Wednesday, February 24, 2016

கருத்து அன்பளிப்பு
பாலா

தாவர இயல்படித்தேன் வேலை கிடைக்குமென்று!
தாவரம் என்மேல் பரிதாபப் பட்டது!
ஆவலுடன் நானோ அரசியலில் சேர்ந்துவிட்டேன்!
தாவர இயல்தான் கைகொடுக்க ஆகாகா
தாவரேன் தாவரேன் நான்.

(JUMPING ART)




           தமிழறிஞர் சாலமன் பாப்பையா

                அவர்களுக்கு அகவை
                            80
                      22.02.2016
--------------------------------------------------------------
பட்டிதொட்டி ஊரெல்லாம் நாடு நகரெல்லாம்
பட்டிமன்றத் தேரோட வைத்தவரே! ஆசானே!
பட்டிமன்ற தென்றலே! அன்பகமே! பண்பகமே!
நற்றமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.

தடைசெய்!
( JUNK FOOD)
----------+--------------
குப்பை உணவுகளைச் சாப்பிடக் கூடாது!
பட்டியலிட்டுச் சொன்னார் மருத்துவர்! ஆசிரியர்!
அப்படியே தொங்கவிட்டு விற்கின்றார் அங்கங்கே!
அப்பப்பா பிள்ளைகள் வம்படி தாங்கல!
குப்பை உணவை அரசும் நலத்துறையும்
இப்படியா விற்க விடுவது? நற்றமிழே!
தப்பைத் தடைசெய்யச் சொல்.
-------------------------------------------------------------------------------------



நெறிபிறழாதே!
----------------------------------------------
அறிவை நெறிப்படுத்தும் கல்வி! அழகை
நெறிப்படுத்திக் காட்டுவதே ஆடை! ஒழுங்கை
நெறிப்படுத்திக்  காட்டும் குறள்கள்! தமிழே!
நெறிபிறழ்ந்தால் தாழ்வே! உணர்.

இதுதான் வாழ்க்கை!
-------------------------------------------
நேற்றைய  வாழ்க்கை புயல்மழைதான்! ஓய்ந்தேதான்
நேற்று கடந்ததும் இன்று மலர்ந்திருக்கும்!
நேற்று கடந்ததா என்றே வியந்திருப்போம்!
ஏக்க மும் தீர்ந்திருக்கும் இன்று.

சென்றுவிட்ட நேற்று தெரியாமல் இன்றாலே
அங்கங்கேபார்த்தே பெருமூச்சு விடுகின்றார்!
வந்தவழி பார்க்காமல் வந்ததற்கு வாழ்த்தாமல்
கண்களாலே ஏசிடுவார்காண்.

Monday, February 22, 2016

இதுவா தமிழினம்?

தமிழினத்தைக் காப்பதற்குச்  சொன்னால் தமிழே!
தமிழன் மதங்களுக்குள் சாதி இனத்தை
இமைபோல காப்பதற்குப் பாடுபடும் போக்கை
அமைத்தே அலைவதேன்? சொல்.

முரண்கள்!

திறமைகள் உண்டு சிறப்புகள் இல்லை!
சிறகுகள் உண்டு பறப்பதற் கில்லை!
திறமைகள் இல்லை சிறப்புகள் உண்டு!
சிறகுகள் இன்றிப் பறந்திட வாய்ப்பு!
நடைமுறை இப்படி ஏன்?

                                      படையெடுக்கும் மாசுகள்!

புகையும் ஒலியும் நெகிழி எரிப்பும்
மடைதிறந்த வெள்ளமாய்ச் சாயக் கழிவும்
படையெடுத்துத் தாக்கித்தான் மூச்சுத் திணற
கடைவிரித்துக் காத்திருக்கும் காண்.

இத்தகைய மாசுகளின் ஊற்றுக்குள் நாமெல்லாம்
எப்படியோ வாழ்கின்றோம்!ஓசோன் படலத்தை
முற்றிலும் பாதிக்கும் என்றேதான் எச்சரித்தும
                                  அக்கறை காட்டவில்லை! ஏன்?

        மழலை வியூகம்!

