Tuesday, June 30, 2015



தூரம் பொருட்டல்ல! உங்கள் உறவுகளின்
வேர்கள் வலுவாக நின்று நிலைத்திருந்தால்!
வாழ்வில் புயலடித்த போதுமிங்கே நாணலாக
சாய்ந்து நிமிர்ந்திடலாம் சாற்று.

தமிழாக்கம்
மதுரை பாபாராஜ்

வாழ்த்துங்கள் வாழலாம் !
-------------------------------+-------
வாழ்த்தி மகிழுங்கள் உள்ளம் தெளிவாகும்!
நாள்தோறும் நல்லதைப் பேசுங்கள்!நிம்மதி
தோள்கொடுக்கும்! ஆக்கபூர்வ எண்ணங்கள் மண்ணக
வாழ்வை உயர்த்தும் உணர்.

யார் குற்றம்?
------------------------
வரப்பில் நடந்துசென்றான்! வானில் பருந்தின்
விரல்களில் பாம்பு நெளிந்தது! பாம்பு
விரலில் இருந்து நழுவிக் கீழே
வரப்பிலே சென்றோன் கழுத்தில் விழுந்து
மரணத்தைத் தந்தது! பார்.

Sunday, June 28, 2015

ஏட்டுச் சுரைக்காய்!
------------------------------------
மகுடங்கள் பட்டங்கள் சான்றிதழ்கள் மற்றும்
வெகுமதிகள் எல்லாம் மலைபோல் குவித்தார்!
அடுக்கி அழகுபார்க்க வீட்டில் இடமோ
மடுவளவே! என்செய்வார்? சொல்.

நல்லவர்கள்!
-----------------------
சூதாட்ட நாயகர்கள் முக்கிய புள்ளிகள்!
தோதாக பொய்ச்சான்று தந்தால் அமைச்சர்கள்!
ஆகாகா நம்மை வழிநடத்தும் சான்றோர்கள்!
ஈடற்ற நல்லவரை வாழ்த்து.

தலைமுறையைக் கெடுக்காதே!
--------------------------------------------------------
பஞ்சமா பாதகங்கள் எப்படிச் செய்வதென்று
கொஞ்சமும் கூச்சமின்றி இங்கே திரைப்படத்தில்
முன்வந்து காட்டுகின்றார்! சீரழித்துப் பார்க்கின்றார்!
கண்டபடி வாழ்வதா வாழ்வு..

துயில்!
------------
விடியல் உசுப்ப விழிகள் மறுக்க
பிடித்தே உலுக்க கரங்கள் விலக்க
நடித்தே விழிகள் மூடித் திறக்க
கடிந்தே களைந்தேன் துயில்.

A man asked an Artist :
How do you make such beautiful things from a stone ?

He replied :
Beauty is already hidden there, I just remove Extra Stone.

Your Happiness is hidden within yourself,
Just Remove Your Worries...


அழகான கற்சிலையை எப்படிச் செய்தாய்?
சிலைசெதுக்கும் சிற்பியிடம் கேட்டார் ஒருவர் !
அழகிங்கே கல்லுக்குள் ஏற்கனவே உண்டு!
விலக்கினேன் தேவையற்ற கற்களை இங்கே
சிலையழகு வந்ததென்றான் பார்.

மகிழ்ச்சியுடன் இன்பம் மனதிற்குள் உண்டு!
அகத்திற்குள் உள்ள கவலைகளை நீக்கு!
சிறகடித்து நாடிவரும் உன்னை மகிழ்ச்சி!
அகமாசை நீக்குவதே நன்று.

தமிழாக்கம்
மதுரை பாபாராஜ்

பெண்ணுரிமை!
-----------------------------
குட்டினால் குட்டைப் பொறுத்ததோ அக்காலம்!
குட்டக் குனிந்ததும் குட்டியதும் அக்காலம்!
குட்டவந்தால் எட்டிநின்று காரணம் கேட்பதே
இக்காலம் தப்பில்லை சொல்.

