Saturday, April 28, 2018

இனியவை நாற்பது 31

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே
;கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும்,
ஆராய்ந்துஅறிந்து உரைத்தல் ஆற்ற இனிது.
------------------------------------
அடைக்கலமாய் வந்தவரின் துன்பத்தைப் போக்கும்
நிறைவான பண்பே இனிது! கடமை
நிறைவேற்ற இங்கே கடனுடனை வாங்கி
முறைப்படுத்தல் என்றும் இனிதே!அறிவில்
சிறந்தோராய் வாழ்ந்தாலும் பேசும் பொருளை
அகத்திலே ஆராய்ந்து சொல்தல் இனிது!
கடமையைக் கண்போலப் போற்று.


இனியவை நாற்பது 30

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
;மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;'
அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல்.
-------------------------------------------------------------------------------------------
செய்த உதவியை என்றும் நினைப்பதே
உய்கின்ற பண்பிற் கினிதாகும்! நீதிநெறி
எள்ளளவும் சாயாமல் இங்கே நடுநிலையைத்
துல்லியமாய்ப் போற்றும் பெருமை  இனிதாகும்!
நல்லவர் என்றே அடைக்கலமாய் வந்ததை
கள்ளமனங் கொண்டே பறிக்காத நல்லொழுக்க
வல்லமை வாழ்வில் இனிது.



இனியவை நாற்பது 29

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்


கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே
;உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து
 உரையாராகி,ஒளி பட வாழ்தல் இனிது.
-----------------------------------------------------------------------------------
நீசரை நீக்கியே வாழ்தல் இனிதாகும்!
நாடறிய தன்னுயர்வைச் செம்மைப் படுத்தியே
மாசற்ற பண்புடன் வாழ்தல் இனிதாகும்!
வாடும் வறுமையிலும் செம்மை யுடன்வாழ்தல்
ஈடற்ற வாழ்வின் இனிது.

இனியவை நாற்பது 28

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே
;கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாததேர்ச்சியில்
தேர்வு இனியது இல்.
----------------------------------------------------------------------------------------------
செயலைப் புரிந்துசெய்யும் ஆற்றலற்ற ஆளைச்
செயல்புரியச் சொல்லாத ஆற்றல் இனிதே!
மரணத்திற்(கு) அஞ்சாத  உள்ளம் இனிது!
வளங்கள் அழிந்தாலும் தீயசொற்கள் தம்மை
விளம்பாமல் வாழ்தல் இனிது.



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 27

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட நஞவரின் வாழாமை முன் இனிதே
;ஊனம் கொண்டாடார், உறுதி உடையவைகோள்
 முறையால் கோடல் இனிது.
---------------------------------

கொடைமனம் கொண்டோர்  பெருமை இனிது!
கறைபடிந்து மானம் இழக்காமல் வாழும்
முறையான வாழ்க்கை இனிதாகும்!குற்றம்
குறைகளை மற்றவர்மீது சுமத்தாத பண்போ
நிறைவைக் கொடுக்கும் இனிதாம்! உணர்!
முறையாக நல்லதைப் பெற்றேதான் வாழ்தல்
நிதமும் இனிதுதான் சொல்.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 26

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே
;உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே
;எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாடயங்கு இனியது இல்.
------------------------------------
நற்பொருளை நாடி உதவிசெய்ய வேண்டிநின்றால்
உற்றதுணை யாகி நிறைவேற்றும் பாங்கினிது!
சற்றும் மதியாதா ரையொதுங்கி வாழ்கின்ற
அக்கறை கொண்டுவாழும் உள்ளம் இனிது!
மற்றவர்க்கு ஈயும்  பொருளை மறைக்காத
அற்புத உள்ளம் இனிது.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 25

ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே
;கைவாய்ப் பொருள் பெறினும்,
 கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
-------------------------------------
அய்ம்புலனின் ஆசை தவிர்த்தல் இனிதாகும்!
பல்வளம் வந்தாலும்பொல்லாதார் கூட்டுறவைத்
தள்ளிவைத்தல் என்றும் இனிதாகும்! இவ்வுலகம்
கல்வெட்டாய் நின்று நிலைக்குமென்பார் நட்பிற்குப்
புள்ளிவைத்தல் இங்கே இனிது.

