Thursday, April 30, 2020

மேதின நாயகர்கள்!

கொரோனாவை விரட்டும் போராளிகள்!

காவல் துறையினர் துப்புரவுத் தொண்டர்கள்
காக்கும் மருத்துவர் மற்றும் செவிலியர்
ஆகியோர் இங்கே உழைக்கின்ற வர்க்கமாக
மேதின நாயகர்கள் ஆகிவிட்டார்,! வாழ்த்துவோம்!
மேதினியில் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் ராமசாமி அனுப்பிய படம்

பூத்துக் குலுங்கும் புதுமலர்கள் போலத்தான்
நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையுமென்று
நாள்தோறும் நம்பிக்கை
பூத்துக் குலுங்கிட
காத்துக் கிடக்கின்றோம் நாம்.

மதுரை பாபாராஜ்

பேராற்றல் உன்னிடம்!

ஆற்றலுடன் பேராற்றல் கொண்டது சின்னவிதை!
ஆற்றலுக்குள் பேராற்றல் உன்னுள் இருக்கிறது!
ஆக்கபூர்வ சிந்தனையை ஆற்றலாக்கிப் பாடுபடு!
ஏக்கமற்ற முன்னேற்றம் உண்டு.

மதுரை பாபாராஜ்


எனது முதல் கவிதை நூல் !

முதல் கவிதை நூல்வெளிவந்தபோது தந்தை இல்லை!

தந்தை இயற்கை எய்திய நாள்.

11.11.1980

வெளியிட்ட ஆண்டு 1981 ஆகத்து மாதம்.

அச்சகம்: பாண்டியன் அச்சகம்,கோச்சடை

எந்தன் கவிதைநூல் அச்சிடும் எண்ணத்தைத்
தந்தையிடம் சொன்னேன்! சரியென்றார்!
பாக்களை
அன்றாடம் தேர்ந்தெடுத்துத் தந்தேன்! திடீரென்று
தந்தை  உடல்நலம் குன்றி இறந்துவிட்டார்!
பல்வேறு சூழ்நிலை மாற்றங்கள்  வாழ்விலே!
தள்ளிவைத்தேன் நூல்தயா ரிப்பு.

மேலே குறிப்பிட்ட ஆண்டில் முதல்கவிதை
நூலை வெளிக்கொணர்ந்தேன்! தந்தையை வாழ்த்துகின்ற
பாவே முதல்பக்கம்! அஞ்சலிப் பாவோ
நூலின்  இறுதிக் கவிதையாய் ஆனது!
நூலைக்  கவிச்சாரல் என்றே பெயரிட்டு
ஆவலுடன் கொண்டுவந்தேன் இங்கு.


நூலின் இறுதியில் உள்ள அஞ்சலிக் கவிதை:

எந்தையை வணங்குதும்!

அற்றைத் திங்கள் அருமைத் தந்தை
சுற்றஞ் சிறக்க சிற்றெறும் பாக
உழைத்தி ருந்தார்! உயர்ந்தி ருந்தார்!
தழைக்கச் செய்தே தருவெனத் திகழ்ந்தார்!
நேர்மைத் திறனும் நியாயப் பண்பும்
ஓருரு வாக உலவி வந்தார்!
குடும்பச் சோலை கண்டது தென்றல்!
தொடுத்தா ரின்பம் தெவிட்ட வில்லை!

இற்றைத் திங்கள் எம்மருந் தந்தை
சுற்றஞ் சிறக்க சிற்றெறும் பாக
உழைத்தா ரன்றே! இன்றோ இலமே!
மழையெனக் கண்ணீர் விழிகளில் பெருகிட
நெஞ்சினில் துன்பம் பெருகு  தம்மா!
எங்கள் தந்தையை எங்கே காண்போம்?
தந்தையை இழந்தே தடுமா றுகின்றோம்!
எங்கள் வாழ்வில் ஏக்கம் படர்ந்ததே!

பாபா
பாபா, தங்கள் தந்தை ஒரு நேர்மையாளர் மற்றும் திறமையானவர் என்றே‌ ஆங்கிலேயரே உங்கள் அன்புத்தந்தையை
அருகில் வைத்து ஆலோசனை கேட்டு பென்னர் நடந்ததை மதுரையே சொல்லும்.
அனேகமாக 1972ல் உங்கள் தந்தை அவராகவே எனது படிப்பின் காரணமாக பென்னரில் வேலைக்கு விண்ணப்பம் தரச் சொன்னார்.இது நடந்த இடம் அரசரடியில். நானும் தாசும் தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார்கள். அவர் யாருக்குமே சிபாரிசு செய்யமாட்டார்.உனக்குதான் ஆச்சரியமாக சொல்லி உள்ளார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நான் ஆசிரியப் பணியை விரும்பியதால் வழி மாறியது.அரசடியை கடக்கும்போதேல்லாம் நினைவு வரும்

தம்பா
காரைக்குடி

The great soul God Father for many person. My role model and first greetings from my grand father. Thanks for your information guru.

Muthuveeran kumar

நினைத்தேன் வந்தாய் நூறுவயது!-- பாடல்!
நினைத்தேன் தந்தாய் நூறுவயது--
நிகழ்வு!

29.04.20

மனைவி வசந்தா தந்த இன்ப அதிர்ச்சி!

சுக்குமல்லி போட்டுக் குளம்பிதந்தால் நன்றென்று
அக்கறையாய் நான்தினைத்தேன்! கேட்கவில்லை! ஆனாலும்
பற்றுடன் கொண்டுவந்தாள் இல்லாள்! வியந்துநின்றேன்!
எப்படி ? இப்படி ? நான்நினைத்தேன் நீதந்தாய்!
எப்படியோ வாழ்கநூ றாண்டு.

மதுரை பாபாராஜ்

 SBI
இந்திய மாநில வங்கி
நற்கூடல் இலக்கியக் கழகம்!

மேலவெளி வீதி

STATE BANK OF INDIIA!
1984 முதல்
கவிஞர்கள்:
முனியப்பன்
வீரபாண்டியத் தென்னவன்
சீவகன் --ராஜேத்திர பாபு-- மல்லையா- பாபுராஜேந்திரன்

நற்கூடல் சங்கத்தில் இவர்கள் இணைந்ததும்
உத்வேகம் வந்தது! எல்லா நிகழ்வுக்கும்
சற்றும் சளைக்காமல் நன்கொடை தந்தனர்!
புத்துணர்ச்சி பெற்றோம் இணைத்து.

கவிதை எழுதுகின்ற போட்டியில் வந்து
கலந்துகொண்டு வென்றார் பரிசுகளை! ஆர்வம்
வளர்ந்தது இந்தக் கழகம் வளர்ந்து
நிலைக்கத் தொடங்கிய திங்கு.

பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் பேச்சரங்கம்
செந்தமிழ்ச் சங்கத்தில் நாட்டியப் போட்டியென்று
என்னென்ன போட்டிகள் வைத்தே நடத்தினோம்!
இன்று நினைத்தாலும் சிலிர்ப்பு.

பெரிதான மீசை! உயரமான தோற்றம்!
உருதரும் வன்மை! உள்ளமோ மென்மை!
அருந்தமிழ்ப் பாவலர் நட்பில் நளினம்
செருக்கற்ற நண்பர் முனியப்பன் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மூச்சுக்கு மூச்சிங்கே முந்நூறு பாட்டுவரும்
பேச்செல்லாம் பாட்டுதான் சிந்தனையே பாட்டுதான்
ஏற்றம் இறக்கமுடன் சந்தங்கள் தென்னவனை
நாட்டமுடன் பற்றும் உணர்.

காலம் நகர்த்துகின்ற காய்களானோம்! எங்கெங்கோ
வாழும் நிலையெடுத்தோம்  ஒன்பதாண்டு நட்பிலே
நாளும் திளைத்தோம் தொடர்கிறது இன்றளவும்!
கோள்மாறும்! மாறாது நட்பு.