கோடிக் கதிபதியா? கோடியில் உள்ளவரா?
ஓடிவா என்றால் வரவேண்டும்! பாடிவா
ஆடிவா என்றால் வரவேண்டும்! யானைபோல்
நாடிவா என்றால் வரவேண்டும் மீறினால்
பாடிவீடு கட்டி நடுங்கவைத்துப் பார்த்திடும்
ஈடில்லா தேன்மழலைச் சிட்டு.


Sunday, February 21, 2016

துன்பம் நேர்கையில் யாழெடுத்து
----------------------------------------------------------------
வெந்து தணிந்தது காடெனினும் நீறுபூத்த
செந்தணல் அங்கே புகைந்துக் குமுறிட
அங்கங்கே முக்கல் முனகல்கள்! திக்கெட்டும்!
செம்மொழி யானதற்குப் பின்?

Saturday, February 20, 2016

உலகத் தாய்மொழி நாள்

21.02.2016

தாய்மொழிச் செந்தமிழ் நூறாண்டில் காணாமல்
போய்விடும் எச்சரிக்கை நல்லதுதான்! தாய்நாடே!
தாய்த்தமிழைக் காப்பதற்குத்  தக்க நடவடிக்கை
சேய்ப்படிப்புப் பள்ளிமுதல் கல்லூரிக் கல்விவரை
ஆழ்ந்தேதான் சிந்தித் தெடுக்கவேண்டும் சான்றோர்கள்!
தாய்மொழி நாளின்றே சூளுரை மேற்கொள்வோம்!
தாய்த்தமிழைக் காப்போம்  இணைந்து.

குழந்தை மனம் பெறுவோம்

குழந்தை மனமிருந்தால் உற்சாகம் கொண்டே
உளைச்சலின்றி வாழலாம்! மாறாக இங்கே
குழந்தைத் தனங்கொண்டு வாழ்கின்ற மாந்தர்
உளமெல்லாம் மண்டும் களை.

We should have child-like minds
And not childish minds.
Childishness enrich the weeds to grow.

திருந்து! திருத்து!

உலகைத் திருத்தப் புறப்பட்டேன்! எந்தன்
நிழலோ, திருந்தவில்லை நானின்னும் நீயேன்
உலகைத் திருத்தப் புறப்பட்டாய்? என்றே
மலைத்திடச் செய்தது பார்.

When i thought of correcting the world
My shadow giggles and said
Even i am not correct
How can you correct the world?
I stood stunned.


வீண்

நிலையாமை ஒன்றுதான் நிலையான தாகும்
நிலைக்காத ஒன்றை நிலைத்ததாய் எண்ணி
அலைகின்றார் எங்கெங்கோ! என்னதான் இங்கே
அலைந்தாலும் வீணென் றுணர்.

Transitoriness is only permanent on this earth
People are wandering hither and thither for
The things of transitory nature!
Their frantic excitement is nothing but waste.

நம்பு!

சூழ்நிலைகள் சாதகமா? எல்லாம் நெருங்கிவரும்!
சூழ்நிலைகள் பாதகமா? எல்லாம் விலகிவிடும்!
வாழ்க்கையில் மாற்றத்திற் கேற்றவாறு வாழவேண்டும்!
வாழவைக்கும் வாழ்க்கை! உணர்.



மூதிளைஞர்

தேருலா போன்றதே வாழ்க்கை! நகர்ந்தேதான்
தேரும் தடைகளைத் தாண்டி நிலைசென்று
சேரும் பொழுதுநாம் மூதிளைஞர் கோலத்தில்
ஊர்ந்து தளர்ந்திருப்போம் இங்கு.



எந்தவொரு கூட்டத்தைக் கூட்டினாலும் என்றுமே
சொன்னநேரந் தன்னில் தொடங்குவார்! சொன்னநேரந்
தன்னில் முடித்திடுவார்! இத்தகைய ஆற்றலைக்
கண்டேன்! வியந்தேன்! மகிழ்ந்து.

தயக்கம் ஏன்?

