Thursday, July 27, 2017


தமிழ் ஒன்றே

பொன்மய ஊஞ்சலில் தூங்கவைக்கும் தாலாட்டும்
கந்தல்  துணியாலே கட்டிய ஊஞ்சலில்
கண்ணயர வைக்கின்ற தாலாட்டும் செந்தமிழின்
பண்களோ ஒன்றுதான்! மண்குடிலா? மாளிகையா?
என்றிங்கே பார்ப்பதில்லை பார்.


நிலைகுலையாதே!

மலையே விழுந்தாலும் திரும்பிப் பார்த்து
நிலைகுலை யாமல் சிறிதளவும் அஞ்சும்
சலனமற்ற உள்ளமுடன் வாழ்பவரைப் போல
உலகிலே வாழப் பழகு.

அப்படி வாழ்ந்தால்தான் உள்ளக் குமுறலின்
நெற்றியடி இன்றியே நிம்மதியாய் வாழலாம்!
எப்பொழுதும் இங்கே குமுறலுடன் வாழ்வதால்
அப்பப்பா! உன்வாழ்க்கைப் பாழ்.

Tuesday, July 25, 2017

அய்ம்புலன்கள்

அய்ம்புலன்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டால்
உள்ளம் இருளாகும்! வாழ்க்கை தரிசாகும்!
அய்ம்புலனை நாமோ அடிமைப் படுத்திவிட்டால்
உள்ளம் ஒளிமயந்தான் சொல்.

அனைவரையும் மதி!

பெரியவரா! இல்லை சிறியவரா! என்றே
பிரித்தேதான் பார்க்காமல்  நாமிங்கே நாளும்
மரியாதை காட்டிப் பழகும் முறையில்
மிளிரும் பெருந்தன்மைப் பண்பு.



நீர்க்குமிழி!

மகிழ்ந்தேன் எனநினைத்தேன்! ஆனால் நொடியில்
மகிழ்ச்சி மறைந்தது! நீர்க்குமிழி போல!
துடித் தேன்!துவண்டேன்! அழு தேன்! கலக்கப்
பிடியில் தளர் ந்தேன் சரிந்து.


அடிமையாய் மாறாதே!

நன்றி மறவாமல் வாழ்வோம்! அதற்காக
என்றும் அடிமையாக மாறும் மனநிலை
நம்மதிப்பைத் தாழ்த்தும்! உதவுதல் நம்கடமை!
நம்மதிப்பைத் தக்கவைத்துக் கொள்.

சுயத்தை இழக்காதே!

பிடித்தவர் பொய்சொன்ன போதிலும்  இங்கே
நெறியுணர்த்தும் வேதவாக்கே! என்பார் தமிழே!
பிடிக்காதோர் மெய்சொன்ன போதிலும் எல்லாம்
தறிகெட்ட வேதாள வாக்கென்பார்! கேளாய்!
மதிமயக்கம்  கொள்வது தீது.



சலனம் தவிர்

அழகும் பணமும் மனதை மயக்கும்!
சலன நெருப்பில் தகிக்கிட வைக்கும்!
கவர்ச்சிச் சுனையில் நிலையை மறக்கும்!
உலகம் குடும்பம் நகைக்கும் திரண்டு!
ஒழுக்கம் சரிந்தால் இழிவு.

அழகும் பணமும் மறையும்! கரையும்!
பழகும்  உயர்தரப் பண்பே நிலைக்கும்!
விலக்கப் பழகு துரோக  உறவை!
கலக்கம் உளைச்சலை நீக்கு.

ரணம்
---------------
ரணப்பட்டு ரத்தம் உடலில் வழிந்தால்
குணப்படுத்தக் கூடும்! இதயத்தில் என்றால்
குணப்படுத்த எப்படிக் கூடும்? தமிழே!
ரணப்பட்ட ஆண்டுகள் ஒன்றா! இரண்டா!
சுமக்கின்றேன் பத்தாண்டாய் நான்.