மதுரை பாபாராஜ்

கோள் மாறும் குணம் மாறும் நாள் மாறும் நட்புமிகு நாம் மாறோம்


என நற்றமிழ் உலகுக்குணர்த்த
மீசைக்கவிஞரையும்
தாடிக்கவிஞரையும்
பாசப்படங்களாலிணைத்து
காலப்பெட்டகத்தில் பதிவிட்ட கவிஅரசன்
பாபா ராசுவுக்கு
காலமெல்லாம்நலந மறவா கனிந்த கை கூப்பு

மதுரை வேலு முனியப்பன்

மலரும் நினைவுகள் மாங்கனிகளாக இருக்கின்றன பாபா நன்று நன்றி மகிழ்ச்சி


தென்னவன்

Wednesday, April 29, 2020

நண்பர் முருகு

வயல்சூழ்ந்த சூழல் கழுத்திலே துண்டு!
நயமான பார்வை!
அழகாய் அமர்ந்து
இயற்கையுடன் ஒன்றி
ரசிக்கின்ற நண்பர்
வயலுடன் வாழ்வதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

நுகத்தடி

நண்பர் முருகு அனுப்பிய படம்

நுகத்தடி பூட்டிய மாடுகள் நாளும்
அகத்திலே ஒன்றிணைந்து போனால் விளையும்!
அகவாழ்வை ஏற்ற இணையர் இதுபோல்
அகத்தில் செயல்பட்டால்
தாறுமாறாய் வாழும்
நிலைவருமோ நற்றமிழே! சொல்.

மதுரை பாபாராஜ்

நண்பர் முருகு படம்

வயல்நிலங்கள் கொஞ்சும் மருத நிலத்தில்
இயல்பாய் நடவு நடத்தி விளைச்சல்
முயற்சி விதைக்கின்றார் பார்த்தேன்! உழைத்தால்
வயல்செழிக்கும் வாழ்வோம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் முருகு அனுப்பிய படம்

விண்முட்டும் மாமலையின் பின்னணியில் நெல்வயலோ
முன்னணியில் நீரிருக்க
வீரர்கள் நிற்பதுபோல்
தென்னை மரவரிசை
நிற்கிறதே பாதுகாத்து!
கண்கொள்ளாக் காட்சி இது.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்!

காலை வணக்கத்தின் மேடையில் நாட்டியத்
தாரகையின் ஆற்றல்
மிளிரும் நடனத்தைக்
காட்டியே வாழ்த்துகின்ற
நட்பின் நளினத்தைப்
போற்றி மதிக்கின்றேன் இங்கு.

மதுரை பாபாராஜ்

இலக்கியப் புறா ரவிச்சந்திரன்!

இவரிடம் சொல்லிவிட்டால் போதும் எந்த
இலக்கிய மேடை நிகழ்வெனினும் ஏற்றே
துலங்கவைத்துப் பார்க்கின்ற ஆற்றல் உண்டு!
இலக்கியத் தூதர் இவர்.

மதுரை முகவரி சொக்கலிங்கம் சொன்னால்
மறுபேச்சே இன்றியே எள்ளென்றால் எண்ணெய்
கொடுக்கும் செயல்வீரர்  ரவிச்சந்ரன் ஆவார்!
எடுப்பார் தொடுப்பார் விரைந்து.

எல்லா நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ளவர்!
கள்ளங் கபடின்றிப் பேசிச் சிரித்திருப்பார்!
எல்லோர்க்கும் நண்பர்! உழைப்பார் சலிப்பின்றி!
நல்லவர் இன்றில்லை யே.

கீழப் பெரும்பள்ளம் ஊரே இவரூராம்!
ஆர்வமுடன்  பாவரங்கம் ஏற்பாடு செய்தேதான்
ஊருக் கழைத்து எங்களைப் பாடவைத்தார்!
கோயில்  விழாவில் இலக்கியச் சொற்பொழிவு
நேயமுடன் தந்தார் விருந்து.

சிதம்பரம் அய்யா நிழலிலே வாழ்ந்து
கடைசிவரை சென்னைக்  கமலா அரங்கில்
நடைபோட்டு நாளும் உழைத்தார் ரவிதான்!
இலக்கிய வானில் பறந்த புறாவோ
பறந்ததே வானுள் மறைந்து.

மதுரை பாபாராஜ்





மனிதம் வெல்க!

தங்கள் கலைத்திறனை வாழ்வின் தொழிலாக்கி
இங்கேதான் வாழ்ந்தாலும் இந்தச் சமுதாயம்
என்றும் சமத்துவத்தை மூச்சாக்கி வாழவேண்டும்
என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்து வருகின்றார்!
இங்கே மதங்களை விட்டு மனிதமே
நின்று நிலைக்கவேண்டும்  என்று துணிவுடன்
தங்கள் கருத்தை உரைக்கின்றார் அஞ்சாமல்!
இந்தியா வெல்லும் நிமிர்ந்து.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 28, 2020

முத்தம் ஒரு தொடர்கதை!

பத்துமாதம் தாய்வயிற்றில் வாழ்ந்து வெளிவந்த
தன்மழலைப் பிஞ்சைத் தழுவிப் பெருமிதத்தால்
தன்கரங்கள் வாங்க மகிழ்ந்தே நெற்றியில்
தந்தாள்  முதல்முத்தம் தாய்.

கண்ணுங் கருத்துமாய் அல்லும் பகலுமே
மண்ணில் வளர்ச்சியைக் கண்டேதான் முத்தங்கள்
அன்புடன் தந்தேதான் பெற்றோர் மகிழ்ந்திருப்பார்!
நெஞ்சங்கள்  துள்ளும் மகிழ்ந்து.

குழந்தைகள் பெற்றோர்க்கும் பெற்றோர் மகிழ்ந்து
குழந்தைக்கும் முத்தங்கள் தந்தே சிரிப்பார்!
பருவம் நிலைமாற்றி வாழ்வில் விலக்கும்!
நெருக்கம் தவிர்ப்பார் நிதம்.

பணிக்களம் மற்றும் பலகளத்தில் சென்று
மணியான சாதனைகள் செய்து புகழின்
அணியில் மிளிர்வார்கள் கைமுத்தம்
ஊக்கம்
துணிச்சல் அளிப்பார் உவந்து.

திருமணக் கோலம் குழந்தைகள் ஏற்பார்.!
உருவாகும் இல்லறச் சுற்று! இணையர்
பரிமாறும் முத்தங்கள் ஆயிரந்தான் உண்டு!
களிப்பார் பலவகையில் இங்கு!

பேரன்கள் பேத்திகள் ஓடி விளையாடும்!
தாத்தாவும் பாட்டியும் போட்டிபோட்டு கூப்பிடுவார்!
பேரனோ பேத்தியோ ஓடிவந்து முத்ததால்
ஈரமாக்கி கன்னத்தில் தந்திடுவார் மாறிமாறி!
தாரணியில் உச்சமான இன்பப் பொழிவிதுதான்!
ஆரத் தழுவிடுவார் காண்.

தன்குழந்தை பின்பு அவரின்  குழந்தைகள்
என்றேதான் முத்தங்கள் மாறி உருப்பெற்று
மண்ணுலகில் தாய்தொடங்கி தாரம் வளர்ந்திட
அன்பான பேரக் குழந்தைகள் முத்தங்கள்
என்றே தொடர்கதைதான் இங்கு.

மதுரை பாபாராஜ்









நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

பச்சை இலைமீது மஞ்சள் மலர்களை
சுற்றி அடுக்கிவைத்தே
அக்கறை யோடுதான்
காலை வணக்கத்தைக்
கூறுகின்ற நட்பினை
வாழ்த்து மகிழ்கிறேன் ராம்.

மதுரை பாபாராஜ்

என்று தணியும் இந்தக்  கொரோனாவின் தாக்கம்?

எலியார்கள் விலங்குகளுக்குக் கொண்டாட்டம்!

கடைகள் பெருங்கடைகள் மூடியுள்ள கோலம்!
நடமாடும் மாந்தர்கள் வேறில்லை இங்கு!
எலிகளுக்குக் கொண்டாட்டம்! அச்சமே இன்றி
அழிக்கிறதே துள்ளிக் குதித்து.

இங்கே திரையரங்கம்  எலிகள் படையெடுப்பால்
உள்ளே இருக்கைகள் சீரழிந்த கோலத்தில்
அய்யய்யோ போச்சே! என்றலறும்  சோகம்தான்!
தொல்லையோ தொல்லை தொடர்ந்து.

நாட்டில் மனித  நடமாட்டம் இல்லையெனில்
காட்டு விலங்குகளோ சாலைகளில் கொண்டாட்டம்!
வீட்டு எலிகள் கடைகள் கிடங்குகளில்
ஆட்டமும் பாட்டமுமாய் துள்ளித்தான் கொண்டாட்டம் !
ஆற்றாமை நீங்குமா சொல் ?

மதுரை பாபாராஜ்




பேரன் நிக்கில்  நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்!

கொக்கரக்கோ பாடி விடிந்ததைக் கூவுகின்ற
இச்சேவல் கோப்பையில் சூடாய்க் குளம்பியை
அக்கறையாய்ச் சிந்தாமல் ஊற்றித் தருகின்ற
வித்தகத்தை நற்றமிழால் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

எப்போது இந்தக் கொரோனா பரபரப்பு
எப்படி இங்கே முடியுமோ? என்றேதான்
ஒற்றைப் பறவையே!
சிந்திக்கின் றாயோநீ?
வெற்றி தெரிகிறது நம்பு.

