Thursday, February 28, 2019

பெருந்தன்மை!

நெருங்குதலும் தப்பு! விலகுதலும் தப்பு!
நெருப்பில் குளிர்காய்தல் போலப் பழகு!
விருட்சமாகும் நட்பும் உறவும்  தழைத்து!
பெருந்தன்மை ஒற்றுமையின்  வேர்.

விருத்தோம்பல்!

குறள் 41 ( குறள் எண் 90)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அம்மா அம்மா என்னம்மா
குறளுக்குப் பொருளென்ன கூறம்மா!

விருந்துக்கும் பூவுக்கும் உறவென்ன
விளக்க மாகக் கூறம்மா!

தமிழே! அமுதே! கண்ணம்மா!
அருகில் வந்தே கேளம்மா!

நம்மைத் தேடி வருகின்ற
விருந்தின ரையோ முகம்மலர

வருக என்றே வரவேற்றால்
வருவோர் மகிழ்ச்சியில் திளைத்திடுவார்

ஏனோ தானோ என்றேதான்
விருந்தின ரைத்தான் வரவேற்றால்

முகர்ந்து பார்த்தால் வாடிவிடும்
அனிச்சம் பூபோல் விருந்தினரின்

முகமும் இங்கே வாடிவிடும்!
விரைந்து  வெறுத்தே சென்றிடுவார்!

இதுதான் குறளின் பொருளம்மா!
வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால்

மகிழ்ச்சி யுடனே வரவேற்கும்
மாண்பை நீயும் கற்றுக்கொள்!

நன்றி நன்றி என்னம்மா!
நன்கு விளக்கம் தந்துவிட்டாய்!

Wednesday, February 20, 2019

எல்லையே அழகு!

அளவான உப்பே அருமைச் சுவையாம்!
அளவற்ற உப்போ முகஞ்சுழிக்க வைக்கும்!
அளவுகள் எல்லையை மீறினால் தொல்லை!
இயற்கையின் எல்லை அழகு.

Sunday, February 17, 2019

புதுமனை புகுவிழா வாழ்த்து!

17.02.2019

இணையர்:
கார்த்திகேயன்-- தேவிகாராணி
மகன்: சஞ்சய்

உழைப்பும் திறமையும் மூலதன மாக
சளைக்காமல் நல்லுழைப்பால்  முன்னேறி இன்று
கலைமிளிரும் புத்தம் புதுவீட்டில் நீங்கள்
நுழைகின்ற மங்கலத்தை வாழ்த்துகின்றோம் நாங்கள்!
வளம்சூழ வாழியவே நீடு.

பெற்றோர் பெரியோர்கள் உற்றார் உறவினர்கள்
சுற்றிநின்று வாழ்த்திசைக்க வாழியவே பல்லாண்டு!
இத்தரணி மெச்ச இணையரும் சஞ்சயும்
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
ரவி-- சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்-- சத்யபாமா--
நிக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா

சூழ்நிலை

வாழ்க்கை முறைகளும் சூழ்நிலையும் சாதகமாய்த்
தோள்கொடுத்தால் வாழ்க்கை எளிதாகத் தோன்றுமிங்கே!
ஊர்வலம் எல்லாமே கொண்டாட்டப் பாதைதான்!
சூழ்நிலைகள் எல்லாம் எதிர்மறை யாகிவிட்டால்
சோர்வுடனே தள்ளாட்டந் தான்.

அம்மாவின் நினைவு நாள்



என் அம்மாவின் நினைவுநாள்!

திருமதி. தேவகி முத்துசுப்பு

14.02.2019

"இன்னும் தயவு வரவில்லையா?
உனக்கென் மீது என்னவர்மம் சொல்லையா"!

என்று கசிந்துருகி கண்ணீர் மல்க
பாடுவாயே!
அந்தக் கணீர் குரலை மீண்டும் கேட்பேனா?
முடியாது எனத் தெரிந்தும் விரும்புகிறேனே!

நீ இருந்த போதே எனது கவிதை
நூல் வெளியீட்டில் கலந்துகொண்டாய்!
என்மகன் கவிராஜன் என்று மற்றவர்கள்
சொல்கின்றார் பெருமைதான்
என்று அன்று நீ சொன்னது என் செவிகளில் இன்றும் எதிரொலிக்கிறது அம்மா!
இதுதான் எனக்குக் கிடைத்த உயர்ந்த
விருது அம்மா!

எல்லாம் இருக்கிறது! எல்லோரும் இருக்கின்றோம்!
ஆனால் நீ?
இல்லையே எங்களுடன்!
காலக் கொடுமை!

உன்னை மனத்தால் வணங்குகிறோம் அம்மா!

என்றும் உன் நினைவுடன்
உன் மகன்
பாபாஜி
உடன் வணங்கும்
மருமகள் வசந்தா
மற்றும் குடும்பத்தார்

மனிதத்தேனீ சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்போல் வாழ்க பல்லாண்டு!

13.02.2019

மதுரை நகரின்  முகவரியே! என்றும்
நடுநிலைப் பண்பின் அகவரியே! நாளும்
கடமை,உழைப்பில் மனிதத்தே னீயே!
புகழுடன் வாழ்கபல் லாண்டு.

தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டுத் தாய்மகிழ
அன்புடன் இல்லறத்தை இல்லாள் அழகுசெய்ய
பிள்ளை இராம்குமார் பெற்றோர்  வழிநடக்க
நல்லதொரு நற்குடும்பம் பல்கலைக்
கூடமாக
பல்லாண்டு வாழியவே நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

குழந்தைக்குக் குறளமுதம் !

குறள் 80:

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அப்பா அப்பா பாரப்பா
பூங்கா காவல் காரரு

எரிஞ்சு எரிஞ்சு விழறாரு
அடிக்க ஓடி வர்ராறு!

அன்பா ரெண்டு வார்த்தைகள்
சொல்லிக் கேட்டதே இல்லப்பா!

அன்பே வாழ்வின் உயிர்நிலையாம்!
உள்ளம் ஏந்தும் உயர்நிலையாம்!

அன்பே இல்லா மானிடரின்
உடலோ போற்றும் உடலல்ல!

தோலால் போர்த்திய வெற்றுடம்பாம்!
எந்தப் பயனும் இல்லையம்மா!

 இந்த மாதிரி அன்பற்ற
மனிதரைப் பற்றித் தெளிவாக

பாப்பா! வள்ளுவர் தாத்தாதான்
இந்தக் குறளில் சொல்றாரு!

ஆகா உண்மை தானப்பா!
விளங்கிக் கொண்டேன் நன்றிப்பா!

குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு.

அப்பா அப்பா குறளுக்கு
உரிய பொருளைக் கூறப்பா!

அப்பா அப்பா அங்கேபார்!
அழகான மாமா பார்!

ஆடை எல்லாம் அழகுபார்!
அந்தப் பாப்பா அவர்குழந்தை!

பள்ளிக் கருகில் வந்ததுமே
குழந்தை சாக்லேட் கையாலே

அவரை அழுக்கு செஞ்சதால்
அன்பே இன்றி அடிக்கின்றார்!

பாவம் அந்தப் பாப்பாவோ
அழுது கொண்டே போகுதே!

உள்ளத் தன்பே அழகாகும்!
அந்த அழகே இல்லாமல்

வெளியில் உள்ள உறுப்புகள்
அழகாய் இருந்து என்னபயன்?

இதுதான் இந்தக் குறளுக்கு
உண்மைப் பொருளாம் கேட்டுக்கோ!

குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பாலை வனத்தில் ஏனம்மா
பசுமை மரங்கள் வளர்வதில்லை?

பாலை வனத்தில் நீரில்லை!
நீரில் லாத நிலத்தினிலே

பட்ட மரங்கள் தழைப்பதில்லை?
அதுபோல் உலக வாழ்க்கையிலே

அன்பே இல்லா நிலையிருந்தால்
பாலை வனம்போல் வெறுமைதான்!

அன்பே வாழ்வின் உயிரோட்டம்!
அன்பை வளர்க்கக் கற்றுக்கொள்!


குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

மகளே மகனே கேளுங்கள்!
வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்!

இரக்கம் கருணை உள்ளநெஞ்சில்
அன்பு என்றும் உறவாடும்!

நல்ல நல்ல பண்புகளும்
நீதி நேர்மை  வாய்மையும்

மனித ஒழுக்க நன்னெறியும்
வாழ்வில் அறமெனச் சொல்கின்றோம்!

இதனை விட்டு நெறிபிறழ்ந்தால்
நமது மனமே புண்படுத்தும்!

வெய்யிலில் காயும் புழுவைப்போல்
அய்யோ என்று துடிப்போமே!

மனமே வாட்டி எடுக்குமே
உளைச்சல் மனத்தில் குடியேறும்!



Saturday, February 09, 2019


குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

இந்தக் குறளின் கருத்தைநீ
அம்மா எனக்குச் சொல்வாயா?

அறத்தைச் செய்ய அன்புவேண்டும்
மறத்தைச் செய்யவும் அன்பென்னும்

அளவு கோல்தான் புரியவில்லை
அம்மா கொஞ்சம்  சொல்லித்தா!

கருணை இரக்கம் இதயத்தின்
கருப்பொரு ளாக  மாறிவிட்டால்

அன்பு சுரந்து ஊற்றாகும்!
அறத்தைச் செய்ய துணையாகும்!

நாட்டின் மீது அன்புகொண்டே
நாட்டை வீரர் காக்கின்றார்!

பகைவர் நாடைத் தாக்கவந்தால்
வீரத் தோடு போர்புரிவார்!

அன்பின் வலிமை வீரந்தான்!
அறத்தின் அன்பு ஈரந்தான்!

அறமும் மறமும் தழைப்பதற்கு
அடிப்படை இங்கே அன்பாகும்!

நாட்டைக் காப்பதும் அன்பாகும்!
வீட்டைக் காப்பதும் அன்பாகும்!

இல்லறந் தன்னில் அன்பிருந்தால்
நல்லறந் தன்னைக் கடைப்பிடிப்போம்!

விவேகம் கலந்த வீரத்தால்
நாட்டைக் காப்பது அன்பாகும்!

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 75:

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அம்மா அம்மா பாரேன்!
அந்த வீட்டைப் பாரேன்!

நாரு போட்ட கட்டில்தான்
நாலு பேரு உட்கார்ந்து

சிரிச்சுப் பேசி இருக்காங்க
தினமும் பாத்து  ரசிக்கிறேன்!

