மாந்தர், கற்காத

மாந்தரைக் காட்டிலும் கீழோராம்!

அவையைப் பார்த்துப் பயப்படுவோர்

வாழ்வில் என்றும் நடைப்பிணந்தான்!


மதுரை பாபாராஜ்

அவை அறிதல் -- 72

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

அவை அறிதல் -- 72

----------------------------------------------------------------

அவையடக்கம் மதிப்பை உயர்த்தும்!

----------------------------------------------------------------

சொற்கள் வகையை அறிந்திருக்கும்

அறிஞர் தன்மை அறிந்தேதான்

பேச வேண்டும் உணர்ந்திடுவாய்!


பேசு வோர்கள் இடையிடையே

அவைமனம் உணர்ந்து பேசவேண்டும்!


கேட்போர் மனதை அறியாமல்

பேசும் பேச்சால் பயனில்லை!


அறிஞர் அவையில் அறிஞராக

அறிவிலி அவையில் அறிவிலியாய்

வெண்சுண் ணாம்பாய் இருக்கவேண்டும்!


முந்திரிக் கொட்டை போலத்தான்

அறிஞர் அவையில் பேசாத

அடக்கப் பண்பே நன்மைதரும்!


அறிவிற் சிறந்தோர் கூட்டத்தில்

பேச்சால் சிறுமைப் படுவதுவோ

ஒழுக்கம் தவறும் நிலைபோலாம்!


தெளிவாய்ச் சொல்லை அறிந்திருக்கும்

அறிஞர் அவையில் கற்றறிந்தோர்

பேச்சில் புலமை வெளிப்படுமே!


தானே அறியும் திறனுள்ள

அறிந்தோர் அவையில் பேசுவது

தானே வளரும் பயிருள்ள

பாத்தியில் நீரைப் பாய்ச்சுவதாம்!


தனக்கிணை இல்லா அவையினிலே

பேசும் பேச்சோ சுத்தமற்ற

முற்றந் தன்னில் அமிழ்தத்தை

கொட்டி விட்ட நிலையாகும்!


குறிப்பறிதல்--71

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

குறிப்பறிதல்--71

----------------------------------------------------------------

அகக்குறிப்பை முகக்குறிப்பில் அறிதல்

----------------------------------------------------------------

மனதில் உள்ள எண்ணத்தை 

முகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள

ஆற்றல் கொண்டவன் உலகிற்கே

அணிகலன் போல ஆகிடுவான்!


இந்த ஆற்றல் படைத்தவனை

எந்தப் பொருளைக் கொடுத்தேனும்

துணையாய்க் கொள்தல் அறிவுடைமை!


மற்றவர் போல உறுப்புகளால்

ஒத்தி ருந்த போதிலுமே

அகத்தை உணரும் அறிவாலே

வேறு பட்டவர் ஆகின்றார்!


அகத்தின் குறிப்பை உணராதோர்

கண்கள் இரண்டால் என்னபயன்?

பொருளைக் காட்டும் பளிங்கைப்போல்

அகத்தைக் காட்டும் முகக்குறிப்பு!


விருப்பை வெறுப்பக் காட்டுகின்ற

முகத்திற் கிணையாய் வேறுண்டோ?

உள்ளக் குறிப்பை உணர்வோனோ

முகத்தில் அகத்தை உணர்ந்திடுவான்!


விழிகள் பொழியும் வேறுபாட்டால்

பொழிவது நட்பா? பகையா?

உரைப்போர் துணையே வல்லமையாம்!


பிறரின் கருத்தை ஆராய்ந்து

முகத்தைப் பார்த்தே உணர்த்துகின்ற

திறமைக் கிங்கே கண்கள்தான்

சிறந்து விளங்கும் அளவுகோலாம்!

மகிழ்ந்தோம்


 மகிழ்ந்தோம்!


துபாய்நாட்டு வீதியில் செல்வதற்குப் பேரன்

சுசாந்த்தோ மகிழுந்து வாங்கியதைக் கண்டே

மகிழ்ந்தோம்! அகங்குளிர வாழ்த்துகிறோம் நாங்கள்!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


ChatGPT


We Rejoiced!


Along the streets of Dubai afar,

Our grandson Susanth’s shining car—

A gift he chose, a dream made true—

Filled our hearts with joy anew.

We rejoiced! With blessings warm,

May his life in grace transform;

May he prosper, rise, and stand—

Long live his years, forever grand.


— Madurai Babaraj,

Vasantha & Family

மன்னரைச் சேர்ந்தொழுகல் -- 70

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

மன்னரைச் சேர்ந்தொழுகல் -- 70

----------------------------------------------------------------

குறிப்பறிந்து பழகுதல் பழக்கத்திற்கு அழகு!

----------------------------------------------------------------

நெருப்பின் முன்னே குளிர்காயும்

நிலைபோல் எல்லை அறிந்தேதான்

சான்றோ ரிடத்தில் பழகவேண்டும்!


சான்றோர் நாடி விரும்புவதை

சார்ந்தோர் தவிர்த்தல் பயன்தருமே!


நம்மேல் ஐயம் கொள்ளாமல்

நடப்பது நல்லது! வந்துவிட்டால்

மனதை மாற்ற முடியாது!


பிறருடன் பேசுதல், சிரிப்பதையோ

சான்றோர் முன்னே தவிர்க்கவேண்டும்!

அவர்கள் பேசும் இரகசியத்தை

ஒட்டுக் கேட்கக் கூடாது!

அவராய்ச் சொன்னால் கேளுங்கள்!


விருப்பு வெறுப்பை நன்கறிந்து

என்றும் சொல்லுதல் நல்லதுதான்!


பெரியோர் விரும்பும் செய்திகளை

சொல்லத் தயங்கக் கூடாது!


வெறுக்கும் செய்தியைக் கேட்டாலும்

சொல்லத் துள்ளக் கூடாது!


வயதில் இளையோர், உறவினர்தான்

என்றே இகழ்ந்து பேசாமல்

தகுதிக் கேற்ப மதிக்கவேண்டும்!


நெடிய தொடர்பு உண்டென்று

செய்யக் கூடா செயல்களைத்தான்

உரிமை யோடு செய்திட்டால்

உழல்வார் நாளும் துன்பத்தில்!

தூது-- 69

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------------

    தூது-- 69

----------------------------------------------------------------

நாட்டையும் மக்களையும் ஆற்றலுடன் காப்பதே தூது!

----------------------------------------------------------------

அன்பு பண்பு குடிப்பிறப்பு

தூது செல்வோன் தகுதிகளாம்!


அன்பு அறிவு சொல்வன்மை

தூதுக் குரியோன் பண்புகளாம்!


தனது நாட்டின் வெற்றிக்கு

வேற்று நாட்டுத் தலைமையிடம்

கருத்தைத் தெளிவாய் உணர்த்துவதே

தூதுச் செயலின் இலக்கணமாம்!


தோற்றம் கல்வி அறிவாற்றல்

இவையே தூதரின் முத்திரையாம்!


தொகுத்தும் நீக்கியும் செய்திகளை

பகுத்துச் சொல்லும் ஆற்றலுடன்

நாட்டைக் காப்போன் தூதன்தான்!


கற்றுத் தெளிந்தே அஞ்சாமல்

கருத்தை உரைத்துக் காலத்தை

அறிந்தே தூதன் செயல்படுவான்!


கடமை காலம் அறிந்தேதான்

இடத்தையும் சொல்பவன் தூதனாம்!


ஒழுக்கம் வலிமை துணிவென்னும்

மூன்றும் உடையவன் தூதுரைப்பான்!


போகும் இடத்தில் அஞ்சித்தான்

தலைவன் கூறிய செய்திகளைத்

தவறியும் தவறாய்க் கூறாமல்

சொல்லும் பண்பே தூதாகும்!


தனக்கு அழிவே நேர்ந்தாலும்

நட்டுக் காக நன்மைகள்

தருவதைச் சொல்பவன் தூதன்தான்!


வினை செயல்வகை--68

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------------

வினை செயல்வகை--68

----------------------------------------------------------------

செயலின் ஆற்றலே வெற்றியின் ஊற்றாகும்

----------------------------------------------------------------

செயலை முடிக்கத் துணிந்தபின்பும்

காலந் தாழ்த்தல் குற்றந்தான்!


காலந் தாழ்த்தி முடிக்கின்ற

செயலை மெதுவாய் முடித்திடலாம்!


உடனடி யாக முடிப்பதையோ

உடனே முடித்தால் பயன்தருமே!


முடியும் வரைக்கும் செயலாற்று!

முடியாத போது முடிப்பதற்கு

உத்திகள் எண்ணிச் செய்துவிடு!


இடையில் விட்ட செயலெனினும்

தீர்வைக் காணா பகையெனினும்

முழுதும் அணைக்கா நெருப்பைப்போல்

என்றும் துன்பம் விளைவிக்கும்!


செயலும் உரிய பொருள்களையும்

காலம் கருவி இடங்களையும்

ஆய்ந்தே செயலில் ஈடுபட்டால்

பறிப்போம் வெற்றிக் கனிகளைத்தான்!


எந்தச் செயலை எடுத்தாலும்

அந்தச் செயலில் அனுபவத்தைக்

கொண்டோர் கருத்தைக் கேட்டுக்கொள்!


ஒருசெயல் செய்யும் நிலைதன்னில்

மற்றொரு செயலைச் செய்வதுவோ

யானையை வைத்து இன்னுமொரு

யானையைப் பிடிப்பது போலாகும்!


வலிமையில் விஞ்சும் வன்பகையை

நட்பாய் மாற்றுதல் விவேகந்தான்

வினைத்திட்பம்--67

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

வினைத்திட்பம்--67

----------------------------------------------------------------

செயலில் உறுதி--மனதில் துணிவு!

----------------------------------------------------------------

செயலின் வலிமை மனவலிமை

மற்றவை இதற்கு நிகரில்லை!


தடையத் தடுக்க முனைதலும்

வந்தால் கலக்கம் இல்லாமல் 

சந்திப் பதுமே வினைத்திட்பம்!


செயலின் இரகசியம் காக்காமல்

இடையில் தெரிந்தால் துன்பந்தான்!

சொல்தல் யார்க்கும் எளிதாகும்


செய்து காட்டல் அரிதாகும்!

செயல்திறன் ஆற்றல் அளவாகும்!

சான்றோர் அவரைப் போற்றிடுவார்!


மனதில் உறுதி படைத்திருந்தால்

செயலை முடிப்பார் நினைத்தபடி!


தேரை இயக்கும் அச்சாணி

உருவில் என்றும் சிறியதுதான்!

உருவைக் கண்டு இகழாதே

செயலின் திறமையால் எடைபோடு!


காலந் தன்னைத் தாழ்த்தாமல்

மனதில் கலக்கம் இல்லாமல்

தளரா முயற்சி யோடிங்கே

செயலைச் செய்து முடிக்கவேண்டும்!


இன்னலின் பயனோ இனிமைதான்

துணிவுடன் செயலைச் செய்யுங்கள்!


மலைபோல் ஆற்றல் இருந்தாலும்

தொழிலில் உறுதி இல்லையெனில்

உயர்ந்தோர் போற்ற மாட்டார்கள்!


வினைத்தூய்மை--66

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

வினைத்தூய்மை--66

---------------------------------------------------------------

செயல்களின் தூய்மை வாழ்க்கையின் நேர்மை!

---------------------------------------------------------------

வாழ்க்கையின் வளமே துணைத்தூய்மை!

நலத்தைச் சேர்க்கும் செயல்தூய்மை!


புகழை அறத்தைச் சேர்க்காத

செயல்கள் தம்மைச் செய்யாதே!


சிகரம் செல்ல முயல்பவர்கள்

இழிந்த செயலைத் தவிர்த்திடுவார்!


அறிவில் தெளிவைக் கொண்டவர்கள்

துன்பம் வந்தே துளைத்தாலும்

பழிக்கும் செயலைச் செய்வதில்லை!


வருந்தும் செயலைத் தவறாக

செய்த போதிலும் மீண்டுமதைச்

செய்யா திருப்பதே அறிவாகும்!


தாயோ பசியால் துடித்தாலும்

அதனைப் போக்கச் சான்றோர்கள்

பழிக்கும் செயலைச் செய்வதில்லை!


பழிகள் விதைக்கும் தொழில்செய்தே

வளமாய் வாழ்வது தாழ்வாகும்!


வறுமை புரட்டி எடுத்தாலும்

நேர்மையாய் வாழ்தல் உயர்வாகும்!


பிறரின் கதறலில் பெற்றசெல்வம்

நம்மை ஒருநாள் கதறவைக்கும்!


நல்வழிச் செல்வம் விலகினாலும்

நமக்கோ என்றும் நன்மைதரும்!


தீயவழிச் செல்வத்தைக் காப்பதுவும்

பச்சைமண் பானையில் நீரூற்றி

சேமிக்க முயல்வதும் ஒன்றாகும்!


சொல்வன்மை--65

 சொல்வன்மை--65

----------------------------------------------------------------

சுருங்கச் சொல்தல் தனித்திறமை!