மதுரை பாபாராஜ்

ஏது வாழ்வு?

அஞ்சுமூணும் நாளும் அடுக்கா  இருந்தாலோ
ஒன்றும் அறியாத மாதும் கறிசமைப்பாள்!
எல்லாம் இருக்கும் கவலையற்ற சூழலில்
உள்ளோர் அறிவுரைகள் கூறலாம் மற்றவர்க்கு!
இல்லாதோர்க் கேதிங்கே வாழ்வு?

மதுரை பாபாராஜ்

நாட்டுமிராண்டிகள்!

கற்கால நாகரிகத்தில் கண்டபடி வாழ்ந்ததால்
அக்காலம் காட்டு மிராண்டிகள் காலந்தான்!
இக்காலம்  நாகரிகம் எல்லாம் அறிந்திருந்தும்
தொற்றுக் கொரோனாவால்  யாரும்  இறந்துவிட்டால்
மக்கள் அவரைத்தான்  நல்லடக்கம்  செய்வதற்கு
முற்றும்  எதிர்க்கின்ற போக்கு தெரிகிறது!
கற்கால காட்டு மிராண்டிகள் போனாலும்
இக்காலம் நாட்டு மிராண்டிகள் நாங்களென்றார்!
இப்படி நாட்டிலே அங்கங்கே மக்களென்றால்
கற்காலம் எவ்வளவோ மேல்.

மதுரை பாபாராஜ்

துரோகம்!

மரத்தின்  கிளையால் கோடரி செய்து
மரத்தையே வெட்டிவிட்டுக் கோடரி
உரக்கச் சிரித்ததாம்! நம்மையே வைத்துப்
பிரித்தாளும் சூழ்ச்சியால் நம்மை அழிக்கும்
நிலையே துரோகமாம் சொல்.

மதுரை பாபாராஜ்

 மாயவரம் திருமதி பேபி சுந்தர்ராஜன்  & திரு.சுந்தர்ராஜன் இணையர் மணநாள் வாழ்த்து!

வாழ்க  வளமுடன்! 27.04.20

இல்லறத்தில் நல்லறத்தை ஆண்டாண்டு காலமாக
உள்ளத்தால் பின்பற்றி பிள்ளைகள் எல்லோரும்
நல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து
செல்லமாக பேரன்கள் பேத்திகள் கொண்டாட
எல்லா வளங்களும் பெற்றேதான் வாழியவே!
இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.

ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா மற்றும்
குடும்பத்தார்

Monday, April 27, 2020

பாவா முத்துவீரன்அவர்களின் நினைவுநாள்!

பாவா முத்துவீரன்அவர்களின் நினைவுநாள்!

இயற்கை எய்திய நாள் 28.04.87--

மதுரை நகரிருந்து காரைக் குடிக்கு
நெடும்பயணம் கொட்டும் மழையிலே
சென்றோம்,!
கெடுதல் அறியாத நல்லவராய் வாழ்ந்தார்!
அதனால் இயற்கை மழைபெய்து அஞ்சலி
செலுத்தியதோ அந்த இரவு?

மதுரை பாபாராஜ்

Saravananddl:

கழிந்ததோ ஆண்டுகள் முப்பத்திமூன்று...
ஐயனை நினைவில் நிறுத்தி வாழ்கிறோம் இன்றும்...
கூறிய வார்ததைகள் ஒவ்வொன்றும்...
அர்த்தம் பொதிந்தவைதாம் என்றென்றும்...
தகப்பனாய் இருந்து நீங்கள் காட்டிய வழிகள் எல்லாம்...
பாதைகளாய் தெரிந்தது
நாங்கள் தந்தை ஆன பிறகுதான்.
சிறகுகள் முளைக்கும் முன்னர் தான்
எம்மை விட்டு பிரிந்து விட்டீர்.
நீங்கள் செய்த நற்செயல்களே நாங்கள்
வாழும் வாழ்கையின்
தூண்டுகோல்.
குழந்தைகளின் மேல் கொள்ளைப் பிரியம்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பினை இல்லை.
ஆண்டுகள் எத்தனை மறைந்தாலும் எங்கள் இதயத்தில் என்றும் வாழ்கின்றீர்கள் நைனா...

அன்பு மகன் சரவணப்பெருமாள்

மாசின்றி வாழப் பழகு!

ஏட்டுச் சுரைக்காய் உதவாது!

அழகான வானவில் நிழலோ தெளிவாய்க்
களங்கமற்ற நீரில் தெரிந்தே இணைந்து
வளையமாய் மாறியதை ஊடகத்தில் கண்டேன்!
அரைவட்ட வானவில் இங்கே முழுவட்ட
நிலையில் தெரிந்தது! மாசற்ற பேரழகு!
களங்கமெல்லாம் மாசால்தான் இங்கு.

மாசற்ற சூழ்நிலை நாட்டில் தெரிகிறது!
மாசகன்று மண்ணகமும் விண்ணகமும்
நீரகமும்
ஆகச் சிறந்த தெளிவாக உள்ளது!
யாரிதற்கு காரணம் சொல்?

வண்டிப் புகையும் தொழிற்சாலை மாசுகளும்
மண்டியதால் ஆறுகளில் வானத்தில் காற்றிலென்று
எங்கெங்கும் நீக்கமற மாசு பரவியது!
என்றும் நிரந்தரமாய் நீக்கு.

மாசு படிந்து வெளியேறும் தண்ணீரை
கூசாமல் மீண்டும் மறுசுழற்சி செய்யவேண்டும்!
ஆறுகள் வாய்க்காலில் சென்று கலக்காமல்
ஆலை இயங்கவேண்டும் இங்குதான்! மக்களும்
வாய்க்கால் அடைக்குமாறு குப்பைக் கழிவுகளை
தூக்கி எறிதல் அழிவு.

மாசற்ற சூழ்நிலைக்கு மக்களும் ஒத்துழைப்போம்!
மாசுகளைக் கட்டுப் படுத்துகின்ற சட்டத்தை
நாட்டில் கடுமையாக்கி  நாளும்
அமல்படுத்து!
நாட்டையும் மக்களையும் வாழவைத்துக் காப்பாற்று!
ஏட்டுச் சுரைக்காயை மாற்று.

மதுரை பாபாராஜ்


SBI
இந்திய மாநில வங்கி
நற்கூடல் இலக்கியக் கழகம்!

மேலவெளி வீதி

STATE BANK OF INDIIA!
1984 முதல்
கவிஞர்கள்:
முனியப்பன்
வீரபாண்டியத் தென்னவன்
சீவகன் -- மல்லையா

நற்கூடல் சங்கத்தில் இவர்கள் இணைந்ததும்
உத்வேகம் வந்தது! எல்லா நிகழ்வுக்கும்
சற்றும் சளைக்காமல் நன்கொடை தந்தனர்!
புத்துணர்ச்சி பெற்றோம் இணைத்து.

கவிதை எழுதுகின்ற போட்டியில் வந்து
கலந்துகொண்டு வென்றார் பரிசுகளை! ஆர்வம்
வளர்ந்தது இந்தக் கழகம் வளர்ந்து
நிலைக்கத் தொடங்கிய திங்கு.

பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் பேச்சரங்கம்
செந்தமிழ்ச் சங்கத்தில் நாட்டியப் போட்டியென்று
என்னென்ன போட்டிகள் வைத்தே நடத்தினோம்!
இன்று நினைத்தாலும் சிலிர்ப்பு.

பெரிதான மீசை! உயரமான தோற்றம்!
உருதரும் வன்மை! உள்ளமோ மென்மை!
அருந்தமிழ்ப் பாவலர் நட்பில் நளினம்
செருக்கற்ற நண்பர் முனியப்பன் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மூச்சுக்கு மூச்சிங்கே முந்நூறு பாட்டுவரும்
பேச்செல்லாம் பாட்டுதான் சிந்தனையே பாட்டுதான்
ஏற்றம் இறக்கமுடன் சந்தங்கள் தென்னவனை
நாட்டமுடன் பற்றும் உணர்.

காலம் நகர்த்துகின்ற காய்களானோம்! எங்கெங்கோ
வாழும் நிலையெடுத்தோம்  ஒன்பதாண்டு நட்பிலே
நாளும் திளைத்தோம் தொடர்கிறது இன்றளவும்!
கோள்மாறும்! மாறாது நட்பு.