குடிசை வீட்டில் இருந்தாலும்
கூடி வாழும் பண்பிருக்கே!

நமக்கு நிறைய இருந்தாலும்
இப்படிச் சிரிக்க முடியல!

ஏனம்மா ?  என்னம்மா!
காரணத்தச் சொல்லம்மா!

அவர்க ளது உள்ளத்தில்
அன்பு நிறைய இருப்பதால்

இன்பமாக சிரிக்கின்றார்!
துன்பத்தை மறக்கின்றார்!

அன்பின்றி வாழ்பவர்கள்
துன்பத்தில் வாழ்கின்றார்!

அன்பை வளர்க்கக் கத்துக்கோ!
இன்பம் வளரும் புரிஞ்சுக்கோ!

என்னுடைய அம்மாதான்!
எனக்கு நல்ல அம்மாதான்!


குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பைப் பற்றிச் சொல்லம்மா!
நட்பைக் குறித்துச் சொல்லம்மா!

பரபரப் பான அன்பினிலே
பக்குவத் தெளிவே இல்லையம்மா!

பக்குவ மற்ற நட்பினிலே
வக்கிரம் தானே ஊற்றெடுக்கும்

களங்க மற்ற அன்புடனே
கைகள் கோர்த்துப் பழகவேண்டும்!

அந்த அன்பே நிலைத்திருக்கும்!
மற்றவை எல்லாம் மறைந்துவிடும்!

நிலைத்த அன்பே கனிந்துவரும்!
கனியக் கனிய நட்புவரும்!

இந்தச் சிறப்பே வாழ்வினிலே
என்றும் மதிப்பை உருவாக்கும்!

துன்பந் தன்னில் ஒதுங்காமல்
துணையாய் நிற்பதே நட்பாகும்!

ஒதுங்கிச் சென்றால் நட்பில்லை!
அந்த நட்பில் உண்மையில்லை!

வள்ளுவர் சிரிக்கின்றார்,!

அவரவர் வாதம் அவரவர்க்கு! அம்மா!
எவரது வாதத்தை யாரேற்பார் சொல்லேன்?
எவருமே ஏற்கமாட்டார்!அந்தநிலை இங்கே
அவைக்கு உதவாத பேச்சு

Friday, February 08, 2019

குறள் 73:

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.

அன்பு என்றால் என்னம்மா?
எங்கே கிடைக்கும் சொல்லம்மா?

கடையில் விற்கும் பொருளல்ல!
கனிந்தே கலக்கும் உறவாகும்!

அம்மா அப்பா உன்மீது
பாசம் பொழிந்தால் அன்பாகும்!

கொஞ்சிப் பேசிப் பழகுவதால்
உணரும் நிலையே அன்பாகும்!

செல்லக் கோபம் அன்பாகும்!
மறந்தே சிரித்தால் அன்பாகும்!

நேர்மறை எண்ணம் அன்பாகும்!
எதிர்மறை எண்ணம் வம்பாகும்!

உடலும் உயிரும் இணைவதுபோல்
அன்பும் வாழ்வும் இணைந்திருக்கும்!

அன்பே இல்லா வாழ்வெல்லாம்
உயிரே இல்லா உடம்பாகும்!

சுட்டே எரிக்கும் பாலையாகும்!
அன்பு தழைத்தால் சோலையாகும்.!

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அந்தோ அந்தச் செல்வந்தர்
அன்பு என்றால் என்னவிலை?

என்றே கேட்பார் பாரம்மா!
கண்ணுக் கெட்டிய தூரம்வரை

வீடு மனைகள் என்றேதான்
அனைத்தும் அவருக் குரியதுதான்!

அன்பே இல்லா இதயத்தால்
எல்லாம் தமக்குரியர் ஆகிவிட்டார்!

அந்த ஏழை விவசாயி
நாளும் உழைத்தே உருக்குலைந்தார்

உலகில்  உயிரினம்  உண்பதற்கே
உடல்பொருள் ஆவி அனைத்தையுமே

தியாகம் செய்யும் விளக்கானார்!
இந்தக் குறளின் பொருளானார்!

மற்றவர் வாழ உழைப்பவர்கள்
தன்னல மற்ற ஏந்தல்கள்!

அன்பின் சின்ன மாவார்கள்!
பொதுநலத் தூதர் ஆவார்கள்!

8 அன்புடைமை

குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.

அம்மா நேற்று ஆசிரியை
பணியில் இருந்தே நிறைவுபெற்றார்!

வழிய னுப்புக் கூட்டத்தில்
நாங்கள் கூடி நின்றிருந்தோம்!

அவரோ நல்ல  ஆசிரியை
நாளை இருந்தே வரமாட்டார்!

அன்பைப் பொழிந்தே பாடத்தை
அருமை யாக நடத்துபவர்!

இந்த ஏக்கம் தாக்கியதும்
நாங்கள் அனைவரும் அழுதுவிட்டோம்!

அன்பை அடைக்கும் தாழில்லை
கண்ணீர் அதனை வெளிப்படுத்தும்!

வள்ளுவர் தாத்தா சொன்னதோ
உண்மை அம்மா பொய்யில்லை!

இன்னும் நெஞ்சைப் பிசைகிறதே!
அன்பின் வலிமை இதுதானோ?