----------------------------------------------------------------

நாநயம் ஒன்றே தனித்திறமை!

சாதனை படைக்கும் தனிச்சிறப்பு!


நன்மை, தீமை சொல்லால்தான்!

பேச்சில் தவறைத் தவிர்த்திடுவோம்!


கேட்டோர் தம்மை வசப்படுத்திக்

கேட்கா தோரை ஏங்கவைக்கும்


சொல்லாற் றலுக்கோ நிகரில்லை!

சொல்லின் வன்மை அறம்பொருளாம்!


சொற்பொருள் அறிந்து பேசுங்கள்!

சொல்லும் சொல்லை மற்றவர்கள்

வெல்லாத வாறு பயன்படுத்து!


கேட்பவர்க் கேற்ப பேசவேண்டும்!

மற்றவர் பேச்சின் பொருளறிந்து

ஏற்கும் பக்குவம் பண்பாகும்!


சொல்லில் தெளிவு, சோர்வின்மை

துணிவும் கொண்ட மனிதனையோ

உலகில் வெல்வது கடினந்தான்!


நேர்த்தியாய் செய்தியை கோத்தேதான்

இனிதே பேசும் நாவரசன்

சொற்படி கேட்கும் இவ்வுலகம்!


சுருங்கச் சொல்லத் தெரியாதோர்

நீண்ட நேரம் பேசிடுவார்!

அதனால் எந்தப் பயனுமில்லை!

கேட்போ ருக்குப் புரியாமல்

பேசு பவர்கள் , மணமற்ற

கொத்து மலர்கள் போன்றவராம்!


அமைச்சு -- 64

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

அமைச்சு -- 64

----------------------------------------------------------------

அமைச்சரின் கடமைப் பண்புகள்

---------------------------------------------------------------

கருவி, காலம், செயல்முறையை

எண்ணிச் செய்பவர் அமைச்சராவார்!


துணிவு, காக்கும் உணர்வுடனே

நீதி, முயற்சி அய்ந்தையும்

கண்போல் நினைப்பவர் தானமைச்சர்!


பகையின் துணையைப் பிரிப்பவரும்

திருந்தி திரும்பி வருவோரை

ஏற்கும் குணத்தைக் கொண்டவரும்

நாடு போற்றும் நல்லமைச்சர்!


தொழிலின் திறனை அறிந்தேதான்

செயல்படும் அமைச்சரே துணையாவார்!


இயற்கை அறிவும் நூலறிவும்

கொண்டவர் நுட்பச் சூழ்சிகளை

எளிதில் வென்றே தலைநிமிர்வார்!


தன்னால் புரியாது! சொன்னாலும்

கேட்க மறுத்திடுவார்! இவர்களையோ

துணிந்து மாற்றுவோன் அமைச்சராவார்!


கேடு செய்யும் ஓரமைச்சர்

உள்ளதைக் காட்டிலும் பகைவர்கள்

எழுபது கோடி நல்லவரே!


செயலின் திறமற்ற அமைச்சரிங்கே

அரைகுறை யாகச் செயல்படுவார்!


மதுரை பாபாராஜ்

இடுக்கண் அழியாமை--63

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

இடுக்கண் அழியாமை--63

----------------------------------------------------------------

துன்பத்தில் துவளாதே! இன்பத்தில் துள்ளாதே!

----------------------------------------------------------------

துன்பம் வந்தால் சிரித்துவிடு!

தன்னால் துன்பம் மறைந்துவிடும்!


திரண்டு உறுமும் வெள்ளம்போல்

துன்பம் வந்தால் சந்திக்கும்

நிலையை எடுத்தால் வடிந்துவிடும்!


துன்பத்தின் தோளிலே துன்பத்தைச்

சுமத்தித் துடிக்க வைத்துவிட்டல்

வெற்றிக் கனிகள் பறித்திடலாம்!


வண்டிச் சுமையை முனைப்புடனே

இழுக்கும் எருதைப் போலத்தான்

மனந்தள ராமல் உழைத்திட்டால்

துன்பம் இங்கே துன்புறுமே!


தொடர்ந்து துன்பம் வந்தாலும்

கலக்கம் இன்றிச் சந்திதால்

துன்பம் விலகி மறைந்துவிடும்!


இருந்த வளத்தைக் காக்காமல்

இழந்த போது வாடுவதோ?


உடலை வருத்தும் துன்பத்தை

சான்றோர் எண்ணிக் கலங்கமாட்டார்!


இன்பம் கண்டு துள்ளாதோன்

துன்பம் கண்டு துவள்வதில்லை!


துன்பந் தன்னை இன்பமாக

எண்ணி வாழும் மாந்தரோ

பகைவரும் விரும்பும் சிறப்படைவார்!


ஆள்வினை உடைமை--62

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

ஆள்வினை உடைமை--62

--------------------------------------------------------------

விடாமுயற்சியின் எல்லையே வெற்றியாகும்!

----------------------------------------------------------------

முடியா தென்பதே எதுவுமில்லை!

முயன்றால் முடியும் அனைத்துமிங்கே!


செயலைக் குறையுடன் விட்டுவிட்டால்

உலகம் உன்னை விட்டுவிடும்!


பிறருக் குதவும் மனமெல்லாம்

முயற்சிப் பண்பில் தெரிகிறது!


முயற்சி யற்றோன் பிறருக்கு

உதவி செய்வேன் என்றுரைத்தல்

கோழை வாளைச் சுற்றுதல்போல்

எந்தப் பயனும் தருவதில்லை!


தன்னலம் இன்றிச் செயல்முடிப்போன்

சுற்றத்தைக் காக்கும் தூணாவான்!


முயற்சி வளர்க்கும் செல்வத்தை!

தளர்ச்சி விதைக்கும் வறுமையை!


சோம்பல் உள்ளம் இருள்மயந்தான்!

முயற்சி மனமோ ஒளிமயந்தான்!


உறுப்புக் குறையோ பழியல்ல!

முயற்சிக் குறையோ பழியாகும்!


விதியே உதவ மறுத்தாலும்

உழைப்பின் முயற்சி வெற்றிதரும்!


மதுரை பாபாராஜ்

மடி இன்மை---61

 மடி இன்மை---61

------------------------------------------------------------

சோம்பலின்றி வாழ்ந்தால் குடும்பமே முன்னேறும்

----------------------------------------------------------------

சோம்பல் என்பது மாசாகும்

குடும்ப விளக்கை அணைத்துவிடும்!


சோம்பித் திரிவதை விட்டுவிட்டு

முயன்றால் குடும்பம் வளமாகும்!


சோம்பல் தன்மைக் கொண்டவனின்

கண்முன் குடும்பம் அழிந்துவிடும்!


சோம்பல் பெருக்கும் குற்றத்தால்

குடும்பப் பெருமை சீரழியும்!


சோம்பல், மறதி, தூக்கமுடன்

காலம் தாழ்த்தல் இவைநான்கும்

கெடுவார் ஏறும் மரக்கலங்கள்!


செல்வச் சீமான் நட்பெனினும்

சோம்பல் உடையோர் பயனடையார்!


மந்தமதி கொண்ட சோம்பேறி

இகழப் பட்டே தலைகுனிவார்!


சோம்பல் நீக்கி உழைப்பவனால்

குடும்பச் சிறுமை நீங்கிவிடும்!


சோம்பல் இன்றி ஆள்பவனே

உலகைச் சிறப்பாய் ஆள்பவனாம்!


மதுரை பாபாராஜ்


Wednesday, March 25, 2026

ஊக்கம் உடைமை-- 60


திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

ஊக்கம் உடைமை-- 60

---------------------------------------------------------------

சவால்களைச் சமாளிக்க ஊக்கம் அவசியம்

----------------------------------------------------------------

உடையவர் என்றாலே ஊக்கத்தைக் கொண்டவர்தான்!

ஊக்கமற்றோர் எவருமே உடையவர் ஆகமாட்டார்!


ஊக்கமே நிலையான செல்வம்! மற்றவை

நிலையற்ற செல்வமாகும்! அழிந்து மறைந்துவிடும்!


செல்வத்தை இழக்கின்ற நிலையிங்கே வந்தாலும்

ஊக்கத்தைக் கொண்டவர்கள் துளிகூட கலங்கமாட்டார்!


ஊக்கமென்னும் பண்புடைய உள்ளத்தை நாடித்தான்

செல்வங்கள் தேடிவந்தே எந்நாளும் உறவாடும்!


தண்ணீரின் உயரந்தான் மலர்த்தண்டின் நீளமாகும்!

ஊக்கத்தின் அளவேதான் மாந்தரின் உயர்வாகும்!


தன்னிலையே தாழ்ந்தாலும் உள்ளத்தில் கூடுகட்டும்

எண்ணங்கள் என்றென்றும் உயர்ந்தவையாய் இருக்கவேண்டும்!


உடல்முழுதும் அம்புகளா? யானையோ தளர்வதில்லை!

ஊக்கத்தைக் கொண்டவரும் நிலைதாழ்ந்தும் தளரமாட்டார்!


ஊக்கமற்ற மாந்தர்கள் கொடைவள்ளல் என்றதொரு

மதிப்பினை இவ்வுலகில் அடைவதோ அரிதாகும்!


மலைக்கவைக்கும் தோற்றத்துடன் யானை இருந்தாலும்

ஊக்கமுடன் தாக்குகின்ற புலிபாய்ந்தால் அஞ்சிநிற்கும்!


ஊக்கந்தான் உயிரோட்டம்! ஊக்கமற்ற மாந்தர்கள்

மனிதஉரு கொண்டிருக்கும் மரங்கள்தான் வேறில்லை!


மதுரை பாபாராஜ்








ஒற்றாடல் -- 59

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

ஒற்றாடல் -- 59

----------------------------------------------------------------

உளவின் வலிமை அரசின் வலிமை!

----------------------------------------------------------------

ஒற்றர்கள், நீதிநூல்கள் இவையிரண்டைக் கண்ணிரண்டாய்

நேர்மையான ஆட்சியாளர் போற்றித்தான் காக்கவேண்டும்!


எல்லோர்க்கும் எங்கெங்கு என்னென்னே நடக்கிறது

என்றெல்லாம் ஒற்றர்கள் மூலமாக அறிவதைத்தான்

நல்லாட்சி  புரிபவர்கள் கடமையாகச் செய்திடுவார்!


ஒற்றர்கள் மூலமாக நாட்டின் நடப்புகளை

உணராத ஆட்சியாளர் வெற்றிபெற வாய்ப்பில்லை!


வேண்டியவர் வேண்டாதார் பாகுபாடு இல்லாமல்

பகுத்தறிந்து சொல்பவரே நேர்மையான ஒற்றராவார்!


வேடமிட்டுச் சென்றாலும் சந்தேகம் தோன்றாமல்

சிக்கினாலும் அஞ்சாமல் சந்திப்போன் ஒற்றனாவான்!


புகமுடியா இடந்தன்னில் துறவியைப்போல் வேடமிட்டே

புகுந்தேதான் துன்பத்தை எதிர்கொண்டு தளராமல்

கடமையைச் செய்பவனே கலங்காத ஒற்றனாவான்!


ஒருவருக் கொருவர் அறியாமல் மூவரை

அனுப்பித் தரவழைக்கும் செய்தியுடன் ஒப்பிட்டே

மூவரது செய்திகளும் ஒத்திருந்தால் நம்பவேண்டும்!


பிறரிங்கே அறியாத வண்னம் ஒற்றருக்குச்

சிறப்புகள் செய்யவேண்டும்! இல்லையென்றால் இரகசியத்தை

வெளிப்படுத்திச் சொல்லிய நிலைபோல் ஆகிவிடும்!


மதுரை பாபாராஜ்

கண்ணோட்டம் ---58

 திருக்குறள் குழந்தைப் பாடல்

-----------------------------------------------------------

கண்ணோட்டம் ---58

----------------------------------------------------------------

அன்பும் இரக்கமும் அருமைப் பண்புகள்!

----------------------------------------------------------------

அன்புடன் இரக்கமே கண்ணோட்டப் பேரழகு!

அத்தகையப் பண்புகளால் இவ்வுலகம் வாழ்கிறது!


இத்தகையப் பண்புகளோ இல்லாமல் வாழ்பவர்கள்

இவ்வுலக நிலத்திற்குச் சுமையாவார் நாள்தோறும்!


பாடலுக்கு ஒன்றாத பண்ணாலே என்னபயன்?

கண்ணோட்டம் இல்லாத கண்களாலே பயனில்லை!


கண்ணோட்டம் காட்டாத கண்களிங்கே முகந்தன்னில்

இருந்தாலும் எந்தவிதப் பயன்களுமே இல்லையென்போம்!


கண்களுக்கு அணிகலனோ இரக்கமென்னும் பண்பாகும்!

இரக்கமற்ற கண்களெல்லாம் கண்களல்ல புண்கள்தான்!