தொடுதிரை உறவு!
TOUCH SCREEN RELATION
--------------------------------------
கடும்நட்பு வேண்டாம்! தொட்டும் தொடாமல்
தொடுதிரை நட்பாய் உறவுடன் வாழ்ந்தால்
கெடுதியே இல்லை! அமைதி கிடைக்கும்!
உறுத்தலின்றி வாழப் பழகு.

பாவம் குழந்தைகள்
-----+-------------------------+
கணவனை ஆட்டிப் படைக்கும் மனைவி!
மனைவியை ஆட்டிப் படைக்கும் கணவன்!
மனைதோறும் சச்சரவு! பிள்ளைகள் உள்ளம்
உளைச்சலில் துள்ளும் களம்.

குடிகெட்டால் வருமானம்!
-------------------------------------
குடித்தால் குடியைக் கெடுக்குமென்று சொல்வார்!
குடிவெறியைத் தூண்டும் கடையை மூட
கொடிபிடித்தால் உள்ளே சிறைவாசம் என்பார்!
குடிகெட்டுப் போகட்டும். போ.

சீரடி பாபா எளியவர்க்கே!
------------------------+------------
பாபா குறுக்கு வழியை ஆதரிக்கமாட்டார்
------------------------------+--
விழியின் அருளும் எளியவர்க்கே! அண்ணல்
மொழியின் பொருளும் எளியவர்க்கே! ஏந்தல்
வழியின் கருணை எளியவர்க்கே! பாபா
எளிமையின் கோலம் உணர்.

நாடே வழிகாட்டி!
------------------------------
வேற்றுமை இல்லாத இல்லறமே இங்கில்லை!
வேற்றுமையில் ஒற்றுமை நம்நாட்டின் அற்புதந்தான்!
நாட்டின் நடைமுறையை வீட்டில் கடைப்பிடித்தால்
வேற்றுமை வேரிழக்கும் பார்.

கால்கட்டு

கால்கட்டு!
--------------------
கால்கட்டு போட்டால் சரியாகும் என்றேதான்
கால்கட்டுப் போட்டார் இருவருக்கும்! அம்மம்மா!
கால்கட்டு   தேள்கொட்டாய் அன்றாடம் கொட்டியது!
காலம் கணித்தது வேறு.

பெற்றோரை வணங்கு!
-------------------------------------
இதிகாசம் சொன்னால் பணிவா? வாழ்வின்
விதியென்று சொன்னால் அடிமைத் தனமா?
அகிலத்தில் பெற்றோரின் தாளை வணங்கும்
நெறியே சிறப்பைத் தரும்.

நளினமே நாகரிகம் !
---------------------------------
நிறைகளைப் பாராட்டி விட்டுப் பிறகு
குறைகளைச் சொன்னால் மகிழ்ந்தேதான் ஏற்பார்!
குறைகளை மட்டும் சுடச்சுடச் சொன்னால்
முறைப்பார் முணுமுணுப்பார் இங்கு.

எது சரி?
--------------------
பெரியவர்கள் காலில் விழுந்தெழும் பண்பைச்
சரியில்லை என்றும் அடிமைத் தனத்தின்
இழிவென்று சொல்லும் கருத்து சரியா?
மரியாதை மற்றும் பணிவென்று சொல்தல்
சரியா? எதுசரி? சொல்.

அளவு மீறினால் அழிவு!
--------------------------------------
கண்மையைப் பெண்கள் அளவாக தீட்டுதல்போல்
நம்தமிழில் இங்கே மொழிக்கலப்பை ஏற்கலாம்!
அண்ணா உரைத்தார்! அளவிங்கே மீறினால்
துன்புறும் அன்னைத் தமிழ்.