Wednesday, February 06, 2019

குழந்தைக்குக் குறளமுதம்!

8 அன்புடைமை

குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.

அம்மா நேற்று ஆசிரியை
பணியில் இருந்தே நிறைவுபெற்றார்!

வழிய னுப்புக் கூட்டத்தில்
நாங்கள் கூடி நின்றிருந்தோம்!

அவரோ நல்ல  ஆசிரியை
நாளை இருந்தே வரமாட்டார்!

அன்பைப் பொழிந்தே பாடத்தை
அருமை யாக நடத்துபவர்!

இந்த ஏக்கம் தாக்கியதும்
நாங்கள் அனைவரும் அழுதுவிட்டோம்!

அன்பை அடைக்கும் தாழில்லை
கண்ணீர் அதனை வெளிப்படுத்தும்!

வள்ளுவர் தாத்தா சொன்னதோ
உண்மை அம்மா பொய்யில்லை!

இன்னும் நெஞ்சைப் பிசைகிறதே!
அன்பின் வலிமை இதுதானோ?

எனக்குநீ உனக்குநான்!

இதுதான் வாழ்க்கையா?
இறுதியில் தனிமையா?

இல்லறத்தின் தொடக்கத்தில்
இருவராய் வாழ்ந்திருந்தோம்

குழந்தைகள் சேர்ந்தன
வளர்ப்பிலே பரபரப்பு

அந்தந்த பருவத்தில்
கடமையில் பரபரப்பு

அவரவர்க்கு இல்லறம்
அமைத்ததில் பரபரப்பு

சிறகுகள் முளைத்தன
அவரவர் வாழ்க்கையில்

அவரவர் கவனங்கள்
அவரவர் அக்கறை

மீண்டும் இருவராய்த்
தனிமைச் சிறகுகள்

வயதான காரணத்தால்
தளர்நடைத் துணைவர

எனக்குநீ உனக்குநான்!
கடந்தகால நிகழ்வுகளில்!

இதுதான் வாழ்க்கையா?
இறுதியில் தனிமையா?

Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

கணினித் துறையில் முன்னேறி
காசும் பணமும் சேர்த்தேதான்

வளமுடன் வாழ்வான் என்றேதான்
பெற்றோர் நண்பர் சுற்றத்தார்

நினைத்தே மகிழ்ந்த நேரத்தில்
குறும்படப்  போட்டியில் கலப்பதற்கு

இருந்த வேலையை உதறிவிட்டு
முழுமூச் சாக இறங்கிவிட்டான்!

வென்றான் சாதனை படைத்தான் !
வாழ்த்தி மகிழ்ந்தார் குடும்பத்தார்!

முன்னனு பவமே இல்லாமல்
கலைத்துறைக் குள்ளே நுழைந்துவிட்டான்!

கையைப் பிசைந்தே நின்றிருந்தோம்!
நான்கு படங்கள் வெற்றிபெற

ஊக்கம் கொண்டான் வேகமுடன்
ஐந்தாம் படமோ சிகரத்தில்!

இயக்குந ராகத் திகழ்கின்றான்!
இமாலய சாதனை நிகழ்த்துகின்றான்!

உலகம் போற்ற உயர்ந்துவிட்டான்!
இவனது தந்தையும் தாயுமிங்கே

பெறுவதற் கென்ன தவம்செய்தார்?
எட்டுத் திசையும்  வாழ்த்துமழை!

மகனோ தந்தைக்குக் காட்டிவிட்டான்
அகம்நிறை நன்றியைத் தெரிவித்து!

குறளும் பொருளும் இதுதானே!
குடும்பப் பெருமை இதுதானே!

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தமிழ்வழிக் கல்வி படித்தவன்தான்!
ஆங்கிலப் பாடத் திட்டங்கள்

திணற வைத்த கல்லூரி
படிப்பையும் இங்கே நிறைவுசெய்தான்!

கணினித் துறையில் கால்பதித்தான்
பணியின் நிமித்தம் அமெரிக்கா

எல்லாம் சென்று வந்துவிட்டான்
கொழுந்து விட்ட லட்சியத்தீ

காட்டிய ஒளியில் பயணித்தான்
தனியாய் நிறுவனம் தொடங்கிவிட்டான்

என்னால் முடியும் கொள்கையுடன்
நிறுவன வளர்ச்சி கண்டுவிட்டான்

ஒருநாள் அழைத்தான் பெற்றோரை
தனது நிறுவன வளர்ச்சியினை

பெருமிதம் கொண்டே  காட்டிநின்றான்
தாயைப் பார்த்தான் பணிவுடனே

தாயும் பார்த்தாள் மகிழ்ந்தேதான்
பெற்ற பொழுதினும் தாய்மகிழ்ந்தாள்!

குழுவின் உழைப்பை வாழ்த்திநின்றாள்
உணர்ச்சிப் பிழம்பாய்ப் பெற்றோர்கள்!

குறளின் பொருளோ இதுதானே!
தாயும் மெச்சும் புகழ்தானே!

குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

எனது தந்தை விவசாயி
எனது தாயும் துணைபுரிவார்

சொந்த மான நிலத்தினிலே
தினமும் உழைத்தார் கடுமையாக

என்னைப் படிக்க அரும்பாடு
பட்டார் எந்தன் தாய்தந்தை

பட்டப் படிப்போ நகரினிலே
கடனை வாங்கிப் படிக்கவைத்தார்

நன்றாய் மதிப்பெண் வாங்கித்தான்
வெற்றி பெற்றேன் தேர்வினிலே

முதல்வர் விருதைப் பெறுவதற்கு
நாங்கள் மூவரும் சென்றிருந்தோம்

படிப்பறி வில்லா பெற்றோரோ
படிக்க வைத்த காரணத்தால்

அறிவுத் திறனில் பெற்றோரை
விஞ்சிய மகனாய்த் திகழ்கின்றேன்!

முதல்வர் விருதைப் பெற்றுவிட்டேன்!
மாநில மக்கள் மெச்சுகின்றார்!

தாயும் தந்தையும் பெருமையுடன்
தலைநிமிர்ந் தேதான் நடக்கின்றார்!

ஊரில் வந்தே இறங்கியதும்
அடுத்த வீட்டு உறவினரோ

தனது மகனுக்கு அன்றுவந்த
மடலுட னேதான் ஓடிவந்தார்

மகனோ வெளியூர் போனதாலே
படித்தவ ரிடத்தில் விவரத்தைக்

கேட்டுத் தெரிய நான் வந்தேன்
சொல்லு தம்பி படித்ததம்பி!

அய்யா உங்கள் மகனுக்கு
வேலை கிடைச்ச செய்தியிது

என்றே சொன்னதும்  வந்தவரோ
இவனது பெற்றோர் மகிழ்ந்திடவே

நன்றி சொன்னார் பெற்றோர்க்கு
வாழ்த்தைச் சொன்னார் உளங்கனிய


வள்ளுவர் இந்தப் பொருளுடனே
அன்றே குறளை எழுதிவிட்டார்!

தாயும் தந்தையும் என்தெய்வம்
நன்றி யுடனே வணங்குகிறேன்!




குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

நண்பா நண்பா தமிழரசா
உன்னைப் பாக்கப் பெருமைதான்!

மகனை மகளை வளர்ப்பதற்கு
உழைத்த உழைப்பை நானறிவேன்!

அன்பு நண்பா தமிழரசா
மகளின் மகனின் திறமைகள்

 ஊடகம் மூலம் நானறிந்தேன்!
மேடைப் பேச்சில் இருவருமே

அருமை அற்புதம் ஆகாகா!
கேட்போர் எல்லாம் வியக்கின்றார்.!

மாநில அளவில் கல்வியிலும்
மதிப்பெண் நிறைய வாங்குகிறார்.

பெற்றோர் நீங்கள் அவர்களுக்கு
ஆற்றிய கடமை உணர்வாலே

அவையில் முந்தச் செய்தீர்கள்
அவர்களும் கனவை நினைவாக்கி

பெயரும் புகழும் எடுக்கின்றார்!
வாழ்க வாழ்க தமிழ்போல!

உங்கள் முயற்சி வீணில்லை!
குறளின் பொருளே நீங்கள்தான்!


குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 66:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

எந்தன் தோழி தேன்மொழியே!
இசைநி கழ்ச்சி போகின்றேன்

குழலிசை வித்தகர் இசைக்கின்றார்
கேட்டு் ரசிக்கப் போகின்றேன்!

யாழிசை என்றே இலக்கியத்தில்
நாமும் வகுப்பில் படித்துள்ளோம்!

அந்த யாழை மீட்டித்தான்
புதிதாய் ஒருவர் இசைக்கின்றார்!

வந்தால் கேட்டு்  மகிழலாம்
வருகின் றாயா என்தோழி?

எந்தன் குழந்தை பேசுகின்ற
தேனினும் இனிய மழலைமுன்

இந்த இசையோ ஒன்றுமில்லை
மழலை தானே இனிமையாம்!

மழலைச் சொல்லைக் கேட்காதோர்
குழலும் யாழும் இனிதென்பார்

இப்படித் தானே கூறுகின்றார்
நமது வள்ளுவர் பேரறிஞர்!

நாளை நீயும் உன்குழந்தை
மழலைப் பேச்சைக் கேட்பாயே!

அன்று நீயும் என்கருத்தை
ஏற்றே போற்றுவாய் என்தோழி!

உண்மை தாம்மா என்தோழி
உள்ளம் மயங்கிடும் மழலைமுன்!

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

அன்புத் தோழி அன்னம்மா!
உந்தன் குழந்தைக் கன்னலா?

கட்டித் தழுவிக் கொஞ்சுகின்றாய்!
முத்தம் தந்தே மகிழ்கின்றாய்!

மழலைப் பேச்சை ரசிக்கின்றாய்!
மயங்கி மயங்கிச் சிரிக்கின்றாய்!

புதுப்புது அர்த்தம் தருகிறாய்!
மொழி பெயர்த்து மகிழ்கிறாய்!

விட்டு விலக மறுக்கின்றாய்!
யானை போல நடக்கின்றாய்!

முதுகில் சுமந்து களிக்கின்றாய்!
தூக்கிப் போட்டுப் பிடிக்கின்றாய்!

ஆமா ஆமா  பொன்னம்மா!
இதற்கு ஈடும் உள்ளதோ?

செல்லத் தோட விளையாண்டால்
நேரம் போத வில்லையே!