இரக்கத்தைக் காட்டுகின்ற கண்ணிருந்தும் காட்டாதோர்

மண்மீது எழுதிவைத்த இயங்காத மரம்போல்தான்!


கருணைமனம் கொண்டவரின் கண்கள்தாம் கண்களாகும்!

இப்பண்பு இல்லாதோர் கண்ணற்றோர் எனப்படுவார்!


தன்கடமை தவறாமல் கருணைக்கண் கொண்டவர்க்கே

இவ்வுலகப் பரப்பெல்லாம் உரிமைதான் எனச்சொல்வோம்!


தண்டிக்க வேண்டிய மாந்தரிடம் பரிவுகாட்டி

குற்றத்தைப் பொறுப்பதே பெருந்தன்மைப் பண்பாகும்!


கண்ணோட்டம் உள்ளவர்கள் தம்முடனே நெருக்கமாகப்

பழகுவோர்கள் நஞ்சையே தந்தாலும் ஏற்பார்கள்!


மதுரை பாபாராஜ்


வெருவந்த செய்யாமை---57

 திருக்குறள் மழலைப் பாடல்

------------------------------------------------------

வெருவந்த செய்யாமை---57

---------------------------------------------------------

குற்றத்தைச் செய்வதற்குக் கொடுக்கின்ற தண்டனையால்

மீண்டுமந்தக் குற்றத்தைத் தடுப்பதுதான் நல்லரசு!


கடுமையாகக்  கண்டிப்ப தைப்போலக் கண்டித்து

மென்மையாய்த் தண்டிக்கும் நல்லரசே நீடிக்கும்!


பொதுமக்கள் அச்சத்தில் வருந்துமாறு நடக்கின்ற

கொடுமையான அரசிங்கே விரைவினிலே அழிந்துவிடும்!


கொடுமையான அரசிதுதான் என்றேதான் பொதுமக்கள்

மனம்நொந்தால் எக்கணமும் அவ்வரசு வீழ்ந்துவிடும்!


சந்திக்க வருகின்ற மக்களையோ இழுத்தடிக்கும்

கொடுங்கோலன் செல்வங்கள் பேய்காத்த செல்வந்தான்!


கடுஞ்சொற்கள் கருணையற்ற பார்வையும் கொண்டவனின்

செல்வங்கள் வளராமல் விரைந்தேதான் அழிந்துவிடும்!


அனல்சொற்கள், வரம்புகளை மீறிய தண்டனைகள்

இவையெல்லாம் அரசாங்கம் வலுவிழக்க அரமாகும்!


அமைச்சரைக் கலக்காமல் தன்னலமாய் முடிவெடுக்கும்

அரசெல்லாம் செல்வத்தை இழந்தேதான் தவித்திருக்கும்!


வருமுன்னே காக்காமல் பகைதிரண்டு வந்தபின்பு

அச்சத்தில் நடுங்குபவன் அஞ்சியஞ்சி அழிந்திடுவான்!


கற்காத அறிவற்றோர் துணையாக உள்ளவனோ

பூமிக்குச் சுமையாவான்! அச்சுமைபோல் வேறில்லை!


மதுரை பாபாராஜ்



கொடுங்கோன்மை---56

 திருக்குறள் மழலைப் பாடல்

-------------------------------------------------------

கொடுங்கோன்மை---56

---------------------------------------------------------

மக்களைத் துன்புறுத்திப் பார்க்கின்ற அரசு

கொலைக்குற்றம் செய்வதைக் காட்டிலும் கொடிது!


மக்களிடம் வம்படியாய்ப் பொருள்கொள்ளும் அரசு

வழிப்பறிக் கள்வருக்கு நிகரென்றே சொல்லு!


நன்மையைத் தீமையை எடைபோட்டுப் பார்த்தே

ஆளவேண்டும் இல்லையேல் தானாகக் கவிழும்!


கொடுங்கோலைக் கட்டவிழ்த்தே ஆள்கின்ற ஆட்சி

பொருளையும் மக்களையும் இழந்தேதான் வீழும்!


கொடுமையிலே துடிக்கின்ற பொதுமக்கள் கண்ணீர்

ஆட்சியையே அழிக்கின்ற வலிமையான ஆயுதம்!


நீதிநெறி தவறாதோர் புகழென்றும் நிலைக்கும்!

அப்பண்பைப் புறக்கணித்தால் புகழ்நிலைத்தல் கடினம்!


மழையின்றிப் போவதாலே உண்டாகும் துன்பம்

கருணையற்ற ஆட்சியிலே மக்கள்நிலை ஆகும்!


முறையற்ற ஆட்சியிலே செல்வந்தன் வாழ்க்கை

வறுமையிலே வாழ்வதையும் விஞ்சுகின்ற துயரம்!


முறைதவறி நடத்துகின்ற ஆட்சிதனைப் பார்த்தாலே

மழைமேகம் அஞ்சியே பெய்யாது ஓடும்!


மக்களைக் காக்காத ஆட்சியிலே பசுவின்

பால்வளங்கள் குறைந்துவிடும்! அறநூலைச் சான்றோர்கள்

மறந்தேதான் வாழ்ந்திருப்பார்! இருள்சூழும் நாடு 


மதுரை பாபாராஜ்.




செங்கோன்மை -- 55

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------

செங்கோன்மை -- 55

--------------------------------------------------------------

வேண்டியவர் வேண்டாதோர் என்றேதான் பார்க்காமல்

நடுநிலைமை கொண்டேதான் பழகுவதே நீதியாகும்!


தேன்மழையை நோக்கித்தான் உயிரினங்கள் வாழுமிங்கே!

நல்லாட்சி நோக்கித்தான் குடிமக்கள் வாழ்கின்றார்!


அறவோரின் நூல்களுக்கும் அறப்பணிகள் நடப்பதற்கும்

துணைநின்று போற்றுவது நல்லரசின் கடமையாகும்!


அன்புடனே மக்களைத்தான் அரவணைக்கும் நல்லாட்சி

பண்புகளைப் பின்பற்றி நாடிங்கே நடைபோடும்!


நீதிநெறி தவறாமல் ஆள்கின்ற நாட்டினிலே

பருவமழை பொய்க்காது! விளைச்சலுக்கும் பஞ்சமில்லை!


நல்லரசின் வெற்றிக்கு அரக்கமன ஆயுதமா?

நெறிமனத்துச் செங்கோலா? செங்கோல்தான்! உணர்ந்திடுவாய்!


மக்களைக் காப்பவன்தான் ஆள்பவனாம்! ஆள்பவனைக்

காப்பதோ அறவழியை மறவாத நீதிநெறியாம்!


நீதிநாடி வருவோரைப் பார்க்காத ஆட்சியாளன்,

ஆராய்ந்து பார்க்காமல் நீதிகளை வழங்குபவன்

பகைவர்கள் இன்றியே தானாக அழிந்திடுவான்!


கண்ணிமையாய் மக்களுக்குப் பாதுகப்பாய் விளங்குவதும்

நடுநிலை போற்றித்தான் தண்டனை வழங்குவதும்

பழியன்று! பாவமன்று! நீதிகாக்கும்கடமையாகும்!


கொடியவர்க்குத் தண்டனை கொடுப்பதெல்லாம், பயிர்காக்க

களைகளை நீக்குகின்ற கடமையைப் போன்றதாகும்!


மதுரை பாபாராஜ்





பொச்சாவாமை---54

 திருக்குறள் குழந்தைப் பாடல்

------------------------------------------------------------

பொச்சாவாமை---54

---------------------------------------------------------------

மகிழ்ச்சியில் திளைத்துக் கடமையை மறப்பதோ

கடுஞ்சினம் காட்டிலும் தீமையைத் தந்துவிடும்!


அறிவைக் கெடுக்கும் வறுமையைப் போலவே

மறதியோ ஒருவரின் புகழைக் கெடுத்துவிடும்!


மறதிநிலை கொண்டவர்க்குப் புகழில்லை உலகத்தில்!

கற்றுணர்ந்த நூலோர்க்கும் முடிவான கருத்திதுவே!


அச்சத்தைக் கொண்டவர்க்கோ பாதுகாப்பால் பயனில்லை!

மறதியை உடையவர்க்கோ செல்வத்தால் பயனில்லை!


துன்பங்கள் வரும்முன்னே காப்பாற்ற மறந்தவனோ

வந்தபின் பிழையெண்ணி வாழ்வினிலே வருந்திடுவான்!


மறவாமை வாழ்வினிலே துணையாக அமைந்துவிட்டால்

மனிதருக்கு நன்மையென்று சொல்வதற்கு வேறுண்டோ?


மறவாமை கொண்டேதான் செயல்புரியும் ஒருவருக்கு

முடியாத செயலென்று உலகத்தில் இல்லையே!


உயர்ந்தோர் புகழ்ந்ததைப் பின்பற்றி வாழவேண்டும்!

மறந்தவர்க்கோ ஏழு பிறவியிலும் பயனில்லை!


மகிழ்ச்சியில் திளைத்தேதான் கடமையை மறப்பவர்கள்

மறதியினால் அழிந்தவரை எண்ணித்தான் பார்க்கவேண்டும்!


எண்ணியதைச் செய்வதற்குச் சோர்வின்றி முயன்றிட்டால்

எண்ணியது கைகூடும்! இலக்குகளை அடைந்திடலாம்!


மதுரை பாபாராஜ்



சுற்றந்தழால்---53

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------------

சுற்றந்தழால்---53

----------------------------------------------------------------

இருப்பதை எல்லாம் இழந்தே தவித்தாலும்

பழம்பெரும் தொடர்பைக் கூறுவார் சுற்றத்தார்!


அன்பைப் பொழியும் சுற்றம் அமைந்துவிட்டால்

அதுவே செல்வம் வளரும் நிலைதருமே!


சுற்றத் தாருடன் சேராத வாழ்க்கையோ

கரையிலா குளத்தில் நீர்போல் பயனில்லை!


சுற்றத் தாருடன் சூழ்ந்தே இருப்பதுவோ

குன்றாச் செல்வம் பெற்றதன் பயனாகும்!


ஈகையும் இன்சொல்லும் சுற்றத்தார் போற்றிடவே

பேணும் நற்பண்பால் சுற்றம் சூழ்ந்திருக்கும்!


சினத்தைத் தவிர்த்தும் கொடையில் சிறந்துமிங்கே

வாழ்பவனைப் போலிங்கே சுற்றமுள்ளோன் யாருமில்லை!


இருக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் காகம்போல்

செல்வந்தர் இருந்தால் அவர்செல்வம் பெருகிவரும்!


சமநிலைப் பார்வையில் அனைவரையும் பார்க்காமல்

குணங்களுக் கேற்பப் பழகிடும் மனங்கொண்டால்

சுற்றம் விலகாமல் சூழ்ந்தேதான் வாழ்ந்திருப்பார்!


காரணத்தைச் சொல்லிப் பிரிந்துசென்ற உறவுகளோ

காரணம் நீங்கியதும் மீண்டுமிங்கே சேர்ந்திடுவார்!


மீண்டும் திரும்பிவந்த உறவுகளை அரவணைத்தே

உறவிலே இணைத்துக் காப்பதுதான் நற்பண்பாம்!


மதுரை பாபாராஜ் 




தெரிந்து வினையாடல்--52

 திருக்குறள் குழந்தைப் பாடல்

-------------------------------------------------------------

தெரிந்து வினையாடல்--52

-------------------------------------------------------------

நன்மையைத் தீமையை நன்றாக ஆராய்ந்து

நன்மையை நாடுவோரை செயல்வீரர் எனச்சொல்வார்!


பொருள்வரவைப் பெருக்கித்தான் அதன்வளத்தை உயர்த்தித்தான்

துன்பத்தை நீக்குவோனை செயல்புரியத் தேர்ந்தெடுப்பார்!


அன்புடன் அறிவாற்றல் தெளிவுடன் ஆசையின்றி

வாழ்கின்ற பண்புகளைக் கொண்டவனை நம்புங்கள்!


எப்படித் தானிங்கே தேர்ந்தெடுத்த போதிலுமே

செயல்திறனால் வேறுபடும் மாந்தர்கள் பலருண்டு!


செயல்படும் ஆற்றலுள்ள மாந்தரை விட்டுவிட்டு

மற்றவரைச் செயல்புரிய ஏவுதலைத் தவிர்க்கவேண்டும்!


செயல்புரிவோர் செயல்தன்மை ஆராய்ந்து தெளிந்தேதான்

செயல்செய்யும் காலத்தைப் பொருத்தித்தான் செய்யவேண்டும்!


இச்செயலை இவனிங்கே முடித்திடுவான் என்றாய்ந்து

அச்செயலை அவனிடமே ஒப்படைத்தல் அறிவுடைமை!


செயலுக்குத் தகுதியுள்ளோன் என்றறிந்த பிறகிங்கே

அதைச்செய்ய அப்பொறுப்பை ஒப்படைத்தல் விவேகந்தான்!


கடமையே மூச்சாக வாழ்பவனைத் தவறாக

நினைப்போரை விட்டுத்தான் செல்வங்கள் நீங்கிவிடும்!