மதுரை பாபாராஜ்

மலரும் நினைவுகள் மாங்கனிகளாக இருக்கின்றன பாபா நன்று நன்றி மகிழ்ச்சி

தென்னவன்

ரோபோ முறை!

கிடப்போம்  இருப்போம் நிற்போம்  நடப்போம்!

இரவில் கிடப்போம்! பகலில் இருப்போம்!
இருப்பை விலக்கியே நிற்போம்! கடமை
பெருக நடப்போம்! இவையே தினமும்
கொரோனாவை சந்திக்க வீடடங்கு நேரம்
நமக்குப் பழக்கிவிட்ட ரோபோ முறை
வழங்குகின்ற பாடமாகும் பார்.

மதுரை பாபாராஜ்

கிரவுன் அடுமனை!

இலக்கியப் பள்ளி!

CROWN BAKERY

காலேஜ் ஹவுஸ் விடுதிக்குக் கீழே

நகரரங்குச் சாலை! மதுரை!

இந்த அடுமனைதான்  பொற்கைப் பணியகம்!
இங்கே இலக்கிய வாதிகள் கூடுவோம் !
சென்னை நகரிருந்து வந்தவர்கள் எல்லோரும்
ஒன்றாக சங்கமிப்போம் இங்கு.

பெரியவர்தான் இந்தக் கடையின் அதிபர்!
பெருந்தன்மைப் பண்பாளர் அன்புடன் பேசும்
உயர்நெறி யாளர் அரவணைத்து வாழும்
கலையறிந்த சான்றோர் இவர்.

இந்தக் கடைக்கு வராத இலக்கிய
நண்பர்கள் இல்லை எனலாம்! பொற்கையின்
வண்டமிழ் ஆர்வம் பலருக்குத் தோணி!
இன்றும் நகரரங்குச் சாலைவழி சென்றாலும்
பண்டைய கால நினைவு அலைகளோ
எண்ணத்தைத் தூண்டும் நினைத்து.

மதுரை பாபாராஜ்

Sunday, April 26, 2020

நண்பர் ராமசாமி அனுப்பிய படம்

வெள்ளை முயலொன்று  ஒற்றைப்பூ ரோசாவை
மெல்லத்தான் பற்றி அழகாய் செந்நிறக்
கண்களால் பார்த்தேதான்
அன்பாய் வணக்கத்தை
தந்த பொலிவுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் பென்னர் கண்ணன் அனுப்பிய காணொளி:

இயற்கையின் பின்னணியில் இந்தியநாட் டுப்பண்!
இசைக்கருவி கொண்டே இளைஞர்கள் மீட்டும்
திறனோ அருமைதான்! வங்கத்தின் தாகூர்
பெருமிதம் கொள்வார் ரசித்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

மஞ்சள் நிறப்பூவின் தண்டில் அமர்ந்திருக்கும்
மஞ்சள் பறவையே! செங்கதிர் செல்கின்ற
திக்கெல்லாம் செல்லும் மலரால் வணக்கத்தை
நட்புடன் கூறுகிறாய் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

மக்கள் மனம்

அடுத்தவீட்டுக் காரர் அயலாரைப் போல!
அடுத்தவீதிக் காரர் அடுத்தமா நிலம்போல்!
அடுத்தஊர்க் காரர் அடுத்தநாடு  போல!
அடுத்தமா நிலத்தார் அடுத்தகோள் போல!
படுத்தும் கொரோனாவின் பாதிப்பால் மாந்தர்
வெறுப்பிலும் தன்னலக் கூட்டிலும் வாழும்
செறுபகை உணர்வுகொண்டார் செப்பு.

மதுரை பாபாராஜ்

கஜபதி தாத்தா! சின்னிகிருஷ்ணா பாட்டி!

காரைக்குடியில் கஜபதி் தாத்தா!

1970 -- 1976 ஆம் ஆண்டுகளில்!

அக்கால காவல் துறையிலே ஆய்வாளர்!
அக்கறை கொண்டே கடமைகள் ஆற்றிட
பற்றுடன் நாளும் குதிரைமேல் செல்வாராம்!
கம்பீரம் கொண்ட உரு.

சின்னி கிருஷ்ணா பெயர்கொண்ட பாட்டியோ
கொண்டுவந்தார்  தந்தத்தால் செய்தகட்டில்  பொன்மணிகள்
என்றே குடும்பத்தார் சொல்வார்கள் பார்த்ததை!
அம்மாவின் அம்மாவும் அப்பாவும் இப்படி
நன்முறையில் வாழ்ந்தவ ராம்.

குதிரைகள் ஓடுகின்ற பந்தயத்தில் நாட்டம்!
எதிர்பாரா மல்தான் ஒருமுறை வெற்றி
அடைந்தாராம் தாத்தாதான்! பம்பாயில் தங்க
கிடைத்ததெல்லாம் கள்ளன் அபகரித்துச் சென்றான்!
நடைகட்டி வந்தார் வீடு.

இக்குதிரை அக்குதிரை எக்குதிரை வெற்றிபெறும்?
கச்சிதமாய் சோதிடம் சொல்கின்ற ஆற்றலுண்டு!
சென்னையில் பாரிசில் வைத்தார் அலுவலகம்!
தன்முனைப்பில் வாழ்ந்தவரை வாழ்த்து.

அகவையோ தொன்னூறு தாண்டியும் வாழ்ந்தார்!
தரணியில் எங்கெங்கோ வாழ்ந்து சுழன்று
இறுதியில் காரைக் குடியிலே வாழ்ந்தார்!
இறுதிவரை சோதிடம் தேன்.

காரைக் குடியிலே நான்படித்த நேரத்தில்
காலையில் என்னிடத்தில் காட்டுவார் பந்தயத்தில்
எக்குதிரை வென்றது என்றே கணித்ததை!
இந்துநா ளிதழின் முடிவில்  இவர்கணித்த
அந்தக் குதிரையே வென்றிருக்கும்! கைகொடுத்தேன்!
அன்புடன் வாழ்ந்தார் மகிழ்ந்து.

மாலதி அத்தை இவரை அருமையாக
பார்த்தார் மகள்போல! காலைமுதல் தூங்குமட்டும்
ஆர்வமுடன் பார்த்தார் கஜபதி தாத்தாவை!
வேலைக்குச் சென்றுவந்தும் தாத்தாவை அப்படிப்
பார்த்தார்! மிகையில்லை! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Saturday, April 25, 2020

        குரோவ் அடுக்கக
KK வாழ்கவென்று வாழ்த்து!

மழலையர் கூட்டம் சிறுவர்கள் கூட்டம்
இவரைத்தான் பார்த்துவிட்டால் சூழ்ந்து மகிழ்வார்!
இவரும் இனிப்புகள் தந்தே சிரிப்பார்!இவர்பெயர்  கேகேதான் வாழ்த்து.

இளைஞர்கள் கூட்டம் இவரையே சுற்றும்!
கலகலப்பாய்ப் பேசுவார்! கால்பந்தில் சேர்ந்து
மளமள வென்றே இளைஞராய் ஓடுவார்!
அவர்களும் பார்ப்பார்  ரசித்து.

மூத்தவர்கள் கூட்டத்தில் பக்குவமாய்ப் பேசுவார்!
ஆத்திரம் கொள்ளமாட்டார்! புன்னகையால்  வென்றிடுவார்!
ஆற்றல் மிளிரும் அனைவரையும் ஒன்றிணைத்தே
போற்றுவார் ஊக்கத்தைத் தந்து.

எல்லோர்க்கும் நல்லவர் இந்த அடுக்ககத்தில்
எல்லா நிகழ்விலும் முன்னணியில் பங்கெடுத்துக்
கள்ளமற்ற உள்ளச் சிரிப்புடன் சுற்றிவரும்
நல்லவரை வாழ்கவென்று வாழ்த்து.

பண்பும் அமைதியும் கொண்ட குடும்பத்தார்
நன்னெறியில் வாழ்வை நடத்துகின்றார்
நாள்தோறும்!
வண்டமிழ்மேல் பற்றுள்ள அன்பரோ தென்னகம்
தந்த  கிருஷ்ணமூர்த்தி !  வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

சதுரங்கப் பலகையில் கடைசிக்கட்டம்
900 கோடி!

நன்றி:
அதுதான் கணக்கு, அசடே.
வினோத் பரத்வாஜ்

தமிழில்: மா அண்ணாதுரை

சதுரங்கப் பலகையும் கொரோனா பரவலும்!

