Saturday, November 30, 2019

வணக்கம்

தென்னை மரங்களோ உப்புநீரை உள்வாங்கி
அன்பாய் இளநீரை நாமோ பருகிட
தந்து பெருந்தன்மைப் பண்பை உணர்த்துதம்மா!
என்றும் பெருந்தன்மை பேண்.

மதுரை பாபாராஜ்

கோலமாற்றம்

அன்றைய கெஜராஜ்--கார்த்திக்கும் இன்றைய கார்த்திக்!--கெஜராஜும்

தந்தை பொறுப்பில் அன்று கெஜராஜோ
தன்மகன். கார்த்திக் திறமை வளர்த்திட
நன்கு இயக்கினார் நாள்தோறும் வாழ்க்கையில்!
இன்றோ இயக்குன ராகி திரைப்படத்தில்
தந்தை நடிக்க மகனோ தந்தையை
கண்ணுங் கருத்தாய் இயக்குகின்றார் நன்றியுடன்!
தந்தை இயக்கத்தில் அன்றிருந்த கார்த்திக்கோ
இன்றோ திரையில் இயக்குகிறார் தந்தையை!
அன்றுமின்றும் கோலமாற்றம் நன்று.

வாழ்த்துகள்
மதுரை பாபாராஜ்

Labels:


புதுமனை புகுவிழா வாழ்த்து!

நாள்: 01.12.2019

விராட்டிபத்து  மதுரை

வாழ்த்துக்குரியவர்கள்

S.P. கெஜராஜ் -- மல்லிகா இணையர்
குடும்பத்தார்!


மதுரை விராட்டிபத்து  ஊரின் மனையில்
புதுவீடு கட்டிப் புகுவிழா காணும்
மிடுக்கான தம்பி குடும்பத்தார் வாழ்க!
நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு

மனைத்தக்காள் மாண்பும் தலைவன் பொறுப்பும்
மனையறம் பின்பற்றும் பிள்ளைகள், பேரன்
இணையற்ற பண்புகளும்  இல்லறத்தின்  சொத்து!
சுனைபோல் வளம்பெருக வாழ்த்து.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்

உனக்குமட்டும்

என்வசந்தா எங்கே? அவளைத்தான் காணவில்லை!
புன்னகை பூப்பாள்! சிரிப்பாள் முகம்மலர!
என்னமாய்ப் பேசுவாள் உற்சாகம் கொப்பளிக்க!
கண்கள் மலர்வாள் மகிழ்ந்து.

சோர்வென்றால் என்னவிலை என்பாள்! சுறுசுறுப்போ
ஆர்வமுடன் தேடி  இவளிடம் கற்கவரும்!
ஊர்ப்பயணம் என்றால் துடிப்புடன் முன்வருவாள்!
ஊர்த்திட்டம்  கைவந்த கலை.

விருந்தோம்பல் பண்பில் சளைக்காத மங்கை!
செருக்கற்ற அன்பால் உறவுகளை
எல்லாம்
அரவணைத்து வாழும் தொடர்பை வளர்த்தாள்!
அவளின்று எப்பற்றும் இன்றியே வாழும்
தவநிலை கொண்டதேன் கூறு.

அந்த வசந்தாவைத் தேடுகின்றேன்! எங்குசென்றாள்?
இந்த வசந்தா இருக்கின்றாள் இங்கேதான்!
என்னவளும் நானும் தனிமையில் வாழ்கின்றோம்!
அந்த வசந்தாவே வா.

மதுரை பாபாராஜ்

Friday, November 29, 2019

விமானத்தின் வானோசை!


வானைப் பிளந்தே விமானம் விருட்டென்றே
வானில்  இரைச்சலுடன்  ஓசை எழுப்பியே
நானிருக்கும் வீட்டின்மேல் செல்லும்! செவியிரண்டும்
வானோசை கேட்டு நடுங்கவைக்கும்! இப்படி
நாள்தோறும் கேட்கும் நிலையிலே சென்னையில்
மீனம்பாக் கத்தின் பகுதிசார்ந்த வீடுகளில்
வானோசை அவ்வப்போ(து) உண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர்.வீஓவி இராமசாமி அனுப்பிய படம்.

கோப்பைக் குளம்பியுடன் பூத்த இருமலர்கள்
ஊற்றெடுத்த அன்பைப் பொழிந்தே வணக்கத்தைச்
சாற்றுகின்ற  பண்பில் மனங்குளிர்ந்து பார்த்தேன்!
ஏற்றே அனுப்புகிறேன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கடைத்தேற்றம் என்று?
---------------------------------------------
உடையும் உணவும் இருப்பதற்கு வீடும்
கடையனுக் கென்று கிடைக்கிறதோ அந்நாள்
மகத்தான மக்களாட்சிப் பொன்னாளாம்! தாயே!
நடக்கவைக்கும் நல்லரசைத் தா.

மதுரை பாபாராஜ்

[11/29, 8:21 PM] Madurai Babaraj: எங்க மதுரை
பூவின் இதழ்கள் மலர்ந்து விரிந்ததைப்போல்
கோயிலைச் சுற்றி நகரத் தெருக்களோ
ஆதிகாலந் தொட்டே அழகாகத் திட்டமிட்டு
சாதித்த சாதனையை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நகைச்சுவை மன்னர் கலைவாணர்
ராஜா ராணி படம்

சிரிப்பை வகைவகையாகச் சொல்லி சிரிப்பார்!
சிரிப்பையோ கேட்பவர் அங்கே சிரிப்பார்!
மதுரையின் வீதியிலே வண்டிகளில். செல்வோர்
மதிமயங்கித் தானா சிரிப்பார் மறந்து!
இதைப்பார்த்துப் பார்ப்போர் சிரிப்பார் ரசித்து!
நடப்போர் நடந்துகொண்டே புன்னகைத்துச்  செல்வார்!
மதுரையில் பார்த்தேன் களித்து.

மதுரை பாபாராஜ்

Thursday, November 28, 2019

மனித ஆற்றல்

உயரத்தில் ஆறடி உள்ள மனிதன்
உயரத்தில் நூறடி கட்டிடத்தக் கட்டும்
வியப்பான ஆற்றல், சிறிய விதைக்குள்
உயர்ந்த விருட்சம் வளர்கின்ற ஆற்றல்
இயல்பாய் இருப்பதற் கொப்பு.

மதுரை பாபாராஜ்

பேரன் வருண் பேகனோ!

மயிலொன்று காட்டில் குளிரில் நடுங்க
வழிவந்த பேகனோ போர்வையைத் தந்தான்!
குருவிகள் வீட்டில் குளிரில் நடுங்க
கருணையுடன் பேரன் வருணிங்கே துண்டை
குருவியின் கூண்டில் விரித்தான் இரங்கி!
கருணைமனம் வாழ்க நிலைத்து.

மதுரை பாபாராஜ்

கல்லூரிக் காலம்

மதுரைக் கல்லூரி (1965)

புகுமுக வகுப்பு

மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்:( நினைவில் நின்றவர்கள்)

தமிழய்யா பெயர் நினைவில்லை
ஆங்கிலம் திரு.நாகராஜன்,திரு.ஆராவமுதன்,
தாவரஇயல்   திரு.ஸ்ரீகணேஷ்

மதுரை பெயரேந்தும் கல்லூரி தன்னில்
புகுமுக மாணவராய்ச்  சேர்ந்து படித்தேன்!
வகுப்பிலே ஆங்கிலத்தில் ஆசிரியர் பேச
பதுமையாய் மாறி புரியாமல்  கேட்டோம் !
அடுத்தடுத்த ஆசிரியர் ஆங்கிலப் பேச்சை
எடுப்பாகப் பார்த்துப்  புரிந்ததைப் போல
நடந்தோம்! நடித்தோம் ! சிரித்து.

அழகப்பா கலைக் கல்லூரி(1966--69)

கூட்டு வகுப்பு:
தமிழ்:
திரு.இரா.சாரங்கபாணி
திரு.அர.சிங்கார வடிவேலன்
திரு.பிச்சை

தமிழய்யா  மூவர் ! அருமையாய் பாடம்
தமிழ்மணக்க சொல்லித் தருவார்கள்
நன்கு!
தமிழ்ப்பாடம் கூட்டு வகுப்பு! தெளிவாய்த்
தமிழ்விளக்கம் கேட்டோம் மகிழ்ந்து.

ஆங்கிலம் கூட்டு வகுப்பு

ஆங்கில ஆசிரியர்கள்
திரு.குப்புசாமி
திரு.ரெங்கன்
திரு ஸ்ரீபதி

சேக்சுபியர் நாடகத்தைக் கண்முன்னே காட்டுவார்!
ஏட்டிலே உள்ளதுபோல் அங்கே நடித்திருப்பார் !
பார்த்து ரசித்தோம்! ஆங்கிலப் பாடத்தை
நேர்த்தியாக நல்ல விளக்கம் தருவார்கள்!
வாய்ப்பைப் பயன்படுத்தி னோம்.

விலங்கியல்
திரு.மெய்யப்பன்

EUGLENA Locomotion simile
Like a moving wind on the standing crops.
Unforgettable words.Still ringing in my ears.

விலங்கியல் பாடம் விறுவிறுப் பான
விளக்கங்க ளோடு நடத்தினார் நாளும்
விலங்குகள் சார்ந்த அறிவியல் செய்தி
பலதந்தார் கற்பதற்குத் தான்.

வேதியல்
ஆசிரியர் திரு.இராமசாமி

வேதியல் கூறுகளைச் சொல்லும் முறையிலே
தேடிவந்து கற்கின்ற நாட்டத்தை ஏற்படுத்தி
ஈடில்லா கற்கும் முறையில் நடத்தினார்!
வேதியல் ஆசானை வாழ்த்து.

தாவர இயல் வகுப்பு
ஆசிரியர்கள்
திரு.ஜெயராமன் பேராசிரியர்
திரு.சந்திரசேகர்
திரு.மாணிக்கம்

தாவரங்கள் பற்றி  விளக்கங்கள் கூறினர்
ஆவலுடன் கற்றோம் பயிர்க்குடும்பம் பற்றியே
தேர்வெழுதி தேறி வெளிவந்தோம் நாட்டுக்குள்!
தாவரத்தில் பட்டம் படித்தாலும் வேலையோ
வேறு துறைகள்தான் சொல்.

கல்லூரி வாழ்க்கை மனங்கவர்ந்த வாழ்வாகும்!
எல்லோரும் நட்புடனே நாளும் பழகிடுவார்!
துள்ளித் திரிந்திருந்த கல்லூரிக்  காலந்தான்
அள்ளி அனுபவம் தந்த வழிகாட்டி!
புள்ளினம்போல் வாழ்ந்தநாட்கள் பொன்.