உழைப்பவர்கள் மகிழ்ந்திருந்தால் நாடெல்லாம் வளம்பெருகும்!

அவர்களது நலங்காக்க அக்கறையை ஏற்கவேண்டும்!


மதுரை பாபாராஜ்



தெரிந்து தெளிதல்--51

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

தெரிந்து தெளிதல்--51

----------------------------------------------------------

தனிமனித நல்லொழுக்கம் கொண்டவரைத் தேர்ந்தெடுத்துப்

பணிசெய்ய அமர்த்துவதே எப்பொழுதும் நன்றாகும்!


நற்குடியில் பிறந்தவரை, பழிச்செயலை வெறுப்போரை

நம்பித்தான் பொறுப்புகளை ஒப்படைத்தல் நல்லதாகும்!


அறிவார்ந்த நூல்களைக் கற்றவரே ஆனாலும்

அறியாமை இல்லாமல் இருப்பதோ அரிதாகும்!


குணங்களை ஆராய்ந்து குற்றநிலை ஆராய்ந்து

எத்தன்மை அதிகமோ அதைச்சார்ந்தோன் எனக்கருது!


பண்பகமா? இழிவகமா? என்றறிய உரைகல்லாய்

இருப்பதுவோ அவன்செய்யும் செயலன்றி வேறில்லை!


சுற்றத்தை ஒட்டித்தான் வாழாத மாந்தரையோ

நம்பவேண்டாம்! பழிபாவம் செய்வதற்கும் அஞ்சமாட்டார்!


ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரையோ நம்பிவிட்டால்

பரம்பரையே துன்பத்தில் துடிக்கின்ற நிலைவருமே!


எப்படிப் பட்டவர்கள்? ஆராய்ந்து நம்பவேண்டும்!

இல்லையேல் தொல்லைகள் படையெடுத்துத் தேடிவரும்!


கண்டதும் நம்புவது! நம்பியபின் சந்தேகம்!

இரண்டுமே நீங்காத துன்பத்தின் வித்தாகும்!


மதுரை பாபாராஜ்


ராகி கொழுக்கட்டை

 நண்பர் பாலு வீட்டு

ராகி கொழுக்கட்டைக்கு 

வாழ்த்து!


பேரனும் பேத்திகளும் கொண்டுவந்த நற்சுவை 

ராகி கொழுக்கட்டை உண்டோம்! மகிழ்ந்திருந்தோம்!

பாமணக்க வாழ்த்துகிறோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

திருமதி மல்லிகா கஜராஜ்


 திருமதி மல்லிகா கஜராஜ் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்: 26.03.26


இல்லறத்தின் முன்னணிக்குப் பின்னணியில் நாள்தோறும்

நல்லுழைப்பைத் தந்துதவும்

மல்லிகா வாழியவே!

எல்லோரும் ஒற்றுமையாய் வாழ வழிவகுக்கும்

நல்லமனம் வாழிய நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

இடன்அறிதல் ---50

 ------------------------------------------------------

இடன்அறிதல் ---50

----------------------------------------------------------------

பகைப்புலத்தை வெல்கின்ற வாய்ப்புவரும் மட்டும்

செயற்களத்தில் இறங்குவது நல்லதல்ல இங்கே!


பகவரையும் எளிதாக எண்ணுவதும் தவறு!


மனவலிமை உள்ளவர்க்கு பாதுகாப்பும் இங்கே

துணையாக அமைந்துவிட்டால் பலநன்மை சேரும்!


சந்திக்கும் களந்தன்னைத் தேர்ந்தெடுத்துத் தன்னைப்

பாதுகாத்து மோதினால்தான் வலிமையற்ற மனிதனும்

வெற்றிவாகை சூடுவான் தன்திறமை காட்டி!


தக்கதொரு இடமறிந்து தாக்குகின்ற போது

வெல்லுகின்ற பகைப்புலமும் செயலிழந்து போகும்!


தண்ணீரில் பிறஉயிரை முதலைதான் கொல்லும்!

தரைமீது முதலையைப் பிறஉயிர்கள் கொல்லும்!


தரைமீது ஓடுகின்ற பிரமாண்டத் தேரோ

கடல்மீது அரையடியும் ஓடுவது கடினம்!


கடலிலே மிதக்கின்ற கப்பல்கள் எல்லாம்

தரைமீது ஓடத்தான் தத்தளிக்கும் பாராய்!


இடமறிந்து செய்கின்ற செயல்களுக்கு எல்லாம்

அஞ்சாமை துணைபோதும் வேறுதுணை வேண்டாம்!


சிறுபடைகள் கொண்டவனும் இடமறிந்து தொடுத்தால்

பெரும்படைகள் கொண்டவனும் வெல்வதுவோ கடினம்!


பாதுகாப்பின் அம்சங்கள் இல்லாத போதும்

பகைவரிடம் சென்றேதான் முறியடித்தல் கடினம்!


பாகனையும் பகைவனையும் பந்தாடும் யானை

சேற்றினிலே சிக்கிவிட்டால் நரிகூடக் கொல்லும்!


மதுரை பாபாராஜ்



காலம் அறிதல் --49

 ----------------------------------------------------

காலம் அறிதல் --49

-------------------------------------------------------

பகற்பொழுதில் கோட்டானை வென்றுவிடும் காகம்!

பகைப்புலத்தை வெல்வதற்குப் பார்க்கவேண்டும் நேரம்!


காலத்திற் கேற்றபடி செயல்புரியும் ஆற்றல்

செல்வத்தை நிலையாகக் கட்டுகின்ற கயிறாம்!


செயல்முடிக்கத் தந்திரமும் ஆற்றலுடன் நேரம்

ஒருங்கிணைந்தால் முடியாத செயலிங்கே உண்டோ?


இடம்பொருள் ஏவலையே அறிந்துசெயல் முடித்தால்

உலகத்தை எளிதாக வசமாக்க முடியும்!


ஊக்கத்தைக் கொண்டவர்கள் காத்திருக்கும் கோலம்

பாய்வதற்குப் பின்வாங்கும் கிடாநிலை ஆகும்!


பகைவரிங்கே சீறிவந்தால் பதறாமல் நின்றே

இடங்காலம் பார்த்தேதான் தாக்குவார்கள் வென்று!


காலநேரம் பார்த்தேதான் காத்திருக்கும் கொக்கு!

இரையங்கே துள்ளிவரும் பிடித்துவிடும் கவ்வி!

நம்முடைய செயல்களையும் இப்படித்தான் நாமும்

காத்திருந்து உரியநேரம் செய்யவேண்டும் இங்கு.


தெரிந்து செயல்வகை--47

 ------------------------------------------------------

தெரிந்து செயல்வகை--47

-------------------------------------------------------------

நன்மை தீமையை எடைபோட்டே

செயலைச் செய்தல் முறையாகும்!


செய்வதைத் திருந்தச் செய்பவரின்

துணையோ இங்கே இருந்துவிட்டால்

முடியாச் செயலென ஒன்றில்லை!


மலைபோல் லாபம் வருமென்றே

முதலை இழக்கும் செயல்தன்னை

அறிவுடை யோர்கள் செய்யமாட்டார்!


களங்கம் தன்னை ஏற்படுத்தும்

செயலில் எவரும் இறங்கமாட்டார்!


பகைவர் நிலையை கணிக்காமல்

செய்யும் செயல்கள் பகைவருக்கே

சாதக மாக மாறிவிடும்!


தவிர்க்கும் செயலைச் செய்வதாலும்

செய்யும் செயலைத் தவிர்ப்பதாலும்

கேடுகள் தோன்றி துன்புறுத்தும்!


சிந்தித்துச் செய்தல் அறிவுடைமை!

செய்தபின் சிந்தித்தல் அறிவின்மை!


செய்யும் முறையை அறியாமல்

செயலைச் செய்தால் எத்தனைபேர்

துணயாய் இருந்தும் வீணாகும்!


பண்பை அறிந்து நல்லதைச்செய்!

அறியாமல் செய்தால் நம்மையே

திருப்பித் தாக்கும் கணையாகும்!


தகுதிக்கு மீறிய செயல்களையோ

செய்தல் இகழ்ச்சிக் காளாக்கும்!

இகழா வண்ணம் உகந்ததையே

செய்யும் பண்பே உயர்வாகும்!


சிற்றினம் சேராமை--46

 --------------------------------------------------------

சிற்றினம் சேராமை--46

--------------------------------------------------------------

சிற்றினம் கண்டே ஒதுங்கிடுவார்

பெருமை கொண்ட பெரியோர்கள்!

சிற்றின நட்பில் திளைப்பவர்கள்

அற்பக் குணமுள்ள இழிகுலத்தார்!

நிலத்தின் இயல்பையே நீரேற்கும்!

தீயோர் குணத்தையே அறிவேற்கும்!

மனதின் இயல்பு அறிவாலே!

குணத்தின் இயல்பு இனத்தாலே!

மனதின் அறிவாய்த் தோன்றினாலும்

இனத்தில் இருந்தே தோன்றியதாம்!

தூய மனத்தோர் செய்கின்ற

செயல்கள் எல்லாம் நன்மைதான்!

தூய இனமாய் இருந்துவிட்டால்

தீய செயல்கள் தோன்றாது!

மனதின் நன்மை ஆக்கத்தை

உயிர்களுக் கெல்லாம் கொடுத்துதவும்!

இனத்தின் நன்மை புகழ்தருமே!

இயல்பாய் மனநலம் கொண்டவர்க்கு

சான்றோர் உறவு காப்பாகும்!

மனதின் நலத்தால் மறுபிறவி

இன்பம் கிடைக்கும் ஒருவருக்கு!

இனத்தின் நலத்தால் அவ்வின்பம்

மேலும் வலிமை பெற்றுவிடும்!

நல்ல இனமே பெருந்துணையாம்!

தீய இனமோ பெருந்துயராம்!

மதுரை பாபாராஜ்


பெரியாரைத் துணைக்கோடல் ---45

 -------------------------------------------------------------

பெரியாரைத் துணைக்கோடல் ---45

---------------------------------------------------------------

அறத்தை உணர்ந்து வாழ்கின்ற

சான்றோர் நட்பை அடைகின்ற

வழிகளை அறிந்து வாழவேண்டும்!

துன்பப் பிடியோ நெருங்காமல்

காக்கும் பெரியோரைத் துணைகொள்வோம்!

மூத்தோர் நட்பை உருவாக்கி

திளைப்பது நமது பேறாகும்!

அறிவிற் சிறந்த பெரியோரின்

உறவே உலகில் வலிமையாம்!

சான்றோர் உலகின் கண்ணாவார்!

சான்றோர் குழுவில் இருப்போர்க்கு

பகைமைத் துன்பம் ஏதுமில்லை!

தவறைச் சொல்லிக் கண்டிக்கும்

பெரியோர் துணையோ இருந்துவிட்டால்

அவரைக் கெடுக்க முடியாது!

தவறைக்  கண்டும் கண்டிக்கத் 

தயங்கும் பெரியோர் அமைந்துவிட்டால்

பகைவர் இன்றியே தான்கெடுவார்!

முதலே இல்லா வாணிகத்தில்

முனையின் அளவும் லாபமில்லை!

உரிய நேரத்தில் காக்கின்ற

பெரியோர் இன்றிப் பயனில்லை!


மதுரை பாபாராஜ்



குற்றம் கடிதல் -- 44

 ------------------------------------------------------

குற்றம் கடிதல் -- 44

-----------------------------------------------------------

ஆணவம் கோபம் வெறியென்னும்

ஈனக் குற்றம் இல்லாதோர்

உயர்வை அனைவரும் விரும்பிடுவார்!


பிறருக் கீதல் இல்லாமை

மாட்சிமை அற்ற தன்மானம்

தீயவை கண்டே மகிழ்வதெல்லாம்

குற்றம் என்பார் சான்றோர்கள்!


பழிகளுக் கஞ்சும் பெரியோர்கள்

குற்றம் தினையள வென்றாலும்

பனையள வாகக் கருதிடுவார்!


வருமுன் காக்கத் தவறிவிட்டால்

நெருப்பின் முன்னே வைக்கோல்போல்

வாழ்க்கை எரிந்தே அழிந்துவிடும்!


தனது குற்றம் நீக்கிவிட்டு

பிறரின் குற்றம் உரைப்பவர்கள்

வாழ்வில் குற்றம் நேராது!


நற்பணி தன்னைப் புறக்கணித்து

சேர்க்கும் செல்வம் அழிந்துவிடும்!


தன்னைப் புகழும் தற்பெருமை

தன்னலச் சூறை யாகிவிடும்!


நன்மை இல்லாச் செயல்களையே

துரும்பள வெனினும் நினைக்காதே!


தீட்டும் திட்டம் பகைவருக்குத்

தெரியா மல்தான் தீட்டவேண்டும்!

பகைவரின் சூழ்ச்சி தோல்வியுறும்!


மதுரை பாபாராஜ்




அறிவுடைமை -- 43

 அறிவுடைமை -- 43

----------------------------------------------------------------

அறிவே காக்கும் ஆயுதமாம்!