ஒன்றோ இரண்டாய் இரண்டிங்கே நான்காக
எண்ணிக்கை தன்னைப் பெருக சதுரங்க
வண்ணப் பலகையின் எண்ணிக்கை கூடினால்
அங்கே கடைசிச் சதுரத்தில் தொள்ளாயி
ரம்கோடி வந்ததாம்! இந்நக் கொரோனாவும்
ஒன்றில் இருந்தே உரசப் பரவுமாம்
எண்ணிக்கை இப்படி  என்றே  உரைக்கின்றார்!
மக்களே! ஊரடங்கைப் பின்பற்றி வாழுங்கள்!
எப்போதும் பாதிப்பை நாமே தவிர்க்கலாம்,!
சொற்படி கேட்பதே நன்று.

மதுரை பாபாராஜ்

உழைப்பால் உயர்ந்தவர் கோபி!

அத்தை மகனாவார்! வாழ்க்கையின் சூழ்நிலையால்
அண்ணனிடம் மின்வேலை கற்றேதான் சான்றிதழ்
பெற்றே உழைத்தவர்! ஒப்பந்தக் காரராக
அத்துறையில் முன்னேறி சொந்தக் கடைவைத்தார்!
தெற்குமாரட் வீதியில் சிறிதாய் தொடங்கினார்!
நட்பிழை பின்னிய நண்பர் தொடர்பாலே
எக்கணமும் ஆர்வமுடன்  நாளும் உழைத்தவர்!
தக்கதுணை ஏற்றார் மகிழ்ந்து.

சிறியதாய் வாடகை வீட்டில் இருந்தார்!
மிதிவண்டி தன்னில் மதுரை  நகர்வலம் !
படிப்படி யாகத்தான் முன்னேற்றம் கண்டவர்!
முடக்குசாலை சார்ந்த பகுதியில் வீட்டை
அடக்கமாய் வாங்கி குடும்பத்தைக் காத்தார்!
மகள்கள் படிக்க கடமைகள் ஆற்றியவர்!
முகத்திலே புன்னகை உண்டு.

மூன்று மகள்களும் தங்கள் குடும்பங்கள்
ஊன்றியே முன்னேறும் காட்சியைப் பார்க்கின்றோம்!
வாழ்க்கையில் சோதனையின் கொம்பொடித்துச்  சாதனையாய்
மாற்றிய கோபியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கோலாகல சீனிவாசன் வாழ்க!

15.08.1984

அக்காவின் மைந்தனாம் பாலுவின் நண்பனாக
அக்காலம் வீட்டுக்கு வந்து பழகியவர்!
முத்திரைப் பாக்கள் எழுதிக் கவியரங்கில்
முத்திரை நாட்டி வியந்திட வைத்தவர்!
பட்டிமன்றப் பேச்சாளர் பன்முக ஆற்றல்கள்
அட்டியின்றி கொண்டவர்! நன்கு படிப்பவர்!
எத்துறை என்றாலும் முன்னணியில் வந்திடுவார்!
அத்திறமை கொண்டவரை வாழ்த்து.

நற்கூடல் என்னும் இலக்கிய மேடையை
நற்றமிழ்ச் சங்க வளாகத்தில் பாப்பையா
தொட்டுத் தொடங்கிவைக்க சௌமிய நாராயண்
அற்புத மாக விளக்கேற்ற  ஏற்பாடு!
சட்டென்று பார்த்தோம் விளக்கில்லை! என்செய்வோம்?
நட்புடன் சீனிசென்றார் வீடு.

சங்கத்தின் பக்கம் திலகர்  திடலெதிரில்
நண்பரின் வீடு! விளக்கெடுத்து வந்துவிட்டார்,!
எங்கள் நிகழ்ச்சியும் நன்கு நடந்தேறி
ஒன்பதாண்டாய் தொய்வின்றி தந்தோம் நிகழ்வு!

காலமாற்றம் கோலமாற்றம் பெற்றே இடமாற்றம்
நாலுதிக்கில் எங்களைப் பந்தாட மாறிவிட்டோம்!
வாழ்வில் குடும்ப நண்பராய் சீனிவாசன்
தோள்கொடுத்தார் பாடுபட்டார் வாழ்த்து.

இன்று தொலைக்காட்சி வாதத்தில் பார்க்கின்றேன்!
தன்கருத்தை ஆணித் தரமாக வைக்கின்றார்!
நண்பர் நடுநிலை ஏற்றேதான் பேசுகின்றார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்






சூது!

காசுவரும் என்றேதான் காசுவைத்து காசுவைக்க
காசுவைத்த காசெல்லாம் ஆள்மாறிக் காசாகி
காசுவைக்கத் தூண்டவே காசுவைத்த காசெல்லாம்
சூதுக் கிரையாகிப் போச்சு.

மதுரை பாபாராஜ்

Friday, April 24, 2020


எங்கள் வீட்டில் விநாயக சதுர்த்தி!
1965 --- 1976

சோசலிசக் கடவுள் விநாயகர் என்று
அப்பா முத்துசுப்பு அவர்கள் சொல்வார்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

ஔவையார்

பாட்டி அடுக்களையில் கால்நீட்டி அமர்ந்தேதான்
ஆட்சி புரிந்தார் கொழுக்கட்டை செய்வதில்!
ஆர்வமுடன் தங்கையுடன் அம்மா பரபரப்பாய்
வேலைகள் செய்வார் விரைந்து.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகரை இந்நாளில்
கொண்டாடி வீட்டில் மகிழ்ந்திருப்போம்! தந்தைக்கு
என்னமோ இந்த விழாவிலே ஆர்வமுண்டு!
தந்தை இருந்தமட்டும் இந்த விழாவினைக்
கொண்டாடும் பாங்கே தனி.

காலையில் காசி  நரவண்டி ஏறித்தான்
தேர்முட்டி போவோம்! களிமண் சிலைவாங்கி
ஆர்வமுடன் மாலை, கதம்பப் பொடிவாங்கி
வாழைக்கன் றிரண்டோடு காதோலை, குண்டுமணி
வாங்கி அலங்கரிக்க மைடப்பா வாங்குவோம்!
ஆசையுடன் பிள்ளையா ரைத்தான் ரசித்திருப்போம்!
வீடே எதிர்பார்த்துக் காத்திருக்கும்! வந்தவுடன்
வீட்டிற்குள் வைப்போம் சுமந்து.

சிலையைத் தந்தை அலங்கரிப்பார்! நாங்கள்
அலைபாயும் ஆசையுடன் பார்த்திருப்போம்  சூழ்ந்து!
அலங்காரம் செய்து முடிக்கவும் அம்மா
தலைமை! வசந்தாவும்  அக்காவும் வந்தே
கொழுக்கட்டை மற்ற பதார்த்தங்கள் வைப்பார்!
குழந்தைகள் எல்லோரும் பக்திப் பழமாய்
வலம்வருவார்! பாவாவும் தம்பியும் வந்தே
உதவிகள் செய்வார் உவந்து.

மூன்றுநாள் பூசை முடிந்தே சிலைநகர்த்தி
நானும் நரவண்டி காசி உடன்வர
நீரிருக்கும் வைகைப் பகுதிக்குச் சென்றேதான்
ஊரார்கள் பார்க்க கரைத்திடுவோம் பிள்ளையாரை!
ஆர்வம் தணியும் கரைந்து.

மதுரை பாபாராஜ்

அக்கா லெட்சுமி-- பாவா முத்துவீரன் திருமணம்!

25.08.1960

கேப்ரன்ஹால் பள்ளியில் நாங்கள் படித்தபோது
ஆர்வமுடன் என்னை அழைத்தேதான் சென்றிடுவார்!
கான்வெண்ட் பள்ளிக்கு மாறினோம்!
அக்காதான்
நாள்தோறும் சேர்ந்தேதான் செல்வோம்!

அக்காவின் கால்நடை வேகத்தை விஞ்சநான்
அக்கறையாய் ஓடுவேன்!  பள்ளிப் படிப்புதனை
ஆண்டிலேயே வெற்றிபெற்றார்! பின்னர் திருமணம்!
ஏற்பாடு செய்தார் விழைந்து.

அத்தை மகனான முத்துவீரன் பாவாவும்
அக்காவும் மாமா மகளுமான லெட்சுமியும்
ஒத்த மனதுடன் இந்தத் திருமணத்தை
அற்புதமாய் ஏற்றார் இருவீட்டார் ஆசியுடன்!
அக்காவின் இல்லற மாட்சியாகும் வாழ்க்கையில்!