குழந்தையைத் தழுவிக் கொஞ்சுவதே
உடலுக் கின்ப மாகுமாம்!

மழலைப் பேச்சைக் கேட்பதே
பெற்றோர் செவிக்கு இன்பமாம்!

வள்ளுவர் வாய்க்குச் சக்கரை
போட வேண்டும் பொன்னம்மா!

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

அம்மா அம்மா  வாயேன்!
தம்பிப் பாப்பா பாரேன்!

தட்டில் உள்ள  சோறைக்
கையால் நன்கு பிசைந்து

கூழாய் மாற்றி ஒழுக
இரண்டு கையைத் தட்டி

பொக்கை வாயைக் காட்டி
சிரிக்கு தம்மா பாரேன்!

அசிங்கம் தானே அம்மா
வந்து ரெண்டு போடு!

அம்மா வந்து தூக்கி
கொஞ்சி முத்தம் தந்தாள்!

மகளே இந்தக் கூழ்தான்
அமுதம் என்றே வள்ளுவர்

இந்தக் குறளில் சொன்னார்!
நீயும் இவனைப் போலதான்

அந்த நாளில் இருந்தாய்
நானும் ரசித்துச் சிரித்தேன்!

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

அத்தை மாமா வாங்க!
குறளின் பொருளைச் சொல்லுங்க!

எங்கள் பெற்றோர் எங்களை
வளர்த்தார் இல்லறம் தந்துவிட்டார்

நாங்களும் கடமையில் திறமைகள்
காட்டி வந்தோம் முன்னேறி!

வாய்ப்பைத் தந்தோம் உங்களுக்கு
உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

நீங்களும் உங்கள் வாழ்க்கையில்
உழைப்பால் உயர்ந்து உயர்ந்தேதான்

சாதனை யாளர் ஆகுங்கள்!
வரலா றாக மாறுங்கள்!

எங்கள் பெற்றோர் செல்வங்கள்
இந்தத் தரணியில் நாங்கள்தான்!

நீங்கள் எங்கள் செல்வமென்றே
உங்கள் செயலால்  நாட்டுங்கள்!


குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பெரியப்பா பெரியப்பா!
இந்தக் குறளைக் கேளுங்க!

பொருளைச் சொல்லி விளக்குங்க!
பொறுமை  யாகச் சொல்லுங்க!

மகனே மகளே குறளுக்கு
இதுதான் விளக்கம் கவனிங்க:

பள்ளிக் கூட ஆசானும்
உங்கள் நல்ல பெற்றோரும்

நல்ல பண்பைச் சொல்வாங்க
கற்றுக் கொண்டால் நல்லது!

கெட்ட பழக்கம் வேண்டாமே
பழியைச் சுமக்க வைத்துவிடும்!

பண்புகள் மிளிரும் குழந்தைகள்
குடும்பம் போற்றும் முத்துக்கள்!

பழிகள் இன்றி வாழ்ந்தால்தான்
நீண்ட காலம்  புகழுடனே

மற்றவர் போற்ற வாழ்ந்திடலாம்!
துன்பம் இன்றி வாழ்ந்திடலாம்!


குழந்தைகளுக்குக் குறளமுதம்

மக்கட்பேறு

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

இந்தக் குறளின் பொருளென்ன
அம்மா அப்பா சொல்லுங்க!

பருவம் பார்த்துக் குழந்தைகளைப்
பள்ளியில் சேர்த்தல் எம்கடமை!

படிக்கப் படிக்க கற்கின்றாய்
அறிவை வளர்த்து நிற்கின்றாய்

பெற்றோர் ஆசான் பெருமையுடன்
ஆற்றல் தன்னில் உயர்கின்றாய்!

இப்படிப் பட்ட அறிவார்ந்த
குழந்தைகள் தானே நற்பேறு!

மற்ற பேறுகள் எல்லாமே
பேறுகள் இல்லை ஊறுகளே!


குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

சித்தப்பா! சித்தப்பா!
குறளுக்குப் பொருள் என்னப்பா?

கொஞ்சம் சொல்லு சித்தப்பா!
கொஞ்சிச் சொல்லு சித்தப்பா!

மழையே பெய்ய வில்லையென்றால்
நாட்டின் நதிகள் வறண்டுவிடும்!

மாநிலங் களுக்குள் போராட்டம்
தினமும் நடக்கும் காட்சியாகும்!

ஒவ்வொரு மாநில நீர்வளங்கள்
எல்லாம் இங்கே சுருங்கிவிடும்!

விளைச்சல் இன்றி மக்களெல்லாம்
பஞ்சம் பட்டினி என்றலைவார்!

தேவைக் கிங்கே அல்லாடும்
சூழல் தானே உருவாகும்!

கொள்ளை திருடு என்றேதான்
ஒழுக்கக் கேடு உருவாகும்!

தண்ணீர் உலகின் உயிர்மூச்சு!
நீரைத் தருவது மழையாகும்!

இதுதான் குறளின் பொருளாகும்!
நீரைச் சேமித்தல் கடனாகும்!


குறளமுதம்

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

அன்ன தானக் கூடங்கள்
சென்ற ஆண்டு மூடவில்லை

இந்த ஆண்டு மூடியதேன்
காரணம் என்ன சொல்லம்மா!