வளராத நாடு வளர்கின்ற நாடு
வளர்ந்தநாடு மூன்றில் மனமொன்றிச் சேர்ந்து
வளர்ந்த வளர்கின்ற நாடுகள் எல்லாம்
வளராத நாட்டை வலுப்படுத்த வேண்டும்!
வளர்ந்தவைக் கேன்தயக்கம்? சொல்.

Under developed , developing and developed Nations are there.
Developed and developing nations should help and strengthen the underdevoloped.
Why developed nations hesitate?



மாசகற்று

ஏசலும் பூசலும் ஈசலாய் மாறிவிட்டால்
தேசத்தில் கூச்சல் குழப்பங்கள் உண்டாகும்!
ஊசலாடும் ஒற்றுமையின் வேரினங்கள்! செந்தமிழே!
மாசுகளில் தத்தளிக்கும் நாடு.


இந்தியா!

வடஇமயம்  தென்குமரி மேற்கரபி மற்றும்
தகத்தகாய வங்கம் கிழக்காய் திசைகள்
மகத்தான எல்லைகள்! இந்திய நாட்டைச்
சிறகுகளாய்க் காக்கும் அரண்.



மனைவி

இல்லற வாவியில் கொட்டியும் ஆம்பலுமாய்
உள்ளவள் என்றும் மனைவியே-- தள்ளிநிற்கும்
புள்ளினமாய் இங்கே  பறப்பவர்கள் மற்றவர்கள்!
இல்லாள் இருப்பே உயிர்.

Wednesday, February 17, 2016

நல்லதற்கே

குளவிக் குழந்தையைக் காப்பதற்குத் தானே
தயங்காமல் மற்றவரைக் கொட்டும்! வாழ்க்கைக்
களத்தில் குறைகளைக் கண்டிக்கும் போக்கோ
அவனியில் வாழவைக்கத் தான்.

Tuesday, February 16, 2016


தாமரை தனது
கடமையைச்
செய்கிறது
தண்ணீர்
தனது கடமையைச்
செய்கிறது
ஆனால்
இரண்டும்
ஒட்டுவதில்லை
இல்லறத்தில்
துறவறம்
இதுதான்

ஊழலின் தேரோட்டம்!

ஊழலுக்கு ஊழல் உறவாடும் ஊழலில்
ஊழலே ஊழலைப் பாராட்டி ஊழலுடன்
ஏளனமாய்ப் பார்த்தே நமட்டுச் சிரிப்பாலே
ஊழலை வாழ்த்தியதாம் பார்.

இன்சொல்லே இல்லறம்
----------------------------------------------
கடுகடுப்பைக் காட்டும் முகமும், உணர்ச்சி
சிடுசிடுக்கக் கொட்டுகின்ற சொற்களும், நாளும்
குடுகுடுப்பைப் போன்ற முணுமுணுப்பும் வீட்டைப்
படுத்தி எடுத்துவிடும் பார்.

காக்கா



இந்தக் காக்கா
என்னைக்
காக்கா பிடிக்கிறது
எழுத உட்கார்ந்தால்
சாளரம் வழியே
எட்டிப் பார்த்து
கரையும்!
வெளியே சென்றால்
இப்படி
வெளிச்சுவரில்
அமர்ந்து
கரையும்!
கரைதலின்
பொருள்?
போடப் போட
பசிக்கிறதோ?
பசியின் குரலா?
போட்டதற்கு
நன்றி நவிலலா?


மாசிலன்


மாசிலன்
------------------+
சேர்வாரோ என்பதுபோல் பிள்ளைகள் தங்களுக்குள்
போர்க்களம்போல் சண்டையிட்டுக் கொள்வார்! என்றாலும்
சேர்ந்தே சிரித்து மகிழ்வார் அடுத்தநொடி!
பால்மனத்தின் பண்பைப் பழகு.

High pitch battlelike brawl erupts between children!
They forget in a second and go hand in hand!
Elders should learn this from children!
Enmity withers and amity blossoms.

முகநூல் மோகம்

முகநூலில் மூழ்கி இருக்கின்ற தாயே!
  முகத்தைத் திருப்பியென்னைப் பாரேன்! நானோ
உடற்குளியல் தொட்டியில் இன்னும் கிடந்தும்
மறந்தனையோ என்னைத்தான் நீ?