உற்றார் உறவினர் கூட்டத்தைக் கண்டதால்
சுற்றிவந்தேன் நான்தான்   அங்கு.
திருமண மண்டபத்தில் கூட்டமோ கூட்டந்தான்!
இரவில் ஜெயாபாப்பா நாட்டியம் ஆட
விருந்தின ராகத்தான் பென்னர் இயக்குநர்
பெல்த்தாம் அவர்களோ கண்டு களித்திருந்தார்!
எல்லோர்க்கும் இன்பந்தான் கண்டு.


திருமணம் எல்லாம் நிறைவுசெய்தே வீட்டில்
வருகைதந்தார்! கொஞ்சநாள் ஆனதும் பாவா
அலுவலக ஊரில் பந்தல் குடிக்கு
அனைவரும் சென்றோம் மகிழ்ந்து.
பாவா வருவாய்த் துறையிலே ஆய்வாளர்!
ஏக வரவேற்பு! வந்துவந்து பார்த்தனர்!

ஆகமொத்தம் அங்கே வரவேற்போ அற்புதம்!
ஊரறிய செல்வாக்கு தான்.
இல்லறத்தில் நான்கு மகன்கள் அருமையாக!
பல்முனை ஆற்றல் பதவி வகித்தவர்!
பல்வேறு ஊர்களுக்கு மாற்றங்கள் ! நால்வரும்
செவ்வனே கல்வி கசடறக் கற்றவர்கள்!
எல்லோரும் தங்கள் குடும்பக் கடமைகளை
நல்லபடி செய்தேதான் தங்கள் குழந்தைகள்
இவ்வுலகில் முன்னேறப் பாடுபடும் வாழ்க்கையில்
எல்லோரும் வாழ்கின்றார் இங்கு.

அக்கா தலைமையில் இங்கே மகன்கள் குடும்பங்கள்
சுற்றம் சிறக்கத்தான் வாழ்கின்றார்
நாள்தோறும்!
அக்காவும் பேரனும் பேத்திகளும் சூழ்ந்திருக்க
இத்தரணி வாழ்வில் மருமகள்கள் வாழ்த்திசைக்க
சுற்றமுடன் வாழ்கின்றார் பார்த்து.

மதுரை பாபாராஜ்

முப்பால்!

தேங்காய்ப்பால் ஆட்டுப்பால் மற்றும் மாட்டுப்பால்
மூன்றுவகை முப்பாலும் மேனியைக் காக்கலாம்!
வாழ்வியலைக் காப்பதற்கு வள்ளுவரின் முப்பாலே
சாலச் சிறந்தது சாற்று.

மதுரை பாபாராஜ்

தப்பாமல் தீந்தமிழைச் செப்பும் தகைமைசேர்,
ஒப்பிலா மாமனித ரென்பேன் - அப்பப்பா, எப்போதும் வெண்பா தனைச்சூடும் பாபாராஜ்,
முப்பாலாய் வாழ்க நிறைந்து.

கவிவளவன்

வெண்பா(லு) க்கு வெண்பாவால் வாழ்த்து👍😊💐

சி.ஆர்







நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


இந்தக் கிளையில் பதட்டமாய்ப் பார்த்துநிற்கும்
வண்ணப் பறவையே!உன்னைக் கொரோனாதான்
அண்டாதே! நீயேன் அஞ்சுகின்றாய்?
மாந்தருக்கா?
கொஞ்சம் கவனம் இருக்கவேண்டும்! கூண்டுக்குள்
உன்னை அடைப்பார் அவர்.

மதுரை பாபாராஜ்

எங்கள் வீட்டுக் கொலு!

சகாயமாதா தெரு, ஞானஒளிவுபுரம்,மதுரை

இசைக்கச்சேரி: சித்தி சுசீலா பத்மநாபன்
மகள்கள்: ஜெயாபாப்பா- மல்லிகா -- கலா
மிருதங்கம்: மகன்: ராஜாராம்

ஏற்பாடு:
அம்மா, பாவா முத்துவீரன்.

www.maduraibabaraj.blogspot.com

மரப்படிகள் கொண்டே அடுக்கடுக்காய் வைத்தே
விரிப்பை அதன்மேல் விரித்துப் படியில்
வரிசையாய் பொம்மைகள்  தம்மை அடுக்கி
அழகாக வைப்போம் கொலு.

வண்ணவண்ண பொம்மைகள் ஏராளம் நின்றிருக்கும்!
கண்கவரும்  பொம்மை புராணக் கதைகளைக்
கண்முன்னே காட்டும்! இயற்கை வளபொம்மை
பன்னாட்டில் வாழ்ந்த தலைவர்கள் பொம்மைகள்
அவ்வயார் வள்ளுவர்  ராமலிங்கர் ஏசுநாதர்
என்றே  பேதமின்றி அத்தனை பொம்மையுண்டு!
வந்துவந்து பார்ப்பார் நிதம்.

வீட்டில் மதுரையில்  ஆண்டுதோறும் கொலுவுண்டு!
நாட்டமுடன்  சித்தி சுசீலா தலைமையில்
பாட அவர்மகள்கள் மூவர் ஜெயாபாப்பா
மல்லிகா மற்றும் கலாவதி வந்திடுவார்!
மாலை களைகட்டும் கேட்டு் ரசித்திருப்போம்!
மைந்தன் பெரியகண்ணா அங்கே மிருதங்கம்
கொண்டுவந்து வாசித்தார்! முத்துவீரன் பாவாவும்
வாசித்தார் ஆர்வமுடன் ஆசையுடன் அன்றுதான்!
அம்மாவும் அப்பாவும் அக்கா குடும்பமும்
தம்பியும் நானும் வசந்தாவும் பங்கெடுப்போம்!
அன்றாடம் பூசையுண்டு! சுண்டலும் தந்திடுவார்!
இன்று நினைத்தாலும்  உள்ளம் மகிழ்கிறதே!
அந்தநாள் மீண்டும் வரும்?

தியாகராசர் பாடல்கள் ஒவ்வொன்றாய்ப். பாடி
நகுமோமு மற்றும் தெலுங்கிசைப் பாடல்
விநாயகரின்  பாகும் தெளிதேனும் பாடல்
அலைபா யுதேகண்ணா பாடலை நால்வர்
குரலொன்றிப்  பாடுகின்ற அந்த லயங்கள்
ஒலிகளெல்லாம் இன்னும் செவிகளில் வந்தே
ஒலிக்கிறது பொய்யில்லை  மெய்.

எங்கெங்கோ வாழ்ந்தாலும் வாழ்விலே அக்காலம்
சென்ற நிகழ்வு மலரும் நினைவுகளாய்
என்னை எழுதத்தான்  தூண்டுகின்ற வாய்ப்பை
வண்டமிழ்ப் பாவாக்கி எந்தன் இணையதளம்
தன்னில் பதிவிடுவேன் சாற்று.

மதுரை பாபாராஜ்







பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய காணொளி

நீருக்குள் துள்ளுகின்ற மீனொன்று துள்ளிவந்து
ஆட்காட்டி கைவிரல் காட்டும் நுனியினைப்
பார்த்தேதான் முட்டி விளையாடும் காட்சியை
ஆர்வமுடன் பார்த்தேன் ரசித்து.

மதுரை பாபாராஜ்

தாத்தா பாட்டி

தாத்தா சுந்தர்ராஜன்
பாட்டி பாகீரதி( பாக்கியம்மாள்)

நிலக்கோட்டை-- சத்திரப்பட்டி-- மேலூர்-- மதுரை!

நிலக்கோட்டை சார்ந்த பகுதியில் தாத்தா
வருவாய்ஆய் வாளராக வேலை! வீடு
பரபரப்பாக எப்போதும் காணப் படுமாம்!
பெருமையுடன் பாட்டிதான் சொல்வார் மகிழ்ந்து!
ஒருமித்து வாழ்ந்த இணை.

சீரடி சாய்பாபா பக்தராக தாத்தாதான்
காலமெல்லாம் வாழ்ந்தார்! வியாழக் கிழமை
சீரடி பாபா படம்வைத்தே பூசைசெய்தார்!
மோதிலால் சாலை முதல்தெருவில் வாழ்ந்தனர்!
மோதிலால் சாலை முதல்தெருவில் எங்கவீடு!
பார்க்க வருவார் நடந்து.

வியாழக் கிழமை வழிபாடு காண
தவறாமல் குழந்தைகள்  செல்வோம் திரண்டு!
கலந்துகொண்டு தாத்தா பிரசாதம் வாங்கி
கலைந்தேதான் செல்வோம் மகிழ்ந்து.

மூன்று மகள்கள் இரண்டு மகன்களும்
வாரிசுகள்! இந்தக் குடும்பத்தார் வாழ்கின்றார்!
மூன்றாம் வகுப்பு நான்படித்த போதுதான்
தாத்தா இறந்தார் படுத்து.