அந்தோ பாராய் துறவிகளோ
இங்கு மங்கும் அலைகின்றார்

என்ன காரணம் சொல்லம்மா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!

இந்த ஆண்டு முழுவதிலும்
கொஞ்சம் கூட  மழையில்லை

நாடே வறட்சிக் கோலத்தில்
தத்தித் தத்தித் திண்டாட

மக்கள் எல்லாம் கலங்குகின்றார்
தானம் தவமும் செய்வதற்கு

கையில் ஓட்டம் இல்லையே
கையைப் பிசைந்து நிற்கின்றார்.

தண்ணீர் இல்லை எனச்சொன்னால்
எல்லாம் இங்கே தள்ளாடும்!

இந்தக் குறளின் பொருளிதுதான்
இதுதான் காரணம் புரிந்துகொள்!

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

அண்ணா அண்ணி குறளுக்குப்
பொருளைச் சொல்லித் தாருங்கள்!

குறளின் பொருளைச் சொல்வதற்கு
நாங்கள் இங்கே வந்துவிட்டோம்!

மழையோ இங்கே பெய்யாமல்
வறட்சிப் பிடியில் சிக்கவைத்தால்

ஊரும்  உலகமும்  வறண்டுவிடும்
அனைத்து இயக்கமும் நின்றுவிடும்!

விழாக்கள் பூசை நடக்காது!
வாழ்க்கைப் பாலை வனமாகும்!

வானில் வாழ்வோர் எனச்சொல்லும்
வானோர் களுக்கும் பூசையில்லை!

இதுதான் தம்பி பொருளாகும்!
மழையின் சிறப்பும் இதுவாகும்!


குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

இன்பச்சுற்றுலா!


இதுதான் வங்கக் கடலாகும்,!
இயற்கை தந்த கொடையாகும்!

சென்னைக் கழகு இதுதானே!
சிறப்பைச் சேர்ப்பதும் இதுதானே!

மாணவ மாணவி எல்லோரும்
மணலில் ஓடிப் பாருங்கள்!

கடலின் கரையை ஒட்டித்தான்
அலையில் காலை நனைக்கலாம்.!

உள்ளே தூரம் போகாதே!
உயிருக் காபத்து அவையாலே!

காணும் இந்தக் கடலிங்கே
வற்றும் நிலைதான்  வாராதோ?

துடுக்காய் மாணவன் கேட்டான்பார்!
பொறுமை யோடு பதில்சொன்னார்.!

மழையே பெய்ய வில்லையென்றால்
கடலும் வற்றிப் போய்விடுமே!

கடலில் வாழும் உயிரினங்கள்
வாழத் தேவை தண்ணீரே!

முத்து போன்ற கடல்செல்வம்
வற்றா நிலைக்கு நீர்வேண்டும்!

கடலின் இயல்பு மாறாமல்
இருக்க மழைநீர் தேவைதான்!

வள்ளுவர் குறளில் கூறுகின்றார்!
வானின் சிறப்பில் விளக்குகின்றார்!

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

தாத்தா தாத்தா புல்லெங்கே
எல்லாப் புல்லும் காஞ்சுபோச்சே

என்ன தாத்தா காரணமோ
நீங்க தண்ணி ஊத்தலையா?

இல்லடா செல்லம் இந்தவானம்
மழைதந்தா  தானே புல்வளரும்!

மழையே இன்றி பூமியிங்கே
வறண்டு காய்ந்து போய்விட்டால்

புல்லின் நுனிகூட துளிர்க்காது
 பூண்டும் இங்கே தழைக்காது!

மழைக்கரம் பட்டால் போதுமிங்கே
பச்சைப் பசேல்தான் இவ்வுலகம்!

இல்லா விட்டால் பட்டுவிடும்!
இதுதான் விளக்கம் என்கண்ணே!



குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

அன்பைப் பொழியும் தமிழம்மா!
அறிவைப் புகட்டும் தமிழம்மா!

இந்தக் குறளின் பொருள்தன்னை
கொஞ்சம் சொல்லிக் கொடுங்கம்மா!

நன்றாய் வாழ்வோர் வளமிழந்து
நலியச் செய்வது வான்மழையே!

பருவ மழையோ பொய்த்துவிட்டால்
வறட்சிப் புயலில் வளமிழப்போம்!

மீண்டும் மழையோ பொழிந்துவிட்டால்
இழந்த வளங்கள் சேர்ந்துவிடும்!

வளத்தை இழப்பதும் வான்மழையால்!
இழந்ததைப் பெறுவதும்தேன்மழையால்!

வாழ்வில் இன்பமும் மழையாலே!
வாட்டும் துன்பமும் மழையாலே!


குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

சென்ற ஆண்டு மாமாஊர்
செழிப்பாய் இருத்ததை நான்பார்த்தேன்

இந்த ஆண்டு ஏனந்த
செழிப்பைக் காணோம் சொல்லம்மா!

மழையே இல்லை என்செல்லம்
அதனால் விளைச்சல் இல்லையே!

விளைச்சல் தானே வருமானம்
அதுவே குறைந்து போனதே!

அதனால் உழவுத் தொழிலிங்கே
நின்று போன கோலம்பார்.!

ஊரே வறட்சிப் பிடியினிலே
வறண்டு போனது பார்பார்பார்!

இதுதான் காரணம் தெரிஞ்சுக்கோ
மழையே ஆதாரம் புரிஞ்சுக்கோ!


குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.

அணிலே  அணிலே ஓடிவா
அழகாய் அழகாய் ஓடிவா

இந்தக் குறளைப் படித்துப்பார்
படித்துப் பார்த்துப் பொருளைச்சொல்!

பாப்பா நானும் படித்துவிட்டேன்
பொருளைச் சொல்றேன் பிடித்துக்கொள்!

உலகைச் சூழ்ந்தே கடலுண்டு!
கடலுக் குள்ளே  நீருண்டு!

இருந்த போதும் உணவாக
நமக்கு இங்கே உதவாது!

நமது உயிரை வான்மழைதான்
உணவைத் தந்தே காப்பாற்றும்!

வான்மழை இங்கே பொய்த்துவிட்டால்
பசியால் உயிர்கள் வாடிவிடும்!

பருவ மழையே உயிர்நாடி!
இல்லை என்றால் துயர்கோடி!

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

அங்கும்  இங்கும் அலைகின்ற
அருமை மேகக் கூட்டமே!

அருகில் வந்து நில்லாயோ!
குறளின் பொருளைச் சொல்லாயோ!

அன்புத் தம்பி தங்கையே!
ஆகா நாங்கள் வந்துவிட்டோம்!

மழையைச் சுமந்து வருகின்றோம்!
மண்ணகம் குளிரத் தருகின்றோம்!

உலக உயிர்களைக் காப்பதற்கு
உணவைத் தருவதும் மழைதானே!

தாகம் தன்னைத் தீர்ப்பதற்கு
உணவாய் உள்ளதும் மழைதானே!

உணவைத் தருவதும் மழையாகும்!
உணவாய் உள்ளதும் மழையாகும்!

உங்கள் உயிரைக் காக்கின்றோம்!
எங்கள் சிறப்பும் இதுதானே!

கடமை எங்களை அழைக்கிறது!
விரைந்து நாங்கள் செல்கின்றோம்!

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

வான்சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

மேகம் அண்ணா வாங்க!
இந்தக் குறளின் பொருளை
கொஞ்சம் சொல்லிப் போங்க!

குழந்தை சத்தம் கேட்டு
மேகம் கீழே பார்த்து

சிரித்துச் சிரித்து வந்தே
குழந்தை அருகில் வந்தது!

கடலில் நீரை முகந்து
குளிர்ச்சி யாக மாற்றி

உலகில் மழையைப் பொழிவேன்!
உயிரை வாழ வைப்பேன்!

உலகை வாழ வைக்கும்
உயிர்நீர் ஆவ தாலே

அமிழ்தம் என்றே வள்ளுவர்
அன்றே எழுதி வைத்தார்.!

கேட்ட தற்கு நன்றி!
சென்று வரு  கின்றேன்!




குழந்தைகளுக்குக் குறளமுதம்!

  குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

அக்கா இங்கே வாயேன்
குறளைச் சொல்லித் தாயேன்!

நாளை நானும் வகுப்பில்
சொல்ல வேண்டும் அக்கா!

அருமைத் தங்கை வர்ரேன்
குறளைச் சொல்லித் தர்ரேன்!

அன்னை தந்தை ஆசான்
நமக்கு நல்ல வழிகாட்டி!

அவர்கள் சொல்லை மதித்து
நாமும் இங்கே வாழ்ந்தால்

இந்தப் பிறவிக் கடலை
எளிதாய் நீந்திக் கடக்கலாம்!

அவர்கள் கூறும் அறவுரைகள்
வழியைக் காட்டும் ஒளிவிளக்கு!

அவர்களைத் தவிர்த்துச் சென்றால்
தத்த  ளிக்க  நேரும்!

இதனை உணர்ந்து வாழ்வோம்
இதயங் குளிர வாழ்வோம்!

அன்புத் தங்கை நீயும்
மனதில் வாங்கிக் கொண்டு

நாளை வகுப்பில் சொல்லு!
தலையை நிமிர்த்தி நில்லு!

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அத்தை இங்கே வாங்க
குறளைச் சொல்லித் தாங்க

வந்துட் டேனே செல்லம்
அருமைக் குறள் வெல்லம்

எட்டு வகை குணங்களெல்லாம்
வாழ்க்கைக் கேற்ற ஒழுக்கங்கள்!

இதனை உயிராய் மதிப்பவர்கள்
உலவும் உயர்ந்த சான்றோராம்!

உலக மக்கள் போற்றுகின்ற
உயர்ந்த நெறிகள் கொண்டவராம்!

இப்படிப் பட்ட  உயர்ந்தோரை
வணங்க மறுத்து வாழ்வோர்க்கு

பொறிகள் ஐந்தும் இருந்தாலும்
கட்டுப் படுத்தும் திறனின்றி

சலனப் பட்டு வாழ்ந்திருந்தால்
அந்தப் புலன்கள் இருந்தாலும்

இயங்கா நிலைதான் கண்மணியே!
பகுத்தறி வோடு இயங்கவிடு!

சான்றோர் தன்னைப் பின்பற்று!
வாழ்க்கை இங்கே வளமாகும்!

பெருமை யோடு வாழ்வதற்குப்
பெரியோர் ஆசிகள் துணைபுரியும்!