Wednesday, December 31, 2008

திருவிழா நாளில் ஊடகத்தார் கோலம்

கூத்தாட்டம் குத்தாட்டம் ஆபாசப் பேயாட்டம்
கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டேதான் பாடல்கள்
மூச்சுக்கு மூச்சிங்கே வக்கிரத்தைத் தூண்டிவிட்டு
ஊற்றாகும் ஊடகத்தில் பார்.

பெண்களை எப்படிக் கேலியும் கிண்டலும்
கண்டபடி செய்வது என்ற கலைகளையும்
கண்முன்னே செய்துகாட்டும் கோலத்தைக் காட்டுகின்ற
பண்பாட்டுச் சீரழிவைப் பார்.

வன்முறை, கற்பழிப்பு, வஞ்சகம் என்றேதான்
பெண்களைப் போகப் பொருளாக்கி, பார்ப்பவரின்
நெஞ்சில் வெறியேற்றும் தன்னலக் கூட்டணியார்
இந்தநாளில் வந்திருப்பார் பார்.

திரைப்படப் பாடலில் எப்படி நாங்கள்
வரைமுறை இன்றிக் குடும்பத்தார் மற்றும்
அனைவரும் இங்கே முகஞ்சுளிக்க சொற்கள்
அமைக்கின்றோம் என்றுரைப்பார் பார்.

சின்னத் திரைகளையோ வீட்டுக்கு வீடிங்கே
கண்சிமிட்ட நேரமின்றிப் பார்க்கின்றார் எல்லோரும்!
கண்றாவிக் காட்சிகளைப் பார்த்தால் பார்ப்பவரின்
எண்ணம் திசைமாறும் சொல்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி
வேட்டுவைத்து ஒற்றுமையைச் சீர்குலைக்க வைப்பதென்று
காட்டிப் புகட்டுகின்றார்!மக்கள் மனநிலையும்
வேட்கைக்கே வித்தூன்றும் சொல்.

மக்களிங்கே நல்ல வழியில் நடைபோட
அக்கறை கொண்டு வரம்புகள் மீறாமல்
பக்குவமாய்த் தந்து நிகழ்ச்சிகளை சீரமைத்தால்
எத்தரப்பும் பாராட்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்

ஆதரவற்றோர் வாழ்த்துகின்றார்!

உண்ண உணவும் உடுக்க உடைகளும்
தங்க இடமும் உவந்தளித்து -- எங்களைக்
காப்பாற்றும் இல்லங்கள் எங்களது கோயில்கள்!
போற்றுவோம் நாளும் புகழ்ந்து.

மனசாட்சியே சாட்சி!

களங்கமற்ற உள்ளம்! களங்கமுள்ள உள்ளம்!
அளப்பது மற்றவ ரில்லை -- களங்கமா?
உன்னை உறுத்தும் மனசாட்சி! இல்லையா?
உன்னை உயர்த்தும் உணர்.

விரக்தி

போக்கிடம் ஒன்றுமில்லை! போக வழியில்லை!
ஏக்கத்தில் துள்ளுகின்ற எண்ணங்கள் -- தூக்கத்தைத்
தாக்கிக் கெடுக்கிறதே! தத்தளித்து வாழ்கின்றேன்!
தேற்றுவது யாரிங்கே? செப்பு.

Saturday, December 27, 2008

கரித்துண்டே வாழ்க்கை

எரிந்து விழுந்த கரித்துண்டே !
எனக்கு வாழ்க்கை நீதானே!
தெருவில் நித்தம் ஓவியத்தைத்
தெரிந்த அளவில் வரைகின்றேன்!

பார்த்து ரசிக்கும் எல்லோரும்
பாராட் டைத்தான் பொழிகின்றார் !
ஆர்வ முடனே காசுகளை
அங்கங் கேதான் வீசுகின்றார்!

திறமை இருந்தும் வாய்ப்பிலை!
தெருவை நம்பி வாழ்கின்றேன்!
முறையைக் கற்க வழியில்லை!
முழுமை இன்றி அலைகின்றேன்!

வறுமை என்னை வதைக்கிறது!
வாழ்க்கைத் துணையோ கரித்துண்டே!
பொறுமைத் தணலில் நடக்கின்றேன்!
பொழுதும் விடியும் நம்புகின்றேன்!

மதுரை பாபாராஜ்

Friday, December 26, 2008

பெற்றோர்

பெற்றவர் இறந்து விட்டால்
பெருந்துயர் இருள்தான் கவ்வும்!
மற்றவர் எல்லாம் இங்கே
மணித்துளி உறவே ஆவார்!

சுற்றமே ஆன போதும்
துணையென நிலைப்பா ருண்டோ?
வெற்றிடம் ஏற்ப டுத்தும்
வெறுமையில் மனமோ ஏங்கும்!

அரும்பென இருந்த போதும்
அவர்களோ அயர்ந்த தில்லை!
கரும்பெனப் போற்றிப் போற்றிக்
கருத்துடன் வளர்த்தார் பெற்றோர்!

தருவென உயர்வ தற்குத்
தகுதியை ஆக்கி விட்டுச்
சுருக்கென மறைந்தே போவார்!
சூடமாய்க் கரைந்தே போவார்!

உயிர்நிகர்க் குழந்தை கேட்டால்
உயிரினை உருக்கி யேனும்
தயக்கமோ சிறிதும் இன்றித்
தருவதே பெற்றோர் உள்ளம்!

சுயநலம் துளியும் அந்தத்
தூய்மையின் நினைவில் இல்லை!
உயர்ந்ததோர் தியாக வாழ்வின்
உருவமே பெற்றோர் என்பேன்!

மதுரை பாபாராஜ்
2001

பாரதி எங்கே

பாரதி எங்கே?
(மகாகவி பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்)
11.12.2001 சென்னை
===============================================
முழுத்தலைப் பாகை எங்கே?
முறுக்கிய மீசை எங்கே?
செழுந்தமிழ்ச் சொற்கோ எங்கே?
சிந்தனைச் சுரங்கம் எங்கே?
எழுச்சியின் வேந்தன் எங்கே?
எரிமலைக் கவிதை எங்கே?
பழமையை எரிப்போன் எங்கே?
பாரதி கவிஞன் எங்கே?

பெண்களை அடிமை யாக்கும்
பித்தரை உமிழ்ந்தே நிற்பான்!
இந்தியத் தாயின் வீட்டை
இடிப்பதைத் தூற்றிக் காப்பான்!
மண்ணக மூட எண்ணம்
மறைந்திட முழங்கி நிற்பான்!
பொன்னொளி வீசி இங்கே
புதுமையைப் படைத்து நிற்பான்!

இன்றவன் இல்லை! ஆனால்
எழுதிய கருத்துப் பாக்கள்
என்றுமே வாழும் இங்கே!
இந்திய நாடே! உந்தன்
தன்னலக் கனவை விட்டுத்
தமிழ்க்கவிக் கனவை நாட்டில்
உண்மையில் செயலாய் மாற்று!
உலகமே வணங்கும் உன்னை!

மதுரை பாபாராஜ்
2002

உண்மை

உயிருடன் இருக்கும்போது மதித்து நட!

உயிருடன் இருக்கும் போது
உண்மையாய் மதிக்க வேண்டும்!
நயமுடன் சுற்றத் தார்கள்
நாளெலாம் பழக வேண்டும்!

துயரமோ சூழும் போது
துணைக்கரம் நீட்ட வேண்டும்!
உயர்வினைக் காணும் போது
உவகையில் நீந்த வேண்டும்!

உலகினில் வாழும் போது
உறவினை விலக்கிக் கொள்வார்!
உளத்தினில் நச்சு எண்ணம்
உருவெடுத் தாட நிற்பார்!

களத்தினில் எதிரி யைப்போல்
கடுஞ்சினம் பொங்கப் பார்ப்பார்!
தளமெனும் மனித நேயம்
தகர்ந்திடும் செயலைச் செய்வார்!

இறந்ததும் ஓடி வந்து
இதயமோ வெடிக்கும் வண்ணம்
முறைகளைச் சொல்லிச் சொல்லி
முனங்குதல் நடிப்பே என்பேன்!

இருந்திடும் போது கூடி
இருப்பதே உண்மை என்பேன்!
இறந்தபின் செய்வ தெல்லாம்
இறந்தவ ரிடமா சேரும்?

மதுரை பாபாராஜ்
2002

அம்மவோ ! இதுதான் வாழ்வோ?

பெண்ணெனப் பிறந்து விட்டால்
பிறந்தகம் விலக வேண்டும்!
கணவனின் கூட்டுக் குள்ளே
காரிகை நுழைய வேண்டும்!

கண்நிகர்ப் பெற்றோ ரெல்லாம்
கண்கவர் கான லாவார்!
தண்மதி,அமுதந் தன்னை
தனக்கென அருந்த லுண்டோ?

நம்மகள் எதிரி ருந்தும்
நமக்கொரு உரிமை இன்றி
பொம்மையைக் கடையில் பார்க்கும்
புதுநிலை பெற்று விட்டோம்!

அம்மவோ ! இதுதான் வாழ்வோ?
ஆசையோ குமிழி தானோ?
இமைகளில் கண்ணீர் தேங்க
இயம்புவர் பெற்றோ ரிங்கே!

அரும்பெனப் பிறந்த போது
அழுவதில் தொடங்கும் வாழ்க்கை
எரிதணல் சிதையில் வீழும்
இறுதிநாள் வரைக்கும் சீறும்!

எரிமலை போலப் பொங்கி
இருவிழி நீரைக் கொட்டச்
சருகெனக் காய்ந்தே போகும்!
சட்டென மறைந்தே போகும்!