பாடல் 24

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
-------------------------------
பண்பை உயர்த்த, சினமின்றி வாழ்பவன்
கொண்ட தவமோ இனிதாகும்! மேற்கொண்ட
தன்பணி தன்னை நிறைவேற்றக் காட்டுகின்ற
வன்மை உடையோன் பொறுமை இனிதாகும்!
தன்னிடம் இல்லாப் பொருளை நினைக்காமல்
துன்பம் தவிர்த்தல் இனிது.
--------------------------------------


வேடம் தவிர்!

சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும் வேறுபாடோ
எள்ளளவே என்றாலும் எள்ளிநகை யாடுவார்!
செய்ய இயன்றதைச் சொல்லுங்கள்!  சொல்வதைச்
செய்யுங்கள்!  வேடம் தவிர்.

மக்கள் தொலைக்காட்சி வாழ்க!

மக்கள் தொலைக்காட்சி காட்டும் நிகழ்ச்சிகளில்
அக்கறை கொண்டே மணக்கிறதுசெந்தமிழ்!
எக்கலப்பும் இன்றி  தமிழ்த்தொண் டாற்றுகின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


 தாய்மனம்!

தாயின் மனமோ குழந்தை மனமாகும்!
சேய்களை மையப் படுத்திச் சுழன்றிருப்பாள்!
சேய்க்கோ வயதென்ன ஆனபோதும்  சேயென்பாள்!
சேயின் வயது தடையில்லை! தன்னலத்தைத்
தாயிங்கே பார்க்கமாட்டாள்! சேய்நலமே வாழ்க்கையில்
தாயின் உயிர்மூச்சாம்! சாற்று.


பழமொழி!
வீட்டுக்குவீடு வாசப்படி!

வீட்டுக்கு வீடிங்கே வாசப் படிகள்தான்!
வீட்டில் மொசைக்கென்றால் வண்ணவண்ணச் சிக்கல்கள்!
 வீட்டில் கருங்கல்!  சொரசொரப்பாய் சிக்கல்கள்!
வீட்டிலே ரெட்ஆக்சைட்? ஊடலும் கூடலும்!
வீட்டில் பளிங்கா? நழுவலாகச் சிக்கல்கள்!
வீட்டுக்குள் ஆயிரம் சிக்கல்கள்! தோன்றினாலும்
வீட்டுக்குள் ஆடி அடங்கவேண்டும்! இல்லையேல்
நாட்டுக்குள் நாநடனம் செய்ய அனுமதித்தால்
வீட்டின் மதிப்பழியும் சொல்.

விக்ரம் பிறந்தநாள் வாழ்த்து



ஞானியின் பேரன் விக்ரம்
பிறந்தநாள் 24.04.18

வாழ்த்துப் பாடல்

விக்ரம் என்ற ஓவியர்!
விறுவிறுப் பான ஓவியர்!
அக்கறை கொண்டே சித்திரத்தை
அழகாய் வரையும் ஓவியர்.!

இன்று விக்ரம் பிறந்தநாள்!
மகிழ்ச்சி பொங்கும் சிறந்தநாள்!
நூற்றுத் தொண்ணூ றோவியங்கள்
ஆற்றல் மிளிரப் படைத்துவிட்டார்!

ஆயிரம் ஆயிரம் படைத்தேதான்
ஓவிய ராக வாழியவே!
பெற்றோ ருக்கும் நாட்டிற்கும்
பெருமை சேர்ப்பார் அய்யமில்லை!

தாத்தா பாட்டி மகிழ்ச்சியிலே
துள்ளிக் குதிக்கும் இனியநாள்!
படிப்பும் இந்தத் திறமையும்
இணைந்தே வளர வாழ்த்துகின்றோம்!

நற்றமிழ் போல பல்லாண்டு
நாடு போற்ற வாழியவே!
குறள்நெறி போற்றி வாழியவே!
குவலயம் மெச்ச வாழியவே!

வாழ்த்தி மகிழ்வது வள்ளுவர் குரல் குடும்பம்

பிறர்தர வாரா

 பிறர் தர வாரா!