பகையும் நடுங்கும் கோட்டையாம்!


அலையும் மனதை நல்வழியில்

போகச் செய்யும் அறிவொன்றே!


கருத்தைச் சொல்வோர் யாரெனினும்

மெய்ப்பொருள் காண்பதே அறிவாகும்!


மற்றவர் இங்கே தெளிவாகப்

புரியும் வண்ணம் சொல்லவேண்டும்!


அதிலே உள்ள நுண்பொருளை

ஆய்ந்தே தெளிவது அறிவாகும்!


உயர்ந்தோர் நட்பை வளர்ப்பதே

உலகம் போற்றும் அறிவாகும்!


விரிதல் சுருங்கல் இல்லாமல்

சமநிலை காண்பது அறிவாகும்!


சான்றோர் வழியைப் பின்பற்றி

வாழ்வதே இங்கே அறிவுடைமை!


நாளை வருவதை அறிந்தவரே

அறிவுடை யோராய்த் திகழ்ந்திடுவார்!


அறிய முடியா மாந்தர்கள்

அறிவில் லாதோர் ஆவார்கள்!


அஞ்சுவதற் கஞ்சுதல் அறிவுடைமை!

அஞ்ச மறுப்பதோ அறியாமை!


வருமுன் காக்கும் அறிவுடையோர்

நடுங்கும் துன்பம் எதுவுமில்லை!


எல்லாச் செல்வம் இருந்தாலும்

அறிவில் லாதோர் வறியவர்கள்!


அறிவுச் செல்வம் ஒன்றுடையோர்

எல்லாச் செல்வம் கொண்டவராம்!



கேள்வி -- 42

 --------------------------------------------------------

கேள்வி -- 42

---------------------------------------------------------------

கல்விகேள்வி கேட்டுச் செவிபெறும் செல்வந்தான்

செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வமாம்!


கேட்கும் விருந்து செவிக்கில்லா நேரத்தில்

தாக்கும் பசிதணிய கொஞ்சம் உணவிங்கே

வயிற்றுக் கிங்கே தந்தே மகிழ்ந்திடலாம்!


கேள்வி உணவை உடையோர் மண்ணகத்தில்

வாழ்ந்தாலும் நெஞ்சே! அவியுணவு உண்கின்ற

விண்ணகத் தேவருக் கிணையாவார் பண்பகமாய்!


கற்கவில்லை என்றாலும் கற்றறிந்த அறிஞரிடம்

கேட்டறிந்து வாழவேண்டும்! கேட்டறிதல் ஊன்றுகோலாய்

துன்பமான நேரத்தில் துணைபுரியும் வாழ்வினிலே!


ஒழுக்கமுடன் வாழ்பவரின் சொற்களோ நம்மைத்தான்

வழுக்கும் தரையில் விழாமல் காப்பாற்றும்!

ஊன்றுகோல் போல சமயத்தில் துணைபுரியும்!


அளவில் சிறிதெனினும் நற்சொற்கள் கேட்பதனால்

வாழ்க்கை வளமாகும்! நிறைவுக்கே வழிகாட்டும்!


கேள்விஞானம் கொண்டவர்கள் தவறாகப் பொருளுணர்ந்தால்

நிதானத்தை விட்டுத்தான் இழிந்தசொல் கூறமாட்டார்!


சான்றோரின் நல்லுரையைக் கேட்க மறுப்பதுவோ

ஊன்செவி கேளாக் காதுகள்போல் வீணாகும்!


கேள்வி அறிவுடையோர் இன்றி மற்றவர்கள்

வாயிருந்து பணிவான சொற்களோ உதிராது!


செவிச்சுவை உணராமல் வாய்ச்சுவை அறிந்தவர்கள்

வாழ்ந்தாலும்  இறந்தாலும் வேறுபாடே கிடையாது.




கல்லாமை -- 41

 கல்லாமை -- 41

----------------------------------------------------------------

நூல்களையே கற்காமல் கற்றறிந்தோர் அவையினிலே

கல்லாதோர் பேசுவது ஆடுகளம் இல்லாமல்

சூதாட்டம் ஆடுகின்ற பேராசை போலத்தான்!

கற்றவர்கள் முன்னிங்கே கல்லாதோர் பேசுவது

பண்பற்ற நெஞ்சத்தில் வேடமிடும் பண்பாகும்!

படித்தவர்கள் முன்னிலையில் பேசாமல் இருப்பவர்கள்

படிக்காதோர் என்றாலும் உலகத்தில் நல்லவரே!

கல்லாதோர் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும்

கற்றறிந்தோர் முன்வந்து ஏற்பதற்கு மறுத்திடுவார்!

நடையுடை பாவனைகள் கற்றவர்போல் இருந்தாலும் 

கற்ரவர்கள் முன்னாலே பேசுகின்ற நேரத்தில்

வேடங்கள் கலைந்தேதான் உண்மையைக் காட்டிவிடும்!

கல்லாதோர் உயிரோடு இருக்கின்றார் என்பதன்றி

பயனின்றி வாழ்வதாலே களர்நிலம் போலாவார்!

அறிவற்ற அசடனின் அழகெல்லாம் கவர்ச்சியான

மண்பொம்மை அழகென்றே எல்லோரும் கருதிடுவார்!

கற்றவரின் வறுமையைக் காட்டிலும் துன்பத்தைக்

கல்லாதோர் வைத்திருக்கும் செல்வங்கள் தந்துவிடும்!


மதுரை பாபாராஜ்





கல்வி--40

 ------------------------------------------------

     கல்வி--40

------------------------------------------------------------

கற்பதை முழுமையாய்க் கற்கவேண்டும்!

கற்றதற் கேற்ப நடக்கவேண்டும்!


எண்ணும் எழுத்தும் படிப்பாகும்!

வாழ்க்கைப் பாதையின் கண்களாகும்!


கற்றவர் முகத்தில் இருப்பதைத்தான்

கண்கள் என்றே சொல்வார்கள்!


கல்லா மாந்தர் கண்ணிரண்டும்

கண்கள் அல்ல புண்கள்தான்!


பண்புடன் பேசி மகிழ்ந்துவிட்டு

இங்கே பிரியும் நேரத்தில்

மீண்டும் என்று சந்திப்போம்

என்றே சான்றோர் ஏங்கவைப்பார்!


செல்வம் உள்ளவர் முன்னாலே

வறியவர் நிற்கும் கோலம்போல்

படித்தவர் முன்னே படிக்காதோர்

தாழ்ந்தவ ராக நின்றிருப்பார்!


கேணியைத் தோண்டு நீரூறும்!

படிக்கப் படிக்க அறிவூறும்!


கற்றவ ருக்கோ இவ்வுலகம்

சுற்றம் போல உறவாகும்!


இதனால் ஒருவர் இறுதிமட்டும்

ஏனோ படிக்கக் கூடாது?


இந்தப் பிறவியில் படித்துவிட்டால்

ஏழு பிறவிக் கரணாகும்!

மக்கள் திளைக்கும் மகிழ்ச்சிக்கு

காரண மான கல்வியினை

மேலும் சான்றோர் கற்பதற்கு

விரும்பித் தானே வாழ்வார்கள்!

கல்விச் செல்வம்  நிலையாகும்!

மற்றவை எல்லாம் நிலையல்ல!

-------------------------------------------------------------



இறைமாட்சி--39

 ---------------------------------------------------

  இறைமாட்சி--39             பொருட்பால்--

------------------------------------------------------------

அன்பே படையாம் அறிவே அமைச்சாம்

 நட்பே வளமாம் இவைகளை இங்கே

அரணெனக் கொண்டால் நிமிர்ந்தே வாழலாம்!


எண்ணித் துணிதல் ஏழைக்கு கொடுத்தல்

வருமுன் காத்தல் ஊக்கமுடன் வாழ்தல்

வாழ்வின் அருமைப் பண்புகளாம்!


சோம்பல் ஒழித்தல் கல்வியில் செம்மை

உள்ளத் துணிவு இவைகள் மூன்றுமே

காக்கும் படைகள் என்றே அறிந்திடு!


அறநெறி போற்றி குற்றந் தடுத்து

வீரமுடன் வாழ்தல் வாழ்க்கைக் கழகாகும்!


வரவைப் பெருக்கி வந்ததைக் காத்து

தேவைக் கேற்ப பொருள்களை வாங்கி

வாழ்வை அமைத்தல் அருமை இல்லறமாம்!


எளிமை இனிமை எண்ணத் தூய்மை

 நல்மனம் கொண்டால் உலகம் புகழும்!

இன்சொல் பேசி கனிவுடன் ஈந்தால்

போற்றிப் புகழும் உலகம் என்றும்!

தன்னலம் இன்றி நடுநிலை காத்தால்

 மாந்தருள் மாணிக்கம் என்றே புகழ்வார்!


கடுஞ்சொல் தாக்கி உலுக்கி னாலும்

 பொறுமை காத்தால் வாழ்வே தழைக்கும்!

அன்பு, கருணை, நீதி, அரவணைப்பு

வாழ்க்கைப் பாதையின் ஒளிதான் அவைகள்!


மதுரை பாபாராஜ்


ஊழ்--38

 அறத்துப்பால் நிறைவு!

----------------------------------------------------------

ஊழ்--38

------------------------------------------------------

வளத்தை வளர்க்கும் உழைப்பிங்கே!

வளத்தை அழிக்கும் சோம்பல்தான்!

அறிவைக் கெடுப்பது ஊழ்வினைதான்!

அதனால் பொருளை இழந்திடுவார்!

அறிவைக் கொடுப்பதும் ஊழ்வினையே!

அதனால் பொருள்களைச் சேர்த்திடுவார்!

நூல்களை நுட்பமாய்க் கற்றாலும்

ஊழ்வினைத் தூண்டி முன்பிருந்த

அறியா மைக்கே கொடிபிடிக்கும்!


செல்வம் படைத்தவர் இருக்கின்றார்!

அறிவு படைத்தவர் இருக்கின்றார்!


இதற்குக் காரணம் ஊழ்தானே!

ஊழின் ஆட்டம் இதுதானே!


நல்லவை தீயவை ஆகலாம்!

தீயவை நல்லவை ஆகலாம்!

முடிவுகள் இங்கே முரணாகும்

இதற்குக் காரணம் ஊழாகும்!


நமக்கே உரிய செல்வங்கள்

என்றும் நம்முடன் தங்கிவிடும்!

நமக்கில் லாத செல்வங்கள்

நம்மை விட்டே நீங்கிவிடும்!


கோடிச் செல்வம் இருந்தாலும்

விதிஇருந் தால்தான் அனுபவிப்போம்!

துன்பம் வந்தே துளைத்தெடுத்தால்

ஏழையும் நாடுவான் துறவறத்தை!


நல்லவை நடந்தால் துள்ளுவதும்

தீயவை நடந்தால் துவள்வதுவும்

கொள்ளும் மனநிலை தவறாகும்                                                                                                    சமநிலை ஏற்கக் கற்றுக்கொள்!

விதியை விலக்க முடியாது!

விதியே வாழ்க்கை மறவாதே!


அவா அறுத்தல்--37

 -------------------------------------------------------

அவா அறுத்தல்--37 

------------------------------------------------------------

பிறவித் துன்பம் வருவதற்கு

ஆசை தானே வித்தாகும்!


பிறவா நிலையை நாம்காண

பொருள்மேல் பற்றை விடவேண்டும்!


ஆசை இன்றி வாழ்கின்ற

பொன்மனம் ஒன்றே நற்செல்வம்!


அதற்கு நிகரோ இவ்வுலகில்

எந்தச் செல்வமும் கிடையாது!


ஆசை இல்லா நிலையொன்றே

தூய்மை போற்றும் நிலையாகும்!


வாய்மை பேசும் ஒழுக்கத்தால்

தூய்மை நிலையை அடைந்திடலாம்!


ஆசையை நீக்கிய மாந்தரைத்தான்

பற்றே இல்லா மாந்தரென்பார்!


ஆசை கொண்டே வாழ்பவரை

பற்றற் றோரெனச் சொல்வதில்லை!


வஞ்சனை செய்யத் தூண்டுவது

நெஞ்சில் படரும் ஆசைதான்!


ஆசைப் படுவதற் கஞ்சுவதே

அகிலம் போற்றும் பண்பாகும்!


ஆசையை நீக்கு நீயிங்கே

விரும்பும் வாழ்க்கை கைகூடும்!


ஆசைத் துன்பம் பெருந்துன்பம்!

ஆசையை விட்டால் பேரின்பம்!


அடங்கா ஆசையை அடக்கிவிடு!

நீங்கா இன்ப வாழ்வமையும்!


மதுரை பாபாராஜ்





மெய்யுணர்தல்--36

 ----------------------------------------------------------

மெய்யுணர்தல்--36  

-----------------------------------------------------------

பொய்யை மெய்யாய் நினைக்கின்ற

மயக்கம் விதைப்பது துன்பந்தான்!