குறள் 555

அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
---------------------------------------------------------------
ஆட்சி உருவாக்கும் அல்லல் சகதியில்
மாட்டித் துடித்திடும் மக்களின்-- சீற்றமிகு
கண்ணீரே,ஆட்சியாளர் காத்திருக்கும் செல்வத்தை
மண்ணாக்கும் ஆயுத மாம்.

Simmering tears of subjects  who are wriggling
under the torturous grips of the Government
Are the powerful wepon to ruin the same.

முதல் கோணல்
---------------------------------
தொடக்கத்தின் புள்ளி சரியாய் இருந்தால்
தொடர்ச்சியின் புள்ளி சரியாகப் போகும்!
தொடக்கம் தவறானால் முற்றும் பிழையாகும்!
தொடக்கம், முடிவின் தளம்.

Beginning dot should be correct!
Then the following dots will be correct!
If beginning is wrong then the end collapses.
Beginning is the base for end.

Sunday, February 14, 2016

சதுரங்க ஆட்டம்!

வாழ்க்கை என்னும் சதுரங்க ஆட்டத்தில்
யார்முந்தி? யார்பிந்தி? யார்வெற்றி? யார்தோல்வி?
யார்யாரோ முந்துவார் !பிந்துவார்! என்செய்ய?
வாழ்க்கை சதுரங்கந் தான்.

Life is a chess game!
In that game
Who moves first ? Who moves last?
Somebody goes forward somebody lags behind
What to do?
Life is just a chess play.

குறள் 542

வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.
--------------------------------------------------------------
வாழும் உயிரினங்கள்  வானமுதத்
தேன்மழையை
நாளும் எதிர்பார்த்து நாட்டிலே-- வாழ்வார்
குடிமக்கள் நேர்மையாய்க் கோலோச்சும் ஆட்சிக்
கொடிநாடி வாழ்ந்திடுவார் கூறு.

The global living beings
depend on rains from clouds
for living.
A country' s subjects depend on
 honest and just Government for living.

பண்புத்தொகை

பண்புத்தொகை

செம்மை பசுமையும் வெண்மை கருமையும்
கண்ணைக் கவரும் நிறத்தைக் குறிப்பதா கும்!
தண்மதியே! வட்டம் சதுரம் எனவருதல்
பண்பில் வடிவம் குறிப்பதாகும் பார்பார்பார்!
நன்மையும் தீமையும் மாந்தரின் குணக்குறிப்பாம்!
ஒன்றை இரண்டைக் குறிப்பதெல்லாம் எண்ணிக்கை
அம்மா! இவையுடன் சேர்ந்த பெயர்ச்சொற்கள்
பண்புத் தொகையாம் உணர்.

ஆகுபெயர்

பொருளும் இடமுடன் காலம் சினையும்
அருந்தமிழ்ப் பண்பும தொழிலும் அளவை
பெருமைமிகு சொல்லுடன் தானியம் மற்றும்
கருவியும் காரிய வாகு பெயரும்
கருத்தா உவமை இன்னபிற வாக
வருவதே ஆகு பெயர்.

தமிழ் இலக்கணம்

அன்மொழித்தொகை!
-----------------------------------------------
பொற்கொடி பொன்னொளி வீச, கருங்குழல்
தொட்டுத் தொடர்ந்திட, தாழ்குழல் ஊசலாட,
பட்டுத் தரையைத் தழுவத் துடியிடை
சுற்ற  நடைபயின்றாள்  மாது.

விடியல் நிச்சயம்!
-------------------------------------
கதிரவனைக் கண்ட பனித்துளி போல
நொடிப்பொழுதில் துன்பம் மறைந்துவிடும் இங்கே!
இதுவும் கடந்துபோகும்! வாழ்க்கை இதுதான்!
புதுவிடியல் நிச்சயம் உண்டு.

குழந்தை மனம்!

ஊடலும் கூடலும் காதலுக்கு மட்டுமா?
மோதலுக்குத் தோள்நிமிர்த்தி சண்டையிட்டே ஊடிநிற்கும்
வேகமான பிள்ளைகள் எல்லாம் மறந்துவிட்டே
கூடலுக்குள் கூடுகட்டி அங்கே மகிழ்ந்திருப்பார்!
ஊடல் நொடிப்பொழுது தான்.