மதுரை பாபாராஜ்






















கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

28.11.19

சிந்துவெளி என்றதும் துள்ளி வரும்பெயர்
எங்கள் கவிஞராம் பாலாதான்! பன்முகம்
இந்த ஒருமுகத்தின் ஆளுமை ஆற்றலாய்
இங்கே மிளிர்கிறது! பூத்துக் குலுங்குகின்ற
புன்னகை மன்னரே! நாட்டுக் குறளளித்த
நண்பரே! வள்ளுவரின் தோள்தொட்டுப்
பாடுகின்ற
வண்டமிழ்ப் பாவலரே! பல்லாண்டு வாழியவே!
பொன்மனப் பாவலரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

Wednesday, November 27, 2019

மதுரை பள்ளிகளின் ஆசான்கள்

பள்ளியில் கற்றுத் தந்த ஆசிரியை ஆசிரியர்களுக்கு நன்றி!

ஒய்எம்சிஏ பள்ளி மேலப்பொன்னகரம் மதுரை!

ஒருநாள் பள்ளி வாழ்க்கை!

தாத்தா கெஜபதி சேர்த்துவிட்டார்! நானுமங்கே
நாட்டமின்றி உட்கார்ந்தேன்! ஆசிரியர் வந்ததும்
வாட்டமுடன் சென்று பசிக்கிறது என்றேன்நான்!
ஆற்றலுடன் சாப்பிட்டு வாஎன்றார் வந்துவிட்டேன்!
மூச்சடக்கி ஓடிவந்தேன் மீண்டும்நான் செல்லவில்லை!
தாக்கமின்றி சென்றஒரு நாள்.

கேப்ரன் ஹால் பள்ளி-- மங்களபுரம் மதுரை

முதல் வகுப்பு ஆசிரியை திருமிகு.கிரேஸ்(1954)

முதன்முதலில் பள்ளி வகுப்பிலே பாடம்
நடத்தி
இதுதான்நீ கற்கின்ற பாதையென்று காட்டி
மெதுவாக ஆனால் படிப்படியாய் என்னைச்
செதுக்கிய சிற்பி இவர்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை
திருமிகு டோரா(1955)

முதல்வகுப்பைத் தாண்டி இரண்டிலே சென்றேன்!
முதல்வகுப்பில் கற்ற அனுபவத்தை வைத்தே
சிறப்பாக பாடம் நடத்தியே மூன்றில்
தடம்பதிக்க வைத்தார் இவர்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமிகு.கிளாடிஸ்(1956)

இரண்டு வகுப்புகளில் கற்ற அறிவால்
தரமுயர்ந்த ஆர்வத்தால் மூன்றில் நுழைந்தேன்!
பலபாடம் ஆசிரியைக் கற்றுத் தரவே
கலகலப்பாய்ச் சென்றுவிட்டேன் நான்கு.

புனித ஜோசப் கான்வெண்ட் -
பழைய குயவர் பாளையம் மதுரை

நான்காம்வகுப்பு ஆசிரியை
திருமிகு தெரசா(1957)


நான்காம் வகுப்பில் படிக்கத் தொடங்கினேன்!
பாங்குடன் கற்பதற்குப் பாடத்தைச் சொல்லியதால்
நான்கற்றேன் காலகட்டத் தேவைக்கே ஏற்றவண்ணம்!
தேர்ச்சிபெற்றுச் சென்றுவிட்டேன் ஐந்து.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியை 
திருமிகு குழந்தை தெரஸ்(1958)


மரத்தடியில் கூட வகுப்பெடுப்பார்! பாடம்
இயல்பாய் நடத்திப் புரியவைக்கும் ஆற்றல்
சுரந்துவரக் கற்றுக் கொடுத்ததால் ஆறில்
கலக்கமின்றிச் சென்றேன் மகிழ்ந்து.

ஆறாம் வகுப்பு ஆசிரியை  திருமிகு.ஜெயமேரி(1959)

கூரை வகுப்பு! குதூகலமாய்ப் பாடங்கள்
கூர்ந்து கவனிப்போம்! ஈடுபாடு கொண்டேதான்
ஈர்க்கின்ற வண்ணம் நடத்துவார் பாடத்தை!
ஆர்வமுடன் சென்றுவிட்டேன் ஏழு.

ஏழாம் வகுப்பு ஆசிரியை
திருமிகு.ரோஸ் மேரி(1960)

பள்ளிஉந்து நிற்கும் இடத்தில் வகுப்பெடுத்தார்!
சொல்லித் தருவதில்  வல்லவர்! நல்லவர்!
தெள்ளத் தெளிவாய்ப் பாடம் நடத்தினார்!
கற்றேதான் சென்றுவிட்டேன் எட்டு.

சேதுபதி உயர்நிலைப் பள்ளி-- வடக்குவெளி வீதி மதுரை

எட்டாம் வகுப்பு ஆசிரியர் திரு. எஸ் சுப்ரமணியன்(1961)

பாரதியார் தொண்டுசெய்த பள்ளியில் சேர்ந்துவிட்டேன்!
சாரமுடன் பாடம் நடத்தி மனதிலே
வேரூன்ற  வைத்தவர்! கோபமே கொள்ளமாட்டார்!
நான்சென்றேன் ஒன்பதைப் பார்த்து.

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்  திரு.எஸ்.டி.ராஜகோபால்(STR)(1962)

பள்ளியின் உள்ளரங்குப் பக்க வரிசையாய்
சொல்லிவைத்தப் பாங்கில் இருந்தன! நாங்களோ
எல்லோரும் ஊன்றிக் கவனித்தே கற்றுவந்தோம்!
வல்லவர் ஆசானை வாழ்த்து.

பத்தாம் வகுப்பு ஆசிரியர் 
திரு.பி எஸ்  கிருஷ்ணசாமி (PSK)(1963)

நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்தே பாடம்
அகத்தில் பதிய நடத்தினார்! கற்றோம்!
தமிழுடன் ஆங்கிலம் மற்றபாடம் எல்லாம்
சுமையென்றே எண்ணாத வண்ணம் எளிமை
மணக்கவே கற்றுக் கொடுத்தார்! படித்தேன்!
இணக்கமுடன் சென்றேன் அடுத்து.

பதினொன்றாம் வகுப்பு (SSLC)ஆசிரியர்
திரு.எஸ் எஸ் கிருஷ்ணன்( SSK)(1964--65)

பள்ளி இறுதி வகுப்பிற்குச் சென்றுவிட்டேன்!
பல்முனை ஆற்றலைப் பெற்ற உணர்விலே
துள்ளித் திரிந்தேன்! மகிழ்ச்சியுடன் கற்றறிந்தேன்!
நல்லபடி யாக பொதுத்தேர்வில் வெற்றிபெற்றேன்!
கல்லூரி சேர்ந்தேன் நிமிர்ந்து.

அனைவருக்கும் நன்றி!

ஒன்றில் தொடங்கி பதினொன்றில் பள்ளிவாழ்க்கை
நன்றாய் நிறவேற என்னைச் செதுக்கிய
பண்பான  ஆசிரியை ஆசிரியர் எல்லோர்க்கும்
நன்றி நவில்கின்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

நண்பர்களின் வாழ்த்து

21.10.22

Krishnamurthy Ramanujam:
முதல் வகுப்பில் இருந்து,பதினொன்றாம் வகுப்பு வரை பள்ளி ஆசிரியர்/ஆசிரியைகளின் பெயரை நினைவில் வைத்துஇருப்பது  மிகச் சிறப்பு/போற்றுதலுக்கு  உரியது.🙏🙏🙏

VovTheetharappan:
ஆசிரியர்களை நினைவு கூர்ந்து வெளியிட்ட பதிவு அருமை! முன்னாள் ஐனாதிபதி அப்துல்கலாம் அவர்களும் 'அக்னிச் சிறகுகள் ' நூலில் தன் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தது எண்ணத்தகுந்தது!

Vovkaniankrishnan:
தாங்கள் கவிஞர் என்பதை
தங்களது நினைவாற்றல்
நிருபணம் செய்துவிட்டது.

தெ.கி

VOVCR:
என்ன ஒரு நினைவாற்றல்

அழகு பா.. பாபா 👍👏😍

SELVARAJ K:
மடை திறந்த வெள்ளம்
           மதிநிறை  நல்உள்ளம்
தடையேதுமிலா தனித்துவம்
          தரணிபோற்றும் ஆசிரியர்
படைத்தவன் பெருமை கூறி
           பெருமை கொள்ள செய்தீர்
விடையேறும் பாகன் அருள்
           விரிந்த உள பாபாக்கே

வெள்ளை,சிவப்பில் இருமலர்கள் நீலவண்ணம்
துள்ளும் கடலின் பெரும்பரப்பைப்  பார்த்தே
தள்ளி ரசித்தேதான் காலை வணக்கம் அள்ளித் தருவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

இரும்பின் விலையோ ஐந்துடாலர்! லாடம்
ஒருபத்தும் ரெண்டும் இணைந்த தொகையாம்!
கருத்துடன் ஊசியானால் மூன்றா யிரமும்
ஒருஐநூறும் சேர்ந்த தொகையாம்! மணியை
சரியாகக்  காட்டும் மணிப்பொறி ஸ்பிரிங்காய்
உருவெடுத்தால் மூன்றுலட்சம் டாலராகும் தம்பி!
தரணியில் உன்மதிப்பு நீயாக்கும் வாழ்க்கை
பயனுள்ள தாகவே ஆனால் மதிப்பில்
உயர்வாய் ! முயற்சி்கள் செய்.

மதுரை பாபாராஜ்

Tuesday, November 26, 2019

கைப்பாவை!

இதுவும் அதுவும் நடப்பதெல்லாம் சூழல்
சொடுக்கிவிட்ட சூட்சுமத்தில் இங்கே நடக்கும்!
எதுநடந்த போதும் நடத்துவது நாமா?
செதுக்குவது காலம்! நடத்துவது காலம்!
பொறுமைநின் கைப்பாவை  நாம்.

இருந்தாலும் நாமே மறைந்தாலும் நாளும்
அரங்கேறும் வாழ்வின் நடைமுறைக்  கோலம்
இயல்பாக இங்கே நடந்தேறும் கண்ணே!
தரணிவாழ்க்கை வேடிக்கை தான்.

மதுரை பாபாராஜ்




உடுக்கை இழந்தால்!

அவரவர் தேவை! அவரவர் வாழ்க்கை!
அவரவர் தேடல்! அவரவர் நாட்டம்!
அவரவர் சேர்ப்பார்! அவரே சுமப்பார்!
அவருக் கிவரா? இவருக் கவரா?
இவரோ அவரோ உடுக்கை இழந்தால்
கரமெனக் காப்பவர் யார்?

மதுரை பாபாராஜ்

பிஎஸ்எல்விசி 47 ராக்கெட் ஏவப்பட்டது!

இடம்: ஸ்ரீஹரிகோட்டா ஆந்திரா

27.11.19


விண்ணிலே வெற்றி கரமாகப் பாய்ந்தது
இந்திய நாட்டின் செயற்கைக்கோள் இன்றுதான்!
எண்ணற்ற நற்பணியைச் செய்யும் செயற்கைக்கோள்
வென்றிருக்கும் சாதனையைப் போற்று.