மயக்கம் தெளிந்து உணர்ந்துவிட்டால்

துன்பம் விலகி இன்புறுவார்!


உண்மைப் பொருளை அறிந்தவர்க்கு

விண்ணகம் அருகில் இருக்கிறது!


புலன்களை அடக்கி வாழ்ந்தாலும்

மெய்யுணர் வற்றோர் வீணர்தான்!


பொருளின் தன்மை எதுவெனினும்

உண்மை அறிதல் அறிவுடைமை!


மெய்ய்ப்பொருள் உணரக் கற்றவர்கள்

பிறவா நிலைக்கே செயல்படுவார்!


மெய்ப்பொருள் தன்னை உணர்ந்தவர்க்கு

மீண்டும் பிறவி இருக்காது!


பிறவித் துன்பம் அடைவதற்குக் 

காரணம் இங்கே அறியாமை!

அதனை நீக்கும் செம்பொருளை

உணர்ந்து தெரிவது மெய்ப்பொருளாம்!


உணர்ந்து திளைக்கும் சான்றோரை

துன்பம் என்றும் துளைக்காது!


ஆசை கோபம் அறியாமை 

நீக்கி வாழ்ந்தால் இன்னல்கள்

என்றும் நம்மைத் தீண்டாது! 



துறவு--35

 ---------------------------------------------------

துறவு--35  

-----------------------------------------------------

ஆசை கொண்ட பொருள்மீது

ஆசையை விட்டால் அப்பொருளால்

என்றும் இங்கே துன்பமில்லை!


பொருள்கள் மீது வைத்துள்ள

ஆசையை நீக்கினால் இன்பந்தான்!


ஆசையைத் தூண்டும் ஐம்புலனை

அடக்கி வாழக் கற்றுக்கொள்!


பற்றற்ற வாழ்வே தவவாழ்வாம்!

பற்று படர்ந்தால் மயங்கிடுவோம்!


பிறப்பை வெறுக்கும் மாந்தருக்கு

மேனிச் சுமையே அதிகந்தான்!

ஆசைச் சுமைகள் வேறேனோ?


செருக்கை ஒழிக்கும் நிலையெடுத்தால்

தேவரும் காணா விண்ணுலகைக்

காண்பார் அந்தச் சான்றோர்கள்!


காற்றுடன் செல்லும் சருகைப்போல்

ஆசையின் பின்னால் நாம்சென்றால்

துன்பம் நம்மைத் தழுவிடுமே!


ஆசையை விட்டவர் ஞானியாவார்!

மற்றவர் பிறவி வலைக்குள்ளே

சிக்கித் தவிக்கும் மனிதர்தான்!


ஆசையை விட்டால் இப்பிறவித்

துயரம் நீங்க வழியுண்டு!

இல்லை என்றால் அத்துயரம்

என்றும் தொடரும் தொடர்கதைதான்!


ஆசை யற்ற இறைவன்மேல்

ஆசை கொள்வ தென்பதுவோ

நமது ஆசையை விடுவதற்கே!

துறவற நிலையை அடைவதற்கே!


நிலையாமை--34

 --------------------------------------------------------

நிலையாமை--34  

----------------------------------------------------------

நிலையே இல்லா வாழ்க்கையை

நிலையென் றெண்ணுதல் அறிவின்மை!


அரங்கில் கூடிக் கலைவதுபோல்

செல்வம் சேரும் நீங்கிவிடும்!


நிலையே இல்லாச் செல்வத்தைப்

பெற்றவர் நிலைத்த புகழ்நிலைக்கும்

அறச்செயல் தன்னைச் செய்யவேண்டும்!


ஒருநாள் என்னும் சிறுபொழுதோ

உடலின் உயிரைப் பிரித்தறுக்கும்

வாளைப் போன்ற ஆயுதந்தான்!


நாவை அடைத்து விக்கல்கள்

சாவைத் தருமுன் அறச்செயலை

நாளும் செய்தல் சிறப்பாகும்!


நேற்று இருந்தவர் இன்றில்லை

நிலையைக் கொண்ட வாழ்க்கையில்

நாளை இருப்போர் யாரிங்கே?

அறியா மக்கள் அறியாமை

கோட்டை கட்டும் மனதினிலே!


கூட்டில் முட்டை தனித்திருக்க

பறந்து சென்ற பறவையைப்போல்

உடலில் உயிரின் உறவாகும்!


தூங்கும் நிலையே சாவாகும்!

தூங்கி விழித்தல் பிறப்பாகும்!


உடலில் அலையும் உயிருக்கோ

இடமே இல்லையோ நிரந்தரமாய்?


மதுரை பாபாராஜ்


கொல்லாமை-33

 --------------------------------------------------

கொல்லாமை-33  

-------------------------------------------------------

உயிர்க்கொல் லாமை அறச்செயலாம்

உயிர்க்கொலைப் பாவச் செயலாகும்!


நீதி நெறியே பகிர்ந்துண்ணல்!

அறங்களில் அதுவே முதன்மையாம்!


அறங்களில் சிறந்தது கொல்லாமை!

அடுத்தது இங்கே பொய்யாமை!


வாழ்வைக் கண்டு நடுங்கியேதான்

துறவறம் ஏற்றோர் கோழைதான்

இல்லறக் களத்தில் கொல்லாமை 

போற்றும் மாந்தர் வீரர்தான்!


இப்படிப் பட்ட நல்லவரைச்

சாவும் நெருங்கத் தயங்கிடுமே!


தனது உயிரை இழந்தாலும்

மற்றோர் உயிரை அகற்றுவதை 

இங்கே என்றும் செய்யவேண்டாம்!


கொலையைச் செய்வதால் பலவளங்கள்

கூடிக் குலவி வந்தாலும்

நேர்மை தவறிய பயன்களையோ

இழிவாய்க் கருதுதுவர் சான்றோர்கள்!


கொலையைத் தொழிலாய் ஏற்றவர்கள்

இழிந்த நீசப் பிறவிகளாம்!


நோய்கள் மொய்க்க வறுமையுடன்

இந்தப் பிறவியில் வாடுபவர்

சென்ற பிறவியில் கொலைக்குற்றம்

சுமந்தோர் என்றே கருதவேண்டும்!


மதுரை பாபாராஜ்

இன்னாசெய்யாமை-32

 ---------------------------------------------------------

இன்னாசெய்யாமை-32  

-------------------------------------------------------------

மலைபோல் செல்வம் கிடைத்தாலும்

பிறர்க்குத் துன்பம் செய்யாத

மனமே சான்றோர்க் கழகாகும்!


சினந்தே துன்பம் தந்தாலும்

திருப்பித் துன்பம் செய்யாமல்

இருப்பதே நல்ல நெறியாகும்!


தீமை செய்யா நல்லவர்க்குத்

தீங்கைச் செய்வது நல்லதல்ல!


பழிக்குப் பழியாய் நடந்தாலோ

நல்லவ ருக்கும் துன்பந்தான்!


தீமை செய்த மாந்தருக்கு

நன்மை செய்தல் தண்டனையாம்!


ஏனைய உயிர்கள் துன்பத்தை

தனது துன்பம் எனக்கருதி

நீக்கா விட்டால் அறிவிருந்தும்

இல்லா தவராய்க் கருதிடுவார்!


தனக்குத் துன்பம் எனத்தெரிந்தால்

பிறர்க்கு அதையே செய்யாதே!


நெல்முனை அளவே என்றெண்ணி

தீமையைச் செய்யா நிலையொன்றே

பண்பை உயர்த்தும் செயலாகும்!


முற்பகல் தன்னில் மற்றவர்க்குத்

துன்பம் செய்தால் செய்தவர்க்குப்

பிற்பகல் துன்பம் வந்துவிடும்!


துன்பம் செய்தால் துன்பமெல்லாம்

செய்தவ ரையே சென்றடையும்!

தனக்குத் தீமையை விரும்பாதோர்

பிறருக்குச் செய்தல் நல்லதல்ல!


வெகுளாமை--31

 --------------------------------------------------

வெகுளாமை--31  

-------------------------------------------------------

கோபம் பலிக்கும் இடந்தன்னில்

காப்போன் தானே சினம்காப்போன்!


செல்லாத இடத்தில் கோபத்தைக்

காத்தா லென்ன? சினந்தென்ன?


எளியா ரிடத்தில் சினங்கொண்டால்

அதுபோல் தீமை வேறில்லை!


சினத்தால் விளையும் தீமைதான்!

சினத்தை மறத்தல் நன்மைதான்!


முகத்தின் சிரிப்பை, சித்திரத்தை

அழிக்கும் பகையோ கோபந்தான்!


உன்னைக் காக்க சினமடக்கு!

காக்க மறுத்தால் உனையழிக்கும்!


சினமோ நெருப்பாய் மாறிவிடும்!

காக்கும் உறவை அழித்துவிடும்!


நிலத்தில் அடித்தால் கைவலிக்கும்!

சினத்தில் திளைத்தால் துன்புறுவான்!


அனலைப் போன்ற துன்பத்தை

ஒருவன் நமக்குச் செய்தாலும்

புனலாய் மாறி சினம்தவிர்த்தால்

நிம்மதி யாக வாழலாம்!

மனதால் சினத்தைப் புறக்கணித்தால்

நல்லவை எல்லாம் கைகூடும்!


சினமுடை யோர்கள் இறந்தவராம்

சினத்தைத் துறந்தோர் துறவிகளாம்!


மதுரை பாபாராஜ்


வாய்மை-- 30

 ---------------------------------------------------

வாய்மை-- 30  

-------------------------------------------------------+

எள்முனை யளவும் பொய்யற்ற

சொல்லைப் பேசுதல் வாய்மையாம்!

நற்பயன் இங்கே கிடைக்குமென்றால்

பொய்மையும் வாய்மை யாகிவிடும்!

மனதை மீறிப் பொய்சொன்னால்

மனமே சுட்டுப் பொசுக்கிவிடும்!

பொய்யை எண்ணா மனங்கொண்டோர்

நல்லோர் மனதில் வாழ்ந்திருப்பார்!

சொல்லும் செயலும் உண்மையானால்

தானம் தவத்தினும் மேலாகும்!

பொய்சொல் லாததே அறமாகும்!

வேறொரு அறச்செயல் தேவையில்லை!

குளித்தால் கிடைக்கும் புறத்தூய்மை!

வாய்மை தருமே அகத்தூய்மை!

ஒளிதரும் விளக்குகள் விளக்கல்ல!

வாய்மைப் பண்பே ஒளிவிளக்காம்!

அறிந்து உணர்ந்த நூலெல்லாம்

அறமெனச் சொல்வது வாய்மையைத்தான்!

பொய்மை என்றும் தோற்றுவிடும்!

வாய்மை ஒன்றே வென்றுவிடும்!


மதுரை பாபாராஜ்



கள்ளாமை--29

 -------------------------------------------------------

கள்ளாமை--29

--------------------------------------------------------------

தன்னை மற்றவர் இகழாமல்

வாழத் துடிக்கும் நல்லவர்கள்

மாற்றார் பொருளைத் திருடுகின்ற

எண்ணம் இன்றி வாழவேண்டும்!


அடுத்தவர் பொருளைத் திருடுகின்ற

எண்ணம் தீதின் நிழலாகும்!


திருட்டுச் செல்வம் கானல்நீர்!

உள்ளதும் அழிந்து மறைந்துவிடும்!


திருடிப் பிழைக்கும் வாழ்க்கையிலே

துன்பம் கொடிபோல் படர்ந்துவரும்!


பொருளைத் திருட நேரத்தைப்

பார்த்தே நிற்பவன் எண்ணத்தில்

அன்பும் அருளும் இருக்காது!


திருட்டுத் தனத்தால் வாழ்பவர்கள்

பேரா சையால் அழிந்திடுவார்!

அளவை அறிந்து வாழ்பவர்கள்

களவுத் தொழிலே செய்யமாட்டார்!


நேர்மை யாளர் நெஞ்சத்தில்

அறத்தின் ஆட்சி நிலைத்திருக்கும்!


பொய்மை, திருட்டில் வாழ்பவர்கள்

நெஞ்சில் வஞ்சகம் குடியிருக்கும்!


களவுத் தொழிலைச் செய்பவர்கள்

குற்றச் செருக்கில் அழிவார்கள்!


களவுத் தொழிலால் பழிபெருகும்!

செய்யாமல் வாழ்ந்தால் புகழ்பெருகும்!


மதுரை பாபாராஜ்



கூடா ஒழுக்கம் --28

 ----------------------------------------------------

கூடா ஒழுக்கம் --28

--------------------------------------------------------

நல்லொழுக்க வேடமிட்டு வல்லூறாய் வாழ்பவரை

உடலுக்குள் உலவுகின்ற ஐம்பூதம் கூடிநின்று

எள்ளிநகை யாடிநிற்கும்! இடித்துரைத்துப் பரிகசிக்கும்!


குற்றத்தைச் செய்பவர்கள் தவக்கோலம் பூண்டாலும்

சற்றுமிங்கே பயனில்லை! புல்கூட மதிக்காது!