மற்றவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டுமென்று
சற்றும் உரக்கத்தான் பேசாதே! --பக்குவம்
கொண்ட தரமான பண்புகளைப் பார்த்தேதான்
உன்னையிங்கே நாடிவந்து கேட்கவேண்டும்! அத்தகைய
பண்பை வளர்க்கவேண்டும் நீ.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

கைக்கிளை!
நாட்டு நடப்பு
----------------------- ---
வருமானம் இல்லை! வகைவகையாய் நோய்கள்
பெருக்கெடுக்கும் காதலுடன் ஒட்டியுற வாட
ஒருதலைக் காதலாக வம்புசெய்து நின்றால்
வருமோ விருப்பம்? விளம்பு.

Wednesday, June 24, 2015

வண்டமிழ் ஊற்று கண்ணதாசன்!

வண்டமிழ் ஊற்று கண்ணதாசன்
-------------------------------------------------------------
கண்ணதாசன் பிறந்தநாள் 24.06.15
-+--+-------------------+-------------------------------------
கண்ணதாசன் போலொருவன் இன்னுமிங்கே தோன்றவில்லை!
என்னென்ன பாடல்கள் பாட லுக்குள் தத்துவங்கள்!
செந்தமிழில் வாழ்வியல் சாறைப் பிழிந்தளித்தான்!
வண்டமிழ் ஊற்றை வணங்கு.

கவிதை எனப்படுவது!
---------------------------------------
கருவில் கலந்தே உயிர்த்துடிப்பைத் தூண்டி
உருவைக் கொடுத்தே உணர்ச்சி மிளிர
அரும்பும் அருமைக் குழந்தைப் படைப்பின்
செழுமையே நற்கவிதை! செப்பு.

எது நிம்மதி?
-------------------
செல்வச் செழிப்பிலே வாழ்க்கை அமைந்தாலும்
எல்லையற்ற தொல்லைகள் சூழ்ந்திருக்கும்----இவ்வுலகில்
செல்வமே இன்றி வறியவராய் வாழ்ந்தாலும்
தொல்லையின்றி வாழ்ந்திருப்பார் பார்.

இறந்தும் வாழ்வோம்!
-----------------------------------
அன்னதானம்  நாளும் வயிற்றின் பசியடக்கும்!
இங்கே இரத்ததானம்! போகும் உயிர்பிழைக்கும்!
கண்தானம்! நீங்கள் இறந்தபின்னும் வாழவைக்கும்!
கண்தானம் செய்வோம் மகிழ்ந்து.

சுழற்சி மயக்கம்!
---------------------------------
ஞால சுழற்சியின் எல்லைத் தொகுப்புக்குள்
காலம் இயக்கி இயங்கவைக்கும் வாழ்விலே
காலம் நகர்த்தும் சுழற்சி மயக்கத்தில்
நாளும் இயங்குகின்றோம் இங்கு.

பனித்துளிகள்!
--------------------------
பூக்களின்  மேலே பனித்துளிகள் போலத்தான்
வாழ்க்கையில் துன்பங்கள் நின்றிருக்கும்!----காலைச்
செங்கதிரைக் கண்டால் துளிகள் விலகுதல்போல்
துன்பம் விலகும் விரைந்து.

மதியால் வெல்!
------------------------------
கோள்நிலைகள் சாதகமாய் இல்லையென்று ஜோசியர்
பார்த்தேதான் சொன்னாலும் சிந்தித்து நம்முடைய
வாழ்நிலைப் பண்புகளை மாற்றி எதிர்கொண்டால்
கோள்களையும் வெல்லலாம் கூறு.

Saturday, June 20, 2015

நஞ்சு!
------------
உயர்வு மனப்பான்மை ஆணவத்தைத் தூண்டும்!
உலகிலே தாழ்வு மனப்பான்மை நம்மைக்
கலங்கவைத்துக் கோழையாக்கிப் பார்க்கும்! தமிழே!
இரண்டுமே வாழ்க்கைக்கு நஞ்சு.

களைகளை நீக்கு!
-------------------------------
சிக்கல்கள் வாழ்க்கையில் தோன்றும்! இயல்புதான்!
அக்கறை கொண்டே களைகளை நீக்கவேண்டும் !
பற்றிப் படரவிட்டால் நிம்மதி போய்விடும்!
சிக்கல் முடிச்சைக் கழற்று.