மதுரை பாபாராஜ்

உண்மையான வாழ்வின் மகிழ்ச்சி விலையுயர்ந்த
வண்ணவண்ண ஆடையிலோ ஒப்பனையிலோ இல்லையம்மா!
கண்களிரண்டும் சொல்லும் முழுக்கதையே
உண்மையம்மா!
கண்களே பேசும் மொழி.

மதுரை பாபாராஜ்

வண்ண மலர்களைக் கூடை சுமந்திருக்க
வண்ணத்துப் பூச்சிகள் பூக்களை வட்டமிட
அன்புடன் காலை வணக்கத்தை நட்புடன்
தந்தநண்பர் சேகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

குற்றம் குற்றமே!

குடிப்பதும் குற்றம் குடிப்பதற்குத் தூண்டி
நடிப்பதும் குற்றம் நடிப்பில் விரசம்
தெறிப்பதும் குற்றமே வன்முறைக் காட்சி
பிடிப்பதும் குற்றமே! கூறு.

மதுரை பாபாராஜ்

பிறப்பொக்கும்?

படிப்பதற்(கு)ஆர்வம் இருந்தாலும் ஏழ்மை
படிக்க விடவில்லை! பள்ளிக்குச் சென்று
படிக்கும் குழந்தையைப் பள்ளிக்கு நானோ
உடன்சென்றே பள்ளியில் விட்டுவர வேண்டும்!
உடன்செல்வேன்! பள்ளிக் குழந்தைகள்
துள்ளும்
நடப்புகளைக் கண்டே மகிழ்வேன்! வாழ்வில்
பிறப்பொக்கும் என்றார்  வள்ளுவர்! நானும்
பிறந்தேன்! படிக்கும் குழந்தைகளும் இங்கே
பிறந்தார்கள் என்னைப்போல்! ஆனால்
பிறந்தும்
நடைமுறை ஏழ்மை எனக்கேன்?செல்வம்
தடையற்ற வாழ்க்கை அவர்களுக்கேன்?  நானோ
விடைதேடி ஏங்குகிறேன் இங்கு.

மதுரை பாபாராஜ்

Monday, November 25, 2019

நேர்வழியே நிம்மதி!

ஆர்வம், முயற்சி, பயிற்சி இவைமூன்றும்
சேர்ந்தால் முடியாத நற்செயல் இல்லையம்மா!
நேரமாகும் வெற்றிதான்! ஆனால் கிடைத்துவிடும்!
நேர்வழியில் வாழ்வைச் செலுத்து.

மதுரை பாபாராஜ்

Sunday, November 24, 2019

சுமையே!

பெரியவர்கள் சொன்னால் நல்லதுக்கே என்று
புரிந்துகொண்டால்  வாழ்க்கைத் தடத்திலே ஓடும்!
பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் வாழ
வழிகாட்டு கின்ற ஒளிவிளக்காம் இங்கு!
இருக்கும் வரையில் புதிராய் இருப்பார்!
இருக்கும் வரையில் சுமை.

மதுரை பாபாராஜ்

மதிப்பிற்குரிய O..குமரப்பன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

நாள் 23.11.19

பென்னர் நிறுவனம் முன்னேறப்
பங்களிப்பை
நன்முறையில் ஆற்றலுடன் தந்தே பணிபுரிந்தார்!
எந்தப் பொறுப்பெனினும் ஏற்றே திறம்பட
அந்தப் பொறுப்பிலே சாதனை செய்தவர்!
பென்னர் துறைகளில்  அத்தனையும் நிர்வகித்த
தன்னிக ரற்றதோர் நிர்வாகி யானவர்!
பம்பரமாய் நாளும் சுழன்றே உழைத்தவர்!

பன்முக ஆற்றலுடன் அன்பும் இரக்கமும்
தன்னலம் இல்லாப் பெருந்தன்மை, தோழமையும்
என்றுமே மாறாமல் இன்றளவும் பண்புகளாய்த்
தன்னகத்தே கொண்டவர் நண்பர் குமரப்பன்!
நன்னெறியில் இல்லறத்தில் வள்ளுவத்தைப் போற்றுகின்றார்!
இங்கே குடும்பத்தார் சூழ்ந்திருக்க வாழியவே!
தண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்.

சிலர் பலரானால்!

பண்பால் கவர்வோர் சிலராம்! வளர்க்கின்ற
தன்னலத்தால் பண்பை  இழப்போர் பலராவார்!
பண்புகளைப் போற்றும் சிலரோ பலரானால்
மண்ணுலகம் பொன்னுலக மாம்.

மதுரை பாபாராஜ்

சூழ்நிலையில் சிக்காதே!

நேர்மறைக் காரணங்கள் நிம்மதியைத் தந்தாலும்
கூர்முனை வாளாய் எதிர்மறைக் காரணங்கள்
வேர்பதித்தே முன்னெழுந்து நிம்மதிக்கு வேட்டுவைக்கும்!
சூழ்நிலையில் சிக்காதே நீ.

மதுரை பாபாராஜ்

Saturday, November 23, 2019

 தெய்வத்திரு. வி என் சிதம்பரம் அய்யா!

நினைவுநாள் 24.11.19

விருந்தோம்பல் என்றால் சிதம்பரம் அய்யா!
கருத்துடன் நட்பு மணக்கப் பழகுவார்!
பெருந்தன்மைப் பண்பின் எடுத்துக் காட்டு!
செருக்கற்ற செம்மல் இவர்.

உயரமான உள்ளம்! உயர்ந்த மனிதர்!
தரமான நற்பண்பின் நாயகன் ஆவார்!
முயற்சி உழைப்பால் சிறப்பில் மிளிர்ந்தார்!
வளர்தமிழ்போல் வாழ்க புகழ்.

அரவணைக்கும் பண்பிலே தென்றல்! நன்கு
பழகுவதில் அய்யா குழந்தை!  சிரித்துக்
கலகலப் பாகத் தமிழ்பேசும் சான்றோர்!
உளத்தால் வணங்குகிறேன் இன்று.

கமலா திரையரங்கில் கம்பீர மாக
தினமும் அரிமாபோல் நிற்கின்ற காட்சி
மனத்திரையில் வந்துவந்து தூண்டிவிட்டுப்  போகும்!
நினைவெல்லாம் அய்யாதான் பார்.

மறக்க முடியாத நட்பில் திளைத்தேன்!
மறந்தால் மனிதனல்ல! என்றும் நினைப்பேன்!
வடபழனி ஏந்தல் சிதம்பரம் அய்யா
இறவாப் புகழ்கொண்டார் இங்கு.

என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்
குடும்பத்தார்.

ஏமாற்றாதே!

கொள்கையில் கட்சி பிடிவாதம் கொண்டிருந்தால்
உள்ளம் மகிழ்ந்நிருப்பாள் இந்தியத் தாயிங்கே!
எல்லாம் பதவிக்கே என்றானால் தன்னலந்தான்!
உள்ளந்தால் நொந்திருப்பாள் தாய்.

இக்கட்சி அக்கட்சி  என்றேதான் எக்கட்சி ஆனாலும்
மக்களுக்கே உண்மையாய்ப்  பாடுபடும் கட்சியானால்
மக்கள் எடைபோட்டு வாக்களிப்பார்! வாக்களித்த
மக்களை ஏமாற்றா தே.

மதுரை பாபாராஜ்

Friday, November 22, 2019

நேர்மறை எண்ணங்களைக் கொண்டவரை எந்நஞ்சும்
ஊர்ந்து படர்ந்தேதான் கொல்தல் அரிதே!
எதிர்மறை எண்ணங்கள் கொண்டால் மருந்தும்
அகிலத்தில் காக்க முடியாது கண்ணே!
அகத்திலே பக்குவம் கொள்.

மதுரை பாபாராஜ்

உவமைக் கவிஞர் சுரதா

உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்து 23.11.19

அகவை 99

சுப்புரத்ன தாசன் சுரதாவாய், பாவேந்தர்
நற்றமிழ்ப் பாவலரின் தாசனாக தன்பெயரை
இத்தரணி போற்றவே மாற்றினார் ஆர்வத்தில்!
எத்தனை நூல்கள் கவியரங்க மேடைகள்!
எத்தனைப் பேச்சுகள் பாத்தமிழ் வீச்சுகள்!
அத்தனையும் தேன்பலா போன்ற சுளைகளே!
கற்றறிந்தோர் போற்றும் உவமைகள் நாடிவரும்!
எத்தனை பட்டம் விருதுகள் பெற்றார்
முத்தான எங்கள்உவமைக் கவிஞர்தான்!
பற்றுடன் வாழ்த்துவோம் பல்லாண்டு வாழியவே!
எப்பொழுதும் போற்றுவோம் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப்பாடல்!
---------------------------------------------------
மெய்யுணர்தல்--36 
--------------------------------------------------------------
நிழலை உண்மையென்று நம்பாதே
--------------------------------------------------------------------
பொய்யை மெய்யாய் நினைக்கின்ற
மயக்கம் விதைப்பது துன்பந்தான்!

மயக்கம் தெளிந்து உணர்ந்துவிட்டால்
துன்பம் விலகி இன்புறுவார்!

உண்மைப் பொருளை அறிந்தவர்க்கு
விண்ணகம் அருகில் இருக்கிறது!

புலன்களை அடக்கி வாழ்ந்தாலும்
மெய்யுணர் வற்றோர் வீணர்தான்!

பொருளின் தன்மை எதுவெனினும்
உண்மை அறிதல் அறிவுடைமை!

மெய்ய்ப்பொருள் உணரக் கற்றவர்கள்
பிறவா நிலைக்கே செயல்படுவார்!

மெய்ப்பொருள் தன்னை உணர்ந்தவர்க்கு
மீண்டும் பிறவி இருக்காது!

பிறவித் துன்பம் அடைவதற்குக்
காரணம் இங்கே அறியாமை!

அதனை நீக்கும் செம்பொருளை
உணர்ந்து தெரிவது மெய்ப்பொருளாம்!

உணர்ந்து திளைக்கும் சான்றோரை
துன்பம் என்றும் துளைக்காது!

ஆசை கோபம் அறியாமை
நீக்கி வாழ்ந்தால் இன்னல்கள்
என்றும் நம்மைத் தீண்டாது!

மதுரை பாபாராஜ்


தாய்லாந்து குறளுக்குத் தந்த சிறப்பு!

குறள்களைத் தாய்மொழியில் நூலாக்கி
நூலைச்
சிறப்பாக இந்தியாவின் மாண்புமிகு மோடி
அகங்குளிர அங்கே வெளியிட்டார்! வாழ்த்து!
குறளுக்குத் தாயின் சிறப்பு.