அன்னம், பறவைகள் கூட்டத்தில் வாழ்ந்தாலும்
தன்பண்பாம் பாலெது? நீரெது? என்றேதான்
நன்கறியும்! யாருடன் நட்பெனினும்  நல்லொழுக்கப்
பண்பைக் கடைப்பிடிக்கும் தன்னிலையை மாற்றாமல்
என்றுமே வாழ்தல் சிறப்பு.

Sunday, April 22, 2018



புகழொடு் தோன்றுக!

இந்தப் பிறவியில் ஈட்டுகின்ற நற்புகழால்
இந்த உடல்மறைந்து போனபின்பும் அப்புகழால்
என்றும் பெயர்சொல்லிப் போற்றவேண்டும் எல்லோரும்!
பண்பால் நிலைக்கும் புகழ்.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 23

காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
;பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.
-----------------------------------------------------------------------------------------------
சோலை அரவணைக்கும் நீர்க்குளத்தை வெட்டுதல்
காலமெலாம் வாழ இனிதே! அறச்சான்றோர்
வாழ பசுவுடன் பொன்னளித்தல் தேனினிது!
கோழைக் கயவராகி சூதாடும் கும்பலை
பாலைமனப் பித்தரை நீக்கல் இனிதாகும்!
தூயமனம் சான்றோர் மனம்.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்


பாடல் 22

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது.
----------------------------------------------------------------------------------------------
ஈட்டும் வருமானம் பார்த்தே மற்றவர்க்கு
ஈத்துவக்கும் பண்பே இனிது! சமுதாயம்
தூற்றும் ஒழுக்கத்தை ஏற்காமல் வாழ்வதே
ஏற்றத்தைக் காணும் இனிது! யானையை
ஆற்றலுடன் வைத்திருந்த போதும் கடிவாளம்
போட்டேதான் தன்னியல்பு மாறாமல் வாழ்தல்
கூட்டும் மதிப்பே இனிது!

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 21

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
;அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே
;மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்திறம்
 தெரிந்து வாழ்தல் இனிது.
---------------------------------------------------------------------------
உனக்குரிமை இல்லாப் பொருளைப் பறிக்கும்
தினவின்றி வாழ்தல் இனிதாகும்! என்றும்
மனக்கருணை கொண்டே அறம்செய்து  தீமை
தனைநீக்கல் நாளும் இனிதே! அறிவின்
மணமறியாப் பேதை உறவை அகற்றக்
கணித்தேதான் சேராமல் வாழ்தல் இனிது!
மனமாசை நீக்கல் அறிவு.

Saturday, April 21, 2018



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 20
சலவரைச் சாரா விடுதல் இனிதே ;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
---------------------------------------------------------------------------------
வஞ்சகரை என்றும் தவிர்த்தல் இனிதாகும்!
பண்பகமாய் வாழும் அறிஞர் அறவுரையைப்
பின்பற்றிப் போற்றுதல் வாழ்வில் இனிதாகும்!
மண்ணகத்தில் வாழும் உயிர்கள் உரிமையுடன்
அஞ்சாமல் வாழ்தல் இனிது

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 19

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
;பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே
;முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால்
மற்றுஅதுதக்குழி ஈதல் இனிது.
------------------------------------------------------------------------------------
நண்பரைப் பற்றிப் புறங்கூறும் வக்கிரம்
இன்றி இருத்தல் இனிது! நடிக்காமல்
உண்மையைப் போற்றியே வாழ்தல் இனிதாகும்!
மண்ணக வாழ்வில் பொருள்களைச் சேர்த்தேதான்
அன்புடன் தக்கவர்க்கோ ஈதல் இனிதாகும்!
பண்பகமாய் வாழப் பழகு.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 18

மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே
;தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்கண்டு
எழுதல் காலை இனிது.
-------------------------------------------------------------------------------
அறிஞர்கள் வாழ்கின்ற ஊரிலே வாழ்தல்
அடிக்கரும்பு போல இனிதாம்! அறநூல்
நெறியிலே வாழும் முனிவர் பெருமை
குறிஞ்சி மலைத்தேன் போலினது பெற்றோர்
அடிதொழக் காலைப் பொழுதிலே காணும்
மகிழ்ச்சி உணர்வே இனிது.