குத்திக் கிளறி பழைய  நிகழ்வுகள்
அப்பப்பா கண்முன் நகைக்கிறதே! என்செய்வேன்?
கொத்தும் பருந்தாகி வந்துவந்து நிற்கிறதே!
குற்றம் எவர்மீது கூறு?

இருநிலைகள்!

குழந்தையின் கால்களோ மார்பில் உதைத்தால்
மலர்மென்மை என்றெண்ணித் தாங்கலாம் கண்ணே!
வளர்ந்தபின் மார்பிலே தாக்கி மிதித்தால்
அவமானம் கொள்வோம் துடித்து.

Wednesday, July 19, 2017




மனித மனம்

மறக்க நினைப்போம் மறக்க விடாது!
உறங்க விடாது! உளைச்சலைத் தூவி
படமெடுத் தாடுகின்ற பாம்பாக மாறி
விடம்பொழிய கொத்தும் விழைந்து.

பெற்றோரே நிம்மதி

பாட்டியும் தாத்தாவும் என்னதான் அன்புடன்
ஊட்டி வளர்த்தாலும் பேரக் குழந்தைகள்
போற்றுகின்ற பெற்றோர் தலைதெரிந்தால் போதுமே
 போட்டிபோட்டே ஓடுவார் பார்.

Sunday, July 16, 2017


நீதிக் குரங்கு

நீதிக் குரங்கின்  நிலையெடுத்தால் நிம்மதி
மேதினி வாழ்வில் நெருங்கிவரும்! செந்தமிழே!
நீதிக் கொடியேந்த எண்ணிச் செயல்பட்டால்
வேதனையே வாழ்வாகும் செப்பு.



இளமை- முதுமை

விடியல் விடியாதா? ஏங்கிநின்றேன் அன்று!
விடிகிறதே என்ன நடக்குமோ என்றே
துடிக்கும் நிலையிலே வாழ்கிறேன் இன்று!
விடியலே தக்கபதில் சொல்.



அடிமையாய் மாறாதே!

நன்றி மறவாமல் வாழ்வோம்! அதற்காக
என்றும் அடிமையாக மாறும் மனநிலை
நம்மதிப்பைத் தாழ்த்தும்! உதவுதல் நம்கடமை!
நம்மதிப்பைத் தக்கவைத்துக் கொள்.


கணவன்-- உட ல்!
மனைவி-- உயிர்!

உடலின் இயக்கமோ நின்றால் உயிர்
உடலை விடுத்துப் பறக்கும்--அறமே!
 உடலின் இயக்கம் இருந்தும் உயிரோ
உடலை மறத்தல் துயர்.

உட லோ அழியும் ஒருபிடிச் சாம்பல்!
உடலைத் துறக்கும் உயிரோ இயங்கும்!
கடமை தொடரும் மதிப்பும் கிடைக்கும்!
உடலோ மறையும் அழிந்து.

சொல்தவறினால்!

சுமைதாங்கி யாக இருந்தவரை என்றும்
சுமையாக எண்ணவில்லை! தன்சுற்றில் ஓய்ந்தே
சுமையாக மாறிவிட்டால்  நானுனக்கே என்றும்
இமையாவேன் என்றவள் இங்கே தனிமைச்
சுனையிலே தள்ளிவிட்டாள் சென்று.

Saturday, July 15, 2017

ஆறுதலைப் பாம்பு

ஆறுதலை நாடி அடைக்கல  மானபோதோ
ஆறுதலைப் பாம்பைப்போல்  சீறிவந்த கோபத்தால்
கூறுபோட்டுப் பார்த்துச் சீரழிந்த கோலமேந்தி
ஓடும் நிலையெடுத்தேன் பார்.

எச்சுற்று?

சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கு!
அற்புதம் அற்பம் இரண்டும் கலந்திருக்கும்!
அற்புதத்தை நாடுவோம்! அற்பத்தை நீக்குவோம்!
எச்சுற்றில் மானிடனே நீ?