தாய்லாந்து நாட்டின்  தொலைக்காட்சி காட்டிய
பார்புகழ் தேன்குறள் பக்கங்கள் அற்புதம்!
தாய்மொழிப் பேச்சில் திருவள்ளு வர்பெயரை
ஆர்வமுடன் சொன்னதும் உள்ளம் சிலிர்த்தது!
தாய்லாந்து நாட்டுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Thursday, November 21, 2019

காட்டுக்குள் சாலை குறுக்கே கடக்கிறது!
காட்டுமான் சாலை குறுக்கே  கடக்கவில்லை!
காடு விலங்குகளின் வீடாகும்! அங்குசென்றே
ஊடறுக்கும் சாலைகளைப் போட்டுவிட்டு மான்களை
நாமோ குறைசொல்வ தேன்?

மதுரை பாபாராஜ்


வீடுதேடிவரும் உணவு!

உணவகம் சென்று உணவுகளை வாங்கும்
மனநிலை மாறி தொலைபேசி மூலம்
உணவுகளைச் சொல்லி  உணவக நண்பர்
மனைகளைத் தேடிவந்தே உணவை வழங்கும்
இணையதளச் சேவையில் வாழ்க்கை முறைகள்
தினமும் நடக்கிறதே செப்பு.

மதுரை பாபாராஜ்

குறைகாணாதே!

சிகையழகுக் கூடத்தில் ஆணிடம் பெண்கள்
சிகையழகு செய்கின்றார்! பெண்கள் தைக்க
உடையளவை  ஆண்கள் எடுக்கக் கடைக்கு
தடையின்றி வந்தே தருகின்றார்! வாழ்க்கை
முறைகள் நடைமுறைகள் மாறுகின்ற காலம்!
குறைகாணும் எண்ணம் தவிர்.

மதுரை பாபாராஜ்

மலரும் நினைவுகள்!

தெய்வத்திரு மூர்த்திக்கு அஞ்சலி!

ஆண்டாண்டு காலம் உறவின் தொடர்பின்றி
காணுகின்ற வாய்ப்பின்றி வாழ்ந்தோம் திடீரென்றே
நானிங்கே மூர்த்திதான் பேசுகிறேன் என்றேதான்
நான்குரல் கேட்டேன் மகிழ்ந்தேன்! மதுரையில்
நாங்கள் சிறுவராய்ப் பார்த்துப் பழகிய
காலம் மனதில் மலரும் நினைவுகளாய்
வந்துபோக  எந்தன் மனத்திரையில் ஓடியது!
என்னசெய்ய மாந்தரின் எல்லையை மீறிய
இந்த மரணத்தைப் பார்த்தே அழுகிறோம்!
நம்மைநாம் தேற்றவேண்டும் பார்.

மதுரை பாபாராஜ்


திருமதி. உமா ராம்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து

21.11.19

காரை நகரிலே வாழ்வின் தொடக்கந்தான்!
சீர்மிகு சென்னையில் நாளும் தொடர்கிறது!
தாய்தந்தை ஆசிகள் என்றும் வழிநடத்த
வாழ்க்கையில் ராம்குமார், திவ்யா, மருமகன்
சூழ்ந்திருக்க பல்வளங்கள் பெற்றேதான் வாழியவே!
வாழ்த்துகிறோம் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்





Wednesday, November 20, 2019

மூர்த்திக்கு இரங்கல் கவிதை!

உறவைப் புதுப்பித்து
அவ்வப்போது
பேசத்தொடங்கினோம்!

சில நாள்களுக்கு முன்புகூட
கவிதை படித்துக் காட்டி
எனது கருத்தைக் கேட்டாய்,!

நன்றாகத்தானே இருந்தாய்!
இவ்வளவு சீக்கிரம்
பிரிந்து செல்வாய்
என நனைக்கவே இல்லை மூர்த்தி!

தொலைபேசி வந்தபோது
நீதான் பேசுகிறாய் என்று
பிறகு பேசுகிறேன் என்றான்!
நான் ஒரு கடையில் இருந்தேன்!

கேட்ட செய்தியில் நிலைகுலைந்தேன்!

மரணம்
தவிர்க்க முடியாதது.
கடமைகள் முடித்த
நிம்மதி கிடைத்தால்
வாழ்க்கை முழுமைபெறும்.

உனது
நினைவுகள்
என்னுடன்
எப்பொழுதும் இருக்கும்!

இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை
உன் குடும்பம்
தாங்குவதற்கு
வல்லமை கொடுக்க
இயற்கையை வேண்டுகிறேன்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

குறள்நெறியில் மகாத்மா காந்தி!

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்தக் குறள்நெறியைப் பின்பற்றி வாழ்நாளில்
அண்ணல் மகாத்மா  விடுதலைப் போராட்ட
நன்னெறியாய் ஏற்றே இறுதிவரைப் போற்றியதால்
இன்றும் மகாத்மா பெயர்நிலைக்க வாழ்கின்றார்!
அண்ணலின் வாழ்க்கையை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வக்கிர ஊற்று!

கோடின்றி எல்லை வகுத்துப் பழகுவோர்கள்
வேடமற்ற மாசிலா மனங்கொண்டோர்-- கோடுபோட்டும்
எல்லையை மீறும் குணங்கொண்டோர்
வக்கிரத்தின் ஊற்றென் றுணர்.

மதுரை பாபாராஜ்

Tuesday, November 19, 2019

நேர்மறை எண்ணத்தின் நம்பிக்கை வாழ்வாகும்!
வாழ்வின் நடைமுறைச் சிக்கல் வலிக்கலாம்!
ஆழ்ந்த அமைதி நிலவினால் நற்செயல்
காலம் அளிக்கிறது! நம்பு.

மதுரை பாபாராஜ்

வாலறிவன்!

( கல்வி கற்ற அறிஞன்)

மூலவர் ஒன்றுசொன்னால் போதுமிங்கே உற்சவர்கள்
வாலறிவ னாக மறுத்திருப்பார்  மூலவரை!
மூலவர் மூச்சிறைக்க வேடிக்கை பார்த்திருப்பார்!
நாலும் தெரிந்தவர் யார்?

மதுரை பாபாராஜ்


நண்பர் இராமசாமிக்கு வாழ்த்து!

வெண்நிறம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணமும்
கண்கவர காலை வணக்கத்தைத் தூதுவிட்டப்
பண்பாளர் நண்பர் இராமசாமி காட்டுகின்ற
அன்பை வணங்கியே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வாய்க்காலும் ஆறும்!

வாய்க்கால்போல் இங்கே வருமானம் உள்ளபோது
பாய்ந்தோடும் ஆறுபோல நாளும் செலவழித்தால்
சூழ்நிலை ஊழியாக மாறி  வறுமைக்குள்
வாழ்வையே மூழ்கடிக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்

[11/19, 8:15 PM] Amudharagukkdi: ROBOT...!!!
Perhaps you won’t believe it ... this woman is a ROBOT that was unveiled by Japan.

Not sure whether to be happy on this modern tech marvel or be scared   about what future holds for People....

[11/19, 8:29 PM] Madurai Babaraj:

உயிருடன் உள்ளதா பொம்மையா என்றே
துளிகூட வேறுபாடே
இல்லாமல் ஜப்பான்
அளித்திருக்கும்  எந்திர மங்கையைப் பார்த்தேன்!
விழிகளுக் குள்ளே வியப்பு.

மதுரை பாபாராஜ்

முதலில் உலகத்தைப் பார்க்கின்றாள்!

கண்பார்வை இன்றிப் பிறந்தாள்! முதன்முதலில்
கண்பார்வை வந்தே உலகத்தைப் பார்க்கின்றாள்!
கண்ணில் மகிழ்ச்சியால் கண்ணீர்தான் பெற்றதாய்க்கு!
என்றும் மருத்துவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


குற்ற உணர்வு!

மாசு படர்ந்திருக்கும் உள்ளங்கள் பார்த்தாலும்
பேசுகின்ற ஆற்றல் இழந்த நிலைகொள்ளும்!
தூசு விலகினாற் போலத் தெரிந்தாலும்
கூசித் தடுக்கும் மனது.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப் பாடல்
-----------------------------------------------------
துறவு--35 
--------------------------------------------------------------------
பேராசையை விட்டொழிந்தால் பெருநன்மை உண்டாகும்
--------------------------------------------------------------------
ஆசை கொண்ட பொருள்மீது
ஆசையை விட்டால் அப்பொருளால்
என்றும் இங்கே துன்பமில்லை!

பொருள்கள் மீது வைத்துள்ள
ஆசையை நீக்கினால் இன்பந்தான்!

ஆசையைத் தூண்டும் ஐம்புலனை
அடக்கி வாழக் கற்றுக்கொள்!

பற்றற்ற வாழ்வே தவவாழ்வாம்!
பற்று படர்ந்தால் மயங்கிடுவோம்!

பிறப்பை வெறுக்கும் மாந்தருக்கு
மேனிச் சுமையே அதிகந்தான்!
ஆசைச் சுமைகள் வேறேனோ?

செருக்கை ஒழிக்கும் நிலையெடுத்தால்
 உயர்ந்தோர் காணா உநர்நிலையை
காண்பார் அந்தச் சான்றோர்கள்!

காற்றுடன் செல்லும் சருகைப்போல்
ஆசையின் பின்னால் நாம்சென்றால்
துன்பம் நம்மைத் தழுவிடுமே!

ஆசையை விட்டவர் ஞானியாவார்!
மற்றவர் பிறவி வலைக்குள்ளே
சிக்கித் தவிக்கும் மனிதர்தான்!

ஆசையை விட்டால் இப்பிறவித்
துயரம் நீங்க வழியுண்டு!

இல்லை என்றால் அத்துயரம்
என்றும் தொடரும் தொடர்கதைதான்!

ஆசை யற்ற சான்றோர்மேல்
ஆசை கொள்வ தென்பதுவோ
நமது ஆசையை விடுவதற்கே!
துறவற நிலையை அடைவதற்கே!

மதுரை பாபாராஜ்


நண்பர் அல்போன்ஸ்

மஞ்சளில் சட்டையும் கண்ணாடி மற்றுமிங்கே
வெண்நரை கேசமும் மீசையும் பக்குவப்
பண்பை உணர்த்திட கைபேசி கையிலே
இந்நாள் தொழில்நுட்பம் ஆளும் திறமையை
இங்கே எடுத்துரைக்க அல்போன்சின் ஆளுமை
கண்கவரும் தன்மையை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Monday, November 18, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-----------------------------------------------------
நிலையாமை--34 
-------------------------------------------------------
நாம் செய்யும் அறங்கள் நிலையானது
செல்வங்கள் நிலையற்றவை
-------------------------------------------------------------------
நிலையே இல்லா வாழ்க்கையை
நிலையென் றெண்ணுதல் அறிவின்மை!

அரங்கில் கூடிக் கலைவதுபோல்
செல்வம் சேரும் நீங்கிவிடும்!