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 17

நட்டார்க்கு நல்ல செயல் இனிது;
எத்துணையும்ஒட்டாரை ஒட்டிக் கொளல்
 அதனின் முன் இனிதே;பற்பல தானியத்ததாகி,
 பலர் உடையும்மெய்த் துணையும் சேரல் இனிது.

நண்பருக்கு நன்மைகள் செய்தல் இனிதாகும்!
மண்ணில் பகைவரையும் நட்பாக்கும் நற்பண்புக்
கன்னல்  சுவைபோல் இனிது! சமயத்தில்
வந்தே உதவுகின்ற நட்பைத் துணையாகக்
கொண்டிருத்தல் வாழ்வில் இனிது.


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 16

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
;மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
-----------------------------------------------------------------------
படித்தவர்கள் முன்னே தன்னுடைய கற்ற
படிப்பறிவைச் சொல்தல் இனிதே! சிறந்த
அறிஞர் துணைகொள்ளல்  வாழ்வில் இனிது!
சிறிதே எனினும் பிறரிடம் கேட்கும்
சிறுமையோ இன்றிக் கொடுத்தல் இனிது!
பொறுப்புடன் வாழ்தல் இனிது.

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 15

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. 15
---------------------------------------------------------------------------------
பிறன்மனை நோக்கா, பெருமை இனிது!
வறண்டேதான் வாடும் பயிர்களுக்கு வானம்
மடமட வென்றே பொழியும் மழையால்
முகப்பொலிவு காணல்  இனிதா கும்! வீறு
நடைபோடும் வேந்தன் அரண்மனையில் வேழம்
குடல்நடுங்க நின்றே பிளிறுதல் கேட்கும்
மறவொலி என்றும் இனிது.



வளைகாப்பு வாழ்த்துப்பா!

வாழ்த்துப் பெறும் இணையர்

கோவிந்தன் -- ஆர்த்தி

நாள்: 22.04.18

யாரும் அறியாமல் கோவிந்தன் பார்வையோ
ஆர்த்தியின் மேலோட கோவிந்தன் மீதிங்கே
ஆர்த்தியின் பார்வையோ நாணமுடன் தூதுவிட
ஆழ்மனம் இன்பத்தில் ஒன்றித் திளைத்திருக்க
சூழ்ந்திருக்கும் எல்லோர் மனமும் மகிழ்ந்திருக்க
நேர்த்தியாய் இன்று வளைகாப்பு காண்கின்றோம்!
சேய்பிறக்கும் மங்கலத்தை வாழ்த்து.


பேராசை

மனதிலே பேராசை ஊஞ்சலாட்டம் போல
தினமும் அலைக்கழிக்கும்! இந்த மலைபோல்
மனதில் வளரவிட்டால் வாழ்வில் உளைச்சல்
ரணப்படுத்தும் நம்மைத்தான் சொல்.


தப்பினால்  தரு!

கருவறையில் தப்பிவந்து கள்ளிப்பால் தப்பி
பருவப் படியில் படிப்படியாய்த் தப்பி
வரும்நேரம் எப்பொழுது எப்படி வாழ்க்கை
அரவணைப்ப தைப்போல் அழிவின் அணைப்பைத்
தருகின்ற வக்கிர உக்கிரத்தில் யார்யார்
சருகாய் உதிராமல் தப்புவார் இங்கு?
தருவாவாள் தப்பினால் தான்.




முதுமை

பல்லோ  உணவருந்தும் நேரம் இடித்திருக்க
பொல்லா வலியோ கணுக்காலைச் சூழ்ந்திழுக்க
கிர்ரென்றே அவ்வப் பொழுது தலைசுற்ற
மொய்க்கின்ற நோயில் முதுமை சிகிச்சையிலே
தள்ளாடிச் செல்கிற(து) இங்கு.