Thursday, June 18, 2015

துள்ளாதே!
---------------------
என்னதான் முன்னேறி வாழ்க்கைச் சிகரத்தில்
நின்றிருந்த போதும் தவறான ஓரடி
உன்னைச் சரியவைத்துப் பள்ளத்தில் தள்ளிவிடும்!
என்றுமே துள்ளாதே நீ்.

கோபத்தைத் துற!
-------------- ---------------
கோபத்தில் புண்படுத்தும் சொற்களை வீசாதே!
பாதகத்தை ஏற்படுத்திப் பந்தாடிப் பார்த்திருக்கும்!
வேகத்தை விட்டு விவேகத்தை ஏற்றுக்கொள்!
சோதனைக்குச் சோதனையைத் தா.

கடமையைச் செய்
----------------------------------
உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
தினமும் கடமையைச் செய்தாலே போதும்!
உனக்குரிய நற்பலன் உண்டு.

Wednesday, June 17, 2015

வெற்றி உறுதி!
---------------------------
அறிவுச் சுரங்கமாய் வாழ்ந்திருந்தால் மட்டும்
படியேறி வந்திடுமா வெற்றி--அறிவுடன்
ஆற்றல் ஒழுக்கம் உழைப்பிலே நேர்மை
ஊற்றெடுத்தால் வெற்றியுண்டு நம்பு.

இருளை அகற்று!
-----------------------------
இருக்கின்ற சூழ்நிலையைப் பாழ்படுத்தி வாழும்
இருளை அகற்று! ஒளிவிளக்கை ஏற்று!
ஒருமுறைதான் வாழ்க்கை! மகிழ்ச்சியாய் வாழ்வோம்!
இருளை அகற்றப் பழகு.

உறுத்தல்
-----------------
பக்கத்தில் வந்துவிட்டால் பல்லிளிக்கும் என்பார்கள்!
அக்காலப் பொன்மொழி உண்மைதான்! தூரத்துப்
பச்சை அழகுதான்! பக்கம் நெருங்கிவிட்டால்
பச்சையும் கண்னுறுத்தும் பார்.

மெய்ப்பொருள் காண்க!
--------+-----------------------------
என்னசொன்ன போதும் சரியாய்ப் புரிந்துகொண்டால்
என்றும் உளைச்சல் நெருங்காது!---சொன்னதைத்
தப்பாய்ப் புரிந்துகொண்டால் உள்ளமெல்லாம் எப்பொழுதும்
குப்பையும் கூளமுந்தான் கூறு.

Monday, June 15, 2015

குழந்தைகளைக் காக்குமா
அரசும் பள்ளிகளும்?
--------------------------------------
பள்ளிக் குழந்தையின் புத்தக மூட்டையால்
அய்யோ! முதுகு வளைந்திடும் என்றேதான்
சொல்கின்றார்! செந்தமிழே! பிஞ்சுகளைக் காப்பதுயார?
நல்லரசே! ஏதேனும் செய்.

அந்தந்தப் பள்ளியின் நிர்வாகம் முன்வந்தே
இந்தக் கொடுமையை இங்கே களையவேண்டும்!
துன்பமுடன் நாளும் முகஞ்சுளித்துச் செல்கின்றார்!
பிஞ்சுகளைக் காத்தல் பொறுப்பு.

கல்விக்கடல்!
---------------------
நீலக்  கடல்நீரை நீலவானம் அள்ளியள்ளி
கோலமழை யாகத்தான் கொட்டினாலும் அக்கடல்நீர்
காலத்தால் வற்றாது! கல்விக் கடலறிவும்
ஞாலத்தில் வற்றா(து) உணர்.

தள்ளாட்டம்
--------------------------
வேரைப் பிடுங்கும் முயற்சி தொடர்ந்திருந்தால்
வேழமென நிற்கும் மரங்களும் தள்ளாடும்!
காலமோ இல்லற வேர்களில் வென்னீரைப்
பாயவிட்டால் நிம்மதி ஏது?