ஆமையாக மாறு!

பகைவரைக் கண்டால் உறுப்புகளைத் தன்னுள்
மறைக்கின்ற ஆமைபோல் நீயிங்கே மாறு!
மறைந்துகொள்! சூழ்நிலை தாக்கும் பகையின்
படைவெறித் தாக்குதலைத் தாங்கு.

உயிர்ச்சிறகு!

என்மனக் கூண்டில் சிறகொடிந்த புள்ளினங்கள்
என்எண்ணத் தோல்விகளாய்! நானும் சிறகுகளைத்
தந்து முயற்சித்த போதும் உயிர்ச்சிறகோ
இன்னும்  பொருந்தவில்லை! ஏன்?




இருளை விலக்கு!

கூட்டுக்குள் கும்மிருட்டு! உள்ளொளியின் வீச்சில்தான்
கூட்டின் இருள்விலகும்! மேற்கூரை நாள்தோறும்
காட்டும் ஒளியோ செயற்கைதான் கண்மணியே!
கூட்டின் ஒளியை உணர்.

தூக்கம் எங்கே?

திறந்த வெளியில் படுத்துறங்கும் ஏழை
திறந்த மனங்கொண்டு நிம்மதியாய்த் தூங்க
மறைத்துத் திரைபோட்டு வாழும் குபேரன்
கறைபடிந்த வாழ்க்கையில் நிம்மதி இன்றி
முறையற்ற தூக்கமின்றி பார்.

Tuesday, July 11, 2017


உயிரே புறக்கணித்தால்!

என்னைப் புறக்கணித்தால்  உள்ளம் வலிக்கிறது!
புண்பட்டுப் புண்பட்டே ஏக்கம் கசிகிறது!
என்ன தவறிழைத்தேன்? ஒன்றும் புரியவில்லை!
இன்னுமா வாழவேண்டும் நான்?

ஒவ்வொரு நாளும் உள்ளம் ரணப்பட
கவ்விப் பிழிந்தெடுக்கும் இங்கே நிகழ்வென்றால்
துள்ளித் தவிக்காதோ நெஞ்சம் துவளாதோ?
வெள்ளத்தில் மூழ்கும் உணர்வு.

எனக்குமட்டும் சோதனையும் வேதனையும் என்றால்
மனதிற்குள் ஆயிரம் தேள்கள் கொட்டும்!
அனல்பாதை மீது நடைப்பயணம் அம்மா!
மனக்கணக்கில் நாளும் தவறு.


இதயமே துடிக்காதே!

உளைச்சலே உள்ளத்தில் நாளும் செழிக்கும்
விளைச்சலாய் மாறினால் உள்ளக் குமுறல்
களைகளால் மண்டி துடிப்பை நிறுத்த
அலைபாயும் கண்ணே! உணர்.

சிறுகதையாய்க் குத்திக் கிழித்தபோது நானோ
பொறுமையாய் வேடிக்கை பார்த்தே துடித்தேன்!
சிறுகதை இன்று தொடர்கதையாய் மாறி
நொறுக்கினால் என்னசெய்ய நான்?

ஒன்றும் ஒன்றல்ல

நானும் உனக்கல்ல !நீயும் எனக்கல்ல!
ஊனும் உயிரும் இணைந்திருந்த போதிலும்
ஊன்வேறாய் உள்ளே உயிர்வேறாய் வாழ்வதைப்போல்
தேனக இல்லறத்தில் நாம்.

குத்துவாள்!

ஆழ்மனதின் எண்ணத்தை யாரறியக் கூடுமிங்கே?
மேலோட்ட எண்ணங்கள் செய்கைகள் எல்லாமே
போலியா? உண்மையா? யாரறியக் கூடுமிங்கே?
போலியெனில் குத்துகின்ற வாள்.

Tuesday, July 04, 2017



குப்பைக்கிடங்கு!