தீரன் சின்னமலை
பிறந்தநாள் வாழ்த்து

17.04.18

கொங்குநாட்டின் ஈரோடு தந்த அடலேறு!
பொங்கிவரும் வீரத்தின் வெற்றித் தளபதி!
இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கச் சங்கிலியைக்
கண்முன் தகர்த்தெறிந்த வீர விளைநிலம்!
சின்னமலை தீரனைப் போற்றி வணங்குவோம்!
இந்திய வேங்கையை வாழ்த்து.


பாவுக்குள் பாவானேன்!

காலைப் பொழுதில் கவிதையின் சந்தங்கள்
சோலையின் தென்றலெனத் தேடி வருடிவிட
பாலுடன் தேன்கலந்த நற்சுவையை நானுணர்ந்தேன்!
பாவுக்குள் பாவானேன் பார்.



அண்ணல் அம்பேத்காரை வாழ்த்தி வணங்குவோம்!

பிறந்தநாள் 14.04.18

அவமானந் தன்னை வெகுமான மாக்கி
துவளாமல் அன்று புறக்கணிப்பைத் தூற்றி
களமமைத்துப்  போராடி வாழ்ந்திருந்த வீரர்!
தரமான வாதத்தால் மேல்சாதி யாரை
தலைகுனிய வைத்திருந்த தன்மானச் சிங்கம்!
அரசியல் சட்டத்தின் சிற்பியான ஏந்தல்!
வரலாற்று நாயகனை வாழ்த்து.



கீழ்த்தரம்

யாரிங்கே போராட்டம் செய்தாலும் நாமுடனே
ஊரறிய என்னசாதி என்னமதம் என்றேதான்
கேவலமாய்த் தோண்டித் துருவுகின்ற உள்ளமேன்?
கீழ்த்தரத்தின் உச்சம் அது.


பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
பிறந்தநாள்
13.04.2018

எளிமையான சொற்கள் எழுச்சியான பாடல்!
தெளிவாக எழுதி திரையில் புரட்சி
மலரவைத்த பாவலர்! நற்புகழ் வாழ்க!
வளர்தமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து.

சித்திரையே நித்திரையைக் கலை!

நீரில் நிலத்தில் மணலில் அடுத்தடுத்து
வேரோடி நிற்கிறதே எண்ணற்ற சிக்கல்கள்!
பார்க்கும் திசையெல்லாம் வீதியெங்கும் மக்களே!
ஆர்ப்பரித்தே தங்களைக் காக்கவேண்டும் என்றேதான்
ஊர்ஊராய் நிற்கின்றார் ஒன்று திரண்டேதான்!
சோர்வுகளை நீக்கவேண்டும்! வாழ வழிகாட்டு!
தீர்வளிக்க  சித்திரை மாதமே வா! வா! வா!
சீராக்க நல்லரசே! பார்.

Tuesday, April 17, 2018


வல்லவர்கள் இங்கில்லையா?

கல்வித் துறையையும் காவி மயமாக்கும்
பொல்லாத எண்ணம் வேரூன்ற விட்டுவிட்டால்
எல்லையற்ற தொல்லைக்கே ஆளாக நேரிடும்!
வல்லவர்கள் இங்கில்லை யோ?

அமைதியாக வாழும் தமிழ்நாட்டை அமளிச்
சுனையாக மாற்றும் நிகழ்வுகள் நாளும்
தினவெடுத் தாடுகின்ற கோலங்கள் போடும்
மனநிலை தேவையா? சொல்.

எண்ணற்ற பன்முக  ஆற்றலாளர் இங்குண்டு!
இங்கெதற்குக் கன்னட நாட்டார் துணைவேந்தர்?
அண்ணா பெயரேந்தும்  பல்கலைக் கூடத்தை
வண்டமிழே சற்றும் தெரியாதோர் ஆள்வதா?
என்ன நியாயமோ? சொல்.



பைந்தமிழ் மண்!

காவி மயமாக்கும் எந்த முயற்சியும்
ஆவியாகும் செந்தமிழ் நாட்டிலே! வீணாக
ஈவிரக்க மற்ற செயல்வேண்டாம்! இந்தநாடு
சீரிளமைப்  பைந்தமிழ் மண்


காவிரி வாரியம் தா.