மதுரை பாபாராஜ்
2002

எல்லைக்கோடு சாம்பல்மேடு

எல்லைக்கோடு சாம்பல்மேடு 

 நாட்டுக்கு நாடிங்கே எல்லையில் கோடு! அதனால்தான் உலகத்தில் சாம்பல் மேடு! உலகத்தின் பரப்பளவைப் பொதுவாய் மாற்று! 
எனக்கென்ற தன்னலத்தை என்றும் தூற்று! இனம்வேறு! மொழிவேறு! நேயம் ஒன்று! இழிவான பேதங்கள் தீமைக் குன்று! அன்றாடச் சண்டைகள் அழிவைத் தூண்டும்! மண்ணகத்தில் வாழுமட்டும் மனஅமைதி வேண்டும்! 

 மதுரா பாபாராஜ் 2002

மகனே நீ பாடு!

சாதிக் குரங்கு தாண்டவ மாடிச்
சண்டை மூட்டுதடா!
நீதிப் பூக்கள் தரையில் உருண்டு
நித்தம் கசங்குதடா!

சாதிப் பேதம் இல்லா உலகைச்
சமைக்க வேண்டுமடா!
ஊது சங்கை உணர்ச்சி யோடு!
உண்மை வெல்லுமடா!

அந்தோ! நமது இந்தியத் தாயின்
அழுகை கேட்கிறது!
வெந்த புண்ணில் வேலைச் செருகும்
வேலை நடக்கிறது!

சொந்த நாட்டின் சோகம் நெஞ்சில்
சோர்வைத் தருகிறது!
பண்புத் தேரின் அச்சை முறிக்கும்
பாதகம் தெரிகிறது!

உண்மை அன்பும் பொய்மைத் தேரில்
படரத் துடிக்கிறது!
கண்ணும் கையும் பகைவர் போலக்
காட்சி அளிக்கிறது!

மண்ணில் இவற்றை வென்று நிமிர
மகனே நீ பாடு!

மதுரை பாபாராஜ்
2002

வீடுண்டு விளக்கில்லை

குடிப்பழக்க எரிமலையில்
குடியிருக்கும் குடிமகனே !
கொடிகட்டிப் பறக்குதடா
குடும்பத்தின் தன்மானம்!

நடுத்தெருவில் அலைகின்றாய்!
நாதியற்றுக் கிடக்கின்றாய்!
படையெடுக்கும் வறுமைக்குப்
பாய்போட்டு வரவேற்பா?

கூடுதனைப் பிரித்தெறியும்
குரங்குமனக் குடிவெறியை
நாடுகின்ற நிலையேனோ?
நாசவலை உறவேனோ?

கேடுகெட்ட குடிபோதை
கெடுமதியின் வழிச்செல்லும்!
வீடிருந்தும் விளக்கற்ற
வெறுமைக்கே வழிகாட்டும்!

மதுரை பாபாராஜ்
(புஷ்கின் இலக்கியப் பேரவைக் கவிதைப் போட்டியில்
மூன்றாம் பரிசுபெற்ற கவிதை -- 30.11.90 )

இல்லறத்தில் துறவறம்

உள்ளத்தில் ஆசைகளே
உறவாடிப் பேராசை
வெள்ளத்தை ஏற்படுத்தும்!
வேகமாகத் துறந்துவிடு!

பகைமைக்குப் பாய்விரித்துப்
பல்லக்கு தூக்கிவரும்!
புகைச்சலுக்கு இடங்கொடுத்தால்
புகைத்துவிடும் துறந்துவிடு!

வஞ்சகரின் பாதகங்கள்
வலைவிரித்துக் கவர்ந்திழுக்கும்!
தஞ்சமெனச் செல்லாதே !
தயங்காமல் துறந்துவிடு!

எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டே
ஏமாற வைத்துவிடும்!
எதிரிகளை உருவாக்கும்!
எனவேநீ துறந்துவிடு!

இல்லறத்தில் நல்லறத்தை
இவையெல்லாம் கெடுத்துவிடும்!
பொல்லாத இவைகளைநீ
புன்னகைத்தே துறந்துவிடு!

மதுரை பாபாராஜ்
2002

கடமைக்கு லஞ்சமா?

கடமையைச் செய்வதற்குக் கைநீட்டி லஞ்சம்
கொடுவென்று கேட்கின்ற கூட்டம் -- நடுத்தெருவில்
நிற்கின்ற நாள்வரும்! நிம்மதி தான்குலையும்!
அற்பமே என்றும் அது.

மதுரை பாபாராஜ்
2002

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை தங்க அனுமதித்தால்
வாழ்க்கை இருண்டுவிடும்! வாடிவிடும் -- சூழ்நிலைகள்
சாதகமாய் வந்தாலும் சந்தேகம் முந்திவரும்!
சோதனையை வெல்க துணிந்து.

மதுரை பாபாராஜ்
2002

Thursday, December 25, 2008

ஓசோன் படலத்தில் ஓட்டை

மாசுப் புகைமூட்டம் வானகத்தில் காத்துநிற்கும்
ஓசோன் படலத்தை ஓட்டையாக்கி -- நாசம்
விதைக்கிறது என்றாலும் விந்தையான மக்கள்
கதையென்றே எண்ணுகின்றார்! காண்.

மதுரை பாபாராஜ்
2002

தொடுவான வர்க்கம்

மாதத்தின் முதல்வாரம் மகிழ்ச்சி வாரம்!
மாதத்தின் மறுவாரம் சுழற்சி வாரம்!
மாதத்தில் அதற்கடுத்து வறட்சி வாரம்!
மாதத்தின் கடைசி வாரம் முயற்சி வாரம்!

சோதனையும் வேதனையும் வாழ்க்கைத் தேரை
சோர்வுடனே இழுத்தேதான் செலுத்தச் செய்யும்!
சாதனையாய் மாற்றியிங்கு நிமிரும் போது
சக்கைபோல் மாறியதை முதுமை கூறும்!

அடுத்தடுத்துத் தேவைகளோ கதவைத் தட்டி
அனுதினமும் போட்டிபோட்டு நிற்கும் போது
நடுத்தரத்தில் வாழ்கின்ற வர்க்கத் தாரின்
நடனங்கள் விதவிதமாய் அரங்கில் ஏறும்!

சுடுமணலில் நின்றேதான் துள்ளித் துள்ளித்
துடிக்கின்ற நிலையினிலே இவர்கள் எல்லாம்
நடுத்தெருவின் நாயகராய் வாழ்ந்தி ருப்பார்!
நடைமுறையில் தொடுவானம் அளந்திருப்பார்!

மதுரை பாபாராஜ்
2002

என்னடா வாழ்க்கை?

என்னடா வாழ்க்கை? 

 நானெடுத்த பிறவி இதுதானா? நாளெலாம் துன்பம் துணைதனா? தாயே! இதுதான் சரிதானா? தமிழே! இதுஉன் வரம்தானா ? 

 காட்டுக்குள் அலைவதுபோல் அலைகின்றேன்-- நான் கூட்டத்தில் தொலைந்ததுபோல் அழுகின்றேன்!

 வேட்டைக்குப் பலியாடாய் நிற்கின்றேன் -- வறுமைச் சாட்டைக்கு விருந்தாகித் துடிக்கின்றேன்! 

 பாலைக்குள் பயணத்தைத் தொடர்கின்றேன் -- சோர்ந்து ஆலையில் சக்கையென விழுகின்றேன்! 

 சோலையும் என்னை வெறுக்கிறதே -- தேன் மாலையும் எனக்குக் கசக்கிறதே!

 வாழ்வினில் நிம்மதி தேய்கிறது --என் வாசலில் விரக்தி பாய்கிறது! 

ஊழ்வினை என்பது இதுதானா ?-- இந்தத் தாழ்வுகள் எல்லாம் நிலைதானா? 

 மதுரை பாபாராஜ் 1997

பொய்சொல்லாதே

பொய்களைச் சொல்லியே பொன்போல் மிளிர்தலும்
செய்கையில் வஞ்சகம் சேர்த்தலும் -- அய்யகோ!
அன்பரே! என்றும் அழிவையே தந்துவிடும்!
நன்னெறியில் வாழ்தல் நலம்.

மதுரை பாபாராஜ்
1997

மார்கழிமாதம்

குளித்தநீர் சொட்டச் சொட்டக்
கூந்தலைத் தொங்க விட்டுக்
களிப்புடன் மகளிர் கூட்டம்
காலையில் வீட்டின் முன்னே

வாசலில் நீர்தெ ளித்து
மனங்கவர் கோல மிட்டுப்
பூசணிப் பூவை வைத்துப்
பொலிவினை ரசித்துப் பார்ப்பார்!

மார்கழி மாதம் இங்கே
மலர்ந்ததை இவைகள் காட்டும்!
ஆர்வமாய்ப் பெண்கள் எல்லாம்
அனுதினம் கோயில் செல்வார்!

பாவையர் மாதம் என்றே
பாவைநோன் பேற்கும் உள்ளம் !
பூவையர் நல்ல வாழ்வு
பூத்திட வேண்டிக் கொள்வார்!

மதுரை பாபாராஜ்

கடமையே கடவுள் குடும்பமே கோயில்

கடவுளை வணங்கிக் கொண்டு
கயமையில் உள்ளம் துள்ளும
மடமையைச் செய்ய வேண்டாம்!
மனிதனுள் மிருகம் வேண்டாம்!