நிலையே இல்லாச் செல்வத்தைப்
பெற்றவர் நிலைத்த புகழ்நிலைக்கும்
அறச்செயல் தன்னைச் செய்யவேண்டும்!

ஒருநாள் என்னும் சிறுபொழுதோ
உடலின் உயிரைப் பிரித்தறுக்கும்
வாளைப் போன்ற ஆயுதந்தான்!

நாவை அடைத்து விக்கல்கள்
சாவைத் தருமுன் அறச்செயலை
நாளும் செய்தல் சிறப்பாகும்!

நேற்று இருந்தவர் இன்றில்லை
நிலையைக் கொண்ட வாழ்க்கையில்
நாளை இருப்போர் யாரிங்கே?

அறியா மக்கள் அறியாமை
கோட்டை கட்டும் மனதினிலே!

கூட்டில் முட்டை தனித்திருக்க
பறந்து சென்ற பறவையைப்போல்
உடலில் உயிரின் உறவாகும்!

தூங்கும் நிலையே சாவாகும்!
தூங்கி விழித்தல் பிறப்பாகும்!

உடலில் அலையும் உயிருக்கோ
இடமே இல்லையோ நிரந்தரமாய்!

மதுரை பாபாராஜ்



திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
கொல்லாமை-33 
----------------------------------------------------------------
உயிரை வதைத்தல் இழிந்த செயலாகும்
--------------------------------------------------------------------
உயிர்க்கொல் லாமை அறச்செயலாம்
உயிர்க்கொலை  பாவச் செயலாகும்!

நீதி நெறியே பகிர்ந்துண்ணல்!
அறங்களில் அதுவே முதன்மையாம்!

அறங்களில் சிறந்தது கொல்லாமை!
அடுத்தது இங்கே பொய்யாமை!

வாழ்வைக் கண்டு நடுங்கியேதான்
துறவறம் ஏற்றோர் கோழைதான்

இல்லறக் களத்தில் கொல்லாமை
போற்றும் மாந்தர் வீரர்தான்!

இப்படிப் பட்ட நல்லவரைச்
சாவும் நெருங்கத் தயங்கிடுமே!

தனது உயிரை இழந்தாலும்
மற்றோர் உயிரை அகற்றுவதை
இங்கே என்றும் செய்யவேண்டாம்!

கொலையைச் செய்வதால் பலவளங்கள்
கூடிக் குலவி வந்தாலும்
நேர்மை தவறிய பயன்களையோ
இழிவாய்க் கருதுதுவர் சான்றோர்கள்!

கொலையைத் தொழிலாய் ஏற்றவர்கள்
இழிந்த நீசப் பிறவிகளாம்!

நோய்கள் மொய்க்க வறுமையுடன்
இந்தப் பிறவியில் வாடுபவர்
ஏற்கனவே வேதான் கொலைக்குற்றம்
சுமந்தோர் என்பார்  முன்னோர்கள்!

மதுரை பாபாராஜ்


திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
இன்னாசெய்யாமை-32 
---------------------------------------------
புண்படுத்துவோரைப் பண்படுத்து
-------------------------------------------------------------
மலைபோல் செல்வம் கிடைத்தாலும்
பிறர்க்குத் துன்பம் செய்யாத
மனமே சான்றோர்க் கழகாகும்!

சினந்தே துன்பம் தந்தாலும்
திருப்பித் துன்பம் செய்யாமல்
இருப்பதே நல்ல நெறியாகும்!

தீமை செய்யா நல்லவர்க்குத்
தீங்கைச் செய்வது நல்லதல்ல!

பழிக்குப் பழியாய் நடந்தாலோ
நல்லவ ருக்கும் துன்பந்தான்!

தீமை செய்த மாந்தருக்கு
நன்மை செய்தல் தண்டனையாம்!

ஏனைய உயிர்கள் துன்பத்தை
தனது துன்பம் எனக்கருதி
நீக்கா விட்டால் அறிவிருந்தும்
இல்லா தவராய்க் கருதிடுவார்!

தனக்குத் துன்பம் எனத்தெரிந்தால்
பிறர்க்கு அதையே செய்யாதே!

நெல்முனை அளவே என்றெண்ணி
தீமையைச் செய்யா நிலையொன்றே
பண்பை உயர்த்தும் செயலாகும்!

முற்பகல் தன்னில் மற்றவர்க்குத்
துன்பம் செய்தால் செய்தவர்க்குப்
பிற்பகல் துன்பம் வந்துவிடும்!

துன்பம் செய்தால் துன்பமெல்லாம்
செய்தவ ரையே சென்றடையும்!

தனக்குத் தீமையை விரும்பாதோர்
பிறருக்குச் செய்தல் நல்லதல்ல.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
வெகுளாமை--31
----------------------------------------------------------
கோபம் கொள்தல் கொடிய பழக்கம்
--------------------------------------------------------------------
கோபம் பலிக்கும் இடந்தன்னில்
காப்போன் தானே சினம்காப்போன்!
செல்லாத இடத்தில் கோபத்தைக்
காத்தா லென்ன? சினந்தென்ன?

எளியா ரிடத்தில் சினங்கொண்டால்
அதுபோல் தீமை வேறில்லை!
சினத்தால் விளையும் தீமைதான்!
சினத்தை மறத்தல் நன்மைதான்!

முகத்தின் சிரிப்பை, சித்திரத்தை
அழிக்கும் பகையோ கோபந்தான்!
உன்னைக் காக்க சினமடக்கு!
காக்க மறுத்தால் உனையழிக்கும்!

சினமோ நெருப்பாய் மாறிவிடும்!
காக்கும் உறவை அழித்துவிடும்!
நிலத்தில் அடித்தால் கைவலிக்கும்!
சினத்தில் திளைத்தால் துன்புறுவான்!

அனலைப் போன்ற துன்பத்தை
ஒருவன் நமக்குச் செய்தாலும்
புனலாய் மாறி சினம்தவிர்த்தால்
நிம்மதி யாக வாழலாம்!

மனதால் சினத்தைப் புறக்கணித்தால்
நல்லவை எல்லாம் கைகூடும்!
சினமுடை யோர்கள் இறந்தவராம்
சினத்தைத் துறந்தோர் துறவிகளாம்

மதுரை பாபாராஜ்

திரு ராம்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

19.11.19

பிறந்தநாள் கொண்டாடும் ராம்குமார் இளவல்
குறள்வழி இல்லறத்தில் நல்லறம் போற்றி
சிறப்புடன் வாழ்க குடும்பத்தார் சூழ
புகழுடன் வாழ்க மகிழ்ந்து.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார.

மறுப்பின் கூட்டணி!

ஒருவர் கருத்தை ஒருவர் மறுப்பார்!
இருவரிங்கே ஏற்றாலோ மூன்று மறுப்பார்!
கருத்தும் மறுப்புகளும் கூட்டணி கட்டும்!
செருக்கே உளைச்சலைத் தூண்டும்! ஒருவர்
உருக்குலைந்தே போய்விடுவார் நொந்து.

மதுரை பாபாராஜ்

வாலறிவன்!

( கல்வி கற்ற அறிஞன்)

மூலவர் ஒன்றுசொன்னால் போதுமிங்கே உற்சவர்கள்
வாலறிவ னாக மறுத்திருப்பார்  மூலவரை!
மூலவர் மூச்சிறைக்க வேடிக்கை பார்த்திருப்பார்!
நாலும் தெரிந்தவர் யார்?

மதுரை பாபாராஜ்

விடியல்!

சோலைச் செடிகளில் வண்ணவண்ண மொட்டுகள்
காலைப்  பொழுதிலே கண்கொள்ளாக் காட்சிதான்!
நேயமுடன் தென்றல் தழுவ  இதழிதழாய்
தூய மலர்களாய் அங்கே மலர்ந்தன!
பாமழையால்  புள்ளினங்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள
காலாற அங்கே நடந்துசென்றேன்! பாதையிலே
பால்காரர் செய்தித்தாள் நண்பர்கள் ஆரவாரம்
வாசலிலே வண்ணவண்ணக் கோலங்கள் பூத்திருக்க
ஈடற்ற காட்சிதான் பார்.

மதுரை பாபாராஜ்



நீள்கால்சட்டை குப்பாயம் காலணிகள்
போட்டேதான்
காலகட்டி நிற்கும் இளவலே!  கம்பீரம்
கோலத்தில் காட்டுகின்றாய்! வாழ்த்தி மகிழ்கிறேன்!
காலம் உனக்களித்த வாழ்வு

காலையில் கூடுவிட்டுச் சென்ற பறவைகள்
மாலையில் கூடுநாடி வந்தபோதோ அந்தமரம்
வேரிழந்து வீழ்ந்திருந்த கோலத்தைப் பார்த்தேதான்
கூடிழந்து வாடிப் பறந்ததே சுற்றிசுற்றி!
வீடிழந்த ஏக்கத் துயர்.

மதுரை பாபாராஜ்

Sunday, November 17, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
வாய்மை-- 30 
------------------------------------------------
உண்மை பேசினால் நிம்மதி
---------------------------------------------
எள்முனை யளவும் பொய்யற்ற
சொல்லைப் பேசுதல் வாய்மையாம்!

நற்பயன் இங்கே கிடைக்குமென்றால்
பொய்மையும் வாய்மை யாகிவிடும்!

மனதை மீறிப் பொய்சொன்னால்
மனமே சுட்டுப் பொசுக்கிவிடும்!

பொய்யை எண்ணா மனங்கொண்டோர்
நல்லோர் மனதில் வாழ்ந்திருப்பார்!

சொல்லும் செயலும் உண்மையானால்
தானம் தவத்தினும் மேலாகும்!

பொய்சொல் லாததே அறமாகும்!
வேறொரு அறச்செயல் தேவையில்லை!

குளித்தால் கிடைக்கும் புறத்தூய்மை!
வாய்மை தருமே அகத்தூய்மை!

ஒளிதரும் விளக்குகள் விளக்கல்ல!
வாய்மைப் பண்பே ஒளிவிளக்காம்!

அறிந்து உணர்ந்த நூலெல்லாம்
அறமெனச் சொல்வது வாய்மையைத்தான்!

பொய்மை என்றும் தோற்றுவிடும்!
வாய்மை ஒன்றே வென்றுவிடும்!

மதுரை பாபாராஜ்


திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
கள்ளாமை--29
--------------------------------------------------------------
அடுத்தவர் பொருளைக் கவருதல் தப்பு
--------------------------------------------------------------------
தன்னை மற்றவர் இகழாமல்
வாழத் துடிக்கும் நல்லவர்கள்
மாற்றார் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் இன்றி வாழவேண்டும்!

அடுத்தவர் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் தீதின் நிழலாகும்!
திருட்டுச் செல்வம் கானல்நீர்!
உள்ளதும் அழிந்து மறைந்துவிடும்!

திருடிப் பிழைக்கும் வாழ்க்கையிலே
துன்பம் கொடிபோல் படர்ந்துவரும்!