காவிரி வாரியம் எங்கள் உரிமைதான்!
சூழ்ச்சி வலைபின்னும் போக்கை நிறுத்திவிடு!
ஊழியின் வேகத்தில் போராட்டம் மூண்டதிங்கே!
காவிரி வாரியம் தா.


உணர்ந்து வாழ்வோம்!

பிறப்பிலும் நிர்வாணம் ! வாழ்க்கை முடிந்த
இறப்பிலும் நிர்வாணம்! இடைப்பட்ட காலம்
நடைபோட்டு வாழும் இமைப்பொழுதே இவ்வுலகில்
ஆடுகின்ற ஆட்டமும் ஆடம் பரவாழ்வும்
கூச்சல் குழப்பமும்! கூறு.

தனிமனிதனே பொறுப்பு!

நாடென்ன செய்யும்? மனிதனே! வாழ்கின்ற
வீடென்ன செய்யும்? தனிமனித ஒழுக்கத்தின்
கூடுகட்டும் அந்தக் கடமை தவறுகின்ற
தேடுதலோ உன்பொறுப்பே! சொல்.

Friday, April 13, 2018

தமிழில் பொழி!

தமிழா! தமிழா! தமிழைத்  தமிழாய்க்
கமழக்  கமழ அமிழ்தத் தமிழ்ச்சொல்
தமிழால் தமிழில் தமிழே தழைக்கத்
தமிழாய்த் தமிழில் பொழி.

கொக்குத் தலையிலே வெண்ணெய்

.

கொக்குத் தலையில் வெண்ணெய்!

கொக்குத் தலையிலே வெண்ணெயை வைத்துவிட்டே
முற்றும் உருகியதும் அப்படியே அக்கொக்கைக்
கொத்தாகச் சேர்த்துக் கழுத்தைப்  பிடிப்பாராம்!
 எப்போது வெண்ணெய் உருகிட? அக்கொக்கை
எப்படித் தான்பிடிக்க? சொல்

மதுரை பாபாராஜ்


சாதிமத வெறி நல்லதல்ல!

இவர்சாதி என்ன? அவர்சாதி என்ன?
இவர்மதம் என்ன? அவர்மதம் என்ன?
களர்மனம் கொண்டவர்கள் தோண்டித் துருவும்
தவறான போக்கு தலைகுனிய வைக்கும்!
உலவும் மனிதனை நாளும் மனிதனாக மட்டும்
உளத்திலே போற்றுதல் நன்று.


கர்நாடகக் காவிரியின் வேண்டுகோள்!

பிறந்தவீட்டில் என்னை அடைத்துவைக்கும் போக்கோ
உகந்ததல்ல!  அங்கே புகுந்தவீட்டில் ஓலம்!
வறண்டு உருவிழந்தே மக்கள் அழுது
கதறும் ஒலிகேட்டும் கேளாச் செவியாய்
அடம்பிடிக்கும் போக்கு சரிதானா? தாயே!
பிறந்தவீடு பெண்ணுக்குத் தங்குமடம்! ஆனால்
அகத்தில் புகுந்தவீடே  பெண்ணை மதிக்கும்!
அடம்பிடிக்க வேண்டாமே! நீதிமன்றத் தீர்ப்பை
நிறைவேற்றி என்னைப் புகுந்தவீட்டில் வாழ
விடைகொடுத்தால் வீடு வளமாகும்! இல்லை
 உடைப்பெடுக்கும் மேகம்! குதித்தோடிப் பாய்வேன்!
மடையுடைத்த வெள்ளமாய் நான்புகுந்த வீட்டில்
நிறைவுடனே சென்று மகிழ்ந்தாடி வாழ்வேன்!
கடமைக்குத் தாழிடாதே நீ.



இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார்

பாடல் 14

குழவி தளர் நடை காண்டல் இனிதே
;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
தவினையுடையான் வந்து அடைந்து
வெய்து உறும் போழ்து
,மனன் அஞ்சான் ஆகல் இனிது.

குழந்தைகள் தத்தும் தளர்நடை பார்த்தல்
அழகே! இனிதே! அமுதநிகர் பேச்சின்
மழலையைக் கேட்டல் இனிதே! உலகில்
தரமற்ற தீயோர் சினங்கண்டே அஞ்சிக்
கலங்காமல் வாழ்தல் இனிது

இனியவை நாற்பது

ஆசிரியர்
பூதஞ்சேந்தனார்

பாடல் 13

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.