பாட்டி திடீரென்றே கீழே விழுந்துவிட்டார்!
பாட்டியைப் பார்க்க மருத்துவர் ராசாராம்
வீட்டிலே வந்து சிகிச்சை அளித்தாலும்
பாட்டி இறந்துவிட்டார் இங்கு.

இன்பமும் துன்பமும் வாழ்வில் அரங்கேற
பன்னெடுங் காலம் உலகிலே வாழ்ந்தவர்கள்!
அன்பாய்ப் பழகி அறிவுரை தந்தவர்கள்!
எந்தன் நினைவலையில் இன்று.

மதுரை பாபாராஜ்

Thursday, April 23, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்.

கொரோனா பிடியில் பொலிவிழந்த வையம்
கொரோனாவின் தாக்கத்தை வென்றேதான் மீளும்!
உலகம் மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்கும்!
கலக்கமெல்லாம் நீங்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

சாய்ந்த கிளையில் தனித்திருக்கும் புள்ளினமே!
சாய்த்தாலும் சாயமாட்டேன் என்றேதான் நம்பிக்கை
கால்களிலே கால்கொள்ள பார்க்கின்றாய் எங்கோதான்!
யார்வரும் நேரமிது சொல்?

மதுரை பாபாராஜ்

            மதிப்பிற்குரிய
என்.வி. பாலகிருஷ்ணன் நாயுடு தாத்தா--தாயாரம்மாள் பாட்டி

சொக்கிகுளம்! மதுரை!

மதுரைமில் என்ற தொழிற்சாலை அன்று
மதுரை நகரில் பழம்புகழ் பெற்றே
எடுப்பாக பல்லா யிரக்கணக்கில் இங்கே
தொழிலாளர் வேலைகள் செய்த ஆலை!
எழிலாக இன்றுமங்கே உண்டு.

 பால கிருஷ்ணன்  முதுநிலை ஊழியர்!
ஆலையில்  நிர்வாக முத்திரைச் சாதனை
ஈட்டிய தாலே புகழுடன் வாழ்ந்திருந்தார்!
மாட்டுவண்டி வைத்து வளமாக வாழ்ந்தவர்கள்!
வீட்டுவாழ்க்கை என்றும் சிறப்பு.

மகன்களோ டீக்காராம் சுப்பையா ஆவர்!
மகள்பெயர் கோவிந்தம் மாள்தான்! குடும்பம்
அகங்குளிர வீட்டு விழாக்களுக் கெல்லாம்
வருவார் அனைவரும் சேர்ந்து.

மகன்கள் குடும்பம் மகளின் குடும்பம்
அருகருகே வாழ்ந்தார்கள்! வாழ்த்தினார் வாழ!
அகத்திலே பேரன்கள் பேத்திகள் ஓட
அகங்குளிர கண்டார் ரசித்து.

பாட்டிதான் தாயாரம் மாளாவார்! எங்கள்மேல்
காட்டிய பாசமும் அன்பும் மறக்க முடியாது!
தாத்தாவைப் பார்த்ததில்லை! பாட்டியைப்  பார்த்துள்ளேன்!
பார்க்க வருவார்! இனிப்புகள் கொண்டுவந்தே
ஆர்வமுடன் தந்தவரை எண்ணுகின்றேன்  இன்றளவும்!
வாழ்த்தினார்  ஆசிகள் தந்து.

மகள்பிறந்தாள் பேரன் மகளையும் பார்த்தார்!
மகன்பிறந்த சேதி தெரிந்தாலும் பார்க்க
உடல்நலம் வாய்ப்பு கொடுக்கவில்லை! அன்று!
கொடுத்துவைக்க வில்லையே நான்.

மதுரை பாபாராஜ்


Wednesday, April 22, 2020

நூல்கள்!

நூல்களின் வண்ணங்கள்  பின்னிவரும் ஆடைகள்
மானத்தைக் காக்கும் கவசங்கள் ஆகுமிங்கே!
நூல்கள் படைக்கும் எழுத்தாளர் எண்ணங்கள்
வாழ்வினைக் காக்கும் அறிவகம்  ஆகுமிங்கே!
நூல்கள் பகுத்தறிவின் வேர்.

மதுரை பாபாராஜ்

உலக நூல் நாள்!

23.04.20

நூல்களைக் கற்றுத் தெளிந்தால்தான் இவ்வுலக
வாழ்வியல் பண்புகளைக் கற்கலாம்! இல்லையெனில்
காண்பதே காட்சியாய்க் கொண்டதே கோலமாய்
மாந்தர்கள் மாறிவாழ்வார் இங்கு.

மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

படத்திற்குக் கவிதை

கொரோனாதான் போய்விடும் வாடாதே என்றே
தருகின்ற பச்சைவண்ண சைகையால்
சொல்லும்
அருமைப் பறவையே வாழ்வாங்கு வாழ்க!
கொரோனா ஒழிந்தால் சரி.

மதுரை பாபாராஜ்

ஆந்தை அலறல்போல் இன்று கொரோனாவால்
 நாடுகள் எல்லாம் அலறுகின்ற காட்சிகள்!
ஓயுமா இந்தக் கொரோனா சுனாமிதான்?
நிலைகொண்ட ஆந்தையே! சொல்.

மதுரை பாபாராஜ்

இலக்கிய நெறிச்சிந்தனைகள்
           100

ஈரோடு் தமிழன்பன் பாவினக் கருத்துக்குள்
வேரோடும் உள்ள உணர்வுகளை நூறிலே
தேரோட வைத்த விளக்கம் அற்புதம்!
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

இலக்கிய வேந்தர் தமிழினியன் வாழ்க!

மூன்று மணித்துளியில்  நண்பர் தமிழியலன்
சான்றுடன் நாளும் இலக்கியச் சிந்தனையை
பாங்குடன் நன்கு விளக்கம் அளிக்கின்றார்!
நூறு விளக்கங்கள் இன்றுடன் தந்துவிட்டார்!
சாறு பிழிந்து தருகின்ற சாதனை
நூறையும் தாண்டவேண்டும்! ஆயிரத்தைக் காணவேண்டும்!
நூல்வடிவம் ஆகவேண்டும் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கலித்தொகைக்காட்சி! உடன்போக்கு!

  பாலை பாடிய பெருங்கடுங்கோ (கலித்தொகை : 9)

--------------------------------------------------------------
கலித்தொகை  பாடல் 9
கவிதை முயற்சி
------------------------------------------
சந்தனம் தந்த பெருமலைக்கு
சந்தனத் தாலே பயனில்லை
சந்தனம் கூட மக்களுக்குப்
பலவகை யாலே பயன்படுமே!

முத்தைத் தந்த கடலுக்கு
முத்துக ளாலே பயனில்லை
முத்துகள் எல்லாம் மக்களுக்கே
சொந்தம் ஆகிப் பயன்படுமே!

யாழில் உள்ள நரம்புகளால்
யாழுக்கு எந்தப் பயனுமில்லை
நரம்புகள் மீட்டும் இசைகேட்டு
மகிழ்வது மக்கள் பயன்தானே!

மகளோ பருவம் வந்தவுடன்
தலைவனை நாடல் முறைதானே!
சந்தனம் முத்து யாழ்நரம்பாய்
மகளின் பயனோ தலைவனுக்கே!

மகளைத் தேடி தாய்வந்தாள்
சான்றோர் இப்படி ஆறுதலை
தாயிடம் சொல்லிப் புரியவைத்தார்!
தாயும் மகிழ்ந்தே விடைபெற்றாள்

மதுரை பாபாராஜ்


காட்சிமாற்றம்!

நாட்டிலே மக்கள் நடமாட்டம் இல்லையென்று
காட்டு விலங்குகள் நாட்டுக்குள் வீதியுலா!
வீட்டுக்குள் இருந்தேதான் காண
முடிகிறது!
நாட்டில் இருந்தவர்கள் வீட்டில் முடங்கினர்!
காட்டில் இருந்தவை நாட்டில் நடமாட்டம்!
காட்சிமாற்றம் கண்ணெதிரே காண்.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 21, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

எண்ணங் கவர்கின்ற வண்ணப் பறவையின் எண்ணத்தில் தோன்றுகின்ற
எண்ணத்தைச்  சொல்வதற்கு
இங்கே வருபவரைத் தேடித்தான் பார்க்கிறதோ?
வந்தால் மகிழலாம் சேர்ந்து.

மதுரை பாபாராஜ்

கலங்குகிறோம்!

உலகத்தின் நாடுகள் சாதனைகள் செய்து
வளர்ச்சியில் போட்டிபோட்ட கோலம் விலகி
கொரோனாவின் பாதிப்பில் போட்டிபோடும் செய்தி
கலக்கம்  தருகிறது காண்.

மதுரை பாபாராஜ்



நண்பர் விஜயகுமார் அனுப்பிய படம்

எந்தநோய் தாக்கினாலும் இந்தப் பசிநோயை
எந்த மருந்தாலும் தீர்க்க முடியாது!
மண்ணில் மனிதநேயம் உள்ளவர்கள் மட்டுமே
இந்தநோய் தீர்ப்பார் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் துபாய் வெங்கடேசுக்கு அனுப்பிய படமும் கவிதையும்

😅😅😅😅😅
சொன்னா கேளுங்க!

பாயும் புலியாக இல்லாமல் பாதுகாப்பாய்
ஓய்வெடுக்கும் ஒட்டகம்போல் வீட்டில் இருக்கவேண்டும்!
காயும் வெயிலிலே நாளும் அலையாமல்
பாபாராஜ் சொல்வதைக் கேள்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

மோகித் அக்கா பவதாரணி வரைந்த படம்

:எத்தனை முறைகள்தான் யானைகள் வந்தாலும்
சிட்டாய்ப் பறந்துவந்து
பார்க்கும் குழந்தைகள்!
அப்படிப் பார்க்கவேண்டும் ஒவ்வொரு நாளையும்!
புத்துணர்ச்சி கொள்வோம் மகிழ்ந்து.

வதாரணி பல்லாண்டு வாழ்க!

பவதா ரணியின் கலைத்திறன் வாழ்க!
பலதிறமை நாளும் வளர்ந்தே செழிக்க
வளமுடன் பல்லாண்டு வாழ்க வளர்ந்து!
கலைத்தமிழ் போல்வாழ்க நீடு.

பாபா தாத்தா

குழந்தப் பருவத்தில் பாலு தந்த அதிர்ச்சி!

அரசரடி ஆரப்பாளையம் சாலை!

திலகா மெடிக்கல்ஸ்!

ஆர்வி நகரிலுள்ள சித்தப்பா வீட்டிற்கு
ஆர்வமுடன் அம்மா நடந்தேதான் சென்றுவிட்டார்!
பாலு தெரியாமல் பின்னால் தொடர்ந்துசென்றான்!
பாதி வழியில் தொடர்பறுந்து போனது!
பாலு திகைத்து நின்று விழித்திருக்க
லாரியில் வந்தவர் பாலுவைத் தூக்கியே
ஓரத்தில் அங்கே திலகா மெடிக்கல்சில்
ஈரமனங் கொண்டுதான் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்!
பாலுவைக் காணாமல் தேடி அலைந்தபோது
ஓரமாய் அந்த மருந்துக் கடையிலே
சாதுவாய் உட்கார்ந் திருந்தான்! அழைத்துவந்தோம்!
பாலு கொடுத்த அதிர்வு.

மதுரை பாபாராஜ்

எனக்கும் அக்காவுக்கும் உணவு கொண்டுவந்த துரைராஜ்!
புனித ஜோசப் கான்வெண்ட் பள்ளி

1958 முதல்

கேப்ரன்ஹால் ஆலயத்தில் நாளும் மணியடித்து
ஈட்டிய சம்பளத்தில் வாழ்ந்தவர்! நல்லவர்!
வல்லவர்!
நானும் தமக்கையும் புனிதஜோசப் பள்ளியில்
போய்ப்படித்தோம்! மோதிலால் சாலையில் வீடிருக்க
பாத்திரத்தை  தூக்கிகொண்டு பேருந்தில் தான்வருவார்!
பேருந்து நிற்கும் மகாலில்! அங்கிருந்து
ஓடி வருவார் துரைராஜ் பள்ளிக்கு!
ஏன்நீங்கள் மெல்ல வரலாமே என்றுசொன்னால்
போங்கதம்பி நேரத்தில் சாப்பாடு நான்தரணும்!
நீங்கள்ளாம் சாப்பிடணும் என்றே சிரித்திடுவார்!
தாங்குவார் அப்படி! அத்தகைய நற்குணம்
ஏந்தியே வாழ்ந்தவர்! நாளும் கடமையினை
ஊன்வலிக்க செய்தவர்! நாளும் உழைத்தவர்!
நான்மறக்க லாமோ துரை?

மதுரை பாபாராஜ்






Monday, April 20, 2020

நோய்கள் புதிதல்ல!

எண்ணற்ற நாடுகளை எண்ணற்ற நோய்களின்
வன்முறைத் தாக்கம் அதிரடி தந்தது!
எண்ணற்ற மக்கள் பலியாகி வாழ்விழந்தார்!
மண்ணக மாந்தர்கள் எல்லோரும் மீறித்தான்
தங்களது வாழ்வைப் புனரமைத்து வாழ்கின்றார்!
அங்கங்கே நாளும் அறிவியல் முன்னேற்றம்
வந்துசென்ற நோய்கள் குணமாகும் மாமருந்தைக்
கண்டு பிடித்தேதான் மாந்தரைக் காக்கின்றார்!
இன்னும் உலகம் இருக்கு.

எங்கிருந்தோ வந்தநோய் இந்த உலகத்தை
அங்கங்கே ஆட்டிப் படைக்கிறது! மக்களைத்
தங்களது வீட்டில் முடங்கவைத்துப் பார்க்கிறது!
லட்சக் கணக்கில் மாந்தர் இறந்துவிட்டார்!
வல்லரசு  நாடுகள் ஒன்றன்மேல் ஒன்றிங்கே
குற்றம் சுமத்துகின்றார்! எல்லாம் முடிந்ததே!
அற்பர்கள் ஆட்டம் இது?

அமைதியாய் வாழ்ந்த உலகத்தை இன்று
அமைதி குலையவைத்தே அப்பாவி மக்கள்
நிலைகுலைந்து போகவும் செத்து மடியும்
நிலைபார்த்து நிற்கவும் எந்த மருந்தும்
குணமாக்க இல்லையென்றும் கண்டு கலக்கம்
மனதினைக் கவ்வுதே பார்.

நோய்களின் தாக்கம் நெருங்கா  திருப்பதற்கு
ஊரடங்கும் வீடடங்கும் போட்டார் அரசுகள்!
கேட்டுவாழ்ந்தால் வெல்லலாம் நோய்ப்பரவல்  இன்றித்தான்!
நாட்டுமக்கள் கேட்டால் நலம்.

நோய்கள் புதிதல்ல! பிளேக்நோய் போல்பல
நோய்களும் தொற்றுநோய்கள் பாதித்த மக்கள்தான்!
கால்பதிக்கும் நோய்கள் காலத்திற் கேற்றவாறு
கோலமாறி தாக்கினாலும் எச்சரிக்கை யோடுவாழ்ந்தால்
நோயைத் தவிர்க்கலா மாம்.

புயல்கள் சுனாமி வறட்சிநிலை என்றே
கலங்கவைத்த சூழ்நிலையை வென்றோம்! நிமிர்ந்தோம்!
கொரோனாவின் சூழலையும்  ஒன்றிணைந்தே வெல்வோம்!
தரணியைக் காப்போம் துணிந்து.

மதுரை பாபாராஜ்


நடிகர் விஜயகாந்த்

குறள் 212:

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

கொரோனாவின் பாதிப்புக் குள்ளாகி நெஞ்சு
வலியால் இறந்த நரம்பியல் சார்ந்த
மருத்துவரை இங்கேதான்  நல்லடக்கம் செய்ய
பொதுமக்கள் ஒன்றாய் மறுத்த நிலையோ
கொடுமையின் உச்சம் உணர்.

யாருக்கும் இந்த நிலைமை இனிவேண்டாம்
பாரிலே என்றிங்கே  நல்லெண்ணங் கொண்டேதான்
மாரிபோல் கைமாறு வேண்டாமல் முன்வந்து
வாரித் தருபவரை வாழ்த்து.

ஆண்டாள் அழகர் பொறியியற் கல்லூரி 
சார்ந்த இடத்தை நடிகர் விஜயகாந்த்
தேர்ந்தெடுத்து நல்லடக்கம் செய்வதற்கு நேயமுடன்
நோயச்சம் இன்றி வழங்குகின்றார்! வாழ்த்துவோம்!
ஈவிரக்க நாயகனை வாழ்த்து.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டென்றார்  வள்ளுவர்!
இந்தக் குறளோ நடிகர் விஜயகாந்த்
பண்பிற்கே சான்றாகும் பார்.

மதுரை பாபாராஜ்