நடுங்கிட வைக்கும் வண்ணம்
நாளெலாம் துரோகம் செய்து
தடம்புரண் டேதான் வாழ்வோர்
தாழ்ந்தவர் ஆவார் நெஞ்சே!

கடவுளை வணங்கி னாலும்
கடவுளை ஒதுக்கி னாலும்
கடமையை மறவா நெஞ்சைக்
கடவுளே ஏற்பார் உண்மை!

குடும்பமே கோயில் என்று
கூடியே வாழ்ந்தால் போதும்
கடவுளைத் தேட வேண்டாம்!
காவியும் கட்ட வேண்டாம்!

மதுரை பாபாராஜ்
2002

தியாகச் செம்மல் காமராஜர்

இந்தியாவின் மூலையிலே விருது பட்டி
என்றவொரு கிராமத்தில் பிறந்த ராஜன்!
பண்பகமாய்ப் படிப்படியாய் வளர்ந்து வந்து
பாரதத்தின் அரசியலின் ஆணி வேராய்
பண்பட்ட பெருந்தலைவர் சிறந்து நின்றார்!
பாரதத்தாய் பெருமையுடன் நிமிர்ந்து நின்றாள்!
இந்தியாவின் தலைவர் யார் என்ற கேள்வி
எழுந்தநேரம் விடைசொன்னார் காம ராஜர்!

உண்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக் காட்டு!
உயர்வான பண்புகளின் சான்றுச் சீட்டு!
மண்ணகத்தில் ஏழைகளின் விடியல் பாட்டு!
வஞ்சகமே இல்லாத தென்றல் காற்று!

தன்னலத்தின் சுவடறியா தியாகச் செம்மல்!
தரமான அரசியலின் தலைமைச் சான்றோன்!
பொன்வேண்டாம்! பொருள்வேண்டாம் என்றே வாழ்ந்தார்!
புவியரங்கில் இந்தியாவின் புகழைக் காத்தார்!


மதுரை பாபாராஜ்
2002

பகுத்தறிவுப் பகலவனே

பட்டிதொட்டி இடமெல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றேதான்
முற்போக்கு எண்ணத்தை
முழுமூச்சாய் விதைத்திருந்தாய்!

பகுத்தறிவுக் கொவ்வாத
பழமைக்கு விடைகொடுத்து
அகத்தினிலே புதுமையினை
அரவணைக்க வேண்டுமென்றாய்!

சாதிமத வெறியாட்டம்
சமத்துவத்தை முறித்துவிடும்!
வேதனைக்குக் கொடிபிடிக்கும்!
வேற்றுமையை வளர்க்குமென்றாய்!

தன்மான மனிதனாகத்
தனிமனிதன் வாழ்வதற்கு
எந்நாளும் பகுத்தறிவை
ஏற்பதற்கு வழியுரைத்தாய்!

பகுத்தறிவுப் பகலவனே !
பார்போற்றும் பெரியாரே!
மகத்தான உன்தொண்டின்
மகத்துவத்தை வணங்குகின்றோம்!

மதுரை பாபாராஜ்
2002

மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வார்

அன்பு, மனிதநேயம்,ஆக்கபூர்வ சிந்தனைகள்,
நன்றி மறவாமை நாட்டினிலே -- நன்கு
நிலைத்துவிட்டால் அந்தநாட்டில் நிம்மதியாய் மக்கள்
தலைநிமிர்ந்து வாழ்வார் தழைத்து.

மதுரை பாபாராஜ்
2002

கருமாரி அம்மனே !

பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெற்றோரே விட்டெறியும்
குற்றத்தைச் செய்துவிட , குற்றமற்ற -- சிற்றரும்பு
வாழ்வில் அனாதையாய் மாறியதே! அவ்வரும்பின்
தாழ்வகலத் தாய்வரம் தா.

மாங்காடு அம்மன்

ஊசி முனைத்தவத்தால் உன்னதக் காட்சிதந்து
ஆசி வழங்குகின்ற அன்னையே -- மாசு
மருவற்ற மாங்காடு மங்கலமே! உங்கள்
அருளொன்றே எங்கள் அகம்.

துளிகள்

வாழ்க்கை

வாழ்க்கையை வில்போல் வளைக்க நினைத்தேதான்
பாழ்பட்டுப் போகாதே பாரினிலே -- வாழ்க்கை
அமைவதுபோல் வாழ வளைந்துகொடு ! நெஞ்சில்
சுமையின்றி வாழ்தல் சுகம்.

பசி

சாதம் அழைக்கிறது! சாம்பார் மணக்கிறது!
நாதம் இசைக்கிறது நாவிங்கே -- தூதுவிட்டுத்
துள்ளும் பசியடக்கத் தோகை மயிலாளே !
அள்ளி அமுதத்தைப் போடு.

மலை நகர்ந்தது

கோலத் திருநிலவு கொள்ளைச் சுடர்சிந்தி
நீலத் திரைவிரிப்பில் நித்திலமாய் ஊர்ந்ததடி
சோலை சிலிர்த்ததடி! சொக்கும் அழகினிலே
மாலை நகர்ந்ததடி மாது.


நகரப் பேருந்து நெரிசல்

முண்டி நெருக்கியே மூச்சுத் திணறியே
நொண்டி அடித்து நுழைந்து -- வண்டியில்
நாளும் பயணம் நகர்கின்ற கோலத்தில்
காலம் கரைகிறது காண்.

மதுவை விலக்கு

நாட்டின் அவமானம் நாட்டில் மதுக்கடைகள் !
கேட்டை விளைவிக்கும்! கேலிப் பொருளாக்கும்!
வீட்டை இருளாக்கும்! வேதனை ஊற்றெடுக்கும்!
வேட்கை மனமே விலக்கு.

துப்பாதே மானிடனே

கண்ட இடங்களில் காறியே துப்புகின்றார்!
என்னப் பழக்கமோ இப்பழக்கம் -- எண்ணற்ற
தொற்றுநோயைக் கூட்டிவரும்! துப்பாதே மானிடனே!
குற்றத்தைச் செய்யலாமா? கூறு.


மதுரை பாபாராஜ்
1997

Wednesday, December 24, 2008

ஆர்வக்கோளாறு

வெண்பா எழுதி விருபபமுடன் இல்லாளை
நன்றாய்ப் படியென்றேன் நல்லவளோ வெண்சாதம்
வெந்ததையா! எப்படிநான் வெண்பா படித்திடுவேன்
என்றுரைத்துச் சென்றுவிட்டாள் இன்று

மதுரை பாபாராஜ்
1997

பாட்டுக்கு வைக்கின்றார் வேட்டு

ஆபாசப் பாடல்கள் சமுதாய மேடையிலே
அரங்கேற்றம் காணுகின்ற காலம் -- இது
பாட்டுக்குப் பொல்லாத காலம் !

காசுக்குப் பாட்டெழுதிக் காமத்தைத் தூண்டுகின்ற
களங்கத்தைக் கவிஞர்கள் சுமந்தார் -- இவர்கள்
மாசுக்கே மாசாக அமைந்தார்!

இன்றுவரும் பாடல்கள் குடும்பத்தார் எல்லோரும்
இணைந்தேதான் கேட்பதற்கே இல்லை -- கொச்சைச்
சொற்களின் அணிவகுப்பே எல்லை!

தேசத்தின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்றுகின்ற
பாதகமே இவர்களது செய்கை -- வெட்கித்
தலிகுனிய வைக்கிறது நம்மை!

எதிர்கால இளைஞர்கள் நெஞ்சத்தில் நஞ்சுதனைப்
பாய்ச்சித்தான் களிக்கின்றார் இவர்கள் -- நல்ல
முன்னேற்றப் பாதைக்கே சுவர்கள்!

மக்கள்தான் விரும்புகின்றார் என்றேதான் சொல்கின்றார் !
மக்களென்ன ஊர்வலமா வந்தார்?-- இல்லை
இவர்களிடம் கோரிக்கையா தந்தார்?

முக்கல்கள் முனகல்கள் வக்கிரங்கள் இவையெல்லாம்
முழுமூச்சாய்ப் பாடலாக மாறும் -- இவையோ
சாக்கடைக்குப் போட்டியாக ஊறும்!

பெண்ணினத்தை இழிவாக்கி போதைக்குப் பொருளாக்கி
முற்போக்குக் கவிஞரென்றே சொல்வார் -- பண்பின்
முதுகெலும்பை ஒடித்தேதான் கொல்வார்!


வெண்பாக்கள் விருத்தங்கள் திரைப்படத்தில் எழுதென்று
வேகமாகச் சொல்லவில்லை நாங்கள் -- அரை
வேக்காட்டில் புலம்பவில்லை நாங்கள்!

இலக்கியத்தின் நளினத்தைத் திரைப்படத்தில் இழையவிட்ட
கண்ணதாசன் திறமையினைக் காட்டு -- இல்லை
பாட்டுக்கே வைக்காதே வேட்டு!

மதுரை பாபாராஜ்

கால மாற்றம்

சித்திரப் பதுமை போலச்
சிறுமியாய் இருந்த நாளில்
தத்தியே நடைப யின்றாள் !
தளிர்மக ளுடனே நானும்
நத்தையாய் ஊர்ந்து சென்றேன்!
நாளெலாம் இன்பங் கண்டேன்!
முத்திரைப் பெட்ட கத்தை
முழுவதும் காத்து வந்தேன்!


தேன்மலர்ப் பருவந் தன்னில்
திளைத்திடும் மகளோ இன்று
மானெனத் துள்ளு கின்றாள்!
மலைப்புடன் என்னைப் பார்த்து
ஊன்றிடும் வலுவி ழந்து
உன்நடை தளர்ந்த தாலே
நானுமென் தோழி மட்டும்
நகர்வலம் செல்வோ மென்றாள்!