வாழும் நிலையிருந்து தாழும் நிலைவந்தால்
மாளும் நிலையோ இனிது! அறம்செய்ய
ஆளும் பொருள்குறையா வண்ணம் அடக்கமாக
வாழ்தல் இனிது! தொந்தரவே இல்லாமல்
வாழும் வளம்பெற்ற குற்றமற்ற இன்பநிலை
காலமெலாம் மக்களுக்கு ஊறுகின்ற இனிமைதான்!
ஞாலம் புகழும் வியந்து.

Sunday, April 08, 2018

இனியவை நாற்பது
பாடல் 11

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.
--------------------------------------------------------------------------------------------
தடம்மாறி  வாழா திருத்தல் இனிது!
அறவழி விட்டுப் பொருள்சேர்க் காத
புகழ்வாழ்க்கை இங்கே இனிதே! தமிழே!
அகமொன்றும், பேசும்  புறமொன்று மாக
பகைகொண்டோர் உண்ணத் தகாதாராம்! அன்னார்
அகம்சென்றே உண்ணா திருத்தல் இனிதே!
அறவாழ்வால் நெஞ்சம் நிமிர்.

Saturday, April 07, 2018

பைந்தமிழ் மண்!

காவி மயமாக்கும் எந்த முயற்சியும்
ஆவியாகும் செந்தமிழ் நாட்டிலே! வீணாக
ஈவிரக்க மற்ற செயல்வேண்டாம்! இந்தநாடு
சீரிளமைப்  பைந்தமிழ் மண்.



இனியவை நாற்பது

ஆசிரியர்:
பூதஞ்சேந்தனார்

பாடல் 10

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.

கடனின்றி வாழ்தல் உலகில்  இனிது!
தடம்புரளும் இல்லாளை நீங்கல் இனிது!
அகத்தூய்மை இன்றி பழிசுமக்கும்  தீயோர்
உறவுக்கே அஞ்சி விலகல் இனிது!
அகவொழுக்கம்  வாழ்வின் உயிர்.


இனியவை நாற்பது

ஆசிரியர்:
பூதஞ்சேந்தனார்

பாடல் 9

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

நிழல்போல் பழகிடும் நண்பர்கள் செல்வம்
செழித்திட வாழ்தல் இனிது! தமிழே!
அழகிய வானில் நிலவினைக் காணும்
அழகோ இனிது! மனத்திலே மாசின்
நிழலின்றி அன்புள்ளம் கொண்டவ ராக
பழகும் உறவோ இனிது.



இனியவை நாற்பது
பாடல். 8

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது

வீரனுக்குத் துள்ளும் குதிரை இனிதே!
அரசனுக்கோ மாமலை  போன்றிருக்கும் யானை
உரசிச் சினமுடன் போரிடும் கோலம்
வளர்வதைக் காணல் இனிது! அன்பின்
நிழலான அன்புடையார் சொற்களைக் கேட்டல்
தரணியில் என்றும் இனிது.



ஊடகம் தவிர்த்தால் நல்லது!

மக்கள் எழுச்சியை கட்சி வெறிகொண்டுக்
கொச்சைப் படுத்தும் குறுமதி் யாளரை
முற்றும் தவிர்க்கவேண்டும் நாடாமல்  ஊடகங்கள்!
அப்படிச் செய்தல் அறம்.

காவிரி வாரியம் தா.

காவிரி வாரியம் எங்கள் உரிமைதான்!
சூழ்ச்சி வலைபின்னும் போக்கை நிறுத்திவிடு!
ஊழியின் வேகத்தில் போராட்டம் மூண்டதிங்கே!
காவிரி வாரியம் தா.

Thursday, April 05, 2018



உணர்ந்து வாழ்வோம்!

பிறப்பிலும் நிர்வாணம் ! வாழ்க்கை முடிந்த
இறப்பிலும் நிர்வாணம்! இடைப்பட்ட காலம்
நடைபோட்டு வாழும் இமைப்பொழுதே இவ்வுலகில்
ஆடுகின்ற ஆட்டமும் ஆடம் பரவாழ்வும்
கூச்சல் குழப்பமும்! கூறு.