மனஅடக்கம் இல்லாதோர் தவவேடம் போடுவது

புலித்தோலைப் பசுஅணிந்து மேய்வதுபோ லாகும்பார்!


தவச்சான்றோன் தீயசெயல் செய்வதுவோ சத்தமின்றி

பறவைக்குக் கண்ணிவைக்கும் ஏமாற்று வித்தையாகும்!


ஆசையை விட்டுவிட்டேன் என்றேதான் பொய்சொல்லும்

கயவனுக்கு உள்ளமே துன்பத்தைத் தந்துவிடும்!


துறவற எண்ணமின்றி பற்றற்ற கோலமிட்டால்

கொடியவர்கள் அவரைப்போல் உலகத்தில் யாருமில்லை!


குன்றிமணி செவ்வண்ணம்  புறத்தினிலே தோன்றினாலும்

குன்றிமணி ஏந்துகின்ற கருநிறத்து மூக்கைப்போல்

காரிருளை அகத்தினிலே கொண்டவர்கள் இங்குண்டு!


மனமெல்லாம் கும்மிருட்டு! குளித்தமணம் உடலெல்லாம்!

இத்தகைய நீசர்கள் இவ்வுலகில் வாழ்கின்றார்!


வளையாத அம்புகளின் செயல்களிங்கே கொடிதம்மா!

வளைந்திருக்கும் இசையாழின் செயல்களிங்கே இனிதம்மா!

தோற்றத்தை விட்டுவிடு! செயலாலே எடைபோடு!

உலகம் பழிக்கும் செயலைத் துறந்துவிட்டால்

தலைமுடி சடைமுடி நீக்குதல் வேண்டாமே!

மதுரை பாபாராஜ்



தவம் -- 27

 --------------------------------------------------

தவம் -- 27

---------------------------------------------

துன்பம் தன்னைப் பொறுப்பதுவும்

தீங்கே செய்யா நற்பண்பும்

தவத்தின் தளங்கள் என்றுணர்வோம்!


வேட மற்ற நன்னெறிதான்

மாசே இல்லா தவவடிவம்!

வேட தாரிக் கும்பலென்றால்

தவமே இல்லை! இழிநிலைதான்!


துறவிகள் வாழ்வைக் காப்பதற்கே

இல்லறந் தன்னை ஏற்றவர்கள்

துறவறந் தன்னை மறந்தாரோ?


பகையை அடக்கி மாற்றிடவும்

நண்பரைத் தாங்கி உயர்த்திடவும்

தவத்தால் உலகில் முடியும்பார்!


இல்லறம் ஏற்றோர் தவமேற்று

வல்லவ ராக மாறிடலாம்!

தவத்தை ஏற்றோர் சான்றோர்கள்!

மற்றவ ரெல்லாம் பேராசை

வலையில் சிக்கிய வீணர்கள்!


பொன்னைச் சுட்டால் ஒளிபெருகும்!

துன்பத் தணலால் தவச்சான்றோர்

ஞானம் பெருகி ஒளிபெறுவார்!


பற்றை விலக்கி வாழ்வோரை

உயிரினம் அனைத்தும் வணங்கிநிற்கும்!

தவத்தின் வலிமை பெற்றவர்கள்

மரணந் தன்னை வென்றிடுவார்!


ஆற்ற லற்றோர் பலரானார்!

ஆற்ற லுள்ளோர் சிலரானார்!

தவம்செய் யாதோர் பலராக

உள்ளதே இதற்குக் காரணமாம்!


புலால் மறுத்தல்-- 26

 ------------------------------------------------------

புலால் மறுத்தல்-- 26

----------------------------------------------------------

நமது உடலின் வளர்ச்சிக்கு

மற்றொரு உடலைப் புசிப்பவனின்

நெஞ்சில் கருணை இருக்காது!

உள்ளத்தில் அருளும் இருக்காது!


இரக்கம் கொடுக்கும் நற்பயனோ

இறைச்சி உண்பவர்க் கில்லையம்மா!


வன்முறை கொண்ட உள்ளத்தில்

இரக்கமோ துளியும் இருக்காது!


உயிரைக் கொன்று தின்பவனின்

நெஞ்சில் அருளும் இருக்காது!


ஊனை உண்னல் பாவந்தான்!

உயிர்க்கொல் லாமை அறமாகும்!


புலாலை மறுத்தால் பிறஉயிர்கள்

உலகில் வாழும் வாய்ப்புண்டு!

சொர்க்கம் என்பது கிடையாது!

புலாலை வெறுக்கும் நிலையெடுத்தால்

விற்கும் தொழிலே இருக்காது!


இறைச்சி, உயிரின் புண்ணாகும்!

உண்பதை அறவே ஒழிக்கவேண்டும்!


உயிரைப் பிரிந்த உடல்தன்னை

அறிவுடை யோர்கள் உண்ணமாட்டார்!

ஆயிரம் யாகங்கள் செய்வதினும்

உயிரைக் கொன்று உண்ணாமல்

வாழ்வதே என்றும் மேலாகும்!

புலாலை வெறுக்கும் மாந்தரையோ

புவியே வணங்கும் கைகூப்பி!


மதுரை பாபாராஜ்

அருள் உடைமை-- 25

 ---------------------------------------------------------

அருள் உடைமை-- 25

-------------------------------------------------------------

இழிந்தவ ரிடத்திலும் செல்வமுண்டு!

அருட்செல்வம் ஒன்றே சிறந்ததாகும்!

அருளுடன் வாழ்தல் நெறியாகும்!

அதுவே அருமைத் துணையாகும்!

அருள்மனங்க கொண்டே வாழ்பவர்க்கு

இருள்சூழ் வாழ்க்கைத் துன்பமில்லை!

உயிரினந் தன்னைக் கருணையுடன்

காத்தே வாழும் சான்றோர்கள்

தன்னுயிர் எண்ணி அஞ்சுகின்ற

கோழை நிலைதான் இங்கில்லை!

இருளைப் பரப்பி அருள்மறந்தோர்

அறத்தை மறந்தே வாழ்விழந்தோர்!

பொருளோ இன்றி இவ்வுலக

வாழ்க்கை இங்கே இல்லைதான்!

அருளோ இன்றி அவ்வுலக

வாழ்கை அங்கே இல்லைதான்!

பொருளை இழந்தால் மீண்டுமிங்கே

பொருளைப் பெற்றே வாழ்ந்திடலாம்!

அருளை இழந்தால் இழந்ததுதான்!

புத்தகம் சொல்லும் மெய்ப்பொருளை

அறிவில் லாதோர் காண்பதுபோல்

அருளில் லாதோன் அறச்செயலாம்! 

எளியவர் களையோ துன்புறுத்தும்

எண்ணம் சிறிதும் வேண்டாமே!

வலியவர் உன்னைத் துன்புறுத்தும்

கோலம் வருமே துள்ளாதே!


புகழ்-24

 -------------------------------------------------------

புகழ்-- 24

----------------------------------------------------------

ஈகைக் குணத்தால் வரும்புகழே

உலக வாழ்வின் நற்பயனாம்!


ஏழை எளியோர் வாழ்வதற்குக்

கொடுக்கும் பண்பு தரும்புகழை

உயர்ந்தோர் பேசுவார் பெருமையுடன்!

அந்தப் புகழே நிலையாகும்!

விண்ணகம் தேவரைப் போற்றாமல்

கொடுப்போ ரைத்தான் புக்ழ்ந்திருக்கும்!


கொடுத்துச் சிவந்தோர் செல்வங்கள்

குறையக் குறையப் புகழ்வளரும்!

உலகை விட்டே மறைந்தாலும்

நிலைக்கும் அப்புகழ் சான்றோர்க்கு!


ஈகைப் புகழே அடையாளம்!

புவியே வணங்கி மதித்திடுமே!


ஈகை மனமே இல்லாமல்

காட்சிப் பொருளாய் வாழ்வதற்குத்

தோன்றா மல்தான் இருந்திடலாம்!


புகழைச் சேர்க்கத் தெரியாதோர்

தங்கள் குறையை அறியாமல்

தம்மை இக்ழும் மற்றவரை

நொந்து கொள்வதால் என்னபயன்?


இறந்தபின் நிலைப்பது இப்புகழ்தான்!

புகழில் லாத மனிதரையோ

தாங்கும் நிலமோ தரிசாகும்!


பழியே இன்றிப் புகழுடனே

வாழ்பவர் உயிருடன் வாழ்பவராம்!

பழியைச் சுமந்து வாழ்பவனோ

பாரில் என்றும் நடைப்பிணந்தான்!


ஈகை-23

 --------------------------------------------------------

ஈகை-23

----------------------------------------------------------

ஏழைக்கு ஈவதே ஈகையாகும்!

ஏனை யோர்க்குத் தருவதெல்லாம்

சுயநல விளம்பரச் செயலாகும்!


நன்மை தன்னை எதிர்பார்த்து

பிறரிடம் பொருளை வாங்குவதோ

சரியே இல்லை! சொர்க்கமே

கிடைக்கா தெனினும் கொடுக்கவேண்டும்!


தனக்கு வறுமை இருந்தாலும்

ஏழைக் குதவுதல் நற்பண்பாம்!


கேட்டோர் பெற்று மனமகிழ்ந்தே

இனிய முகத்தைக் காட்டுமட்டும்

ஈகையும் துன்பம் தருவதுதான்!


பசியைப் பொறுக்கும் துறவிகளின் 

ஆற்றல்  இங்கே வலிமைதான்!


பசிப்பிணி போக்கும் நல்லவர்கள்

குணமோ அதனினும் வலிமைதான்!


பகிர்ந்தே உண்ணும் மாந்தரையோ

பசிப்பிணி இன்னல் தாக்காது!


செல்வத்தை இங்கே கொடுக்காமல்

இழக்கும் கல்மனக் கொடியவர்கள்

ஈந்து மகிழ்வதை அறிவதில்லை!


பொருளை என்றும் ஈயாமல்

தன்னலம் கொண்டோன் நிலையிங்கே

யாசிப் பதைவிட இழிவாகும்!


சாவு நமக்குத் துன்பந்தான்!

ஏழைக் குதவா நிலையுடனே

வாழ்வதைக் காட்டிலும் அதுமேலாம்!


ஒப்புரவு அறிதல்-22

 --------------------------------------------------------

ஒப்புரவு அறிதல்-22

----------------------------------------------------------

உயிரைக் காக்கும் மழையிங்கே

கைம்மா றெதையும் கேட்பதில்லை!


மழைமனச் சான்றோர் அதுபோல

உதவிகள் செய்வார் உலகத்தில்!


உழைத்துச் சேர்த்த பொருள்களையோ

தக்கவ ருக்குக் கொடுக்கவேண்டும்!


உழைக்க இயலா தவர்களுக்கே

உதவிகள் செய்யும் நற்செயல்போல்


இங்கும் தேவர் உலகிலுமே

காண்பது என்பதே அரிதாகும்!


உதவிகள் செய்பவன் வாழ்பவனாம்

செய்யா தவனோ செத்தவனாம்!


உதவும் மனிதனின் செல்வங்கள்

தண்ணீர் நிறைந்த ஊர்க்குளமாம்!


இப்படிப் பட்ட செல்வங்கள்

ஊரின் நடுவில் இருக்கின்ற

பழுத்த மரத்தைப் போன்றதிங்கே!


உதவும் மனத்தைக் கொண்டவர்கள்

சேர்த்த செல்வம் மருந்துமரம்

போலப் பயன்படும் இவ்வுலகில்!


செல்வம் இல்லா நிலையினிலும்

சான்றோர் கொடுக்கத் தயங்கமட்டார்!


பிறர்க்கு உதவ முடியாத

கொடுமை நிலைதான் வறுமையாகும்!


கொடுப்பதால் தீமை வருமென்றால்

தன்னை விற்கும் நிலைவரினும்

தீமையை வாங்க முன்வருவார்!


தீவினை அச்சம்-21

 ------------------------------------------------------

தீவினை அச்சம்-21

----------------------------------------------------------

தீயவர் தீமை செய்வதற்கோ

கொஞ்சம் கூட அஞ்சமாட்டார்!


கடுகளவு தீமை செய்வதற்கும்

சான்றோர் இங்கே பயப்படுவார்!


தீங்கு விளையும் என்றேதான்

தீமை செய்ய அஞ்சவேண்டும்!


நமக்குத் தீமை செய்தாலும்

நன்மை செய்தல் சான்றாண்மை!


துன்பம் செய்ய நினைத்தாலோ

அறத்தின் கடவுள் தண்டிக்கும்!


வறுமைப் பிணியில் துடித்தாலும்

கொடுஞ்செயல் நாடக் கூடாது!


நாடிச் செய்தால் ஏழ்மையோ

தேடி வந்தே நமைச்சூழும்!


துன்பம் தனக்கு வருவதையே

விரும்பா தவனோ மற்றவர்க்குத்

தீங்கைச் செய்தல் கூடாது!


எப்பகை வரினும் தப்பிக்கலாம்!