உயிருக் குயிரென்றே சொல்லிய உள்ளம்
பழிக்கிறதே குப்பைக் கிடங்கென்றே என்னை!
வலிக்கிறதே நெஞ்சு! துடிக்கிறதே அம்மா!
உயிரை எடுத்துக்கொள் நீ.


பொம்மையாக மாறு!

கண்முன்னே நாளும் அரங்கேறும் காட்சிகளை
எந்த உணர்ச்சியும்  இல்லாமல் பார்க்கின்ற
கண்ணோட்டம்  பெற்றவர்கள் நிம்மதியாய் வாழலாம்!
பொம்மையாய் மாறுவதே தீர்வு.

தன்மையுடன் வாழப்பழகு!

உன்னை எவரறிவார்? நீயன்றி யாரறிவார்?
உன்னுள் உலவும் எதிர்மறை நேர்மறைப்
பண்புகளை நீயே எடைபோட்டுச் சிந்தித்துத்
தன்மையுடன் வாழப் பழகு.

குழந்தையின் எதிர்பார்ப்பு!

குழந்தை எதிர்பார்ப்பும் பெற்றோர் பணியும்
முரணாய் அமைந்துவிட்டால் நாள்தோறும் வம்பு
வளரும்! உளைச்சல் பெருகும்!  தினமும்
அலறுகின்ற போர்க்களந் தான்.

Sunday, July 02, 2017

மன உளைச்சல்

உளைச்சலில் உள்ளம் மலைக்கும்! கனக்கும்!
களைக்கும்! துளைக்கும்! சலிக்கும்! வலிக்கும்!
கரைக்கும்! கதறும்! நெளியும்! சுருங்கும்!
வளைக்கும் குழப்பம் நகைத்து

Saturday, July 01, 2017


தலைகுனிவு!

வெண்பட்டில் மைத்துளி ஒன்று விழுந்துவிட்டால்
கண்களுக்( கு) அந்தக் கரும்புள்ளி  தான்தெரியும்!
பண்பாள ரானாலும் தீயொழுக்கம் ஒன்றிருந்தால்
என்றும் தலைகுனிவே இங்கு.



வெறியைத் தவிர்!

இந்துவெறி இந்திவெறி எந்த வடிவத்தில்
வந்தாலும் செந்தமிழ்  நாட்டில் இடமில்லை!
என்றென்றும் நீறுபூத்து நிற்கும் நெருப்பாகும்
எங்கள் உணர்வுதான்! சொல்.

*Beautiful explanation by Swami Vivekananda*:
Explaining the meaning of ‘Association’ he said:..“A rain drop from the sky: if it is caught by clean hands, is pure enough for drinking. If it falls in the gutter, its value drops so much that it can’t be used even for washing your feet. If it falls on a hot surface, it will evaporate... If it falls on a lotus leaf, it shines like a pearl and finally, if it falls on an oyster, it becomes a pearl...The drop is the same, but its existence & worth depends on whom it is associated with.”...Always be associated with people who are good at heart..You will experience your own inner transformation"...
Send this to all people with a beautiful heart  whom you wish to be associated with...

விண்ணின் மழைத்துளி தூய கரங்களில்
நன்னீராய் தாகம் தணிக்கும்! சாக்கடையில்
சென்றாலோ கால்கழுவக் கூட பயன்படாது!
மண்ணகத்தில் சூடான மேற்பரப்பில் ஆவியாகும்!
கண்கவரும் தாமரைப் பச்சிலையில் முத்தைப்போல்
மின்னிநிற்கும்! அத்துளியோ முத்துக்குள் வீழ்ந்துவிட்டால்
பண்பட்ட முத்தாகும்! விண்துளி ஒன்றுதான்,
சென்று கலக்கும் இடத்தைப் பொறுத்துதான்
இங்கே மதிப்புயரும்! நல்லோர் தொடர்பிருந்தால்
உன்னுள்ளே நேர்மறை மாற்றம் உருவாகும்!
நன்மக்கள் தொடர்பே மதிப்பு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்