My dancing tooth!

Oh my dancing tooth!
How many years
You have been useful!
Almmost sixty years
You have served!
From the jumping childhood
To this staggering old age
How much food you crushed
And how much water goggled!
How many bones you have cracked
How much snacks you munched!
I used to lift you with my tongue!
You used to dance to that tune!
What happened to you my dear?
Suddenly you fell down today
Without even a slight pain!
Really i am thankful to you!
I bid you good bye
With pinching gratitude my dear!



தனிமனிதனே பொறுப்பு!

நாடென்ன செய்யும்? மனிதனே! வாழ்கின்ற
வீடென்ன செய்யும்? தனிமனித ஒழுக்கத்தின்
கூடுகட்டும் அந்தக் கடமை தவறுகின்ற
தேடுதலோ உன்பொறுப்பே! சொல்.



பாவம் காதுகள்

நேருக்கு நேரிங்கே பேசுகின்ற நேரத்தில்
நேரமின்றி பேசுதல்போல் இங்கே குறைவாக
சாரமின்றிப் பேசுவார்! வீடுசென்று கைபேசி
மூலமாகப் பேசத் தொடங்கினால் அம்மம்மா!
நேரமே போவது ஒன்றும் தெரியாமல்
சாரமற்ற பேச்சைப் பரபரப்பாய் வேகமாக
காரசார மாகத்தான் பேசிடுவார்! அப்பப்பா!
பாவந்தான் காதுகள்! சொல்ல முடியாமல்
பாவமே என்றுகேட்கும் பார்.



தமிழில் பொழி!

தமிழா! தமிழா! தமிழைத்  தமிழாய்க்
கமழக்  கமழ அமிழ்தத் தமிழ்ச்சொல்
தமிழால் தமிழில் தமிழே தழைக்கத்
தமிழாய்த் தமிழில் பொழி.


சாதிமத வெறி நல்லதல்ல!

இவர்சாதி என்ன? அவர்சாதி என்ன?
இவர்மதம் என்ன? அவர்மதம் என்ன?
களர்மனம் கொண்டவர்கள் தோண்டித் துருவும்
தவறான போக்கு தலைகுனிய வைக்கும்!
உலவும் மனிதனை நாளும் மனிதனாக மட்டும்
உளத்திலே போற்றுதல் நன்று.



கொக்குத் தலையில் வெண்ணெய்!

கொக்குத் தலையிலே வெண்ணெயை வைத்துவிட்டே
முற்றும் உருகியதும் அப்படியே அக்கொக்கைக்
கொத்தாகச் சேர்த்துக் கழுத்தைப்  பிடிப்பாராம்!
 எப்போது வெண்ணெய் உருகிட? அக்கொக்கை
எப்படித் தான்பிடிக்க? சொல்.

கர்நாடகக் காவிரியின் வேண்டுகோள்!

பிறந்தவீட்டில் என்னை அடைத்துவைக்கும் போக்கோ
உகந்ததல்ல!  அங்கே புகுந்தவீட்டில் ஓலம்!
வறண்டு உருவிழந்தே மக்கள் அழுது
கதறும் ஒலிகேட்டும் கேளாச் செவியாய்
அடம்பிடிக்கும் போக்கு சரிதானா? தாயே!
பிறந்தவீடு பெண்ணுக்குத் தங்குமடம்! ஆனால்
அகத்தில் புகுந்தவீடே  பெண்ணை மதிக்கும்!
அடம்பிடிக்க வேண்டாமே! நீதிமன்றத் தீர்ப்பை
நிறைவேற்றி என்னைப் புகுந்தவீட்டில் வாழ
விடைகொடுத்தால் வீடு வளமாகும்! இல்லை
 உடைப்பெடுக்கும் மேகம்! குதித்தோடிப் பாய்வேன்!
மடையுடைத்த வெள்ளமாய் நான்புகுந்த வீட்டில்
நிறைவுடனே சென்று மகிழ்ந்தாடி வாழ்வேன்!
கடமைக்குத் தாழிடாதே நீ.