உலகத் தமிழ்ச்சங்கம் வாழ்க! வளர்க!

தமிழின் இமைகளாகி செந்தமிழ்த் தொண்டில்
தமிழ்ச்சங்கம் ஈடுபட்டு வான்புகழ் எய்தே
தனித்தனமை பெற்றே தரணியில் வாழ்க!
தமிழ்த்தாய் மகிழ்கின்றாள் பார்.

துப்பாக்கி

துப்பாக்கி என்பதை வன்முறையின் சின்னமாக்கி
வக்கிரத்தில் வாழ்கின்றார் மாந்தர்கள்--- நற்றமிழே!
நம்பாட்டன் வள்ளுவரோ நல்மழையின் நற்பண்பின்
தன்மையாக்கிக் காட்டுகின்றார் பார்.

உண்மையை நம்பு!

அங்கே அவர்சொன்னார் இங்கே இவர்சொன்னார்
எங்கே எவர்சொன்ன போதிலும் சிந்தித்தே
உண்மை எனத்தெரிந்தால் ஏற்றுக்கொள்! இல்லையா
உண்மை எதுவென்று சொல்.

உட்பகை!
-------------------
நேற்றிருந்தோர் இன்றில்லை என்ற நிலையாமை
வீற்றிருக்கும் இவ்வுலகில் உட்பகையின் வக்கிரங்கள்
கூத்தாட்டம் போட்டேதான் வேடிக்கை பார்க்கிறது!
வீட்டுக்குள் போர்க்களங்கள் ஏன்?

தேன்!
------------
தவழ்ந்தேன் அமர்ந்தேன் எழுந்தேன் விழுந்தேன்
சுவரைப் பிடித்து நடந்தேன் உருண்டேன்!
அவசர மாகவே ஆடி அசைந்தேன்!
கவலைகள் இன்றியே துள்ளித் திரிந்தேன்!
உலகமே என்னிட ம் என்றே களித்தேன்!
வளர்ந்தேன்! வளர வளர தவித்தேன்!
தளர்ந்தேன்! பலதேன் மறைந்து.

அறிவியல் கவிதை

மிதப்பது எப்படி?

மிதக்கும் பொருளின் எடையும் பெயர்ந்தே
இடந்தரும் நீரின் எடையும்-- புறத்தே
சமமாய் இருக்கும்! கடலிலே கப்பல்
தினமும் மிதப்பதைப் பார்

Wednesday, February 10, 2016

பாவம்

ஆசுகவி காசுகவி யாகிவிட்டால் செந்தமிழே!
மாசுகவி தூசுகவி ஏசுகவி யாய்மாறி
தேசகவி வேடத்தைப் பூசுகவி என்றாகி
நீசகவி யாவார்  நிதம்.

கிளை!
----------------
மரக்கிளை தன்னில் கனிகள் தழைக்கும்!
உலவும் நதிக்கிளையில் தண்ணீர் தழைக்கும்!
ஒருதலைக் கைக்கிளை என்றால் மனதில்
பெருகும் தழைக்கும் தவிப்பு.

Tuesday, February 09, 2016

காலநேரம்!

எந்தச் செயலெனினும் செய்வதற்குக் காலநேரம்
கண்டுணர்ந்து செய்தால் கனிந்துவரும் வெற்றிகள்!
கண்டநேரம் கண்டபடி செய்தால் குழப்பங்கள்
என்றும் தொடர்கதைதான் பார்.

நாலிரண்டைப் போற்று!

போலித் தனத்தின் அடிமையாய் மாறவேண்டாம்!
கேலிப் பொருளாக மற்றவர்முன் நிற்கவேண்டாம்!
வேலிகளைத் தாண்டியே வேதனையை வாங்கவேண்டாம்!
நாலிரண்டை வாழ்வாக மாற்று.

தலைகுனிவு!