கற்றது கைமண்ணளவு!
---------------  ----------------------
வெற்றியாளன் என்றேதான் எண்ணிநின்ற நேரத்தில்
அப்படியா! என்றே நகைத்தது காலமிங்கே!
முற்றிவிட்ட தோல்வியாளன் என்றே உரைத்தது!
கற்றது கைமண் ணளவு.

புறத்தோற்றம் பொய்!
---------------------------------
கண்களுக்குத் தோன்றும் தெளிவான நீலவானம்
தன்னகத்தே கொண்டுள்ள கூச்சல் குழப்பத்தை
கண்கள் உணராது! மாந்தரும் அவ்வாறே!
கண்களால் காண்பதெல்லாம் பொய்.

Wednesday, June 10, 2015

யோகா குரு.(08.06.2015)
-------------------------------------
வண்டிகளின் கூட்ட நெரிசலில் சிக்கிவிட்டால்
நொண்டி அடித்தேதான் தப்பித்து வந்துசேர்வோம்!
எங்களுக்கு யோகாவைக் கற்றுத் தருவதில்லை!
வண்டிகளே யோகா குரு.                                

பொறுத்திரு!
------  ----------------
இருக்கின்ற சூழ்நிலையை இன்பமாக்கி வாழும்
பெருந்தன்மைப் பண்பே இல்லறத்தின் அச்சாணி!
பொருமித் தவிப்பது கோழைத் தனமாகும்!
இருப்பதில் நிம்மதி கொள்.

எதுவும் நடக்கலாம் என்றும் நடக்கலாம்!
இதுவும் கடந்துபோகும் என்பதே வாழ்க்கை!
அதுவரை இங்கே பொறுமைதான் வேண்டும்!
பொறுத்திரு! மாறிவிடும் பார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு!
----------------------------------------------------------
அம்மா உணவகம் எல்லோர்க்கும் நல்லதுதான்!
அம்மா! நடுத்தர ஏழை குடும்பத்தைப்
பந்தாடும் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்!
புண்ணியம் கோடிகோடி உண்டு.

10000000
00000001
--------- -------------------
ஒன்றைத் தொடர்ந்தேதான் பூஜ்யங்கள் ஏழிருந்தால்
என்றும் தலைவராக கோடீஸ்  வரரிங்கே!
ஒன்றிங்கே பூஜ்யத்தைத் தொடர்ந்திருந்தால் மக்களாக
என்றும் தெருக்கோடி தான்.

Saturday, June 06, 2015

தோல்வி முகட்டில்!
-----------------------------------
வெற்றிப் படிகளில் வாழ்க்கை எனநினைத்துக்
கொட்டி முழக்கிய நேரத்தில்--தட்டிவிட்டுத்
தோல்வியின் தோள்களில் ஏற்றிப் பறந்திருந்தால்
வாழ்க்கையே தோல்விதான் கூறு

தீண்டாமை வேண்டும்!
--------------------------------------------
தீண்டாமை வேண்டாமே என்றேதான் சொன்னாலும்
தீண்டாமை வேண்டுமென்றே கூத்தாடும் கூட்டத்தார்
ஆண்டது போதுமே! வாக்களிக்கக் கேட்டுவந்தால்
தீண்டாதே நாடே! ஒதுக்கு.

முரண்!
--------------------
குளிரூட்டப் பட்ட அறையில் இருந்தும்
வழிந்தோடும் வியர்வை சூடாக என்றால்
பிழிந்து கசக்கித் துவட்டும் கவலை
அளிக்கும் அழுத்தங்கள் தான்.

சந்தேக நோய்!
-------------------------------
காமாலை நோய்வந்தால் காண்பதெல்லாம் மஞ்சளாகும்!
நாமிங்கே சந்தேகம் கொள்ளத் தொடங்கிவிட்டால்
தேனிங்கே கசப்பாகும்! ஈனமனம் ஆட்சிசெய்யும்!
ஊனமனம் வேண்டாம் உணர்.

Friday, June 05, 2015

மதங்களை மற!
---------------------
பிரிவுகளை ஏற்படுத்திப் பார்க்கும் மதங்கள்!
பிரிவுகளை ஒன்றாக்கிப் பார்க்கும் மொழிகள்!
மொழியுணர்வைப் போற்று! மதவுணர்வைத் தூற்று!
மொழிகளே ஒற்றுமையின் வேர்.

சோதனைச் சாட் டை!
----------------------------- -----
கிடுகிடு பள்ளத்தைப் பார்த்தேன்! நகர்ந்தேன்!
திடும்திடும் என்றே விழுந்தது பாறை!
ஒடுங்கி விலகினேன்! வீசிய காற்றோ
பிடுங்கி எறிந்தது தென்னை மரத்தை!
நடுங்கி நிலைகுலைந்தேன் நான்.

தென்றல் வீசும்

வாழ்வில் தென்றல் வீசும்!
--------------------------
பெரியோர்கள் கூறும் அறிவுரைகள், நல்ல
வழிகாட்டும் என்றேதான் நம்பவேண்டும் கண்ணே!
கவிழ்க்கின்ற எண்ணம் அவர்களுக் கில்லை!
புரிந்துகொள்! தென்றலாகும் வாழ்வு.

கண்ணுக்கினியை!
--------------------
அழகான தேரொன்றைத் தேரடியில் கண்டேன்!
அழகை அணுஅணுவாய்ப் பார்த்து ரசித்தேன்!
அழகான தேருக்கோ அச்சாணி இல்லை!
அழகிருந்தும்  என்னபயன்? சொல்.

Monday, June 01, 2015

ஏனிப்படி?
--------------
நிம்மதி இல்லாத வாழ்க்கை என்றும்
நிம்மதி இல்லாத வாழ்க்கை

என்ன நடக்குது இங்கே ஒன்றும்
புரியவில்லை
எதற்கு நடக்குது இங்கே அதுவும்
தெரியவில்லை

நடப்பதைத் தடுக்கும் அறிவுரையால்
தடுக்கவும் முடியவில்லை
நடக்கட்டும் என்றே சும்மா வேடிக்கை
பார்க்கவும் முடியவில்லை

வாழ்க்கை என்பது இதுதானா?
வேதனை என்றும் நிலைதானா?

வாழத்தானே பிறந்துவிட்டோம்
வாழ்ந்தே காட்டிடுவோம்
கோழைத் தனமாய் ஓடாமல்
சோதனையின் கொம்பொடிக்க வழிகாண்போம்!

திருந்து!
----------------
குடிப்பது தப்பு! குடிப்பதற்குத் தூண்டிக்
குடிக்கவைத்துப் பார்ப்பதும் தப்பு! குடும்பம்
துடித்து வதங்குவதைப் பார்த்தும் திருந்தும்
அறிவின்றி வாழ்வதா? சொல்.

தள்ளாட்டம்!
----------------
சராசரி வாழ்வில் கவலைப் படாமல்
உலாவர நாமே விரும்பினாலும் நம்மைத்
துழாவித் துடிக்கவைக்கும் நாளும் கவலை!
விழாத குறைதான் நடை.

மனவலிமை கொள்!
---------------------------------------
எந்தநோய் வந்தாலும் என்னசெய்யப் போகின்றோம்?
அந்தந்த நோய்க்கு மருந்துவாங்கி சாப்பிடுவோம்!
வந்தநோயைச் சந்தித்து வாழும் மனவலிமை
ஒன்றே குணமாக்கும் கூறு.

தாங்குமா?
--------------
கல்லழுத்திக் கால்வலிக்கும் நேரத்தில் கண்மணியே!
முள்குத்தி வேதனைக்குத் தூண்டிலிட்டுப் பார்ப்பதேன்?
நல்ல மணற்பரப்போ என்றே நடந்தபோது
பள்ளம் இழுத்தது பார்.