பொருளைத் திருட நேரத்தைப்
பார்த்தே நிற்பவன் எண்ணத்தில்
அன்பும் அருளும் இருக்காது!

திருட்டுத் தனத்தால் வாழ்பவர்கள்
பேரா சையால் அழிந்திடுவார்!

அளவை அறிந்து வாழ்பவர்கள்
களவுத் தொழிலே செய்யமாட்டார்!

நேர்மை யாளர் நெஞ்சத்தில்
அறத்தின் ஆட்சி நிலைத்திருக்கும்!

பொய்மை, திருட்டில் வாழ்பவர்கள்
நெஞ்சில் வஞ்சகம் குடியிருக்கும்!

களவுத் தொழிலைச் செய்பவர்கள்
குற்றச் செருக்கில் அழிவார்கள்!

களவுத் தொழிலால் பழிபெருகும்!
செய்யாமல் வாழ்ந்தால் புகழ்பெருகும்!

மதுரை பாபாராஜ்

After long years

குச்சிப் பனிக்குழைவு!

பனிக்குழைவை உண்ணத்தான் தோன்றிய ஆசை!
கனிந்தது குச்சிப் பனிக்குழைவை வாங்கி
மனங்குளிர நாங்கள் சுவைத்தோம்! இருமல்
தணியுமா? பார்ப்போம் பொறுத்து.

பனிக்குழைவு பாதிப்பை இங்கே தவிர்க்க
பணிந்தேதான் வென்னீர் பருகினோம்!
ரசித்து!
இனியென்ன வந்தாலும் சந்திப்போம்! என்றே
துணிந்தோம் மனிதமனங் கொண்டு.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------
கூடா ஒழுக்கம் --28
--------------------------------------------------------------------
போலித் துறவறம் இழிவு
--------------------------------------------------------------------
நல்லொழுக்க வேடமிட்டு வல்லூறாய் வாழ்பவரை
உடலுக்குள் உலவுகின்ற ஐம்பூதம் கூடிநின்று
எள்ளிநகை யாடிநிற்கும்! இடித்துரைத்துப் பரிகசிக்கும்!

குற்றத்தைச் செய்பவர்கள் தவக்கோலம் பூண்டாலும்
சற்றுமிங்கே பயனில்லை! புல்கூட மதிக்காது!

மனஅடக்கம் இல்லாதோர் தவவேடம் போடுவது
புலித்தோலைப் பசுஅணிந்து மேய்வதுபோ லாகும்பார்!

தவச்சான்றோன் தீயசெயல் செய்வதுவோ சத்தமின்றி
பறவைக்குக் கண்ணிவைக்கும் ஏமாற்று வித்தையாகும்!

ஆசையை விட்டுவிட்டேன் என்றேதான் பொய்சொல்லும்
கயவனுக்கு உள்ளமே துன்பத்தைத் தந்துவிடும்!

துறவற எண்ணமின்றி பற்றற்ற கோலமிட்டால்
கொடியவர்கள் அவரைப்போல் உலகத்தில் யாருமில்லை!

குன்றிமணி செவ்வண்ணம்  புறத்தினிலே தோன்றினாலும்
குன்றிமணி ஏந்துகின்ற கருநிறத்து மூக்கைப்போல்
காரிருளை அகத்தினிலே கொண்டவர்கள் இங்குண்டு!

மனமெல்லாம் கும்மிருட்டு! குளித்தமணம் உடலெல்லாம்!
இத்தகைய நீசர்கள் இவ்வுலகில் வாழ்கின்றார்!

வளையாத அம்புகளின் செயல்களிங்கே கொடிதம்மா!
வளைந்திருக்கும் இசையாழின் செயல்களிங்கே இனிதம்மா!
தோற்றத்தை விட்டுவிடு! செயலாலே எடைபோடு!

உலகம் பழிக்கும் செயலைத் துறந்துவிட்டால்
தலைமுடி சடாமுடி நீக்குதல் வேண்டாமே!

மதுரை பாபாராஜ்


எங்கும் குறள்!


எங்கும் திருக்குறள்! எதிலும் திருக்குறள்!
பொங்கும் எழுச்சியை இங்கே விதைத்தவர்கள்
நன்றாக வாழ்க! நற்றமிழ்போல் வாழ்க!
தொண்டு் தொடர்க நிலைத்து.

மதுரை பாபாராஜ்

இன்சொல் பேசு!

இன்சொற்கள் பேசு குழந்தை மகிழ்ந்திருக்கும்!
வன்சொற்கள் பேசு முகத்தைச் சுழித்திருக்கும்!
புண்படுத்தும் வன்சொல்  பழகாமல்  பண்படுத்தும்
இன்சொல்லைப் பேசப் பழகு.

மதுரை பாபாராஜ்

Saturday, November 16, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்!
------------------------------------------------------------
தவம் -- 27
-------------------------------------------------------------------
உடல்வருத்தித் துறவறத்தைப் பின்பற்று
--------------------------------------------------------------------

துன்பம் தன்னைப் பொறுப்பதுவும்
தீங்கே செய்யா நற்பண்பும்
தவத்தின் தளங்கள் என்றுணர்வோம்!

வேட மற்ற நன்னெறிதான்
மாசே இல்லா தவவடிவம்!

வேட தாரிக் கும்பலென்றால்
தவமே இல்லை! இழிநிலைதான்!

துறவிகள் வாழ்வைக் காப்பதற்கே
இல்லறந் தன்னை ஏற்றவர்கள்
துறவறந் தன்னை மறந்தாரோ?

பகையை அடக்கி மாற்றிடவும்
நண்பரைத் தாங்கி உயர்த்திடவும்
தவத்தால் உலகில் முடியும்பார்!

இல்லறம் ஏற்றோர் தவமேற்று
வல்லவ ராக மாறிடலாம்!

தவத்தை ஏற்றோர் சான்றோர்கள்!
மற்றவ ரெல்லாம் பேராசை
வலையில் சிக்கிய வீணர்கள்!

பொன்னைச் சுட்டால் ஒளிபெருகும்!
துன்பத் தணலால் தவச்சான்றோர்
ஞானம் பெருகி ஒளிபெறுவார்!

பற்றை விலக்கி வாழ்வோரை
உயிரினம் அனைத்தும் வணங்கிநிற்கும்!

தவத்தின் வலிமை பெற்றவர்க்கு
சாவையும் வெல்லும் ஆற்றலுண்டு!

ஆற்ற லற்றோர் பலரானார்!
ஆற்ற லுள்ளோர் சிலரானார்!
தவம்செய் யாதோர் பலராக
உள்ளதே இதற்குக் காரணமாம்!

மதுரை பாபாராஜ்

கணுக்கால் வலி எப்போதாவது!

நடக்கின்ற நேரம் கணுக்கால் நரம்பு
சடக்கென்றே அந்த நடைக்குத் தளர்வு!
நடைவேகம் சற்றே வலியால் குறையும்!
நடையை நிறுத்தியே நின்று தொடர்வேன்!
தடைமீறி ஊர்வலந்தான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

மொகலீஸ்வரன் குடும்பம் பல்லாண்டு  வாழ்க!

ஆசான் புலவரின் பாசமிகு முன்னுரை
தாரணியில் ஈன்றெடுத்த பெற்றோர்க்கு
நல்வணக்கம்
சாரமுடன் ஏந்தித்தான் பல்வேறு பண்பட்ட
நேர்த்தியான சிந்திக்க வைக்கும் தலைப்புகளில்
பாவினங்கள் தம்மைத் தொடுத்து மொகலீச்வரன்
ஆர்வமுடன் நூலைப் படைத்துள்ளார்  வாழியவே!
வான்புகழ் வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில்
தேன்மணக்கப் பின்பற்றும் இந்த இணயரை
தேன்தமிழால் வாழ்த்தி இரண்டு மகள்களும்
வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்த்தி மகிழ்கிறோம்!
பார்புகழ வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
16.11.19

Friday, November 15, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்!
---------------------------------------------------------
புலால் மறுத்தல்-- 26
----------------------------------------------------------
இறைச்சி உண்பதைத் தவிர்
--------------------------------------------------------------
நமது உடலின் வளர்ச்சிக்கு
மற்றொரு உடலைப் புசிப்பவர்கள்
கருணை கொண்டோ ராவாரோ!

பொருளைக் காக்கத் தவறுவோர்க்குப்
பொருளால் சிறப்பு கிடையாது!
 இறைச்சி உண்ணும் மனிதருக்கோ
அருளால் சிறப்பு கிடையாது!

வன்முறை கொண்ட உள்ளத்தில்
இரக்கமோ துளியும் இருக்காது!

உயிரைக் கொன்று தின்பவர்க்கோ
அருளின் சிறப்பு கிடையாது!

ஊனை உண்னல் அருளில்லை!
உயிர்க்கொல் லாமை அறமாகும்!

புலாலை மறுத்தால் பிறஉயிர்கள்
உலகில் வாழும் வாய்ப்புண்டு!

புலாலை வெறுக்கும் நிலையெடுத்தால்
விற்கும் தொழிலே இருக்காது!

இறைச்சி, உயிரின் புண்ணாகும்!
உண்பதை அறவே ஒழிக்கவேண்டும்!

உயிரைப் பிரிந்த உடல்தன்னை
சான்றோர் இங்கே உண்ணமாட்டார்!

ஆயிரம் யாகங்கள் செய்வதினும்
உயிரைக் கொன்று உண்ணாமல்
வாழ்வதே என்றும் மேலாகும்!

புலாலை வெறுக்கும் மாந்தரையோ
புவியே வணங்கும் கைகூப்பி!

மதுரை பாபாராஜ்

பொடி மாத்திரை உடைத்தேன்!!

கல்லெடுப்பேன் கத்தி எடுத்தேதான் மாத்திரையின்
மெல்லிய கோட்டின்மேல்  கத்தியை வைத்தேதான்
மெல்லத்தான் கத்தியின் மண்டையில் தட்டுவேன்!
மெல்லிய கோடோ பிறைபோல் பிரிந்துவிடும்!
உள்ளம் நிறைவாக பாதிமாத் திரையாகும்!
விள்ளும் வகையறிந்தேன் பார்.

மதுரை பாபாராஜ்



வள்ளுவரும் முகநூலும்!

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

முகநூலில் காண்கின்ற  நட்பெல்லாம் நட்பா?
அகநூலின் நட்புதான் நட்பு.

மதுரை பாபாராஜ்


வள்ளுவரும் புலனமும்( WhatsApp)
குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

புலனடக்கம் இன்றி புலனத்தில் வாழ்ந்தால்
உலகம் வசப்படாது சொல்.
மதுரை பாபாராஜ்


Thursday, November 14, 2019

வள்ளுவம் நிம்மதியைத் தரும்!

பாப்பாப் பாட்டு

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!( பாரதி)

தமிழே அடையாளம் என்று--
நிமிர்ந்தே
தரணிக்குச் சொல்லடி பாப்பா!