MUMMY DADDY AUNTY UNCLE
-----------------------------------------------------
உறவுகளைச் சொல்லி அழைப்பதில் கூட
மறந்தார் தமிழ்ச்சொல்லை தாயே!-- இடங்கொடுத்தால்
ஆங்கிலேய நாடாகும் பாப்பா! விழித்துக்கொள்!
ஏங்குகின்றாள் செந்தமிழ்த்தாய்! பார்.


                                                                 எந்தநூறு?
                                                               அகநாநூறா
                                                               புறநாநூறா
                                                             ஐங்குறுநூறா
                                                             இந்தநூறு எந்தநூறு?
                                                         
                                                           வாழ்க்கையைக் காட்டுது
                                                           அந்தநூறு
                                                         வாழ்க்கையை
                                                        ஆட்டுது
                                                        இந்தநூறு!

பசிக்கொடுமை!
--------------------------------
முந்தானைத் தொட்டில் முதுகிலே தொங்கிநிற்க
செங்கனித் தேன்மழலை எட்டித்தான் பார்த்திருக்கச்
செங்கற்கள் தம்மைத் தலையில் சுமந்தேதான்
அன்பான தாயோ  வயிற்றின் பசியடக்க
தன்னாலே ஆனமட்டும் நாளும் உழைக்கின்றாள்!
புண்படுத்தும் ஏழ்மையைப் பார்.

திருப்தி மனதில்!
---------------------------------
உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
தினமும் முயற்சிசெய்! வந்ததை ஏற்று
மனதில் திருப்தியுடன் வாழ்.

வறுமை!
------------------
நெடுஞ்சாலை ஓரம் மரக்கிளையில் தொட்டில்
குறுகுறுத்த கண்களுடன் தேன்மழலைச் சிட்டோ
படுத்திருக்க தென்றலின் தாலாட்டில் தூக்கம்,
கொடுத்துவைத்த தூக்கம் தழுவத் தழுவ
மெதுவாய் விழிமூடும் வைரச் சிமிழ்தான்!
நறுந்தமிழ்த் தாயோ வயலில் ஒருகண்
மறுகண் குழந்தைமேல்  மாறிமாறிப் பார்ப்பாள்!
வறுமை கொடிதென் றுணர்.

ஒளிமயமே!
-------------------------
புரிதல் உணர்வில் நெருடலில்லை என்றால்
துளிகூட வேற்றுமை துள்ளாது வாழ்வில்!
தெளிவான ஒற்றுமை தென்றலாய் வீசும்!
ஒளிமயந்தான் வாழ்க்கை உணர்.


If there is no dent in the mutual understanding,
 not even a drop of difference will surface.
 Clarity of concord will embrace like breeze.
 Lif e is always bright.

செருக்கு!

இரும்பை அழித்தல் கடினந்தான்! ஆனால்
இரும்பின் துருவே இரும்பை அழிக்கும்!
ஒருமனிதன் இங்கே அழிவதெல்லாம் துள்ளும்
செருக்கினால் என்றே உணர்.

Iron rod cannot be spoiled generally
But its own rust will spoil the rod.
Likewise the Ego  spoils the human beings.

கண்கொள்ளாக் காட்சி
----------------------------------------------
முன்றில் பரப்பில் அணில்களின் கூட்டமோ
அங்குமிங்கும் துள்ளி விளையாட, காகங்கள்,
வெண்புறாக்கள் மற்றும் குருவிகள் சேர்ந்தாட
கண்கொள்ளாக் காட்சிதான் காண்.


கேள்விக் குறிகள்?

வாழ்க்கையில் கேள்விக் குறிகள்? விடைகாணலாம்!
கேள்விக் குறிகளே வாழ்க்கையானால் அத்தகைய
வாழ்வில் விடைகளை யார்தருவார்? நற்றமிழே!
கேள்விக்கு கேள்வி விடை!

கனவுகள்

கனவுகள்
--------------------
படிக்கும் பருவத்தில் நாளும் கருத்தாய்ப்
படிக்கும் கனவை நினைவாக்க வேண்டும்!
அறிவுத் திறனை வளர்த்தே உயர்ந்தால்
நெறியுடன் வாழலாம் இங்கு.