அன்றிவள் எண்ணி எண்ணி
அடிகளை வைத்த போது
மனத்தினில் ரசித்துப் பார்த்தேன்!
மயங்கியே நடந்து சென்றேன்!
இன்றிவள் நடையில் வேகம்
இணைந்ததும் என்னைத் தானே
அன்புடன் தவிர்த்து விட்டாள்!
அன்னைநான் பொறுத்துக் கொண்டேன்!

மதுரை பாபாராஜ்
1997

கொடுமையான அன்பு

பரபரப் பான அன்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
நிரந்தர மாக வாழ்வில்
நிலைத்திடும் உறுதி இல்லை!
அரசியல் உறவைப் போல
அடிக்கடி திசைகள் மாறும்!
உரிமையில் நெருங்கிப் போனால்
உதறியே விலகிக் கொள்ளும்!

அன்பெனும் சிறைக்குள் மாந்தர்
அடிமையாய்க் கிடக்கும் போதுத்
தன்மனம் சொல்லும் போக்கில்
தயக்கமே இன்றிச் செல்வார்!
முனையள விங்கே அன்பில்
முறிவினை உணர்ந்தால் போதும்
மனமெலாம் இருளில் மூழ்க
மாயமே வாழ்க்கை என்பார்!

எட்டியே இருந்து கொண்டு
எளிமையாய் உண்மை அன்பை
சிட்டிகை தந்தால் போதும்
சிறப்புடன் வளர்ந்தே ஓங்கும்!
ஒட்டியே நின்று கொண்டு
உண்மையோ சிறிதும் இன்றிக்
கொட்டியே கொடுத்தால் கூட
கொடுமையே அந்த அன்பு!

மதுரை பாபாராஜ்
1997

ஒழுக்கமே உரைகல்

பழமைக்கும் புதுமைக்கும்
பலமுனையில் போராட்டம்!
அழிவென்றும் ஆக்கமென்றும்
ஆர்ப்பரிப்பின் ஊர்வலங்கள்!
விழியென்றும் வேலென்றும்
வீடுதோறும் கருத்தரங்கம்!
இழிவென்றும் இயல்பென்றும்
இருநிலையில் உரையாடல்!

இருக்கின்ற பழமையொன்றே
எழுச்சிஎன உரைப்பதுவும்
வருகின்ற புதுமைதான்
வளமென்று வாழ்த்துவதும்
இருட்டுக்குள் தள்ளிவிடும்!
ஏமாற்றப் புயல்வீசும்!
கரையுடைய மாற்றத்தைக்
கனியவைத்தல் கடமையாகும்!

ஒருமித்த கருத்துக்கள்
உருவாக்கும் நிலையெடுப்பொம்!
தரமான எதிர்காலம்
தழைத்தோங்க வகைசெய்வோம்!
சரியான சமத்துவத்தை
சமைப்பதற்கு விதிவகுப்போம்!
உரைகல்லாய் ஒழுக்கத்தை
உள்ளத்தில் பதியவைப்போம்!

மதுரை பாபாராஜ்
1997

Tuesday, December 23, 2008

அஞ்சாமல் வலம்வரும் தலைவர்களும் !
அஞ்சியஞ்சி வாழும் பொதுமக்களும் !

குண்டு துளைக்காத கார்களில் சென்றிடுவார்!
கொஞ்சமும் நாட்டிலே அச்சுறுத்தல் இல்லையென்பார்!
அஞ்சவேண்டாம் மக்கள்என்றே சொல்லிடுவார் புன்னகைத்து!
அஞ்சாமல் ஆபத்தில் வாழ்!

அப்பாவி மக்கள் அடிபட்டுச் சாய்ந்திடுவார்!
அப்பொழுதும் குண்டு துளைக்காத வண்டிகளில்
தப்பாமல் வந்திடுவார்!ஆறுதலைத் தந்திடுவார்!
எப்பொழுது மக்களுக்கு காப்பு?

குண்டு துளைக்காத மேடை! பளபளக்கும்
குண்டு துளைக்காத கார்கள்! தலைவர்கள்
அஞ்சாமல் வீரமாகப் பேசியே வாழ்கின்றார்!
அஞ்சிவழ்வோர் மக்கள்தான்!பார்.

மதுரை பாபாராஜ்

Monday, December 22, 2008

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை!

என்னதான் இருந்த போதும்
இல்லறத் துணைவி வேண்டும்!
இன்பமோ? அன்றி இங்கே
இன்னலோ? எதுவென் றாலும்
தன்மனச் சுமையின் பங்கைச்
சரிசம மாக ஏற்கும்
நன்மகள் இவள்தான் என்பேன்!
நல்லதோர் வீணை என்பேன்!

நட்பினில் நண்ப னாக
நலந்தரும் செவிலி யாக,
தொட்டுற வாடும் நேரம்
தோகையாள் தென்ற லாக
நுட்பமாய்க் குடும்பத் தேரை
நுணுக்கமாய் இயககும் போது
கற்றநல் அமைச்ச னாகக்
காட்சிகள் ஏந்தி நிற்பாள்!

குடும்பமே இவளை நம்பிக்
குறைவற உலகில் வாழும்!
அடுக்களை மங்கை என்றே
அலட்சியம் செய்ய வேண்டாம்!
மடுவெனும் மனைவி யாகி
மலையெனும் தாயாய் மாறிச்
சுடரொளி வீசி இல்லச்
சுவைகளின் சுனையாய் நிற்பாள்!

மதுரை பாபாராஜ்
1997

கவிதைச் செங்கோல்

காசுக் காக விற்கும் பொருளாய்க்
கவிதைச் செங்கோல் மாறுவதா?
வேசித் தனத்தை கற்பைக் காக்கும்
வேதம் என்றே கூறுவதா?
ஆசை வெறியால் புகழைத் தேடி
அலையும் பயணம் யாத்திரையா?
கூசச் செய்யும் குறுக்கு வழிகள்
கொள்கை நெஞ்சின் சூத்திரமா?

கவிதைப் போக்கில் புதுமைப் பெயரில்
காமக் கணைகள் வீசுகின்றார்!
செவிகள் நாணும் சொற்கள் கொண்டு
திரையில் பாடல் தொடுக்கின்றார்!
கவிஞன் என்றால் கொஞ்சிக் கெஞ்சிக்
காலைத் தொடுதல் முறையில்லை!
அவனித் தீயே எரித்த போதும்
அருமைக் கவிஞன் வளைவதில்லை!

மதுரை பாபாராஜ்
1997

இன்னொரு காந்தி வேண்டும்

இன்னொரு காந்தி வேண்டும்
என்றொரு தாகம் நெஞ்சில்
பன்முறை எழுந்த போதும்
பகற்கன வென்றே தோன்றும்!
என்னடா இந்த தேசம்
எதற்கெடுத் தாலும் லஞ்சம்
என்பதை விதியாய் மாற்றி
இயல்பென ஆக்கி விட்டார்!

வன்முறை வறுமை பொய்மை
வஞ்சகம் பேதம் கொள்ளை
மன்பதை வீதி தன்னில்
மக்களைச் சுவைத்துப் பார்க்கும்!
இந்தியத் தாயின் வீட்டை
எப்படி யேனும் தாக்கிச்
செந்தணல் படரச் செய்யும்
சிந்தனை தேவை தானா?

அன்புடன் மனித நேயம்
அறநெறி ஒழுக்கப் பண்பு
நன்னெறி போற்றும் எண்ணம்
நடைமுறை யாதல் வேண்டும்!
தன்னலம் பொசுங்கிப் போகத்
தாய்த்திரு நாடு வாழ
இன்னொரு காந்தி வேண்டும்!
என்றிது செயலாய் மாறும்?

மதுரை பாபாராஜ்
1997

ஆசை

தந்தையைத் தாயை மீண்டும்
தரணியில் காண ஆசை!
எந்தமிழ்க் கவிதை தன்னை
இருவரும் கேட்க ஆசை!
அன்புடன் பணிந்து நின்றே
அவரருள் நாட ஆசை!
இன்றுநான் வாழும் வாழ்வை
இருவரும் கணிக்க ஆசை!


என்மகள் மகனும் இங்கே
இசைவுடன் கல்லூ ரிக்கு
இன்பமைச் செல்வ தைத்தான்
இருவரும் பார்க்க ஆசை!
தன்னிலை மறந்தே அந்த
தவத்திரு அடித்த ளங்கள்
மனமுவந் தேதான் வாழ்த்தும்
மாட்சியை ரசிக்க ஆசை!

துன்பமோ நெருங்கும் போது
துணையென அவர்கள் நின்று
மனத்தினில் துணிவை ஏந்தும்
வழிமுறை சொல்ல ஆசை!
இன்பமோ துள்ளும் போது
இருவரும் அருகில் வந்து
அனைத்தையும் ஒன்றாய் எண்ணும்
அறிவுரை வழங்க ஆசை!

மதுரை பாபாராஜ்
1997

Saturday, December 20, 2008

சின்னத் திரையில் ஆபாச நடனம்

பண்பாட்டைச் சீர்குலைக்கும் ஆபாசக் கூத்தாட்டம்
அன்றாடம் வீட்டுக்கு வீடிங்கே -- சின்னத்
திரையிலே காட்டுகின்றார்!தமிழ்ப்பண் பாட்டின்
கரையிதுவோ?கேட்கவேண்டும் இங்கு.

தமிழர்கள் வாழத் தமிழ்ப்பண்பாடு
விழியாக வேண்டுமென்று மார்தட்டு வோரே!
இழிவான இத்தகைய காட்சியைக் காட்டும்
இழிசெயலைச் செய்யலாமா ? கூறு.

இனமானம் எங்கே? மொழிமானம் எங்கே?
பணமானம் ஒன்றே குறிக்கோளாய் மாற
மனமானம் இன்றி வருமானம் பார்க்கும்
குணஈனம் ஏனோ? இயம்பு.

மதுரை பாபாராஜ்

எண்சாணின் நிலை

ஒருசான் வயிற்றுக்கு உணவில்லை என்றால்
சுருங்கிடும் எண்சான்துருத்தி -- ஒருசான்தான்
எண்சானை என்றென்றும் ஆட்டிப் படைத்திருக்கும்!
நன்றாய் உணர்ந்து நட.

மதுரை பாபாராஜ்
2006

ஒன்றால் அடங்கும் ஐந்து

ஆர்ப்பரித்தே ஆட்டுகின்ற ஐம்புலனை நாள்தோறும்
ஓரறிவு சீர்படுத்தி ஓட்டுகின்ற -- சாரதியாய்
அய்ந்தையோ ஒன்றால் அடக்குகின்ற அற்புதத்தால்
உய்கின்றோம் வாழ்வில் உணர்.

மதுரை பாபாராஜ்
2006

தமிழ்வாழ்க !

வாழ்க வளர்க தமிழென்று வாயார
வாழ்த்தினால் மட்டும் போதாது -- வாழ்க்கையுடன்
ஒன்றி உலவ உருப்படியாய்த் திட்டத்தை
தந்தால் நிலைக்கும்! சாற்று.

மதுரை பாபாராஜ்
2005

தண்டனை உண்டு

தவறுகள் செய்துவிட்டுத் தப்பிக்க எண்ணும்
மனநிலையை மாற்றினால் நன்று -- வணங்கியே
வாடிக் கடவுளிடம் மன்றாடிக் கேட்டாலும்
தேடிவரும் தண்டனை! செப்பு.

மதுரை பாபாராஜ்
2005

Friday, December 19, 2008

தன்குழந்தை பொன்குழந்தை

உங்கள் படைப்புகள் உங்களுக்குச் சாதனை!
அந்தப் படைப்பை அனைவரும் -- உங்களைப்போல்
எண்ணவேண்டும் என்றே எதிர்பார்த்தால், ஏமாற்றம்
நெஞ்சில் உருண்டிருக்கும்! காண்.

மதுரை பாபாராஜ்
2005

இதுதான் உடல்

துர்நாற்றம் வீசும் துருத்தி! துளைப்பாண்டம்!
சுரக்கும் அழுக்கின் சுனைப்பை -- அரிப்பின்
கிடங்கு! வெறியில் கிறங்கும் குரங்கு!
உடலே இதுதான் உணர்.

மதுரை பாபாராஜ்
2005

வாழ்வின் முத்து

ஒன்றும் ஒன்றும் இரண்டு
படித்தால் வளர்ச்சி உண்டு!
இரண்டும் ஒன்றும் மூன்று
கடவுள் அருளை வேண்டு!
மூன்றும் ஒன்றும் நாலு
முத்தமிழ் தானே வாழ்வு!
நான்கும் ஒன்றும் ஐந்து
தீமை செய்ய அஞ்சு!
ஐந்தும் ஒன்றும் ஆறு
அன்பே வாழ்க்கை கூறு!
ஆறும் ஒன்றும் ஏழு
ஆற்றல் ஏணியில் ஏறு!
ஏழும் ஒன்றும் எட்டு
நல்லவ ருடனே ஒட்டு!
எட்டும் ஒன்றும் ஒன்பது
நாட்டுப் பற்றே பண்பது!
ஒன்பதும் ஒன்றும் பத்து
ஒற்றுமை வாழ்வின் முத்து!

மதுரை பாபாராஜ்
2005

Thursday, December 18, 2008

தஞ்சாவூர் பொம்மை

தஞ்சாவூர் பொம்மை 

 தஞ்சா ஊரு பொம்மைதான்
   தலையை ஆட்டும் பொம்மைதான்! 
எந்தப் பக்கம் சாச்சாலும் 
 எழுந்து நிற்கும் பொம்மைதான்! 

 வண்ண வண்ண பொம்மைதான்! 
 வடிவம் உள்ள பொம்மைதான்! 
கண்ணைக் கவரும் பொம்மைதான்! கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்! 

 எந்தத் திசையில் விழுந்தாலும் 
 எழுந்தே நிற்போம் பொம்மைபோல்! 
நம்பி வாழ்வோம் உலகத்தில் 
 நாளை வெற்றி நமதாகும்! 

 மதுரை பாபாராஜ் 2005

முதல் இரண்டு கண்ணியில்தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பற்றிய செய்தி

 மூன்றாம் பகுதி மிக ஆழமானது அதே சமயத்தில் எளிமையானது குழந்தைகளுக்கு மனதில் எளிதாகப் பதியக் கூடியது

பம்பரமும் அப்படியே

 மனித வாழ்க்கையை எளிதாகப் படம் பிடிக்கிறது ஆடி அடங்கும் வாழ்க்கை என்பதற்கு பம்பரத்தின் சுழற்சி எடுத்துக்காட்டு

சி ஆர் 

பாபாவின் பாட்டெல்லாம்
பொம்மை பாட்டல்ல..அவை
உம்பர்களாலும் போற்றப்படுபவை.

தென்காசி கிருஷ்ணன்
குறள்நெறிக் குரிசில்

புதியதும் உண்டோ புகல் ?

தாய்ப்பால் இயற்கைத் தருகின்ற ஞானப்பால் !
சேய்களைக் காக்கின்ற தேனமுதம் -- தாய்மை
துதிக்கின்ற இத்தகையத் தூய்மையான சேய்ப்பால்
புதியதும் உண்டோ புகல்?

இப்படித்தான் தூக்கம் !

பாயும் தலையணையும் பார்த்ததில்லை செந்தமிழே!
பாயாகும் மண்தரைதான்! பற்றுடனே -- சாய்வதற்குத்
திண்டாக என்கரங்கள் சேரத் தலைக்கடியில்
அண்டலாக்கித் தூங்குகின்றேன் ! நான்.

உளைச்சலைத் தூவாதே!

உதவிகள் செய்யும் ஒருநிலை இல்லை!
அதுகூட நல்லதுதான்! ஆனால் -- உறுத்தும்
உளைச்சலைத் தூவும் ஒருநிலை ஏற்கும்
நிலையோ கொடிது! நிறுத்து.

மதுரை பாபாராஜ்
2005

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

உடலின் அழுக்கை உரசிஉரசி நீக்கக்
குடங்குடமாய் நீரால் குளிப்பாய் -- குடங்குடமாய்
ஊற்றிக் குளித்தாலும் உள்ளம் அழுக்குகளைத்
தேக்கினால் என்னபயன் செப்பு?

இறைவன் மிகவும் பெரியவன் என்றே
நிறைவுடன் நம்பியே நித்தம் -- முறையாய்
முழுமன பக்தியில் மூழ்கித் திளைத்தால்
அழுக்கை அகற்றும் அகம்.

மதுரை பாபாராஜ்
2005

பாவம்! பரிதாபம்!

நரைவிழுந்த மூதாட்டி
நடுத்தெருவில் நிற்கின்றாள்!
அரைவயிற்றுக் கஞ்சிக்கே
அங்குமிங்கும் அலைகின்றாள்!

வீடுவீடாய்ச் செல்கின்றாள்!
விழியேங்கக் கேட்கின்றாள்!
கூடிழந்த வாழ்க்கையிலே
கூசித்தான் நடுங்குகின்றாள்!

உற்றார்கள் இருப்பாரோ?
உறவினர்கள் இருப்பாரோ?
பெற்றபிள்ளை இருப்பாரோ?
பிழைசெய்தோர் யாரிங்கே?

எப்படித்தான் வாழ்ந்தவளோ!
இப்படித்தான் ஆகிவிட்டாள்!
நற்கதியை இழந்தேதான்
நாள்தோறும் தவிக்கின்றாள்!

பாவமாக இருக்கிறது!
பாழுமனம் துடிக்கிறது!
ஆனமட்டும் தருகின்றோம்!
ஆனாலும் கொடுமையிது!

மதுரை பாபாராஜ்
2005

வேறெங்கும் உண்டோ விளம்பு

வன்முறையால் கொந்தளித்த வங்கக் கலவரத்தைத்
தன்முறையாம் நன்முறையால் தானடக்கி -- அன்புடனே
வீறுகொண்ட காந்தியைப்போல் வெற்றிபெற்றோர் இவ்வுலகில்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

(டிசம்பர் 2005 அமுத சுரபி இதழில் வெளிவந்தது)

மதுரை பாபாராஜ்

பணம் ! பணம் ! பணம்!

பணம் ! பணம் ! பணம்!

பணமே! பணமே! உன்னையார்
படைத்தது இந்த உலகத்தில்?
தினமும் உன்னை மனிதர்கள்
தேடித் தேடி அலைகின்றார்!

சிறுகச் சிறுகச் சேர்த்தாலும்
செலவைக் காட்டிப் பறிக்கின்றாய்!
நிறைய வந்தே குவிந்தாலும்
நிலையை மறக்கச் செய்கின்றாய்!

எனக்கு நீயோ உறவானால்
எல்லோ ருந்தான் வருகின்றார்!
எனக்கு நீயோ பகையானால்
எவரும் தேடி வருவதில்லை!

உழைத்தபோது நீ வந்தாய்!
உருண்டது வாழ்க்கை ஒருவாறாய்!
உழைப்பின் கால்கள் நின்றதுமே
உள்ளம் தவிக்கத் தொடங்கியதே!

பணமே உன்னால் படும்பாட்டை
பாவில் வடிக்க இயலாதே!
சுணங்க வைப்பதும் நீதானே!
துள்ளச் செய்வதும் நீதானே!

மதுரை பாபாராஜ்
2005

இன்னலைப் போக்கு

இருக்கும் வரையில் இனிமையாய்ப் பேசி
அருமையாய் அன்பைப் பொழிந்து -- பெருந்தன்மை
தென்றலாய் வீச தெளிவாக இல்லறத்தை
இன்பமாக்கி இன்னலைப் போக்கு.

மதுரை பாபாராஜ்
2005

Wednesday, December 17, 2008

வாழ்க்கையின் இன்பம்

வாழ்க்கையின் இன்பம்

விளையாட்டுப் பொம்மைகளை வீட்டுத் தரையில்
பரப்பிவிட்டு வெற்றியுடன் பார்த்து -- சிரிக்கின்ற
பேரனைக் கொஞ்சிவிட்டு பேசி அடுக்குவது
யாரென்றால் தாத்தாதான் அங்கு.

பாட்டியோ தாத்தா படும்பாட்டைக் கண்டேதான்
போற்றிப் புகழ்ந்திருப்பாள்் பேரனை -- ஊற்றெடுக்கும்
இன்பம் இதுவன்றி இவ்வுலகில் வேறுண்டோ?
நெஞ்சம் இனிக்கும் நினைந்து.

மதுரை பாபாராஜ்
2005

Monday, December 15, 2008

உன்னுள் உன்னைத் தேடு

மண்ணுக்குள் வைரமுண்டு!
மாக்கடலுள் முத்துண்டு!
பொன்னுக்குள் ஒளியுண்டு!
பூவுக்குள் மணமுண்டு!
தென்றலுக்குள் இதமுண்டு!
செந்தமிழில் அமுதுண்டு!
பண்ணுக்குள் பாடலுண்டு!
பாருக்குள் அனத்துமுண்டு!

இயற்கையெல்லாம் எதைநாடி
எங்கெங்கு அலைகிறது?
செயற்கையாக மனிதனேநீ
தேடியேனோ அலைகின்றாய்?

எதுஇல்லை உன்னிடத்தில்?
ஏக்கத்தை விட்டுவிடு!
புதையலின் சுரங்கமே!
புதுமையின் விளைநிலமே!
புதையலே உன்னுள்தான்!
புரிந்துகொண்டு நடைபோடு!
விதைப்பதும் உன்னுள்தான்!
விளைச்சலும் உன்னுள்தான்!

உன்னுள்ளே உன்னைத்தான்
உண்மையாகத் தேடவேண்டும்!
மண்ணகமே உன்கையில்
வசப்படுமே மானிடனே!

மதுரை பாபாராஜ்
2005

Sunday, December 14, 2008

இதுதான் உலகம்

When we were born, you cried when the world rejoiced. Live your
Life in such a way that when you die the world cries while you rejoice.

பிறக்கும் பொழுதிலோ நாமோ அழுவோம் !
உறவினர் இங்கே சிரிப்பார் -- இறப்பிலே
நிம்மதியாய் நாம்செல்லும் போதோ உலகம்
குமுறி அழுதுநிற்கும் கூறு!

மதுரை பாபாராஜ்
2007

உண்மையான அழிவு

(The tragedy of life is not death,but what we let die
inside of us while we live.
----- Norman Cousins)

இறப்பது என்பது துன்பமில்லை!வாழ்வில்
இறப்பதற்கு முன்பு இழக்கும் -- சிறப்பான
பண்புகளை நம்முள் இறக்கவிடும் சீரழிவே
உண்மை அழிவாம் உணர்.

மதுரை பாபாராஜ்
2007

Saturday, December 13, 2008

வாழ்க்கை

துளிகள் உயிர்பெற்று உலவித் துளியாய்ச்
சுழிகளில் சிக்கிச் சுழன்று -- உழன்று
உயர்வதும் தாழ்வதும் இந்த உலகின்
நியதியாம்! வாழ்க நினைந்து.


மதுரை பாபாராஜ்
2005

கிள்ளிஎறி

சினத்திற்கு என்றும் சினம்விடை அல்ல !
மனத்தின் அமைதி மழையை -- சினமாம்
நெருப்பின்மேல் ஊற்றும் நிலையே விவேகம் !
அரும்பிலே கிள்ளிஎறி ! ஆம்.

மதுரை பாபாராஜ்
2005

பேச்சைக் குறைப்போம்!

பேச்சைக் குறைத்தால் பெருஞ்சிக்கல் எல்லாமே
மூச்சற்றுப் போய்விடும் முத்தம்மா--பேச்சுக்குப்
பேச்சிங்கே பேசுகின்ற பேச்சால்தான் வம்பாகி
தூற்றலுக்கு வித்தாகும் சொல்.

அணுகுமுறையே அச்சாணி

ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்றாட இல்லறம்
தேனாய் இனிக்கத் திளைப்பதும் --வீணாய்
தினமும் உளைச்சலில் சீறிடும் போக்கும்
அனைத்தும் அணுகுமுறை தான்.

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பான்மை
சுற்றித் தழைக்கின்ற சூழ்நிலை -- பற்றித்
தொடர்ந்திருந்தால் இல்லறத்தில் துள்ளும் மகிழ்ச்சி
மடல்விரித்து வாழ்த்தும் மணந்து.

மதுரை பாபாராஜ்
2005

மாண்புமிகு அப்துல் கலாம்

தீவுக்குள் பிறந்தேதான்
வளர்ந்தவரைக் காலமின்று
தீபகற்பக் குடியரசுத்
தலைவராக்கி மகிழ்கிறது!
பாவினத்தால் பாவலர்கள்
பாடுபொருள் ஆக்கித்தான்
பலவாறாய் வாழ்த்துகின்றார்!
தமிழினமே நிமிர்கிறது!


அறிவியலின் ஆக்கபூர்வ ஆற்றல் மிளிர
அறிவார்ந்த விஞ்ஞானி யாகி -- முறையாகப்
பல்வேறு சாதனைகள் பார்போற்ற நாட்டியவர்!
தொல்லுலகில் நம்நாட்டின் சொத்து.

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்க
மனிதநேய எண்ணம் மணக்க --அனைத்துமத
நல்லிணக்கம் வேரூன்ற நாளும் உழைக்கின்றார்!
தெள்ளுதமிழ் வாழ்த்தும் திளைத்து.

அணுகுண்டுச் சோதனையால்
வியக்கவைக்கும் சாதனை
அணுவளவும் செருக்கின்றி
சாதித்த அடலேறு!
அணுகுமுறை வேறுபட்டு
இந்தியாவைச் சீண்டுகின்ற
அகங்காரப் பகையினத்தை
எச்சரிக்கும் தேவதாரு!

மகுடத்தைத் தேடும் மனிதருண்டு நாட்டில்!
மகுடங்கள் தேடிவரும் மாமனிதர் இந்த
மகத்தான வித்தகர்தான்! வண்டமிழ்போல் வாழ்க!
மகத்துவத்தைப் பாடு மகிழ்ந்து!

மதுரை பாபாராஜ்
2004
கவிமாமணி சி.வீரபன்டியாத்தென்னவன் வெளியிட்ட
கவிஞர் போற்றும் காவிய நாயகன் அப்துல்கலாம் என்ற
நூலில் வெளிவந்த கவிதை.

ஊனம்

தனிமையில் நடந்து வந்தேன்!
தாவித்தான் ஓடி வந்தான்!
துணிவுடன் திரும்பிப் பார்த்தேன் !
துள்ளித்தான் சிரித்து வந்தான்!

பனிமலர் என்றன் உள்ளம்
பதைத்தது இதனைக் கண்டு !
மணித்துளி தன்னில் அச்சம்
வளைத்தது நடுங்க லானேன்!

வந்தவன் அருகில் நின்றான்!
மனதினில் கலக்கத் தோடு
என்னவென் றேதான் கேட்டேன்!
ஏந்திழை என்னை நோக்கி
தந்தனன் பணப்பை தன்னை!
தன்னிதழ்த் திறவா ஊமை
வந்தவன் என்ற றிந்தேன்!
வணங்கியே நன்றி சொன்னேன்!

உடலினில் ஊனம் பெற்றும்
உதவிடும் உள்ளந் தன்னைக்
கடலெனக் கொண்டதாலே
கருத்தினில் உயர்ந்து விட்டான்!

சுடர்விடும் அழகி ருந்தும்
சுரந்திடும் சந்தே கத்தின்
தடந்தனைப் பெற்ற தாலே
தரணியில் எனேக்கே ஊனம்!

மதுரை பாபாராஜ்
1984

உவகையோ கானல்தான் !

ஒருகோழிக் குஞ்சங்கு மகிழ்ச்சி யோடு
ஓடிவந்து இரைதேட வந்த போது
பருந்தொன்று காலாலே அதனைக் கவ்வி
பறந்ததம்மா! என்னுள்ளம் துடித்ததம்மா !

தெருவோரம் நாயொன்று வாலை ஆட்டித்
துள்ளித்தான் குதித்ததம்மா !அதனைக் கண்ட
ஒருசிறுவன் கல்லெடுத்து அடித்த போது
ஓலமிட்டு ஓடியதால் கலங்கி நின்றேன்!

வளைவிட்டு எலியொன்று வந்த போது
வாலாட்டும் பூனையொன்று அதைப்பி டித்து
திளைத்ததம்மா இன்பத்தில்!எலியோ அங்கே
திணறியதும் கண்களைநான் மூடிக் கொண்டேன்!

இளைப்பாறத் தவளைதான் குளத்தை விட்டே
எழிலாகக் கரைமீது அமர்ந்த போது
வளைந்தாடும் பாம்பொன்று அதைவி ழுங்கி
மகிழ்ந்ததம்மா ! அதைக்கண்டே குழம்பி நின்றேன்!

இன்பமிங்கே தன்சிறகை விரிக்கு முன்பே
இன்னலென்னும் கருநாகம் சீறு தம்மா !
கண்மூடித் திறப்பதற்குள் உவகை இங்கே
கானலாகும் நிகழ்ச்சிகளைக் கண்டு நின்றேன்!

மதுரை பாபாராஜ்
1981

பூபாளக்குவியல்

வழிமாறும்! மொழிமாறும்!
வரிமாறும்!விலைமாறும்!
விழிமாறும்! விரல்மாறும்!
வினைமாறும்! விடைமாறும்!
பழிமாறும்! பகைமாறும்!
பனிமாறும்! படைமாறும்!
மழைமாறும் ! மனைமாறும் !
மலைமாறும்! மடுமாறும்!

நதிமாறும்! நடைமாறும்!
நகைமாறும்! நிலைமாறும்!
விதிமாறும்! ஒளிமாறும்!
விசைமாறும்! திசைமாறும் !
கதிமாறும்! கருமாறும்!
கணைமாறும்! கலைமாறும்!
கதைமாறும்! கவிமாறும்!
கரைமாறும்! உரைமாறும்!

எதுமாறிக் குலைந்தாலும்
என்னவளின் நினைவுகளை
விதையேந்தும் நிலம்போல
விருப்பமுடன் சுமக்கின்ற
இதயத்தின் சுருதிமட்டும்
என்றென்றும் மாறாது !
புதையல்தான் !அவள்நினைவு
பூபாளக் குவியல்தான்!

மதுரை பாபாராஜ்
1989

முத்தான மூவர்

தாயினிற் சிறந்த கோயில்
தரணியில் இல்லை என்றார்!
கோயிலைத் தேடித் தேடிக்
கும்பிடச் செல்ல வேண்டாம்!
தாய்மனம் நோகா வண்ணம்
தளிர்களின் கடமை இங்கே
தூய்மையாய் இருந்தால் போதும்!
தொழுததின் பயனைக் காண்போம்!

தந்தையின் சொல்லை விஞ்சும்
தத்துவம் இல்லை என்றார்!
மந்தையில் ஆட்டைப் போல
மற்றவர் பின்னால் சென்று
சந்தையில் விலைக்கு மாறும்
சரக்கென மாற வேண்டாம்!
தந்தையின் சொல்வி ளக்கு
தந்திடும் ஒளியில் செல்வோம்!

இருவருக்கு அடுத்த தாக
எவரினி முதன்மை என்றால்
அருந்தமிழ் அகரஞ் சொல்லி
அகத்தினில் அறிவை ஊட்டி
இருளினை அகற்றிக் காட்டும்
இணையிலா ஆசான் என்பேன்!
இருகரம் கூப்பி நெஞ்சில்
இசைவுடன் அவரைப் போற்று!

மதுரை பாபாராஜ்
1989

Friday, December 12, 2008

பெருங்கவி பெற்ற பரிசு!

காலத்தை உருவாக்கும்
கவிஞருக்குப் பரிசொன்றைக்
காலமகள் தருவதற்குக்
கனிவுடனே முடிவெடுத்தாள்!
ஞாலத்தைப் படம்பிடித்து
ஞானத்தின் மடிதவழும்
சீலர்கள் சிறப்படையச்
செய்வதுதான் கடமைஎன்றாள்!

எங்கெங்கோ அலைந்துசென்றாள்!
எத்துணையோ பொருள்வகையைத்
தங்குதடை எதுவுமின்றித்
தான்சென்றே அறிந்துவந்தாள்!
இங்கிருக்கும் வளமனைத்தும்
இவர்படைக்கும் கவிவரிமுன்
மங்கிவிடும்! இதைத்தருதல்
மதிப்பில்லை எனவுணர்ந்தாள்!

அழிந்துவிடும் பொருளனைத்தும்!
அழியாமல் அவனியிலே
செழிப்பதுவோ வறுமைதான்!
சிந்தித்தாள்! செயல்பட்டாள்!
பிழிந்தெடுக்கும் வறுமையினைப்
பெருங்கவியே! பரிசாக
வழங்குகிறேன் எனத்தந்தாள்!
வழிவழியாய்த் தொடர்கிறது!

மதுரை பாபாராஜ்
1989

வளைகாப்பும் விளையாட்டும்

கைநிறைய வளையல்கள் கலைஅகத்தில் நாணம்
கைகொடுக்க மதிமுகத்தாள் நிலம்பார்க்க, கண்கள்
கைபிடித்த நாயகனின் இதயத்தைத் தொட்டுக்
கனித்தமிழில் கவிஎழுதிக் களித்திருக்கக் கண்டேன்!
கைகொடுத்துத் தோழிகளோ ஏந்திழையின் காதில்
கலகலப்பாய்க் கிசுகிசுக்க இன்பத்தால் துள்ளி
கைகொடுத்த தோழிகளை அன்புடனே தட்டிக்
காரிகையோ முத்தாக முறுவலித்தாள் அங்கே!

வளைகாப்பு நாயகனின் மனத்தென்றல் சென்று
வரலாற்று நாளான மணநாளைச் சுற்றி
களித்தாடி மணங்கமழ நிகழ்ச்சிகளை ஏந்திக்
கவிபாடி ஓவியத்தை எழுதியதும் கண்கள்
அளிஒன்று மலரொன்றில் ஊர்வதுபோல் மெல்ல
ஆரணங்குச் சிலைமீது படிப்படியாய்ச் செல்ல
வளைக்கரத்தாள் இதையுணர்ந்து குறும்பாகப் பார்க்க
வளர்ந்ததங்கே விளையாட்டு ரகசியத்தின் தோளில்!

மதுரை பாபாராஜ்
1989

இதுவா விடியல்?

உழவரின் அசைவுகள் ஒளிக்கதிர்ச் செல்வனை
உசுப்பிட விழித்தெழுந்தான்!
விழித்தவன் கதிர்களை விருப்புடன் மண்ணக
வெளியினில் படரவிட்டான்!
கழிந்தது காரிருள்! கலையெழில் விடியலும்
கனிந்ததை எடுத்துரைத்தான்!
விழித்தனர்!எழுந்தனர்!செழிப்பினில் வாழ்பவர்
விதைத்தனர்!எழுச்சியினை!

இப்படி ஒருவகை எழுச்சியை உலகினில்
எழுதிய கதிரவனும்
அப்புறம் குடிசையில் அழுதிடும் அரும்புகள்
அருகினில் நெருங்கிநின்றான்!
கப்பிய துயரமும் கவ்விய சோகமும்
கைகளைத் தட்டிநிற்க
எப்படி எழுந்திட இயன்றிடும் கதிரவா
என்றதும் உருகிவிட்டான்!

பொன்னிற விடியலின் பொன்மயத் துகள்களில்
புரள்வதும் ஒருவர்க்கம்!
அனல்நிற விடியலின் அனற்கரம் சிறையிட
அழுவதும் ஒருவர்க்கம்! நற்
இனிவரும் நாளினில் இவ்வகை இருநிலை
இருப்பதும் இழிவென்பேன்!
முனைந்திடு! சமநிலை முகிழ்த்திடச் செய்வது
முயற்சியின் வழிஎன்பேன்!

மதுரை பாபாராஜ்
1989

பொன்னிறமும் பொருளும

கன்னியின் மேனி எல்லாம்
கலைஎழில் அணிக லன்கள்
மின்னிட வந்து நின்றாள்!
மிடுக்குடன் நிமிர்ந்து பார்த்தான்!
பொன்மணி நகைகள் போதும்!
பூமகள் அழகும் போதும் !
பொன்மகள் கறுப்பே என்று
புகன்றவன் மறுத்து விட்டான்!

தாமரை வண்ணங் கொண்டு
தளிர்க்கொடி வந்து நின்றாள்!
கோமகன் நிமிர்ந்து பார்த்தான்!
குலமகள் நிறமோ பொன்தான்
தாமரை மேனி தன்னில்
தழுவிடும் நகைகள் இல்லை !
ஆமிவள் வேண்டா மென்றே
அகன்றவன் சென்று விட்டான்!

பொன்னொளி தன்னை விஞ்சும்
புதுநிறப் பெண்ணும் வேண்டும்!
பொன்னிறம் இருந்த போதும்
பொன்மணிப் பொருளும் வேண்டும்!
மனிதனே! மண்ணுக் குள்ளே
மறைந்திடும் அந்த நாளில்
பொன்னிறம் சாம்ப லாகும்!
பொன்மணி விலகி போகும்!

மதுரை பாபாராஜ்
1989

சிறுமையைப் பொசுக்கும் தீ!

அன்றொரு நாளினில் எட்டய புரததினில்
அழகிய அரும்பொன்று
தன்னொளி சிந்தியே தவழ்ந்தது தரணியில்
தழைத்தது படிப்படியாய்!
சின்னவன் வளர்ந்ததும் சிந்தனை விளக்கினை
சீருடன் ஏந்திநின்றான் !
அந்நியர் நடுங்கிட அனல்வரிக் கவிதையை
அள்ளியே வீசிநின்றான்!

வறுமையின் பிடியினில் வதைபடும் நிலையிலும்
வாட்டமோ கொண்டதில்லை!
தறுதலைப் போலொரு தனிநிலை எடுத்திவன்
தன்னிலை இழந்ததில்லை!
சுறுசுறுப் பாகவே சுடர்விழி சுழன்றிடும்!
சூறையும் தோற்றுவிடும்!
முறுக்கிய மீசையும் முழுத்தலைப் பாகையும்
முழுக்கவி பெயர்சொல்லும்!

இந்தியத் தாயவள் அடிமைச் சங்கிலி
உடைவது மட்டுமல்ல
இந்தியர் வாழ்வினில் இறுகிய ஏனைய
இழிநிலைச் சங்கிலிகள்
தந்திடும் துயரமும் தகர்ந்திட வழிமுறை
தருவது கடமைஎன்றான்!
செந்தமிழ்க் கவிச்சுனை! சீர்மிகு பாரதி
சிறுமையைப் பொசுக்கும் தீ!


மதுரை பாபாராஜ்
1989

இளநாணம்

சில்லாக்கு விளையாடிச்
சிரித்திருந்த பருவத்தில்
பொல்லாத நினைவலைகள்
புகுந்ததில்லை மனக்கடலில்!
எல்லோரும் கைகோர்த்தே
எல்லையற்ற மகிழ்ச்சியிலே
பல்லாண்டு களித்திருந்தோம்!
பரபரப்பை உணர்ந்ததில்லை!

நானிருந்த நிலையொன்று!
நானிருக்கும் நிலையொன்று!
ஏனிந்தப் பருவத்தை
இங்கேநான் அடைந்தேனோ?
தேனிருக்கும் மலராகத்
தேகத்தில் பலமாற்றந்
தானிருக்கும் பருவத்தில்
தனிமைக்குத் துணையானேன்!

என்னுடனே விளையாடி
இருந்திட்ட ஒருசிறுவன்
என்னைப்போல் வளர்ந்தேதான்
இளைஞனாக நின்றிருந்தான்!
என்னுணர்வில் ஏற்பட்ட
எத்தனயோ உருமாற்றம்
இன்னதென்று புரியவில்லை!
இதுதானோ இளநாணம்!

-- மதுரை பாபாராஜ்
1989

Sunday, December 07, 2008

துடித்திடும் வர்க்கம்

சம்பள நாளைக் காட்டிச்
சட்டெனக் கடனை வாங்கி
அமைதியின் பொய்மை வானை
அளந்திடும் பறவை நாங்கள்!

இமைகளை வலிந்தே மூடி
இரவினில் தூங்கும் வர்க்கம்!
குமுறிடும் நெஞ்சக் கூட்டில்
குறைகளைச் சுமக்கும் வர்க்கம்!

அரித்திடும் கவலை நோயால்
அடிக்கடி தாக்கப் பட்டே
இருதயத் துடிப்பின் எண்கள்
இருமடங் காக மாறி
இருதயத் துடிப்பின் எண்கள்
இத்துணை என்றே கூறும்
மருத்துவக் கணிப்பு தன்னை
மறுத்திடும் வர்க்கம் நாங்கள்!

உடனடித் தேவைக் காக
உலவிடும் வர்க்கம் நாங்கள்!
தடைகளைத் தாங்கித் தாங்கித்
தவித்திடும் வர்க்கம் நாங்கள்!
கடன்களை வாங்கி, நிற்கும்
கடன்களை அடைத்து விட்டுத்
தொடர்கடன் வாழ்வாய் மாறத்
துடித்திடும் வர்க்கம் நாங்கள்!

மதுரை பாபாராஜ்
1989

Saturday, December 06, 2008

பதவியணி

சென்றமுறை புத்தாண்டு நாளினிலே என்னைத்
திரண்டுவந்து சூழ்ந்தேதான் வாழ்த்தியவர் எல்லாம்
என்வீட்டின் எதிர்வீட்டில் இந்தமுறை கூடி
எழுச்சியுடன் அவரைத்தான் வாழ்த்துகின்றார்! என்னை
நினைவினிலே நிறுத்திவைத்தே ஏதேதோ பேசும்
நிலைதன்னை உணருகின்றேன்!ஒருசிலரோ பார்த்து
மனதார வணங்குகின்றார்! மற்றவர்கள் பாதை
மாறிவிட்டார்! வழிமுறையை விலக்கித்தான் சென்றார்!

அணிசெய்யும் பதவிதன்னை அளவுகோலாய் வைத்தே
அவனியிலே மனிதரையோ எடைபோட வேண்டாம்!
பண்புகளின் தரத்திற்குப் பரிசாக அன்பைப்
பகிர்ந்தளிக்கப் பழகுங்கள்! தன்னலமோ வேண்டாம்!
வணிகமாக அன்புதன்னைப் பண்டமாற்றம் செய்யும்
வக்கிரத்தை இனங்கண்டு புறங்காண வேண்டும்!
மனிதர்கள் தறிகெட்டு நிலைகெட்டு வாழும்
மனநிலையைத் துச்சமாகக் கருதத்தான் வேண்டும்!

மதுரை பாபாராஜ்
1989

மறைந்திடும் மத்தாப்புப் பூக்கள்

வரிப்புலியாய் வாலாட்டும்
வன்முறைகள் வஞ்சகங்கள்
எரிமலையாய் வெடிக்கின்ற
எண்ணற்ற சிக்கல்கள்
விரிகடல்போல் பொங்கிவந்து
விழுங்குகின்ற நிலைதன்னை
வரவேற்கும் சக்திகளை
வட்டமிடும் கழுகென்போம்!

அன்பிற்கும் பண்பிற்கும்
அடித்தளங்கள் அமைத்திடுவோம்!
நன்னெறியின் வாசலிலே
நாளெல்லாம் அணிவகுப்போம்!
தன்னலத்தின் வேரறுத்து
தலைநிமிர்ந்து நடந்திடுவோம்!
என்றென்றும் நல்லமைதி
ஏற்படவே உழைத்திடுவோம்!


சித்திரத்தை உருவாக்கி
சிந்தனைக்கு விருந்தாக்கி
முத்திரையைப் பதித்துவரும்
முன்னேற்றப் பாதையிலே
சித்திரத்தைச் சீரழிக்க
சீறிவரும் கொடுஞ்செயல்கள்
மத்தாப்புப் பூக்களாக
மறைந்துவிடும் விரைவினிலே!

மதுரை பாபாராஜ்
1989

இழுபறி நிலை வாழ்க்கை

எத்தனை நாள்தான் இந்த
இழுபறி நிலையில் வாழ்க்கை
நத்தையைப் போல ஊரும்?
நடைதடு மாறச் செய்யும்?
கொத்தடி மைக்குக் கூட
கூவிடும் விடியல் உண்டு!
நித்தமும் வெறுமை என்றால்
நிரந்தர விடியல் உண்டோ?

விடியலைத் தேடித் தேடி
விரையுது நாட்கள் இங்கே!
அடிக்கடி கரைகள் தோன்றி
அகத்தினில் மின்னித் தேயும்!
இடிவது கற்கள் என்றால்
இழப்பது ஒன்றும் இல்லை!
இடிந்திடும் உள்ளம் என்றால்
இருப்பதில் பொருள்தா னுண்டோ?

விரிகடல் கையில் வேண்டும்!
விண்மதி பையில் வேண்டும்!
அருவிகள் மடியில் வேண்டும்!
அடர்வனம் அருகில் வேண்டும்!
வரைமுறை இல்லா ஆசை
வாழ்வினில் வேண்ட வில்லை!
அலைவதோ தேவைக் காக!
அடிப்படைத் தேவைக் காக !

மதுரை பாபாராஜ்
--1989--

முதுமைப் பருவத்தின் யதார்த்தம்

(கணவன் மனைவிக்கும் --மனைவி கணவனுக்கும் உரைப்பது )

தனியாக இருக்கப் பழகிக்கொள் அன்பே!
இனிநான் துணையாய் இருக்கும் -- கனிவான
வாய்ப்பை முதுமை குறைக்கிறது! என்செய்ய?
ஓய்வை நெருங்குகின்றேன் நான் .



மதுரை பாபாராஜ்

Thursday, December 04, 2008

இந்திய உணர்வுவேண்டும்!

அன்பில் உண்மை வேண்டும்!--அந்த
அகத்தில் நடிப்பு வேண்டாம்!
பண்பில் ஒழுக்கம் வேண்டும்!--அதில்
பகட்டுகள் என்றும் வேண்டாம்!
ஆற்றலை வளர்க்க வேண்டும்!--அதில்
அழிவுப் பாதை வேண்டாம்!
நாட்டுப் பற்று வேண்டும்!--நாட்டைக்
காட்டிக் கொடுக்க வேண்டாம்!
உண்மை நேர்மை வேண்டும்!-- அதில்
ஊழல் கறைகள் வேண்டாம்!
நன்முறை போற்ற வேண்டும்!-- இங்கே
வன்முறைக் களைகள் வேண்டாம்!
இந்திய உணர்வு வேண்டும்!--இதில்
இம்மியும் தளர்வு வேண்டாம்!

மதுரை பாபாராஜ்

முன்கோபம்

முன்கோபம்! சீறும் எரிமலைக்கு ஒப்பாகும்!
உன்னை அழிக்கின்ற கோடரிக் காம்பாகும்!
சின்னக் குழந்தைகள் கூட வெறுத்தொதுக்கும்!
நன்மதிப்பைச் சீரழிக்கும்!செப்பு.