பெற்றோர் நீகாணும் தெய்வம்--
என்றே
அற்புதமாய்க் கூறடி பாப்பா!

வெற்றியைக் கண்டேநீ என்றும்
மயங்கி
துள்ளாமல் வாழவேண்டும் பாப்பா!

தோல்வியைக் கண்டே துவண்டு--
சரிந்து
சோர்ந்து விடாதே பாப்பா!

வாய்மையை  நேர்மையை பின்பற்றி--
என்றும்
கொள்கையாய்க் கொள்ளவேண்டும் பாப்பா!

மனத்துக்கண் மாசின்றி நாளும்---
வாழ்வில்
உறவாட வேண்டுமடி பாப்பா!

கற்றுத் தெளிந்து கற்றதைநீ--
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டுமடி பாப்பா!

கற்றுத் தருகின்ற ஆசானை--
மறவாமல்
நினைத்தேதான் வாழவேண்டும் பாப்பா!

வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்தால்--
இல்லத்தில்
நிம்மதிக்குக் குறைவில்லை பாப்பா!


மதுரை பாபாராஜ்

It is a great attempt at describing  how parents feel when Children are not with them in OLD AGE,  in any part of the world!

#Emptiness' original artist  is Albert György!

It's a bronze statue located at Lake Geneva, Switzerland!

 வளர்த்த குழந்தைகள் வாழ்க்கையில் இன்று
வளர்ந்து பணிக்களத்தில் வேரூன்றும் போது
வளர்த்துவிட்ட பெற்றோரை விட்டகலும் சூழல்!
தளர்பருவ பெற்றோர் தனிமையில் வாடும்
நிலையோ வெறுமை! கொடுமை! இதைத்தான்
விளக்கும் அருமைச் சிலை.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப் பாடல்!
---------------------------------------------------------
அருள் உடைமை-- 25
----------------------------------------------------------
அனைவரிடமும் இரக்கம் காட்டு
--------------------------------------------------------------------
இழிந்தவ ரிடத்திலும் செல்வமுண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறந்ததாகும்!

அருளுடன் வாழ்தல் நெறியாகும்!
அதுவே அருமைத் துணையாகும்!

அருள்மனங் கொண்டே வாழ்பவர்க்கு
இருள்சூழ் வாழ்க்கைத் துன்பமில்லை!

உயிரினந் தன்னைக் கருணையுடன்
காத்தே வாழும் சான்றோர்கள்

தன்னுயிர் எண்ணி அஞ்சுகின்ற
கோழை நிலைதான் இங்கில்லை!

இருளைப் பரப்பி அருள்மறந்தோர்
அறத்தை மறந்தே வாழ்விழந்தோர்!

பொருளோ இன்றி இவ்வுலக
வாழ்க்கை இங்கே இல்லைதான்!

அருளோ இன்றி அவ்வுலக
வாழ்கை அங்கே இல்லைதான்!

பொருளை இழந்தால் மீண்டுமிங்கே
பொருளைப் பெற்றே வாழ்ந்திடலாம்!
அருளை இழந்தால் இழந்ததுதான்!

புத்தகம் சொல்லும் மெய்ப்பொருளை
அறிவில் லாதோர் காண்பதுபோல்
அருளில் லாதோன் அறச்செயலாம்!

எளியவர் களையோ துன்புறுத்தும்
எண்ணம் சிறிதும் வேண்டாமே!

வலியவர் உன்னைத் துன்புறுத்தும்
கோலம் வருமே துள்ளாதே!

மதுரை பாபாராஜ்

மாடக்குளம் கம்மாய்
நன்றி தோழர் பாண்டுரங்கன்

மாடக் குளம் கம்மாயில
தெக்கு தெக்குனு தண்ணி
 பாக்க பாக்க மலப்பு
உள்ள மெல்லாம் களிப்பு
விண்ண ளக்கும் மலைங்க
வியந்தே தான் பாக்குது
வெவசாயி மக்க ளெல்லாம்
கைதட்டி மகி ழுது
கம்மா வுல வெளஞ்ச
கத்தி ரிக்கா சொவைதான்
இந்த தண்ணிய நம்பித்தான்
எந்த நாளும் வெவசாயம்!
கம்மா முழுக்க தண்ணிதான்
மதுரைக் கார மாமாவுக்கு
மன செல்லாம் கொண்டாட்டம்
பட்டாம் பூச்சி் பறக்குது
ஏரோப் ளேன் போலத்தான்!
தண்ணிக் குள்ள பாக்குது
அழ கத்தான் பாக்குது!

மதுரை பாபாராஜ்

பரந்து கெடுக உலகியற்றியான்!

சமத்துவம் எங்கே?

குப்பை குவிந்திருக்கும் தொட்டிக்குள்
கைகளை
விட்டே கிளறும்  மனிதனே! மற்றவர்க்கோ
குப்பை! உனக்கங்கே மாணிக்கம் கிடைக்கிறதோ!
எப்படியோ உன்தேவை குப்பையிலே
வாழ்கிறது!
நற்றமிழே! வாழ்க்கையைப் பார்த்தாயா?
மண்ணகத்தில்
குப்பை எனஒதுக்கும்  மாந்தர்கள் கூட்டத்தில்
குப்பைக்குள் வாழ்க்கையைத் தேடும் மனிதருண்டு!
எத்தனைநாள் இந்தத் தொடர்கதை சொல்வாயா?
இப்படித்தான் வாழ்வில் சமத்துவம் என்றானால்
எப்படி  ஏற்பது சொல்?

அன்றிருந்து இன்றுவரை ஏழைகள் ஏழையாக
மன்றாடும் காட்சிகள் கண்டேதான் தொந்துபோனேன்!
தன்னலக் கூட்டம் தலைநிமிர்ந்து வாழ்கிறதே!
என்றிங்கே ஏழைக் குயர்வு?

விதியென்று சொல்லித் தப்பவேண்டாம்! நாளும்
கதியற்று வாழ்வோர் கணக்கி லடங்கார்!
புதிய விதிசெய்து  காக்கும் துணிச்சல்
விடியலைக் காட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப்பாடல்!
----------------------------------------------------
புகழ்-- 24
----------------------------------------------------------
நல்லதைச் செய்தால் நற்புகழ் கிடைக்கும்
-------------------------------------------------------------------
ஈகைக் குணத்தால் வரும்புகழே
உலக வாழ்வின் நற்பயனாம்!

ஏழை எளியோர் வாழ்வதற்குக்
கொடுக்கும் பண்பு தரும்புகழை
உயர்ந்தோர் பேசுவார் பெருமையுடன்!
அந்தப் புகழே நிலையாகும்!

எவ்வுலகம் என்றாலும் அறிஞரைப்  போற்றாமல்
கொடுப்போ ரைத்தான் என்றும்  புகழ்ந்திருக்கும்!

கொடுத்துச் சிவந்தோர் செல்வங்கள்
குறையக் குறையப் புகழ்வளரும்!
உலகை விட்டே மறைந்தாலும்
நிலைக்கும் அப்புகழ் சான்றோர்க்கு!

ஈகைப் புகழே அடையாளம்!
புவியே வணங்கி மதித்திடுமே!

ஈகை மனமே இல்லாமல்
காட்சிப் பொருளாய் வாழ்வதற்குத்
தோன்றா மல்தான் இருந்திடலாம்!

புகழைச் சேர்க்கத் தெரியாதோர்
தங்கள் குறையை அறியாமல்
தம்மை இகழும் மற்றவரை
நொந்து கொள்வதால் என்னபயன்?

இறந்தபின் நிலைப்பது இப்புகழ்தான்!
புகழில் லாத மனிதரையோ
தாங்கும் நிலமோ தரிசாகும்!

பழியே இன்றிப் புகழுடனே
வாழ்பவர் உயிருடன் வாழ்பவராம்!
பழியைச் சுமந்து வாழ்பவனோ
பாரில் என்றும் நடைப்பிணந்தான்!

மதுரை பாபாராஜ்

Wednesday, November 13, 2019

ரகு


ரகு பிறந்தநாள் வாழ்த்து

14.11.19

ஐம்பத்தே ழாண்டைத் தழுவும் மருமகனே!
பன்முக ஆற்றலால் முன்னேறும் பண்பகமே!
அன்பாய் அமுதாவும் பாசமகள் நான்சியும்
ஒன்றித்  திளைத்திருக்க  இன்பமுடன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்

வள்ளுவரை வள்ளுவராய்ப் பார்!

குறள்கள் படைத்த வள்ளுவரைச் சாதி
மதத்திற்குள் வைக்கும்
மடமையும் நீலக்
கடலைக் குடத்துள் அடைக்கத் துடிக்கும்
மடமையும் ஒன்றென் றுணர்.

மதுரை பாபாராஜ்

அனைவருக்கும்  பொருந்தும்!

சலனமில்லாத மனம்

கடந்துவந்த பாதைச் சலனக் கவர்ச்சி
உடன்வந்தே வாழ்வை மயக்கிட வாழ்ந்தோம்!
சடக்கென்ற ஓய்விலே வாழ்க்கையின் காட்சி
மடமட வென்றே மாறிட நின்றோம்!
கடக்கவேண்டும் எந்தச் சலனமும் இன்றி!
கடப்போம் சலனமின்றி இங்கு.


பாதையில்லா பயணம்

எத்தனையோ பாதைகள் அங்கே பயணங்கள்!
அத்தனையும் சாதனை என்றே நினைத்திருந்தோம்!
சுற்றி எடைபோட்டுப் பார்த்தால்  பாதைகள்
வெற்றிடமாய் நீண்டிருக்க பாதையில்லா
காட்சியில்
வெற்றுப் பயணந்தான் வாழ்வு.

தடயமில்லா வாழ்வு!

 காலம் நகர்த்துகின்ற காய்களாக நாள்தோறும்
கோலமேந்தி வாழ்ந்திருந்தோம்! இன்பமும் துன்பமும்
காலச் சுழற்சியில்  மாறுமென்றே எண்ணாமல்
காலத் தடயத்தை விட்டுசெல்ல துள்ளுவோம்!
ஞாலம் தருகின்ற ஞானத்தில் தடயமின்றி
ஞாலவாழ்வை நாம்முடிக்க காலத்தைப்
பார்த்திருப்போம்!
கோலமும் வாழ்க்கையும் பொய்.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப்பாடல்
---------------------------------------------------
ஈகை-23
----------------------------------------------------------
ஏழைகளுக்கு உதவு
--------------------------------------------------------------

ஏழைக்கு ஈவதே ஈகையாகும்!
ஏனை யோர்க்குத் தருவதெல்லாம்
சுயநல விளம்பரச் செயலாகும்!

நன்மை தன்னை எதிர்பார்த்து
பிறரிடம் பொருளை வாங்குவதோ
சரியே இல்லை! சொர்க்கமே
கிடைக்கா தெனினும் கொடுக்கவேண்டும்!

