Friday, February 16, 2018

வள்ளுவமாய்ப் பார்!

வள்ளுவத்தை வள்ளுவமாய்ப் பார்க்கவேண்டும்! போற்றவேண்டும்!
தள்ளிவைத்துப் பார்ப்பதும் தங்களுக்குள் பார்ப்பதும்
எள்ளிநகை யாடவைக்கும்! உன்மனமே  தூற்றிநிற்கும்!
வள்ளுவத்தில் வள்ளுவரைப் பார்.

Tuesday, February 13, 2018

நிம்மதி்  உன்கையில்!

ஒருநாள் சரியில்லை என்றால் முணங்கும்
ஒருநிலை நல்லதல்ல! மற்றநாள் இங்கே
அருமையாய்ச் சென்றதை எண்ணியே வாழ்வோம்!
உருவாக்கு நிம்மதியை நீ.

செல்வன் சொ.ராம்குமாருக்குப்
பிறந்தநாள் வாழ்த்து

2.2.2018

அன்பான பெற்றோர் கடமை தொடர்ந்திருக்க
உன்னை அவையிலே முந்தி இருப்பதற்குப்
பண்புகளை ஊட்டி படிக்கவைத்துப் பார்க்கின்றார்!
நன்னெறி காட்டும் அவர்கள் மகிழ்ந்திருக்க
முன்னேறும் நீயும் அவர்களுக்கு நற்பெயரை
இந்தச் சமுதாயப் பேரரங்கில் ஆற்றலால்
பன்முகச் சாதனையை ஈட்டுகின்றாய்! மக்களும்
உன்னை மகனாகப் பெற்றெடுக்க உன்பெற்றோர்
என்னதவம் செய்தனரோ என்றேதான் வண்டமிழால்
இன்றிங்கே வாழ்த்துகின்றார்!  இன்பமுடன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.