தீவினைப் பகையோ தொடர்ந்துவந்து

நம்மை அழிக்கும் சக்தியாகும்!


தன்நிழல் தொடரும் தன்மைபோல்

தீமை செய்யும் வஞ்சகரை 

அழிவும் தொடர்ந்தே அழித்துவிடும்!


தன்மேல் அன்பைக் கொண்டவனோ

பிறர்க்குத் தீமை செய்வதில்லை!

இப்படித் தீமை செய்யாதோன்

வாழ்வில் கேடில் லாதவனாம்!


பயனில சொல்லாமை--20


-------------------------------------------------------------

பயனில சொல்லாமை--20

-------------------------------------------------------------

வெறுக்கும் சொற்களைப் பேசுபவன்

பழிக்கப் படுவான் உலகத்தில்!


நட்பில் தீமை செய்வதினும்

பண்பற்ற சொற்கள் கொடிதாகும்!


பயனற்ற பேச்சைப் பேசுவோரை

மக்கள் வெறுத்தே ஒதுக்கிடுவார்!


பயனில் லாத சொற்களையே

பலரிடம் பேசிப் பழகுவது

நல்ல குணங்களை நீக்கிவிடும்!

அறத்தின் வழிக்கும் பொருந்தாது!


இப்படிச் சான்றோர் பேசினாலும்

மதிப்பும் சிறப்பும் போய்விடுமே!


பயனற்ற சொற்களைப் பேசுபவன்

மக்களில் பதர்தான் உணர்ந்திடுவாய்!


சிறப்பற்ற சொற்களைப் பேசினாலும்

பயனற்ற சொல்லைப் பேசாதே!


பயன்பா டறிந்த அறிஞர்கள்

பயனற்ற சொல்லைப் பேசமாட்டார்!


மாசே இல்லாச் சான்றோர்கள்

மறந்தும் வீண்சொல் பேசமாட்டார்!


பயன்தரும் சொற்கள் அமுதாகும்!

பயனற்ற சொற்கள் நஞ்சாகும்!


மதுரை பாபாராஜ்




புறம் கூறாமை---19

 --------------------------------------------------------

புறம் கூறாமை---19

----------------------------------------------------------

அறஞ்செய் யாமல் வாழ்ந்தாலும்

புறங்கூ றாமைச் சிறப்பாகும்!

பார்த்தால் புகழ்ந்து பேசுவதும்

இல்லையேல் இகழ்ந்து பேசுவதும்

அறத்தைப் பழித்து வாழ்வதினும்

மடமை யான தீச்செயலாம்!

வேடம் போடும் நட்பைவிட

சாவது என்றும் மேலாகும்!

நேரில் இகழ்ந்தால் வீரன்தான்!

புறங்கூறி வாழ்ந்தால் கோழைதான்!

புறணி பேசும் குணமொன்றே

அறவழி மறந்ததைக் கூறும்பார்!

ஒருவரைச் சாடும் உன்னைத்தான்

மற்றவர் இங்கே தூற்றிடுவார்!

இனிமைப் பேச்சால் ஒற்றுமையை

வளர்த்து வாழத் தெரியாதோர்

புறணி பேசி உறவினரின்

கூட்டைப் பிரித்தே எறிந்திடுவார்!

நண்பனைப் பற்றி பழிப்பவர்கள்

அயலார் குறையைப் போற்றுவாரோ?

புறணி பேசுவோர் மேனியையும்

உலகம் இங்கே தாங்குவது

அறத்தை எண்ணும் குணத்தாலோ?

தங்கள் குறையைத் திருத்திவிட்டால்

புறணி பேசுதல் மறைந்துவிடும்!

மதுரை பாபாராஜ்


அழுக்காறாமை--17

 ---------------------------------------------------------

அழுக்காறாமை--17

-------------------------------------------------------------

மனதில் பொறாமை இல்லாமல்

வாழ்வதே நல்ல ஒழுக்கமாம்!

----------------------------------------------------------

பொறாமை இன்றி அனைவரிடம்

பழகுதல் அருமைச் சிறப்பாகும்!


பிறரைக் கண்டு புழுங்குபவன்

மாசு படிந்த தீயவனாம்!


துன்பம் தருவது இதுவென்றே

அறிந்தும் இங்கே அறிவுடையோர்

தீமை செய்ய அஞ்சிடுவார்!


பொறாமை கொண்ட மனிதருக்கு

பகைவராய் உள்ளதும் பொறாமைதான்!


அடுத்தவ ருக்குக் கிடைப்பதையே

பார்த்துப் பொறாமை கொண்டவனின்

சுற்றம் வறுமையில் அழிந்துவிடும்!


பிறரது உயர்வைக் கண்டேதான்

பொசுங்கிப் போகும் மனிதனிடம்

செல்வம் என்றும் தங்காது!

வறுமை நிலையாய்த் தங்கிவிடும்!

பொறாமை செல்வத்தை அழித்துவிடும்!

தீய வழிசெல்லத் தூண்டிவிடும்!

பொறாமை கொண்டவர் உயர்ந்ததில்லை!

விலக்கி வாழ்பவர் தாழ்ந்ததில்லை!

மதுரை பாபாராஜ்


பொறை உடைமை--16

 ---------------------------------------------------------

பொறை உடைமை--16

----------------------------------------------------------

தன்னைத் தோண்டும் மாந்தரையும்

தாங்கும் நிலம்போல் நாமிங்கே

நம்மை இகழ்ந்து பேசுவோரை

என்றும் பொறுத்தல் பண்பாகும்!


அடுத்தவர் செய்யும் தீங்குகளை 

உடனே மறந்தால் நல்லதுதான்!


விருந்தளிக் காத நிலைதானே

உண்மை யான வறுமையாம்!


மற்றவர் கோபத்தைத் தாங்குவதே

உலகில் போற்றும் வலிமையாம்!


பொறுமை குணமுடன் வாழ்பவரை

பொன்மன மாந்தராய்ப் புகழ்ந்திடுவார்!


தீமைக்குத் தீமை மதிப்பில்லை!

பொறுத்துப் போனால் மதிப்புண்டு!


சீண்டு  வோரை தண்டித்தால்

ஒருநாள் மட்டும் இன்பந்தான்!

பொறுத்து வாழும் நிலையெடுத்தால்

உலகில் என்றும் பெருமைதான்!


நம்மை வாட்டி எடுத்தாலும்

பழிக்குப் பழியோ வேண்டாமே!

தீங்கை மறத்தல் உயர்வாகும்!

ஈன மனத்தோர் ஆட்டத்தைப்

பொறுமை யாலே வென்றிடலாம்!


வரம்பு மீறிய சொற்களையும்

பொறுப்போர் துறவிபோல் தூயவர்தான்!


மற்றவர் கொடிய சொற்களையும்

பொறுத்துக் கொள்ளும் மனிதருக்கு

விரதம் ஏற்கும் துறவிகளும்

அடுத்த நிலையில் இடம்பெறுவார்!

மதுரை பாபாராஜ்

பிறன் இல் விழையாமை--15

 ---------------------------------------------------------

பிறன் இல் விழையாமை--15

-------------------------------------------------------------

மற்றவர் பொருளைக் கவர்தல் அவமானமாகும்!

----------------------------------------------------------------

பிறருக் குரியதை விரும்பாதே!

அறத்தை விட்டே விலகாதே!


பொருளை நாடி அவர்வீட்டு

வாசலில் நிற்பது மடமைதான்!


நம்மை நம்பும் மனிதருக்குத்

துரோகம் செய்பவன் நடைப்பிணந்தான்!


துரோகம் செய்து துய்ப்பவர்கள்

பெரியவர் எனினும் சிறியோர்தான்!


பிறரது பொருளைக் கவர்பவரோ

அழியாப் பழியை ஏந்திடுவார்!


பஞ்சமா பாதகம் செய்பவரைப்

பகையும் பழியும் சூழ்ந்திருக்கும்!


தனக்கு மட்டும் உரியதையே

விரும்பி வாழ்பவர் சான்றோராம்!

பொறாமை வெறியை ஒதுக்கிவிட்டு

வாழ்வோர் ஒழுக்கச் சுடராவார்!


அடுத்தவர் பொருளை விரும்பாதோர்

அகிலம் போற்றும் உத்தமர்தான்!


கரடு முரடாக வாழ்ந்தாலும்

மாற்றார் பொருளை விரும்பாமல்

வாழ்வதே உலகில் சிறப்பாகும்!


மதுரை பாபாராஜ்


ஒழுக்கம் உடைமை-- 14

 ஒழுக்கம் உடைமை-- 14

----------------------------------------------------------------

தனிமனித ஒழுக்கம் தலை நிமிர வைக்கும்!

----------------------------------------------------------------

ஒழுக்கம் உயர்வின் வழியாகும்!

உயிருக்கும் மேலாய்க் காப்போமே!


தடைகள் எத்தனை வந்தாலும்

தலைநிமிர்ந் தேதான் காப்போமே!


ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாம்!

இல்லா தவனே தாழ்ந்தவனாம்!


வேதம் சொல்வோன் கற்றதையே

மறந்து போனால் படித்திடலாம்!

ஒழுக்கந் தவறிப் போனாலோ

இழிந்த குலத்தான் எனச்சொல்வார்!


பொறாமை கொண்ட மனிதனிடம்

செல்வம் என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் இல்லா மாந்தரிடம்

உயர்வு என்றும் நிலைக்காது!


ஒழுக்கம் என்னும் விளக்கணைந்தால்

வாழ்வில் இருள்தான் சூழுமென்றே

ஒழுக்கந் தன்னைப் போற்றிடுவார்!


ஒழுக்கப் பண்போ இன்பந்தான்!

தவறிய ஒழுக்கம் துன்பந்தான்!


ஒழுக்கம் பேணும் சான்றோர்கள்

தீய சொற்கள் பேசமாட்டார்!


மக்களுடன் ஒத்து வாழாதோர்

கற்றுத் தெளிந்தவர் என்றாலும்

அறிவிலி என்றே பரிகசிப்பார்!


மதுரை பாபாராஜ்


அடக்கம் உடைமை 13

 அடக்கம் உடைமை-- 13

----------------------------------------------------------------

அடக்கத்தின் மறுபக்கமே புகழாகும்!

----------------------------------------------------------------

அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான்!

அடங்காப் பண்போ இருள்மயந்தான்!


அடக்கம் என்பது செல்வந்தான்!

காப்பது நமது கடமைதான்!


இந்தப் பண்பைப் பெரியோர்கள்

உணர்ந்தே இங்குப் புகழ்வார்கள்!

இந்தப் பண்பின் முன்னாலே

மலையின் உயரம் மடுவாகும்!


பணிந்து நடத்தல் சிறப்பாகும்!

செல்வம் உள்ளோர் கடைப்பிடித்தால்

மேலும் மதிப்பார் உலகத்தார்!


ஐம்புலன் தன்னை ஒருபிறப்பில்

அடக்கி வாழ்ந்தால் எழுபிறவி

தன்னைக் காக்கும் கவசந்தான்!


கட்டுப் பாடே இல்லாமல்

நாவைப் பேச அனுமதித்தால்

துன்பந் தன்னில் சிக்கவைக்கும்!


தீமை விளையும் ஒருசொல்லால்

முன்னர் செய்த அறங்களெல்லாம்

விழலுக் கிறைத்த நீராகும்!


நெருப்புக் காயம் ஆறிவிடும்!

தீச்சொல் சுட்ட புண்மட்டும்

உள்ளந் தன்னில் வடுவாகும்!


சினத்தைக் காத்துக் கற்றறிந்தே

அடக்கம் கொண்டு வாழ்பவனை

அறங்கள் நாளும் காத்திருக்கும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

நடுவுநிலைமை-12

 நடுவுநிலைமை -- 12

--------------------------------------------------------------

நடுநிலையே சிறந்த அறமாகும்

------------------------------------------------------------

நீதி என்றும் வழுவாமல்

நடுநிலை காப்பதே அறமாகும்!


இப்படி உள்ளவர் செல்வங்கள்

பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!


நடுநிலை தவறும் பண்பாலே

மலைபோல் செல்வம் குவிந்தாலும்

அற்பம் என்றே ஒதுக்கிவிடு!


நடுநிலை போற்றிய பண்பாளன்

என்பதைப் புகழும், பழியுந்தான்

உலகில் காட்டும் அளவுகளாம்!


வறுமையும் வளமும் அணியல்ல!

நடுநிலை சான்றோர் அணியாகும்!


நடுநிலை விட்டே தவறிவிட்டால்

கெடுநிலை அவனை அழித்திடுமே!


நீதி மானின் வறுமையினை

பெருமை என்பார் சான்றோர்கள்!


சாயா துலாக்கோல் போலத்தான்

நடுநிலை கொண்டோர் சான்றோராம்!


ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத

நியாயப் பண்பே நடுநிலையாம்!


நுகர்வோர் நிலையில் தான்நின்று

வணிகம் செய்தல் வணிகருக்கு

சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!


மதுரை பாபாராஜ்