நாமிங்கே என்னவாக வேண்டும் என்பதை
நாம்காணும் கல்விக் கனவுதான் நிர்ணயிக்கும்
காண்பதில் ஆக்கபூர்வ மான கனவுகளே
ஊன்றிக் கனியும் உணர்.

பேராசை வண்ணக் கனவுகள் கானலாகும்!
போராடி வெற்றிபெறும் ஆற்றல் கனவுகளே
சீரான வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டும்!
போராடு உன்வசமே வாழ்வு.

வேகத்தை விட்டே விவேகத்தைத் தேர்ந்தெடு!
மோகக் கவர்ச்சியெல்லாம்  வாழ்வின் தடைக்கற்கள்!
ஆக்கமும் ஊக்கமும் நம்கனவின் ஆதாரம்!
ஊற்றெடுக்கும் வெற்றி உணர்.

கனவுகாணச் சொன்னவர் அப்துல் கலாம்தான்!
கனவிலும் ஆக்கபூர்வச் சிந்தனைகள் வேண்டும்!
கனவுகள் மெய்ப்படும்! தாய்தந்தை ஆசான்
மனமகிழ்வார் ஆசி பொழிந்து.

Thursday, February 04, 2016

குறுந்தொகைப் பாடல் 2
------------------------------------------------
கொங்குதேர் வாழ்க்கை
----------------------------------------------------
தும்பியே! நாள்தோறும் பூவினத்தைச் சுற்றுகின்றாய்!
வண்ணமலர் ஏந்தும் நறுமணங்கள் நீயறிவாய்!
என்மீது நட்பைப் பொழிந்தும் மயில்சாயல்
கொண்டு நெருங்கிய பற்களைக் கொண்டவளும்
என்னுடைய அன்பரசிக் கூந்தல் நறுமணத்தை
விஞ்சும்  மலர்களுண்டோ சொல்.

சலனத்தை வெல்!
---------------------------------------
நல்லதைப் பார்க்கவும் நல்லதைக் கேட்கவும்
நல்லதைப் பேசவும் நல்லதை எண்ணவும்
உள்ளன கண்களும் காதுகளும் செந்நாவும்
உள்ளமும் ! நற்றமிழே தாறுமாறாய் எள்ளளவும்
கள்ளத் தனத்திலே ஈடுபட்டால் பேரழிவுப்
பள்ளத்தில்  வீழ்ந்திடுவோம் பார்.

Eyes are there  to see good things
Ears are there  to hear good things
Tongue is there to speak good words
Mind is there  to think positively
If anyone goes berserk
That is the be  all and end all!

பெண்குறள்

அன்பிலே மென்மையும் கற்பிலே திண்மையும்
தன்னகத்தே கொண்டவள் பெண்.

நிகரில்லா முப்பால்
-----------------------------------------
அறத்துப்பால் வாழ்வில் படிப்பாகும்
தாயே
சிறக்கும் பொருட்பால் பணிக்கள மாகும்
சிறகடிக்கும் இல்லறம் இன்பத்துப் பால்தான்!
மகத்தான முப்பாலே வாழ்வு.

VIRTUE CHAPTERS FOR
 LEARNING AND CONTROLLING
WEALTH CHAPTERS FOR
 EARNING AND SHARING
LOVE CHAPTERS FOR
 MUTUAL  LIVING AND UNDERSTANDING

 நா காக்க
--------------------
பூட்டுக்கு மேல்பூட்டு வீட்டுப் பொருள்களைக்
காப்பதற்குப் போடுகின்ற மாந்தரே! வாய்க்கொரு
பூட்டுபோட்டு நாகாக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டால்
வீட்டுக்குள் நாட்டுக்குள் வம்பில்லை தும்பில்லை!
காக்கவேண்டும் நாவடக்கந் தான்.

தீண்டாமை நன்று!

நற்றமிழைத் தீண்டலாம் நற்பண்பைத் தீண்டலாம்
கற்றதைத் தீண்டலாம்கவிதைகளைத் தீண்டலாம்
வெற்றியைத் தீண்டலாம்  தோல்விகளைத் தீண்டலாம்
முற்றுமுன்னைச் சீரழித்துப் பார்க்கும் மதுவினத்தைச்
சற்றும்நீ தீண்டாமை நன்று.