தனக்கு வறுமை இருந்தாலும்
ஏழைக் குதவுதல் நற்பண்பாம்!

கேட்டோர் பெற்று மனமகிழ்ந்தே
இனிய முகத்தைக் காட்டுமட்டும்
ஈகையும் துன்பம் தருவதுதான்!

பசியைப் பொறுக்கும் துறவிகளின்
ஆற்றல்  இங்கே வலிமைதான்!
பசிப்பிணி போக்கும் நல்லவர்கள்
குணமோ அதனினும் வலிமைதான்!

பகிர்ந்தே உண்ணும் மாந்தரையோ
பசிப்பிணி இன்னல் தாக்காது!

செல்வத்தை இங்கே கொடுக்காமல்
இழக்கும் கல்மனக் கொடியவர்கள்
ஈந்து மகிழ்வதை அறிவதில்லை!

பொருளை என்றும் ஈயாமல்
தன்னலம் கொண்டோன் நிலையிங்கே
யாசிப் பதைவிட இழிவாகும்!

சாவு நமக்குத் துன்பந்தான்!
ஏழைக் குதவா நிலையுடனே
வாழ்வதைக் காட்டிலும் அதுமேலாம்!

மதுரை பாபாராஜ்

Tuesday, November 12, 2019

தாம்தூம் டமார்!

அடுத்தவர் என்ன நினைக்கின்றார் என்ற
புதிரைத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தால்
வெடிகளே வேண்டாம்! நெருப்பே இன்றி
வெடிகள் வெடிக்கும் குமுறிக் குமுறி!
எதிரும் புதிருமாய்  மாந்தர்கள் மாறி
அடிதடி தாம்தூம்தான்  இங்கு.

மதுரை பாபாராஜ்

குறும்பா ரவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

12.11.19

முகத்தில் சிரிப்பு! அகத்தில் குறும்பா!
தடம்பதிக்கும் சாதனை ஆயிரம் கண்டே
நடமாடும் நண்பரே நற்றமிழ்போல் வாழ்க,!
குறள்வழியில் இல்லறத்தைப் போற்றியே வாழ்க!
பகுத்தறிவுத் தொண்டாற்றும் பாவலரே வாழ்க!
மிடுக்குடனே வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Monday, November 11, 2019

சிரித்தமுகப் பாட்டி!

உழைத்தால்தான் இங்கே உறக்கமென்று
நாளும்
களைப்பின்றி காய்கறி விற்கின்ற பாட்டி!
வளமான காய்களை நாளும் சுமந்தே
களிப்புடன் வீடுதேடி வந்தே வழங்கும்
சிரித்தமுகப் பாட்டியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Sunday, November 10, 2019

வணக்கத்திற்குரிய தந்தை
திரு.முத்துசுப்பு அவர்களின்   நினைவுநாள்

11.11.1980--11.11.2019

நேர்மை கடமை நியாயம் உழைப்பென்றே
வாழ்வில் சுழன்றோடி வாழ்ந்திருந்த பண்பாளர்!
தாள்பணிந்தே ஆசிகளை வேண்டி வணங்குகிறோம்!
வாழ்கிறோம் நாளும் நினைந்து.

ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்--வசந்தா

உடன் ஆசிகளை நாடும்
ரவி- சுபாதேவி- சுசாந்த் ஸ்ரீராம்

எழிலரசன்- சத்யபாமா
நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா




தூரத்துப் பச்சை!

தூரத்துப் பச்சைதான் கண்ணுக் கழகாகும்!
ஆர்வக்கோ ளாறில்  நெருங்கிப் பழகினால்
சோர்ந்திடுவோம்  உண்மை முகமறிந்தே! உள்ளத்தின்
ஈர்ப்பெல்லாம் மாயை உணர்.

மதுரை பாபாராஜ்

Saturday, November 09, 2019

திரு.விஜயகுமார்-- கமலா
இணையருக்கு மணநாள் வாழ்த்து!

மணநாள் 10.11.19

வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில் போற்றுங்கள்!
இல்லத்தில் நல்லிணக்கம்
பின்பற்றி வாழுங்கள்!
பல்வளங்கள் பெற்றேதான்
பன்முக ஆற்றலுடன்
எல்லோரும் சூழ்ந்திருக்க
இன்பமுடன் வாழுங்கள்!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்

திருமிகு.சரோஜா கோவிந்தராஜ்(1932)
அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

10.11.19

உலகில் பிறந்தின்று எண்பத்தே ழாண்டு
வயதாகி வாழ்வாங்கு வாழ்கின்ற அண்ணி
சரோஜா கோவிந்த ராஜிங்கே சுற்றம்
உரமாக அனைவரும் சூழ்ந்திருக்க வாழ்க!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

ஆசிகளை நாடும்
பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

திருக்குறள் குழந்தைப்பாடல்!
---------------------------------------------------
ஒப்புரவு அறிதல்-22
---------------------------------------------------------------
மற்றவர்க்கு உதவி செய்தல் கடமை
----------------------------------------------------------------

உயிரைக் காக்கும் மழையிங்கே
கைம்மா றெதையும் கேட்பதில்லை!

மழைமனச் சான்றோர் அதுபோல
உதவிகள் செய்வார் உலகத்தில்!

உழைத்துச் சேர்த்த பொருள்களையோ
தக்கவ ருக்குக் கொடுக்கவேண்டும்!

உழைக்க இயலா தவர்களுக்கே
உதவிகள் செய்யும் நற்செயல்போல்
இங்கும்  மற்ற  உலகிலுமே
காண்பது என்பதே அரிதாகும்!

உதவிகள் செய்பவன் வாழ்பவனாம்
செய்யா தவனோ  நடைப்பிணமாம்!

உதவும் மனிதனின் செல்வங்கள்
தண்ணீர் நிறைந்த ஊர்க்குளமாம்!

இப்படிப் பட்ட செல்வங்கள்
ஊரின் நடுவில் இருக்கின்ற
பழுத்த மரத்தைப் போன்றதிங்கே!

உதவும் மனத்தைக் கொண்டவர்கள்
சேர்த்த செல்வம் மருந்துமரம்
போலப் பயன்படும் இவ்வுலகில்!

செல்வம் இல்லா நிலையினிலும்
சான்றோர் கொடுக்கத் தயங்கமட்டார்!

பிறர்க்கு உதவ முடியாத
கொடுமை நிலைதான் வறுமையாகும்!

கொடுப்பதால் தீமை வருமென்றால்
தன்னை விற்கும் நிலைவரினும்
தீமையை வாங்க முன்வருவார்!

மதுரை பாபாராஜ்

குறை!

பணக்குறை என்றால் கலங்காது நெஞ்சம்!
மனக்குறை என்றால் கலங்கித் தவிக்கும்!
குணங்களை மாற்றிக் கறைசேர வைக்கும்!
சுணக்கம் நிழலாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

ஏமாந்தோர் ஏமாளியல்ல!

ஏமாற்றிச் சென்றவர்கள் வாழ்ந்ததாய்ச் சான்றில்லை!
ஏமாந்து நின்றவர்கள் வீழ்ந்ததாய்ச் சான்றில்லை!
ஏமாளி என்று நினைப்பவரே வாழ்வில்
ஏமாளி யாகிடுவார் இங்கு.

மதுரை பாபாராஜ்

Friday, November 08, 2019

பாப்பாப் பாடல்

என்கடமை படிப்பதே!
=======================
பள்ளிக்குச் செல்ல மனமில்லை!
தெருவில் ஆடப் போகின்றேன்!
எந்தன் கடமை விளையாட்டே!
அழைத்தால் இவைகள் வந்துவிடும்!

சேவலே சேவலே வருவாயா?
சேர்ந்தே ஆட வருவாயா?
போபோ நானோ வரமாட்டேன்!
விடியலில் கூவுதல் என்கடமை!

குருவி குருவி வருவாயா?
கூடி ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
இரையைத் தேடுதல் என்கடமை!

நாயே நாயே வருவாயா?
நட்புடன் ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
வீட்டைக் காப்பது என்கடமை!

காக்கா காக்கா வருவாயா?
கரைந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
கூட்டைக் கட்டுதல் என்கடமை!

பசுவே பசுவே வருவாயா?
பாய்ந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
பாலைத் தருதல் என்கடமை!

அனைத்தும் இங்கே நாள்தோறும்
அதனதன் கடமை செய்கிறது!
எனது கடமை படிப்பதுதான்
இன்றே பள்ளிக்கு நான்செல்வேன்!

மதுரை பாபாராஜ்

திருக்குறள் குழந்தைப்பாடல்
-------------------------------------------------
தீவினை அச்சம்-21
----------------------------------------------------------
தீமை செய்ய பயப்படு
---------------------------------------------------------
தீயவர் தீமை செய்வதற்கோ
கொஞ்சம் கூட அஞ்சமாட்டார்!

கடுகளவு தீமை செய்வதற்கும்
சான்றோர் இங்கே பயப்படுவார்!

தீங்கு விளையும் என்றேதான்
தீமை செய்ய அஞ்சவேண்டும்!

நமக்குத் தீமை செய்தாலும்
நன்மை செய்தல் சான்றாண்மை!

துன்பம் செய்ய நினைத்தாலோ
அறத்தின் வலிமை  தண்டிக்கும்!

வறுமைப் பிணியில் துடித்தாலும்
கொடுஞ்செயல் நாடக் கூடாது!
நாடிச் செய்தால் ஏழ்மையோ
தேடி வந்தே நமைச்சூழும்!

துன்பம் தனக்கு வருவதையே
விரும்பா தவனோ மற்றவர்க்குத்
தீங்கைச் செய்தல் கூடாது!

எப்பகை வரினும் தப்பிக்கலாம்!
தீவினைப் பகையோ தொடர்ந்துவந்து
நம்மை அழிக்கும் சக்தியாகும்!

தன்நிழல் தொடரும் தன்மைபோல்
தீமை செய்யும் வஞ்சகரை
அழிவும் தொடர்ந்தே அழித்துவிடும்!

தன்மேல் அன்பைக் கொண்டவனோ
பிறர்க்குத் தீமை செய்வதில்லை!

இப்படித் தீமை செய்யாதோன்
வாழ்வில் கேடில் லாதவனாம்!

மதுரை பாபாராஜ்




சவேராவில் தங்கி இருக்கும் தமிழறிஞர் சாலமன் பாப்பையா  அவர்களிடம் புறநானூறு புதிய வரிசை நூலை  அவரிடம் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்.
------------------------------------------------------------
தமிழறிஞர் சாலமன் பாப்பையா அன்பில்
கனிந்த அகங்குளிரும் சந்திப்பில் நாங்கள்
மனங்குளிர்ந்தோம் ! நட்பில் திளைத்தோம்! மகிழ்ந்தோம்!
புறநா னூறு புதிய வரிசை
படைத்த நூலை வழங்கினார் பெற்றோம்!
நிறைவுடன் வந்தோம் உவந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா